தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், தன்னை பார்வையால் அளந்து கொண்டிருந்த சூர்யாவை கண்டு யமுனாவிற்கு டென்ஷன் கூடியது. தனியாளாக சண்டையிட்டு படிக்க வந்திருக்கிறோம், ஆண்களிடம் ஏன் வம்பு வளர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வில், தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய்விடலாம் என நினைத்தாள். தோழிகள் இன்றி வந்திருக்க பயம் பிடித்தது.
புத்தகங்களை எடுக்கலாம் என யமுனா வேகமாய் எழுந்துகொள்ள, சூர்யா சட்டென யமுனாவின் செயலைக் கவனித்து கணித்தவன், புத்தகங்களின் அருகே மேஜை மீது கிடந்த யமுனாவின் ஐடி கார்டை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்தான்.
“ஹலோ மிஸ்டர்! ஏன் இப்படி வம்பு பண்றீங்க?” என்று யமுனா பதட்டமாய்க் கேட்க
“யமுனா! ரிலாக்ஸ். உன்னோட டவுட்ஸ் க்ளீயர் செய்றேன்னு சொன்னேனே ஏன் வரல நீ?” என்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு யமுனாவின் புத்தகத்தைப் பிரித்து பாதியில் விட்டிருந்த கணக்கைத் தொடர்ந்தான்.
“ஏன் இப்படி பண்றீங்க? நான் போய் லைப்ரரியன் கிட்ட கம்ப்ளையண்ட் பண்ணுவேன்” என்று யமுனா கோபமாகப் பேசவும் அவளைத் தீர்க்கமாய்ப் பார்த்த சூர்யா
“நான் அமைதியா உன்னோட சம்மை சால்வ் தானே பண்றேன். என்ன கலாட்டா பண்ணினேன்? ஜஸ்ட் வெயிட்! ஒரு பத்து நிமிஷம் அமைதியா உட்கார், நான் முடிச்சிட்டு உன் ஐடியைக் கொடுத்துட்டுப் போய்டுவேன். இல்லை அர்ஜெண்டா ஐடி வேணும்னா நீயே வந்து எடுத்துக்கோ” என்று சொல்லவும் யமுனாவும் வேறு வழியின்றி
‘முருகா, எந்த பிரச்சனையுமில்லாம இவர் என்னை விட்டுடனும்’ என்று வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, பத்து நிமிஷம் முடியும் முன்னே கணக்கை முடித்துவிட்டான் சூர்யா.
“இட்ஸ் டன்! பாரு, நீ கரெக்டாதான் போட்டிருக்க, இந்த இடம் மட்டும் தப்பு பண்ணிட்ட, cosக்குப் பதில் tan போட்டுட்ட” என்று விளக்கம் சொல்ல யமுனாவின் கவனம் சூர்யாவிலிருந்து கணக்கில் விழுந்தது.
“ஓஹ்!” என்று தலையில் தட்டிக்கொண்டவள்,
“தேங்கஸ் நேத்து ஃபுல்லா போட்டு பார்த்தேன், தப்பாவே இருந்துச்சு” என்ற யமுனா
“என் ஐடியைத் தாங்க ப்ளீஸ்” என்று கேட்க
“நீ அமைதியா உட்காரு, நான் தரேன்” என்று டீல் பேசினான் சூர்யா.
யமுனாவும் உட்கார “உன்னை உட்கார வைக்கத்தான் உன் ஐடியை எடுத்தேன்” என்றவன் அந்த ஐடி கார்டை அவள் பக்கம் நகர்த்த, பட்டென எடுத்துக்கொண்டாள் பாவை. அந்த பாவனை சிரிப்பைத் தர அளவான சிரிப்பு ஆணிடம்.
“பெரிய பொக்கிஷம்தான்!” என்று கிண்டல் செய்தவன்
“ஜஸ்ட் டவுட் சொல்லித்தரேன் சொன்னதுக்கு ஏன் வரல நீ?” என்று மீண்டும் கேட்க யமுனாவிடம் ஒருவித கலக்கம். அந்த கலக்கம் மிகுந்த கண்களைக் கண்ட சூர்யா கனிவுடனே
“யமுனாம்மா! நான் உனக்கு பாடம் சொல்லித்தரேனு சொன்னேன், அதுக்கு எதுக்கு ரா இத்தனை டென்ஷன்? நான் ஸ்டாலின் ப்ரண்ட் தானே? கோகிலா சொன்னாதானே? இத்தனைக்கும் கோகி கூடத்தானே உன்னை வர சொன்னேன்” என்று மிகுந்த பொறுமையுடன் சூர்யா பேசவும், இப்படியான பொறுமையான பேச்சுகள் அந்த பாவை கண்ட ஆண்கள் பேசியதில்லை.
