யமுனாவின் வாழ்த்தை சூர்யா எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் அவளின் ‘சூர்யாகாரு’ நிச்சயம் அவனை துள்ளிக்குதிக்க வைக்க,
“சூர்யாகாருவா? இதி மீரா?( இது நீயா?)” என்றான் வசீகரப்புன்னகையுடன்.
“நானே தான்” என்று சொன்னவளின் கையை இன்னும் விடாமல் பிடித்திருந்தான் சூர்யா.
“சூர்யா! கை?” என்று யமுனா தயக்கத்துடன் விலகப்பார்க்க,
“இன்னிக்கு உன்னைப் பார்த்திடனும்னு ரொம்ப ஆசையா வந்தேன்மா. தேங்க்ஸ், எப்படி தெரியும் உனக்கு என் பர்த்டே?” என்று கையை விடாது அவன் மென்மையாய் வருடிக்கொண்டே கேட்க
“உங்க ஐடிகார்ட் பார்த்தேன்” என்று யமுனா சிரித்தாலும் கையை அவனிடமிருந்து விலக்கிக்கொண்டாள்.
“ஏன்ட்டிமா? நீ மட்டும் அன்னிக்கு என் கையை விடாம பிடிச்ச?” என்று சூர்யா தாங்கலாய்க் கேட்க
“காலேஜ் பக்கத்துல நின்னுட்டு அதெல்லாம் கூடாது சூர்யா” என்றாள்.
“அவுனா? ஓகே! அது ஏன்ட்டீ சூர்யாகாரு?” என்று சூர்யா கண்ணில் காதல் தேக்கி, உற்சாகம் ஊற்றெடுக்க கேட்க
“அது… எங்க ஹாஸ்டல்ல காமர்ஸ் டிபார்ட்மெண்ட் பொண்ணு இருக்கா, அவ தெலுங்கு. அவகிட்ட கேட்டு தெரிஞ்சிட்டேன்” என்று யமுனா சொல்ல சொல்ல சூர்யாவுக்கு எனக்காகக் கேட்டிருக்கிறாள் என்ற எண்ணம் உள்ளத்தைத் திண்டாட செய்ய, கொள்ளைக் கொண்டாள் பெண் அவனை.
“தேங்க்ஸ்மா” என்றவன் “யமுனா, இன்னிக்கு என்னோட பீச் வரியா?” என்று கேட்க
அவன் ஆவலாய்க் கேட்க மறுக்கத்தோன்றவில்லை மங்கைக்கு. ஆனாலும் இன்னும் அவள் உண்ணவில்லை. உண்டு முடித்து அவனோடு சென்று வர தாமதமாகிவிடும் என்பதை உணர்ந்தவள் மறுத்தாள்.
“ஏமிரா? எனக்குப் பர்த்டே, எனக்காக வரமாட்டியா?” என்று சூர்யா கேட்க
“ப்ளீஸ் சூர்யா! எனக்கும் உங்களோட வர ஆசைதான், ஆனா லேட்டாகிடும். நம்ம… நம்ம வேணும்னா சனிக்கிழமை வெளியே போகலாமா?” என்று யமுனா தயங்கி கேட்க
அன்றிலிருந்து எப்போதடா சனிக்கிழமை வரும் என்று இருவருக்குமே ஏக்கம். நினைவுகளுடன் மட்டுமே வந்த நாட்கள் கழிய, சனிக்கிழமை யமுனாவுக்கு சீக்கிரமே பொழுது விடிந்து விட்டது.
சிலோன் ரேடியோவில் பொங்கும் பூம்புனலில் காலை நேரத்தில் பாடல் ஒலிபரப்பாக, இவளும் முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினாள். என்றைக்கும் பெரிதாக அலங்காரமெல்லாம் செய்யாதவள் அன்று சுமதியிடமும் கனிமொழியிடமும்
“இந்த கலர் எனக்கு நல்லா இருக்கா? சுடிதார்லே இருக்கவா இல்லை சேலைக் கட்டவா?” என்று அவர்களிடம் கேட்டு கேட்டு தயாராக, இருவருமே அவளைக் கிண்டல் செய்துத்தள்ளினர்.
