“எப்போ இருந்து என்னை பிடிக்கும்?” என்று ஆவலாகக் கேட்க
“அது அறியிலா” என்றாள் மின்மினி.
“பின்னே எந்தா அறியும் மின்மினிகுட்டி?” என்றவன் கைகள் மின்மினியின் கரங்களை அழுத்திக்கொடுத்தன.
“இவ்வளவு நேரம் நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” என்று இங்கிருந்து சென்றதிலிருந்து நடந்ததை ஒப்பிக்க மின்மினியும் சொன்னாள்.
“நீங்கதான் உங்க ஜோலி முடிஞ்சதும் போய்ட்டீங்களே அப்போ எப்படி நான் சொல்லுவேன்?” மின்மினி முகத்தில் சிரிப்பிருந்தாலும் அவள் குரல் அவள் உணர்ந்த கஷ்டம் சொல்ல, அதற்கும் கூட வினயனை அவள் குறை சொல்லவில்லை.
“அப்போ எல்லாருக்கும் எல்லாரும் இஷ்டமா இருக்க மாட்டாங்கன்னு நீ சொன்னது இதை மனசுல வச்சா?” வினயன் புரிந்துகொண்டு கேட்க மின்மினி ஆமாமென்றாள்.
“என்ன செய்றது எனக்கு இந்த அஹங்காரியைத் தானே பிடிச்சிருக்கு.” என்றான். மின்மினி அவன் கையிலிருந்து தன் கையை எடுக்க பார்க்க,
“விளையாட்டுக்குச் சொன்னேன், கோவப்படாத. அது எங்க அச்சச்சன் ஒரு நாள் நாங்க ஏதோ பேசும்போது விளையாட்டா சொன்னாரு. அவர் மினியை சொன்னார், அது எனக்கு ஞாபகம் வந்துடுச்சு” என்று சமாதானம் செய்தான்.
“ஏட்டன் என்ன சொல்லும்?” என்று மின்மினி கவலையாக அவனிடம் கேட்க
“என்ன சொல்லுவான்? சீக்கிரம் அவனை பெரியப்பா ஆக்க சொல்லுவான்” என்றான் சிரிப்போடு. ஓடும் நீரை எடுத்து தெளித்து உற்சாகமாக வினயன் பேச
முகம் சுருக்கிய மின்மினி, “எண்டே ஏட்டன்” என்றாள்.
“அவரா? இங்க பார் மின்மினி என் ஏட்டன் கிட்ட நான் பேசுறேன். உன் ஏட்டன் கிட்ட நீ பேசு. ஜெய் பொய் சொன்னதுக்குத் திட்டுவான் தவிர லவ் எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான். சொல்லப்போனா இப்ப சொன்னா கூட உடனே எங்கப்பாவை அழைச்சிட்டு பொண்ணு கேட்க வந்துடுவான்” என்றதும்
“வேண்டா வேண்டா” என்று பதறினாள் மின்மினி.
“ஏட்டா திட்டுவார்” என்றதும்
“ஹாஹா! டென்ஷன் ஆகாத. எங்கப்பா வரேனு தான் சொன்னார், உன் விருப்பமில்லாம சொல்லக் கூடாதில்ல. இப்போ என்ன உன் ஏட்டாவும் ஓகே சொல்லணும். கரெக்ட்தான், அப்பா வந்து அவங்க எதாவது பேசிட்டா கஷ்டமா போய்டும். என்ன செய்றது?” என்ற வினயனுக்கும் யோசனை.
“ஐடியா!” என்ற மின்மினி
“இந்த வாரம் என் பர்த்டே வருது, அப்போ ஏட்டா கிட்ட எனக்கு வினயன் இஷ்டம் சொல்லிடுறேன்” என்றதும்
“மின்மினி சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்” என்றான்.
புரியாமல் மின்மினி பார்க்க, “இப்படி நீ அழகா பேசும்போது எனக்கு கிஸ் பண்ணனும் தோணுதே. கல்யாணம் பண்ணாம நீ கிஸ் பண்ண விடுவியா சொல்லு?” என்றதும் மின்மினி சட்டென்று எழுந்துவிட்டாள்.
“அடிப்பாவி! என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு பயமா இருக்கா?” என்று சிரித்தான் வினயன்.
“தமாஷு பறையண்டா. ஐடியா ஓகேவா?” என்று மின்மினி கேட்க
“ஓகே! நீ சேட்டாவை பேசி கன்வின்ஸ் பண்ணு. அதுக்கு மேல முடியலன்னா நானும் பேசுறேன்.” என்றதும் இருவரும் அங்கிருந்து எழுந்து நடந்தனர்.