ஆண்களிடம் பேசும் சூழலே மிகவும் குறைவு, அப்படியே பேசினாலும் அப்பாவின் அதட்டலும் அண்ணாவின் அறிவுரையும் மட்டுமே யமுனாவின் நினைவில் நின்றது. மற்றபடி மாமா, சித்தப்பாவிடம் எல்லாம் ஒரிரு வார்த்தைகளே.
யமுனாவின் அப்பா சற்குணப்பாண்டியனின் பேச்சுகள் எல்லாமே அதிகாரத்தோரணையில் ஊறிய ஒன்றாய் இருக்கும்.
“இதை செய்! இதை செய்யாதே” என்பன போன்ற கட்டளைகள்.
அண்ணன் உதயமூர்த்தி அப்பாவின் அளவு இல்லையென்றாலும் கூட அதிகமான பேச்சுகள் இல்லை இருவரிடமும். ஆனால் தங்கைக்கு ஒன்றென்றால் எல்லாமே பார்த்து பார்த்து செய்வார், ஆனால் வார்த்தை வறட்சி உண்டு.
இப்போது இவ்வளவு நீளமாய் சூர்யா பேசவும் முதலில் ஒரு அதிர்ச்சி, பின் இதுவரை சூழ்ந்திருந்த பயம் பாவையை நீங்கியது.
“இல்லை, நீங்க அன்னிக்குக் கத்துனீங்களா? எங்க வீட்ல பசங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதுங்க. அதான் எனக்கு ஒரு பயம்” என்று யமுனா பயம் நீங்கி பேச
“கரெக்ட்தான்! ஆனா நான் என்ன செஞ்சிட போறேன்?” என்றவன் தோள் குலுக்கலோடு எழுந்து
“ஓகே! உனக்கு இவ்வளவு பயம் வேண்டாம். உன்னைப் பயமுறுத்த நான் வரல. என்னை நீ ஜஸ்ட் ப்ரண்டா நினைச்சிக்கோ யமுனா. எனக்குத் தமிழ் தெரியாது, குண்டூர்ல இருந்து இங்க வந்தப்போ, எனக்கு ஸ்டாலினும் ராமுவும் தான் ஹெல்ப் பண்ணினாங்க. அது மாதிரி உனக்கு மேத்ஸ் தெரியலன்னு சொல்லிக் கொடுக்க தோணிச்சு. தப்பா?” என்று சூர்யா கேட்ட விதத்தில் தவறாகவே எண்ண முடியவில்லை தத்தையினால்.
பேச்சில் வழிந்த கண்ணியமா? விழிகளில் வழிந்த கனிவா என்னவோ ஒன்று யமுனா எனும் பெண் நதியை சூர்யாவை நோக்கி இழுத்தது.
“சாரி அண்ட் தேங்க்ஸ்” என்றவள்
“இன்னொரு சம்மும் டவுட், அசைமெண்ட் கொடுத்தாங்க. ஹெல்ப் பண்றீங்களா?” என்று கேட்க சூர்யாவிற்கு இதழ் விரிந்த ஒரு புன்னகை தோன்றியது.
“அஃப்கோர்ஸ்” என்றவன் யமுனாவிற்கு அந்த அசைன்மெண்ட் கணக்குகளை முடிக்க உதவி செய்தான்.
“இந்த சம் நீயே போடு, நான் செக் பண்றேன். ஒரு புக் எடுக்க வந்தேன், அதை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி போய்விட யமுனா கணக்கில் மூழ்கினாள்.
அதை முடித்துவிட்டு பார்க்க, சூர்யா கையில் இரண்டு பெரிய புத்தகத்துடன் வர அதிலேயே யமுனாவின் பார்வை நிலைத்திருக்க, அதனைப் பார்த்த சூர்யா
“இதெல்லாம் என்னோட எக்ஸாமுக்குத் தேவையான புக்ஸ்” என்று சொன்னான்.
“ஓஹ், அப்போ நானும் தர்ட் இயர் வந்தா இவ்வளவு புக்ஸ் படிக்கனுமா?”
“இல்லை, இது நான் யுனியன் பப்ளிக் செர்வீஸ் கமிஷனுக்குப் ப்ரீப்பேர் பண்றேன், நான் என் ப்ரண்ட்ஸ் எல்லாம். அதுக்கான புக்ஸ்” என்று சொல்ல
“அது என்ன எக்ஸாம்?” என்ற யமுனாவின் கேள்வியில் இருந்த ஆர்வம் புரிய, அவளுக்கு விளக்கி சொன்னான் சூர்யா.