வாசலுக்கு வந்து நின்ற வஞ்சிக்கு உள்ளே ஒரு இனிய படபடப்பு, எப்போது வருவான் என என்ற காத்திருப்போடு காலை வேளை இருந்தது. லேசாய்க் கூந்தலில் இருந்து ஈரம் சொட்ட, அதனை தட்டி விட்டு தயலின் கயல்விழிகள் சுற்றிலும் தன் சூர்யனைத் தேடிட, மரத்தின் பின் நின்றவன் அவள் முன்னே வந்து நிற்க,
“சூர்யா!” என்றாள் சந்தோஷத்துடன்.
இது, இந்த குரல்! அதனில் வழியும் பாவனை அதுவே சூர்யாவைப் பித்தாக்கும். தன்னைக் காணும்போதெல்லாம் தலைவியின் இதழில் தன் பெயர் உதயமாகும் தருணமெல்லாம் இவனுக்குள் குளிர்மழை பெய்யும். இன்னும் இன்னும் இவளை காதலி என்று உள்ளம் சொல்லும்.
“ப்ரியத்தம்மா!” என்று தன் ப்ரியமெல்லாம் குரல் கூட அழைத்தான் சூர்யா. யமுனாவுக்கு அவனின் விழிப்பில் கண்கள் மலர்ந்து, கன்னங்கள் சிவந்தன. தன்னை ஆராதிக்கும் தலைவன்பால் அனுராகம் ஆரோகணமாய்ப் பெருகியது. பெயரிலே இத்தனை ப்ரியம் கொண்டு அழைப்பவனை எப்படி பிடிக்காமல் போகும்.
வெறும் பேச்சா என்றால் அதுவுமில்லை. சின்னஞ்சிறு செய்கையில் எல்லாம் அந்த சின்னஞ்சிறுப் பெண்ணின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டான் காதலன்.
“என்னை ரொம்பத் தேடுற போல?” என்று கொஞ்சம் கேலி குரலில் சூர்யா கேட்கவும் புருவம் சுருக்கிய யமுனா
“அப்போ முன்னாடியே வந்து நான் தேடுனதைப் பார்த்தீங்களா?” என்றாள்.
” உன்னை எப்படி வெயிட் பண்ண வைப்பேன் சொல்லு, அதான் உனக்கு முன்னாடியே கிளம்பி வந்துட்டேன்” என்று சொல்ல சட்டென தன் வீட்டு நினைவும் நிகழ்வும் அவளுக்கு வந்தது.
அவளின் அப்பா சற்குணப்பாண்டியன் வேகமாய் வீட்டினுள் வந்து கிளம்பிவிட்டு அம்மாவிற்கு குரல் கொடுப்பார்.
“நாயகி! வெளியே போகனும், சட்டுன்னு கிளம்பி வா” என்று சொல்பவர் மனைவிக்குக் காத்திராமல் காரில் சென்று உட்கார்ந்து ஹார்னை அழுத்துவார். அப்பா அம்மாவிற்காக இத்தனை ஆண்டுகளில் என்றுமே காத்திருந்து எல்லாம் யமுனா கண்டதே இல்லை, காத்திருப்பதெல்லாம் அம்மாவின் செயலாய் மட்டுமே இருந்திருக்க, தன்னைக் காக்க வைக்க மாட்டேன் என்று முன்னே வந்து நின்றவனை எப்படி பிடிக்காமல் போகும்?
பிடித்தம் என்பதவிட நிறைய நிறைய மரியாதை தோன்றியது அவன்மேல். ஆண்கள் என்றால் இப்படியும் இருப்பார்கள் என்ற எண்ணம் தந்தான் சூர்யா.
“முதல்ல கோவிலுக்குப் போகலாம்” என்று சொல்ல, இருவருமாக பேருந்தில் சென்றனர். யமுனா அவனைக் கண்டித்து உட்கார சொல்ல
“உட்கார்ந்தா உன் கையைப் பிடிச்சிட்டே வருவேன், ஓகேவா?” என்று கேட்டான் சூர்யா.
