“சாப்பிட்டு சொல்லுங்க. நானே எல்லாம் செஞ்சாதான் எனக்குத் திருப்தி” என்ற வினயன் மீன் கறியும் சோறும் செய்தான்.
இரவு உணவினை இருவரும் கட்டுவள்ளத்தில் உண்டு முடிக்க, பிரதாபனுக்கு சமையல் எல்லாம் தெரியாது. சாயாவும் காபியும் போட மட்டும் தெரிந்தாலும் ஒரிரு முறைக்கு மேல் செய்ததில்லை.
உண்ணும்போது பிரதாபன் கண்களில் வந்த ஆச்சரியமும் உண்டு முடித்ததும்,
“நல்லாயிருக்கு வினயா” என்ற பாராட்டும் கிடைத்தது. உண்டு முடித்து சிறிது நேரம் பிரதாபன் அமைதியாக உட்கார, வினயன் எல்லாவற்றையும் எடுத்துவைத்தான்.
“டா வினயா! நீ நாட்டுப்படகுல போகணும்னு ஆசைப்பட்ட இல்ல..?” என்றான் பிரதாபன் ஆர்வமாக.
“ஆமா சேட்டா”
உடனே எழுந்த பிரதாபன், “அப்போ வா போலாம்.” என்றபடி கட்டுவள்ளத்தில் ஒருபக்கம் கட்டியிருந்த நாட்டுப்படகினை மெல்ல எடுத்தான். துடுப்பையும் தயார் செய்தவன்
“அந்த லைட் எடுத்துக்கோ” என்றான்.
நீண்ட பெரிய நாட்டுப்படகு அது. இருவர் தாராளமாக உட்காரலாம். பிரதாபன் துடுப்பினை போட அந்த காயலின் காற்று வீச ஒரு பயணம். வினயச்சந்திரனுக்கு அதுவொரு அலாதி அனுபவம்.
வானம் இரவில் கவிந்திருக்க மிகுந்த அடர்த்தியான இரவு. நிலவு பிறையாக இருக்க,
“இன்னொரு நாள் பௌர்ணமி அன்னிக்கு வரலாம்” என்ற பிரதாபன் எதுவும் பேசவில்லை. நீரில் துடுப்பின் ஓசையும் மெல்லிய நீரோட்டத்தின் சத்தம் தாண்டி எதுவுமில்லை. அடர்ந்த இரவில் குளிர்ந்த நீரின் காற்று உடல் தொட்டுப்போனது.
இதே போல் ஒரு நாளில் தாரிணியை இங்கே அழைத்து வர ஆவல் கொண்டிருந்தது பிரதாபன் மனம். அதை நினைத்தபடி அமைதியாக அவன் படகினை செலுத்த, வினயன் அவன் முன் உட்கார்ந்தபடி நீரில் கையை விட்டு அள்ளித் தெளித்து ஆனந்தமாய் அத்தருணத்தை அனுபவித்தான்.
“தேங்க்ஸ் சேட்டா” என்று கத்த
“ஏடா! சத்தம் போடாத, தண்ணில பாம்பு கூட இருக்கும். ராத்திரில கை வைக்காத” என்று அதட்டினான் பிரதாபன்.
அரை மணி நேரம் அமைதியான பயணம். மீண்டும் கட்டுவள்ளம் நோக்கி பயணம் ஆரம்பிக்க வினயனுக்கு மனதிலிருந்ததை அவனிடம் கேட்க ஒரு ஆவல்.
“சேட்டா! நான் ஒன்னு கேட்கவா? தரவாட்டை மீட்டுட்டா அடுத்து உங்களுக்கு எந்த ப்ரச்சனையுமில்லதானே?”
“மினிக்குக் கல்யாணம் பண்ணனும்”
“அதெல்லாம் பண்ணிடலாம், அது தவிர?” என்றவன்
“ரொம்ப நேரமா நீங்க துடுப்புப் போடுறீங்க? என்கிட்ட கொடுங்க” என்று கேட்க
“டா உனக்கு தெரியுமா?”
“நாங்க பெரியாறு ஆத்துலயே படகு விட்டவங்க. அதெல்லாம் தெரியும் கொடுங்க சேட்டா” என்று வினயன் துடுப்புப் போட, அலுப்பாக இருக்க பிரதாபன் அப்படியே படகின் ஒருபுறத்தில் சாய்ந்து படுத்தான். வானம் அவனை அணைத்தவுணர்வு, பல வருடங்கள் கழித்து ஒரு ஆறுதலான நிலை. தண்ணீரில் மிதந்தவன் தாரிணியின் நினைவிலும் மிதந்தான்.
இருந்தும் ஒரு தேடல்! வானத்தின் நீலத்திலும் நீரின் குளுமையிலும் நிறைவுறவில்லை அவன்.
அவளுக்காக வந்துவிட்டு அவன் காதலை மட்டும் பார்க்க நட்பு விடவில்லை. அது வினயனுமில்லையே?
“தாரிணி” வானத்தைப் பார்த்தபடி மெல்ல உச்சரித்தான் பிரதாபன். காற்றில் அவன் கேசம் கலைந்து அந்த களைப்பிலும் காற்றும் இரவும் மட்டும் காணும்வகையில் ஒரு புன்னகை அவனிடத்தில்.