“அப்போ எப்போ போறீங்க?” என்று மின்மினி வினயனிடம் கேட்க
“எங்க?” என்று அவளை பார்க்க
“ஊருக்கு?”
“அதெல்லாம் போகல. ஒரு வாரம் நான் உன்னை ஜாலியா லவ் பண்ண போறேன். நல்ல வேளை ஒரு செட் டிரஸ் எடுத்துட்டு வந்தேன். எங்க டாடி கிட்ட லீவ் லெட்டர் சொல்லிக்கிறேன். உன் பர்த்டேக்கு நானும் உன்னோட இருக்கணுமில்ல மின்மினி” என்று வினயச்சந்திரன் கேட்க, மின்மினியும் எதையும் யோசிக்காது உற்சாகமாக தலையசைத்தாள்.
மின்மினி முன்னே வீட்டுக்குப் போக, வினயச்சந்திரன் அவள் சென்று ஒரு மணி நேரம் கழித்துப் பூவம்பள்ளில் வீட்டுக்குப் போனான்.
வினயச்சந்திரன் வரவும் நசீர், “என்னடா ஊருக்குப் போன உடனே வந்துட்ட. ஒரு போனும் இல்ல” என்று கேட்க அவரிடம் பதில் சொல்லிக்கொண்டிருக்க பிரதாபன் வீட்டிலிருந்து வெளியே வந்தான்.
“எந்தா டா வினயா? வரேன்னு சொல்லவே இல்லை. ஊருக்குப் போய் போன் இல்ல” கேட்டுக்கொண்டே அவன் நடக்க, வினயனும் அவனோடு இணைந்தான்.
“அங்க கொஞ்சம் வேலை சேட்டா” என்றான்.
“உன்னைத் திட்ட தேடினேன். எதுக்கு நீ நான் அன்னிக்கு ஆலப்புழாவுல இருப்பேன்னு தாரிணிக்குச் சொன்ன? நான் உனக்கு முதலாளியா இல்லை அவளா? இனிமே இது மாதிரி காரியம் பண்ண கூடாது. மனசிலாயோ?” என்றான் அதட்டலாக.
வினயனுக்கு ‘கிராம் பொய்க்கே இந்த பேச்சு பேசுறார். கிலோ கணக்குல அள்ளி விட்டிருக்கேன். கிழிச்சி தொங்க விட்டுடுவார் போலயே.’ என்று உள்ளே எண்ணம் ஓடினாலும்
‘லவ் பண்றது என்ன தப்பா? இன்னும் நாலு நாள், மினி பர்த்டே அன்னிக்கு சேட்டா கிட்ட உண்மை சொல்லிட வேண்டிதான்.’ என்று நினைத்தான்.
“பின்னே உன் அச்சன் எப்படியிருக்கார்?”
“அவருக்கென்ன ஜம்முனு இருக்கார்” தேவிகுளம் சென்று வந்த குஷியில் பழையபடி பேச
“குடிக்கிறதில்லையா?” என்று பிரதாபன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“நல்ல விஷயம்தானேடா? ஏன் முழிக்கிற?” என்ற பிரதாபன் “இங்க ரிஹேபிலிடேஷன் செண்டர்’ல எனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. அதான் கேட்டேன்” என்றதும் பிரதாபனின் அக்கறையிலும் அன்பிலும் வினயனுக்குச் சுருக்கென்றது.
“சாரி சேட்டா” என்றான் உண்மையான வருத்தத்தோடு.
“எதுக்குடா?” என்று பிரதாபன் புரியாது பார்த்தவன்
“ஓஹ், தாரிணி சமாச்சாரமா? விடு ஒரே ஊர்க்காரங்கன்னா ஹெல்ப் பண்றது சகஜம்தானே?” என்றான்.
“அதில்ல சேட்டா” என்றவனுக்குப் பிரதாபன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரியாது உண்மை சொல்லி இன்னும் கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற தவிப்பு.
பொய் சொல்லியிருக்கக் கூடாது என்று இன்று நினைத்தான். உண்மை சொல்லியிருந்தால் இப்போது உரிமையாக மின்மினியைப் பெண் கேட்டிருக்கலாம். என்ன நினைப்பானோ என்ற எண்ணத்தில்
“சேட்டா நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும். இப்போ இல்ல ஒரு நாலு நாள் அப்புறம்.” என்று சொல்லி வைக்க
“அதுக்கென்ன சொல்லு” என்ற பிரதாபன் கைகடிகாரத்தில் நேரம் பார்த்து,
“டா வினயா, இன்னிக்கு இங்க ‘படயணி’ நடக்கப்போகுது. நீ போய் குளிச்சி ரெடியாகி தேவி அம்பலம் வந்திடு. நான் அங்க கவனிக்க போறேன்” என்றான்.