அவன் அப்படி கேட்கவும் திகைத்துப் பார்க்க, அந்த பார்வையே அவளின் சம்மதமின்மையைக் காட்டிவிட, சூர்யாவும் கட்டாயப்படுத்தவில்லை.
“சும்மா சொன்னேன், நீ உட்காரு. லேடீஸ் சீட் யாராவது வருவாங்க. நான் நிக்குறேன்” என்று சொல்லி நின்றபடியே வந்தான்.
சூர்யா தனக்குரிய உலகில், தன்னவளுடன் இருக்கப்போகும் இந்த நாளை எண்ணி கற்பனையில் மிதந்தபடி வர, யமுனாவின் பார்வை மொத்தமும் அவன் மீதுதான். சாம்பல் வண்ணத்தில் கருப்பு சதுரங்கள் போட்ட சட்டை அணிந்திருந்தான். வலக்கையில் வாட்ச் போட்டு, யமுனாவின் நினைவில் நின்றுகொண்டிருந்தவன் முகத்தில் புன்னகை வாடாது இருந்தது. அவன் முகம் பார்த்தாலே பார்ப்பவருக்கும் தானாய் ஒரு புன்னகை மலரும்.
“சூர்யா ரொம்ப அழகு” சொல்லிக்கொண்டாள் தன் மனதில்.
இப்போது யமுனாவுக்கும் அப்படியே மலர்ந்தது, சூர்யாவின் பார்வை யமுனாவின் மீது திரும்ப, சட்டென தன் பார்வையைத் திருப்பியவள் ஜன்னல்வழியே வேடிக்கைப் பார்த்தாள். அது என்னவோ அவன் பார்க்கும்போது பார்க்க கூச்சமாய் இருந்தது.
இருவரும் இறங்கி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சென்றனர். தலைவன் காதல் சொன்ன தளம்! அந்த நினைவு தந்த லயத்தில் இருவருமே நடந்தனர். சூர்யா யமுனாவின் வேண்டுதல் எல்லாம் இருவரும் இணைந்தே இருக்க வேண்டும் என்பதே.
காலை உணவுக்கு ரத்னா கஃபே அழைத்துப்போனான்.
“ப்ரியத்தம்மா! இன்னிக்கு என் பர்த்டே டிரிட் உனக்கு. இங்க சாம்பார் இட்லி ஸ்பெஷல் அதை சொல்லவா? இல்லை உனக்கு ரவா தோசை வேணுமா?” என்று கேட்டான்.
“இட்லியே சொல்லுங்க” என்று அவள் சம்மதம் சொல்ல இட்லியுடன் யமுனாவிற்காக ரசமலாய் சொன்னான்.
யமுனாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக, இன்னொரு பக்கம் அந்த மகிழ்வை முழுதாய் அனுபவிக்க விடாத ஒருவகை பதட்டமென அவள் அகக்கரையினில் ஆலோலம். யமுனாவின் முகம் பார்த்த சூர்யா,
“என்ன ரா டென்ஷனா இருக்கியா?” என்று கேட்க இல்லை என்று தலையசைத்தாலும் அவள் முகத்தில் பதட்டம் இருந்தது. முதல் முறை அவனுடன் வெளியே வந்திருக்கிறாள், இதுவரை தோழி இருப்பாள் கூடவே, காதல் சொல்லி இவளும் அவனை ஏற்றபின் வருவது இதுவே முதல்முறை. அதனால் வீட்டிற்குத் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயம் பாவையை ஆட்டிப்படைத்தது.
“யமுனா, செப்பு…ப்ச், சொல்லு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க
“இவ்வளவுதானா? இதுக்கு ஏன் டா பயப்படுற? எங்க நானாவுக்குத் தெரிஞ்சா எனக்கும்தான் பயம், ஆனா இது நம்ம லவ் சொல்லி ஃப்ர்ஸ்ட் டைம் வந்திருக்கோம் ரா. நீயே யோசிச்சு பாரு கொஞ்ச வருஷம் கழிச்சு இதெல்லாம் நினைச்சா ஸ்வீட் மெமெரீஸா இருக்கும் யமுனா, ப்ளீஸ் சும்மா பயப்படாத, இதுவும் ஒரு த்ரீல்தானே?” என்று கேட்க அவன் சொன்னது புரிந்தாலும் தெளிவில்லை அவளிடம்.