“தாரிணி தாஸேட்டா பாட்டு போலொரு பெண்குட்டி”
ரசனையாக ஒலித்த பிரதாபனின் குரலை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை வினயன். அந்த அதிர்வில் அமைதியாக இருக்க, அந்த அமைதி பிரதாபனை பேசத் தூண்டியது. வானமும் அவனும் மட்டும் இருப்பது போலொரு உன்மத்த நிலையில் உள்ளம் பகிர்ந்தான்.
“தாஸேட்டா பாட்டுல எல்லாமுமிருக்கும். எந்த பாட்டு கேட்டாலும் அவர் குரல் தனிதானே? அதுல இருக்க ஒரு தெய்வீகம், ம்ம். சுகம் அல்லே? தாரிணி அப்படியொரு பாட்டு. “
“அவளை பன்னிரெண்டு வயசுல பார்த்தேன்” என்று அன்றைய ஞாபகத்தை நினைவில் கொண்டு பேச
“எண்ட அம்மோ! பன்னிரெண்டு வயசுலவா?” என்று வினயன் அதிர்ந்தான்.
“அப்போ அவ அம்மா இல்ல. ராவிலே(காலையில்) அவங்க அச்சனோட பைக்ல வந்து இறங்குவா. அவங்கச்சன் கிட்ட அஞ்சு நிமிஷம் பெரிய பொண்ணு போல பேசிட்டு உள்ள வருவா. முதல்ல களரி கத்துக்க கஷ்டப்படுவான்னு நான் நினைச்சேன் பச்ஷே மிடுக்கியானு(புத்திசாலி) அவ. எங்கச்சச்சனுக்கே அவளை ரொம்பப் பிடிக்கும்னா பாரேன். பயங்கரமா ப்ராக்டீஸ் பண்ணுவா, சின்ன வயசுலயே என்னோட போட்டிக்கு நிப்பா.”
“தாரிணி எனக்கொரு மின்னாரம்(கலங்கரை விளக்கம்) போல! அந்த சின்ன வயசுலயே அம்மா இல்லன்னு கலங்கினதில்ல, அவளுக்கு என்ன கஷ்டமிருந்தாலும் மனசுல அழுத்தமாக கோவமா வச்சிட்டு பேசாம இருப்பா. மத்தபடி சொல்ல மாட்டா இஞ்சிப்பொண்ணு. நான் எங்கம்மா கூட இல்லைனு அழுவேன், அவ அழாம இருக்கிறது பார்த்து எனக்கொரு தைரியம். தைரியம் சொல்றத விட ஈகோ, சின்னப்பொண்ணு இவ அழாம அடம்பிடிக்காம இருக்கா நம்ம ஏன் இருக்க முடியாதுனு ஒரு போட்டி”
பிரதாபனின் மனதில் தாரிணி இத்தனை நிறைந்திருக்கக் கூடுமென அறியவில்லை வினயச்சந்திரன். தாரிணியின் பிடித்தம் ஒருபக்கமானது என்று நினைத்திருக்க, ஆச்சரியமும் அதிர்வுமுமாக பிரதாபனின் பேச்சைக் கேட்டான்.
“அப்புறம் ஏன் சேட்டா அன்னிக்கு தாரிணியை வேண்டாம் சொன்னீங்க?” ஆதங்கமாக கேட்டான் வினயன்.
“இஷ்டமுள்ளது வேண்டா என்னு பறையுன்னது எத்தர கஷ்டமானென்னு நினக்கரியலா” (பிடிச்சதை வேண்டாம்னு சொல்றது எத்தனை கஷ்டம்னு உனக்குத் தெரியல) என்ற பிரதாபனின் வார்த்தைகளில் வெறுமை.
“என்னது? அப்போ தாரிணி தாஸேட்டா பாட்டுனு இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம்?”
“அதெல்லாம் சத்தியம்! ஆனாலும் தாரிணிக்கும் எனக்கும் சரி வராதுடா. அவளுக்கு ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கை அமையணும். அப்போ இருந்த மாதிரி நான் இல்லை. இதை பத்தி பேசாத” என்றான் அழுத்தமாக.
பிரதாபனின் பிரியத்தின் தாகம் ‘தாரிணி’, அதனை தணிப்பவளும் தாரிணியே என்று வினயனுக்குத் தெள்ளத்தெளிவாக புரிந்தது. ‘தாமரகுளத்துக்கே கேட்கிற மாதிரி தாரிணிதான் வேணும்னு உங்களை சொல்ல வைக்கிறேன்’ என்று சூளுரைத்தான்.
சிறிது நேரம் மெதுவாய் அந்த படகினை செலுத்திய வினயனிடமிருந்து துடுப்பினை வாங்கி, கைனகரியில் அவர்களின் கட்டுவள்ளமிருந்த இடம் நோக்கி செலுத்தினான் பிரதாபன்.
‘தன தனானா தனா தானா தான நன..