“அம்பலத்துக்குப் போகணும், லேட்டாகிடும்” என்ற மின்மினி தயாராக சென்றிட, வினயச்சந்திரன் தாமரக்குளத்தின் தேவி அம்பலம் சென்றான். அங்கே அம்பலம் அருகே இருந்த வெட்டவெளியில் ‘படயணி’ நடைப்பெற்றது.
‘படயணி’ என்பது போர்ப்படையைக் குறிக்கும் சொல். படயணி என்பது திராவிட வழிபாட்டு முறையின் எச்சமாகப் பார்க்கப்படுகிறது.
தாமரகுளம் அதற்குப் பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் அந்த பெரிய வெளியில் கூடியிருக்க, இரவு தொடங்கிய நேரத்தில் படயணி நடைப்பெற்றது. பச்சை மரங்களில் அலங்கார விளக்குகள் கட்டப்பட்டிருக்க, நீல இரவின் காற்றோடு மக்களின் பேச்சும் படயணி கலைஞர்களின் பாடலும் அவ்விடத்தை நிறைத்தது.
வினயச்சந்திரன் இதுவரை படயணியை நேரில் கண்டதில்லை. அருகே நின்ற நசீரிடம் அதனை சொல்ல,
“டா மோனே! தெய்யம் அறியுமோ? அது போலத்தான் இங்க படயணி. தேவி அம்பலத்துல நடக்குற ஒரு சடங்கு, ஆலப்புழா ஜில்லா, கோட்டயம், கொல்லம் எல்லாம் இடத்திலயும் நடக்கும். (டிசம்பர்) தனு மாசம் தொடங்கி மேடம்(மே மாதம்) வரை நடக்கும். பத்தினம்திட்டாவுல நடக்குற படயணி ரொம்ப ரொம்ப பேமஸ். பைரவி கோலம் வரும் பாரு அற்புதமா இருக்கும்” என்றார் நசீர்.
வினயச்சந்திரன் விழிகள் அந்த இரவில் மின்மினியைத் தேடி கண்டதும் வெளிச்சம் கொண்டன. அடர் மெரூன் நிற பட்டுச்சட்டையும் வெண்ணிற பட்டுப்பாவாடையும் அணிந்து, ஜாதிமல்லி சூடியிருந்தாள் மின்மினி. அங்காங்கே இருந்த சிறு வெளிச்சத்தில் அவள் முகம் கண்டவனுக்குப் புன்னகை அரும்பியது.
“பகவதியம்மா கிட்ட நமக்கு வேண்டிக்கோ” என்று அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியவன் போனை காணும்படி சைகை செய்தான்.
மின்மினிக்கு அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. கிடைக்காது என்று நினைத்த நேசம் கிட்டிய மகிழ்ச்சியும், அதனை எப்படி ஏட்டனிடம் பகிரப்போகிறோம் என்ற பயமும் அவளை ஆட்டுவிக்க, பகவதியம்மாவிடம் அவள் வேண்டுதல் அதுவாகத்தான் இருந்தது.
“ஏட்டனைக் கஷ்டப்படுத்திடாம எல்லாம் நடக்கணும். ஏட்டனுக்கும் பிடிச்ச மாதிரி அவர் வாழ்க்கை இருக்கணும். ஏட்டனுக்கு வினயனைப் பிடிக்கணும்” என்று மனதார வேண்டினாள் மின்மினி.
வினயச்சந்திரனுக்கும் அதே வேண்டுதல். எப்போதும் பகவதியம்மா அவன் இஷ்ட தெய்வம் அல்லவா? வார்த்தையாக அல்லாமல் உணர்ந்தே ஒவ்வொரு முறையும் சொல்பவன். அடிக்கடி அம்பலம் போகாவிட்டாலும் மனதிலே தெய்வத்தை நினைப்பவன்.
வந்ததுமே அம்பலம் சென்று தேவியை வணங்கியவன் இப்போது படயணியைப் பரவசத்தோடு பார்த்தான்.