“எப்படியும் உன் நானா, என் நானா எல்லாம் இங்க வரப்போறதில்லை. ஊர்லதானே இருக்காங்க, ஊருக்குப் போன அப்புறம் கூட இதையெல்லாம் நினைச்சுதான் யமுனா சந்தோஷப்பட்டுக்கனும், இன்னிக்கு நீ என்னையும் உன்னையும் மட்டும் யோசி, வேறெதுவும் வேண்டாமே” என்று கேட்க அவனை மறுக்க முடியவில்லை.
சுடசுட இட்லி தட்டில் வைக்கப்பட, அது மூழ்கும் வண்ணம் மணக்கும் சாம்பார் அதில் ஊற்றப்பட்டது. யமுனா தட்டில் கைவைக்கப்போக, சூர்யா
“சூடா இருக்கு, வெயிட் பண்ணு” என்று சொல்லி கொஞ்சம் சூடு குறையவும்தான் சாப்பிட விட்டான். அவள் கொஞ்சம் பொறுமையாய் உண்ண, பார்த்து பார்த்து கவனித்தான்.
யமுனாவிற்கு அந்த நிமிடம் பிடித்தது, சூர்யாவின் கவனிப்பிலும் கனிவிலும் கனியும் காலம் இனித்தது. அவன் சொன்னது போல அந்த நிமிடத்தை ரசித்து மனதில் சேமித்தாள்.
பின் இருவருமாக தேவி தியேட்டரில் படம் பார்க்க சென்றனர். முதல்முறை அவனோடு படம் பார்க்க சென்றது நினைவில் வந்தது. மாப்பிள்ளை படத்திற்கு சென்று சிரஞ்சீவி நன்றாய் நடித்தார் என்று சொன்னான் என கோகிலா சொன்னது நினைவில் ஓட, யமுனா சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அவன் டிக்கெட் வாங்கி வந்து யமுனாவைப் பார்த்து
“என்ன டா சிரிக்கிற?” என்று கேட்டான்.
“அது… நீங்க ரஜினி நடிச்ச மாப்பிள்ளை படம் பார்த்துட்டு சிரஞ்சீவி நல்லா நடிச்சார் சொன்னீங்கன்னு கோகி சொன்னாளா, அதை நினைச்சேன் சிரிப்பு வந்துடுச்சு. இப்பவும் தமிழ் படம் பார்க்கப்போறோமா? உங்களுக்குப் புரியமான்னு யோசிச்சேன்” என்றாள் யமுனா.
“ஹாஹா, எனக்கு சிரஞ்சீவின்னா ரொம்ப பிடிக்கும். அவரோட டான்ஸ், ஸ்டைல் எல்லாம் சூப்பர் தெரியுமா?” என்று ரசித்து சொன்னான்.
“இப்போ என்ன எனக்குப் படம் புரியலன்னா என் ப்ரியத்தம்மா சொல்லித்தருவா, இல்லையா?” என்று கேட்க, மகிழ்ச்சியாகவே தலையசைத்தாள் யமுனா.
“ஒரு நாள் உன்னை நான் சிரஞ்சீவி படத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்மா, உனக்கே பிடிக்கும் பாரு” என்றான்.
மௌனம் சம்மதம் படத்திற்கு இருவரும் வந்திருக்க, படம் ஓடிக்கொண்டிருந்தது. கல்யாணத் தேனிலா பாடல் ஓட, சூர்யாவுக்கு எப்போதடா தன் ப்ரியத்தம்மாவைக் கைப்பிடிப்போம் என்று ஏக்கமாய் இருந்தது. அவளையே பார்க்க,
“என்ன சூர்யா?” என்று கேட்டாள் யமுனா.