ஆலப்புழ பட்டணத்தில் அதிமதுரம் விதரியோலே
கண்ணும் கண்ணும் கடம்பறஞ்சு கடம்கதையில் மனம் புழஞ்சு
கொதுப்பிச்சு கடந்தனேந்தே குட்டநாட்டுக்காரி’
வினயச்சந்திரன் குரல் காயல் காற்றில் சந்தோஷத்தில் சங்கீதம் சேர்க்க
“ஏடாஆஆஆ! என்ன இவ்வளவு நல்லா பாடுற?” என்று பிரதாபன் ஆச்சரியம் கொண்டான்.
“எங்க அச்சம்மா கூட சேர்ந்து ஏதோ சுமாரா பாடுவேன் சேட்டா”
“சுமாரா? சூப்பர் வினயா” என்றான் பாராட்டாக.
பாட்டில் கவனம் வைத்த பிரதாபன் பாடுபொருளில் கவனம் வைக்கவில்லை.
வினயன் அவன் மனம் கவர்ந்த குட்ட நாட்டுக்காரியோடு இங்கு வர வேண்டும் என்று அவா கொண்டு உற்சாகமாகப் பாடிட
“ஆலப்புழ பட்டணத்தில்…” என்ற பிரதாபனின் மென்மையான குரலும் அவனோடு சேர இருவருக்கும் அது இனிதிரவானது.
இருவரும் கட்டுவள்ளத்தில் படுத்துறங்க, அதிகாலை நேரம் வானம் அருகில் இருந்தவுணர்வு. மிக இளஞ்சாம்பல் நிறத்தில் வானும் நீரும் கிட்டதட்ட ஒரே நிறமாய்த் தெரிய, வாத்துக் கூட்டத்தின் சத்தத்தில் கண்விழித்தான் பிரதாபன். மெல்ல எழுந்து அவன் கட்டுவள்ளத்தை செலுத்த தொடங்க, கைனகரியில் அழகிய காலைவேளை அது.
சிறிய நாட்டுப்படகில் சிலர் மீன்பிடித்து செல்ல, சுற்றிலும் நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள். அங்கே பொதுபோக்குவரத்து, தனிபோக்குவரத்து எல்லாம் நீருக்குள்ளே அதிகம் நடக்க தனி தனி படகுகள் உண்டு. வினயச்சந்திரன் நீலவானில் வெண்புறாக்களின் கூட்டத்தைக் கண்டபடியே கண்விழித்தான்.
சூரியன் பொன்மஞ்சள் பந்தாய் வானில் வலம் வர, வினயச்சந்திரனுக்கு அத்தனை அழகையும் காண ஒரே உவகை. கட்டுவள்ளம் மெல்ல பயணத்தைத் தொடங்கியிருக்க புலர்ந்த அந்த காலைப்பொழுதில் விதவிதமான பறவைகள் வானில் உலா போக தொடங்கின. நீருக்குள் மூழ்கியிருந்த பாதி மரத்தண்டில் மீன்கொத்திப் பறவை உட்கார்ந்திருக்க, கைகனரியிலிருந்து அதன் பக்கத்து கிராமம் செல்லும் வழியெல்லாம் நீரை நிறைத்திருந்தது நீலோற்பலம் எனப்படும் ஊதாப்பூக்கள். வெளிர் ஊதாவும் வெள்ளையும் கலந்த நிறத்தில் பச்சை இலைகளுக்கு மத்தியில் அழகாய்ப் பூத்திருந்தன அந்த ஆகாயத்தாமரை மலர்கள்.
சிறுதும் பெரிதுமாய்க் காயலில் கிடக்கும் மரக்கலங்களில் எல்லாம் பறவைகள் கூட்டம். அவர்கள் கட்டுவள்ளம் சுற்றிலும் வாத்துக்கூட்டம்.
“ஐ வாத்து” என்று குழந்தையாய் உற்சாகம் காட்டிய வினயன் உடனே அதனை காணொளியாய்ப் பதிவு செய்து அவன் அண்ணி ஊர்மிளாவுக்கு அனுப்பி,
“சுஜிக்குக் காட்டு ஊர்மி” என்று செய்தி அனுப்பினான்.
“எப்பாவாச்சும் திருந்திதானே ஆகணும்” என்ற வினயனிடம் பிரதாபன் தலையசைத்தான்.
“சேட்டா! ஒரு கற்பனைக்கு நாளைக்கே நான் ஒரு மூணு ரிசார்ட் வச்சிருக்கேன், உங்க தரவாடு அளவில்லனாலும் ஒரு அழகான வீடு இருக்கு. அப்போ நீங்க எப்படி பீல் பண்ணுவீங்க?” என்று ஆவலாய் வினயன் கேட்க
“சந்தோஷப்படுவேன்” என்றான் பிரதாபன்.
அதில் வினயனின் முகத்தில் புன்னகை உதிக்க, பிரதாபனுக்கும் வினயனை கண்டு புன்னகை. அது கற்பனையோ இல்லை வினயனின் எதிர்கால கனவு என்ற எண்ணம் பிரதாபனுக்கு, உண்மை அறியும்போது இருவர் முகத்திலும் புன்னகை இருக்கப்போவதில்லை.