தப்பு, கைமணி, செண்டா மேளங்கள் என்று வாத்திய இசை ஒருபக்கமிருக்க, தீப்பந்தங்களின் வெளிச்சம் அந்த இடத்தை நிறைத்தது. சிறிதும் பெரிதுமாக கோலங்கள் எனப்படும் முகமூடிகள், தலையில் கரகங்களாக வைத்து நடனம் ஆடுவார்கள். தாருகாசுரனைக் கொன்ற பின் தெய்வத்திற்கு இருந்த கோபத்தைத் தீர்க்க பூதகணங்கள் நடனம் ஆடி தேவியின் கோபத்தைத் தணித்ததாக ஒரு கதையுண்டு. அதுவே ஒரு தெய்வீக சடங்காகத் தொடங்கி நாட்டுப்புறக்கலையாகவும் வளர்ந்தது.
“அங்க பாரு அதான் சிவ கோலம்” என்று நசீர் காட்டிய திசையில் பார்த்தான் வினயன். தலையில் சிவபெருமான் போல் நாகத்தை சுமந்தவண்ணம் ஒருவன் நடனமாட தயாராக நின்றான்.
“சேட்டா! அது என்ன இவ்வளவு பெருசா கரகம் மாதிரி இருக்கு. சூப்பர்ல?” என்றான் அந்த பைரவி கோலம் கண்டு.
“டா அதான் பைரவி கோலம். பெருசா இருக்கே, இதெல்லாம் இயற்கையா செய்றது. அந்த பெரிய இலை இருக்கே அது பாக்கு மரத்தோட கடைசல். அதுல வரைஞ்சிருக்கறதெல்லாம் கரி, மஞ்சப்பொடி, செந்தூரம். எதுவும் பெயிண்ட் இல்ல.” என்ற நசீர்
“இப்போ பாரு தப்பை நெருப்பில காட்டிட்டு உடனே படயணி ஆரம்பிச்சிடுவாங்க. சின்ன கோலத்தில இருந்து தொடங்கி பெரிய கோலம் வரை ஆடுவாங்க” என்ற நசீரின் கவனம் அதன்பின் அங்கேதான் இருந்தது.
வினயனும் தன் செல்பேசியில் அதனை புகைப்படம் எடுத்து அப்பாவிற்கு அனுப்பிவைத்தான்.
“பங்க சாக்ஷி தேவி அம்மே
தை தை தக தை தை தோ!” என்று மைக்கில் ஒரு பக்கம் படயணி கலைஞர் பாட, அவரை சுற்றி நின்றவர்களும் கத்தி பாடினர். செண்டாவின் சத்தமும், மற்ற மேளச்சத்தங்களுக்கும் நடுவே ஒவ்வொரு கோலமாக நடனம் நிகழ்ந்தது.
சிறியவர்கள் பெரியவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி விழாவினை கண்டனர். தீப்பந்தங்களின் வெளிச்சத்திலும் பாடல் சத்தத்திலும் மேளதாளத்தின் ஒலியிலும் கோலங்களை சுமந்து நடனம் ஆடியவர்களின் பாங்கிலும் வேறு எதிலும் கவனம் போகவில்லை.
கால்களில் சலங்கை கட்டி, கருப்பு வேட்டியும் இடையில் சிவப்பு துண்டும் கட்டியபடி சிவ கோலம், பக்க்ஷி கோலம், குதிரை கோலம் என வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்து நடனம் ஆடினர்.
பிரதாபனுக்கு முழுவதுமாக தேவி சரணம் என்ற நிலை. வினயனுமே மெய்மறந்து ஆர்வமாக ரசித்தான். கால்கள் மெல்ல தாளமிட கண்களை மூடி பைரவி கோலத்தை தரிசித்தான்.
“எங்கச்சச்சன் நல்லாயிருக்கும்போதே எங்க தரவாட்டை நான் திருப்பிடணும் அம்மே நாராயணி. மினிகுட்டிக்கு நல்ல வரனா அமையணும்” என்று வேண்டினான் பிரதாபன். மனதின் வேண்டுதலை எல்லாம் எல்லாரும் தெய்வத்திடம் சமர்ப்பித்து வீடு திரும்பினர்.
அடுத்த நாளே பூவம்பள்ளில் தரவாட்டினை திருப்பிக் கேட்க தலவாடி ராஜகோபாலன் இல்லத்தில் பிரதாபனும், அந்த ஊரின் முக்கிய உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.
வீட்டில் மின்மினி எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க, வினயச்சந்திரன் பிரதாபனோடு அங்கே துணை நின்றான். உன்னிகிருஷ்ணன் பார்வை வினயனை ஆராய்ந்தது.