“அமலா மாதிரி நீயும் ஒரு நாள் புடவைக் கட்டிட்டு பூ வைச்சிட்டு இப்படி வரனும்” என்று மெல்லிய குரலில் திரையைப் பார்த்தபடி சூர்யா சொல்ல, திரையில் வெள்ளைக் குர்த்தாவில் மம்மூட்டி ஜீன்ஸ் அணிந்திருக்க, அமலா ஒரு சிவப்பு நிற சேலையில் மல்லிகை சூடியிருந்தார். இவன் சொல்கிறானே என்று யமுனாவும் அங்கேயே பார்க்க நாயகனும் நாயகியும் கட்டிக்கொள்ள, அந்த காட்சியைக் கண்டு யமுனாவிற்கு நயனங்கள் விரிந்தன. சூர்யாவுக்குமே யமுனாவைத் தன்னோடு சேர்த்தணைக்க கை துடித்தது. தன்னை முயன்று கட்டுப்படுத்தியவன் அவளின் கரத்தை இறுக்கப்பற்றினான்.
சூர்யாவின் செயலில் வெட்கத்தில் சிவந்து, தயக்கத்தில் தவித்தாள் பெண். சட்டென ஒரு இனிய மின்சாரம் உடலெல்லாம் ஓடியது. அருகில் இருந்தவனைப் பார்க்கவே முடியவில்லை.
இதுவரை இப்படியான காட்சிகள் வந்தால் தோழிகள் எல்லாம் சிரித்து கிண்டல் செய்வார்கள். முன்பும் ஒருமுறை அவனுடன் படம் பார்க்க வந்திருக்கிறாள், அப்போது கவனமெல்லாம் படத்தில் மட்டுமே, அருகே இருந்தவனை அவள் கண்டுகொள்ளவே இல்லை. இன்று இவன் காதலனாக காரிகையின் பக்கம் இருக்க புத்தம் புது மயக்கங்கள் அவளிடம்.
படம் ஓடிக்கொண்டிருக்க, முன் இருக்கையில் இருந்த யாரோ ஒரு பெண் பக்கவாட்டில் திரும்பி தன் முடியை ஓதுக்க, சூர்யா எதிர்ப்பாரா நேரத்தில் சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் யமுனா.
“ப்ரியத்தம்மா?!” என்றவனுக்கு பேச்சே எழவில்லை. அவளை அப்படியே அணைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தி காதருகே
“என்னாச்சு?” என்று கிசுகிசுப்பாய்க் கேட்க, அந்த குரலே குறுகுறுப்பைத் தர, அதையும் மீறி
“சூர்யா, அங்க முன்னாடி கனகாம்பரம் வைச்சிட்டு ஒரு அக்கா இருக்காங்களே அவங்க இங்க பார்க்குறாங்களா?” என்று அவனிடம் கேட்டாள்.
“ஏன்ட்டீமா என்னாச்சு?” என்று சூர்யா கேட்க யமுனாவோ குரலைத் தாழ்த்தி அவன் காதருகே கொஞ்சம் பயத்துடன்
“அந்த அக்கா எங்க ஊருதான், மெட்ராஸ்ல கட்டிக்கொடுத்தாங்க. என்னை உங்களோட சேர்த்துப் பார்த்தா அவ்வளவுதான் மாட்டிப்பேன், நான் இப்படியே இருக்கேன்” என்றவள் ஷாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பயத்தில் சூர்யாவின் கையையும் பிடித்துக்கொள்ள
அவளின் கையை அழுத்திப் பிடித்தவன் “அவங்க ஹஸ்பண்ட் கூட வந்திருக்காங்க போல, நம்மைக் கவனிக்க மாட்டாங்க. நீ பயப்படாம படத்தைப் பாரு. போகும்போது அவங்க போனதும் போகலாம்” என்று சொன்னான்.
“போங்க நீங்க, எனக்குப் பயமா இருக்கு” என்றவள் அவன் தோளில் தன் முகத்தை மறைத்துக்கொள்ள தோகையாய் அவள் கூந்தல் அவன் தோளில் நெஞ்சிலும் விழ, சூர்யாவுக்கு இனிதான நொடிகள். ஒற்றைக்கையால் அவளைப் பிடித்துக்கொள்ள, யமுனா இரவெல்லாம் சரியாக உறங்காதது, காலையில் தலைக்குக் குளித்தது எல்லாம் சேர்ந்து நன்றாய் உறங்கிப்போனாள். படம் முடியவும் இவன் எழுப்ப
“சூர்யா? அந்தக்கா போயாச்சா?” என்றவள் இன்னும் அவன் தோளில் இருந்து முகத்தை எடுக்கவே இல்லை. அவஸ்தையான நொடிகளாயினும் அனுபவித்து ரசித்தான் சூர்யா. முதல்முறை அந்த நெருக்கம் மயக்கம் தர காதல் பொழுதில் அதுவும் சேர்ந்து போனது.
“போய்ட்டாங்க” என்றதும்தான் அவள் முகத்தை எடுத்தாள். அப்போதும் முகத்தை மூடியே இருந்தாள். இவன் சொல்லியும் கேட்கவே இல்லை.
இதில் அவனிடம் “இனிமே என்னைப் படத்துக்கு எல்லாம் கூப்பிடாதீங்க சூர்யா, எனக்கு அந்தக்கா லேசா பின்னாடி திரும்பவும் என்னைப் பார்த்திருப்பாங்களோன்னு எவ்வளவு பயம் வந்துடுச்சு தெரியுமா?” என்றாள் பதட்டமாகவே.
“ஏன்ட்டிம்மா? எல்லாத்துக்கும் டென்ஷன்” என்று கடிந்தவன்
“சரி இனிமே நம்ம தெலுங்கு படம் போகலாம், அங்க உன் ரிலேட்டிவ்ஸ் யாரும் வரமாட்டாங்க” என்று வழி சொன்னவனை அவள் விழிவிரித்துப் பார்க்க, கிண்டலாக சிரித்து கண்சிமிட்டினான் சூர்யா.
“எனக்குத் தெலுங்குத் தெரியாதே” என்று யமுனா சொல்ல
“நான் சொல்லித்தரேன், இல்லைனாலும் புரியும். நான் தமிழே படம் பார்த்துதான் கத்துக்கிட்டேன்” என்றவன் அவளை புஹாரிக்கு அழைத்துச் செல்லவா என்று கேட்க, யமுனா வேண்டாம் என்றுவிட்டாள்.
“அங்க சிக்கன் 65 இருக்குமே யமுனா, நீ அன்னிக்கு ஸ்டாலின், கோகி வந்தப்போ சாப்பிட்டியே?” என்று சூர்யா அவள் அசைவம் உண்பாள் என நினைத்துப் பேச
அவளோ “இல்லை நான் இப்போ எல்லாம் சனிக்கிழமை சாப்பிடுறதில்ல” என்றாள்.
“ஏன், பெருமாளுக்கா?” என்று சூர்யா ஏதோ கடவுளுக்காக என்று நினைத்துக் கேட்க காதலுக்காக என்ற அவள் பதிலில் இவனுக்கு அவள் மீதான ப்ரியங்கள் மீகிப்போயின.
“எனக்காகவா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டவன் உணர்ச்சிப்பெருக்கில் அவளின் கையைப்பிடித்து நெஞ்சில் வைத்து
“நா ப்ரியத்தம்மா!” என்றான் காதலாக.
அந்த காதல் அன்றைய நாள் முழுவதும் வார்த்தையாக சில நேரம் செயலாக சில நிமிடம் என்று தொடர்ந்து கொண்டே இருக்க, மயங்கித்தான் போனாள் யமுனா. அவ்வளவு பயமிருந்தாலும் அதையெல்லாம் மீறி மகிழ்வு கொள்ள வைத்தது காதல்..! அவளுடன் கடற்கரை சென்று கதைப்பேசி அவளுக்குப் பிடித்த பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து, மீண்டும் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டான்.
இன்னும் பத்து நிமிடத்தில் கேட் மூடிவிடும். யமுனா கல்லூரி அருகே வரவுமே
“வரேன் சூர்யா” என்று சொல்ல சூர்யாவோ மரத்தின் அருகே அவளை நிற்கவைத்தவன் வலக்கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்து
“மோர் டென் மினிட்ஸ், இன்னிக்கு எங்கூடவே இருக்கேன்னு சொல்லியிருக்க, நான் சொல்லும்போதுதான் போகனும்” என்று காதலாய் மிரட்டினான்.
யமுனா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, சூர்யாவும் பேசாமல் அந்த நிமிடங்களை அவளின் அருகாமையை ரசித்தான். யமுனா அவளையும் மீறி தன்னவனைக் கண்ணாரக் கண்டாள். நேரமாவதை உணர்ந்து சூர்யாதான் அவள் முன்னே சொடக்கிட
“என்ன சூர்யா?” என்று பரபரப்பாய்க் கேட்டாள்.
“சைட் அடிச்சியா என்ன?” என்று அவன் குறும்பாய்க் கேட்க
“அதெல்லாம் இல்லை” என்று அவசரமாய் மறுத்தவள் “டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று ஓடப்பார்க்க, அவளின் கையைப் பிடித்தவன் எதையோ திணித்தான்.
“என்னது?” என்று யமுனா கேட்க
“உனக்கு எதாவது வாங்கனும் தோணிச்சு, டிரஸ், செப்பல், வளையல் எல்லாம் சைஸ் தெரியல, இது நீ போட்டு பார்த்திருக்கேன்” என்று நெயில் பாலிஷ் கொடுத்தான். நல்ல அடர் சிவப்பு வண்ணம், யமுனா அதையே எப்போதும் விரும்புவாள்.
அவன் தனக்காகப் பரிசளித்திற்க, இவள் அவனுக்கென ஒன்றுமே கொடுக்கவில்லை. அதில் முகம் சுணங்க
“ஏன்ட்டீமா? எனக்காக இன்னிக்கு நீ கூட இருந்ததே நாக்கு சால சந்தோஷம் ரா. நெக்ஸ்ட் வீக் எனக்கு இண்டர்னல்ஸ், உன்னை மீட் பண்ண கஷ்டம். இப்படி நீ சோகமா இருந்தா இந்த முகம்தானே எனக்கு ஞாபகம் இருக்கும். எனக்கு என் ப்ரியத்தம்மா சிரிச்சுப் பார்க்கனும்” என்றதும் அவன் சொல்லவும் மெல்ல புன்னகைத்தாள் யமுனா.
“தட்ஸ் மை பங்காரம்!” என்று கொஞ்சியவன்
“டைம் ஆச்சு, போ” என்று சொல்லி அனுப்பியவனுக்கு அவளை அனுப்பவே மனதில்லை.
யமுனாவிற்கு அந்த ஒரே நாளே சூர்யாவுடன் காதல் கொள்ள போதுமானதாக இருந்தது. அதிகாரமிக்க, அலட்டல் மிக்க, அடக்குமுறையைக் கையாளும் ஆண்களைப் பார்த்து வளர்ந்தவளுக்கு இந்த சூர்யாவை மிகவும் பிடித்தது. எப்போதும் அவனுடன் இருக்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டது அவள் மனது.
அன்று ரேடியோவில் புது பாடல்கள் ஒலிக்க இவர்கள் பார்த்து வந்த படத்திலிருந்து பாடல் பக்கத்து அறையில் கேட்க, கொலுசு சத்தம் கேட்க வேகமாய் அங்கே ஓடினாள் யமுனா.
‘கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா
நீதானே வானிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா’
இவள் வந்து நிற்க கனிமொழி
“என்னடி, உன் ஆளோட வெளியே போய்ட்டு வந்து ஜொல்லிக்கிற?” என்று கிண்டல் செய்ய,
“ஆளா?” என்று மற்றத்தோழிகள் கேட்க, அவர்களுக்கும் பதிலுக் கேலி செய்ய, யமுனாவிற்கு புது புது உணர்வுகள். எல்லாமே பிடித்து இருந்தது. அவனுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் இப்போது நெஞ்சில் உலா வர, எப்போதும் அவனிடம் இருக்க வேண்டும் என்று பேராவல் பெருகியது.
சூர்யாவை நினைத்தபடியே அறையில் சுவரில் சாய்ந்திருந்தாள்.
“அட புது நெயில் பாலிஷ்! நல்லா இருக்கே! நான் போட்டுட்டுத் தரேன்” என்று மேகலா மேஜை மீது யமுனா வைத்திருந்ததை எடுக்க, சட்டென யமுனா
“கலா, அதை எடுக்காத” என்று சொல்லி அவளிடமிருந்து வாங்கிக்கொள்ள, மேகலாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“ஏன் இதுக்கு முன்னாடி நம்ம யாரும் எதையும் ஷேர் பண்ணினதில்லையா? உன்னோடதுன்னு உடனே வாங்குற” என்று மேகலா கோபம் கொள்ள, அதற்குள் சுமதி வர மேகலா யமுனாவுடன் சண்டையிட்டாள்.
சுமதி, “என்னாச்சு யமுனா?” என்று கேட்க
“இது.. அவங்க எனக்காக வாங்கிக் கொடுத்தது டி. நானே இன்னும் போடல” என்றாள்.
அவள் சொல்லிய விதம் அழகாய் இருக்க, சுமதி சிரிப்புடனே
“பொண்ணுக்கு வெட்கத்தை பாரு” என்று கிண்டல் செய்து மேகலாவிடம்
“உனக்கு அறிவே இல்லை. எப்பவும் தரவ ஏன் தரலன்னு யோசிச்சு பொறுமையா பேசாம இப்படி சத்தம் போடுற?” என்று திட்டினாள்.
யமுனா உடனே தன்னிடம் இருந்த மற்ற இரண்டு நெயில் பாலிஷ் கொடுத்தவள் “கலா, கோச்சுக்காத டி. இது வைச்சுக்கோ, உனக்கு நான் இதே மாதிரி புதுசா வாங்கித்தரேன்” என்று சமாதானம் செய்தாள்.
*****************
சூர்யாவைப் பார்த்து இரண்டு வாரங்கள் ஆகிறது, அவனுக்குத் தேர்வுகள் இருக்க இவளைப் பார்க்கவரமுடியவில்லை. அவனின் தேர்வுகள் முடிந்து யமுனாவை அவள் கல்லூரி விடும் சமயம் பார்க்க வந்தான் சூர்யா.
அவனைக் கண்டதுமே “எனக்கு உங்களைப் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருந்தது சூர்யா” என்று யமுனா சொல்ல,
“எனக்கும்தான்” என்றான் அவனும்.
“எப்படி போச்சு உங்க எக்ஸாம்? நல்லா எழுதுனீங்களா?” என்று அவன் படிப்பைப் பற்றி விசாரிக்க, இவள் படிப்பைப் பற்றிக் கேட்டறிந்தான்.
“இந்த வாரம் படத்துக்குப் போலாமா?” என்று சூர்யா கேட்க
“அச்சோ முடியாது” என்று அவள் மறுக்க
“போ ரா, எல்லாத்துக்கும் பயப்படுற. அப்புறம் எப்படி பார்த்துக்கிறது, பேசிக்கிறது?” என்றான் கொஞ்சம் கோபமாய்.
“கோவப்படாதீங்க சூர்யா, எனக்குப் பயம்தான். ஆனா உங்க கூட இருக்கப்போ நான் தைரியமாத்தான் இருக்கேன். தமிழ் படம் வேண்டாம், நீங்க சொன்ன மாதிரி தெலுங்கு படமே போகலாம்” என்று யமுனா சொல்ல
“அச்சோ நா ப்ரியத்தம்மா!” என்றவனுக்குப் பெருமிதமாய் இருந்தது. அந்த வாரம் அவன் சொன்னது போலவே தெலுங்கப்படத்திற்கு அழைத்துப்போக வந்தவன் தன் ப்ரியத்தம்மாவைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனான். யமுனாவும் அன்று கண்டது ஒரு புத்தம் புதிய சூர்யாவை. அவனுமே இன்னும் இன்னும் காதல் கொள்ள வைத்தான் அவளை.