“ஓஹ், அப்போ சீக்கிரமே போலீஸாகிடுவீங்களா?” என்று சிரித்தபடி கேட்க
“தெரியல, எக்ஸாம் பாஸ் ஆகி ட்ரெயினிங் முடிச்சா ஆகிடுவேன். ஆமா உன்னோட ஆம்பிஷன் என்ன?” என்று யமுனாவைப் பார்க்க
“எனக்கு டீச்சரா ஆகனும்னு ஆசை, முடியுமான்னு தெரியல. எங்க வீட்ல விடமாட்டாங்க. எங்க ஊர்ல எங்க தெரு பிள்ளைங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொடுப்பேன், அவங்களும் நான் நல்லா சொல்லித் தரேன் சொல்லுவாங்க. நீங்க என்னை விட நீங்க நல்லா சொல்லித்தரீங்க, பேசாம போலீஸ் ஆகறதுக்குப் பதில் நீங்க டீச்சர் ஆகிடலாம்” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாள். பின் அவனிடம் இப்படி பேசியது தவறாய் எடுப்பானோ என்று நினைத்தவள்
“ஸாரி, நீங்க நல்லா சொல்லித்தரீங்கன்னு சொல்லிட்டேன்” என்றாள் கொஞ்சம் அமைதியான குரலில். யமுனாவின் குரல் பொதுவாகவே அமைதி என்றாலும் இது இன்னும் முணுமுணுப்பாகவே வந்தது.
“ஏன்ட்டிமா இதுக்கு ஏன் ஸாரி?” என்று சூர்யா கேட்க அந்த அமைதியான விழிகளில் ஒரு அழுத்தமான முறைப்பு.
“யமுனா! ஏன்ட்டீன்னா என்ன அப்படின்னு தெலுங்குல அர்த்தம்மா. டி எல்லாம் நேனு செப்பலேதுரா” என்று சொல்லவும் யமுனாவின் விழிகளில் ‘அப்படியா?’ என்ற பாவம்.
“அம்மா மேல ப்ராமிஸ்” என்று சூர்யா அழுத்தி சொல்ல
“இல்லை, இல்லை. சத்தியம் எல்லாம் செய்ய வேண்டாம். எனக்குத் தெலுங்குத் தெரியாதே, அதான்” என்று யமுனா ஒரு புன்னகை செய்தாள்.
“இனிமே உனக்கு டவுட்ஸ்னா என்னைக் கேளு, இல்லைன்னா பேப்பர்ல என்ன டவுட்னு எழுதி கோகிட்ட கொடுத்தா அவ ஸ்டாலின்கிட்ட கொடுப்பா. நான் போட்டு அனுப்புறேன், என்ன?” என்று புன்னகை செய்ய
“ரொம்ப தேங்க்ஸ், என் ப்ரண்ட்ஸ்ல கோகிதான் நல்லா சொல்லித்தருவா. அவளுக்குமே இது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னா. அசைன்மெண்ட் சம்மே ரொம்ப கஷ்டம்னு இந்த பேப்பர்ல அரியர் வந்திடுமோன்னு பயந்துட்டேன், இப்போ நீங்க சொல்லிக்கொடுக்கவும் நல்லா மண்டையில ஏறிடுச்சு” என்றாள் யமுனா.
அதைக் கேட்கவும் சூர்யாவிற்குள் இன்ப அலைகள்!
“அது எனக்கு என்னோட ப்ரண்ட்ஸுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கம். ஆனா எல்லாருக்கும் சொல்லித்தர அளவு நல்ல டீச்சரா தெரியல” என்ற சூர்யா புத்தகங்களை எடுத்துக் கொண்டு என்ட்ரீ போட போனவன் அந்த புத்தகங்களை
“ஒரு நிமிஷம் வச்சிக்கோ” என்று சொல்லி மீண்டும் ஆங்கில புத்தகங்கள் இருந்த பக்கம் போனான். ஒரு காமிக்ஸ் புத்தகம் எடுத்து வந்தவன்
“இது படி, உனக்கு இங்கிலிஷ் நல்லா வரும்” என்றதும் யமுனாவிற்கு இவன் தன்னைக் குறைத்துப் பேசுகிறானோ என்று ஒருவித தயக்க உணர்வுடன் பார்த்தாள்.
அந்த பார்வை சூர்யாவுக்கு நன்றாய்ப் புரிந்தது. ஏற்கனவே கேம்ப்பில் பார்த்திருக்கிறானே.
“யமுனா! இது படிச்சா உனக்கு இங்கிலிஷ் நல்லா வரும்னு சொன்னேன். உன்னைக் கிண்டல் எல்லாம் செய்யல, எனக்குக் கூட முன்னாடியெல்லாம் தமிழே பேச வராது, இங்கிலிஷ் கூட அப்படித்தான். ப்ரண்ட்ஸ் கூட பேசிதான் தமிழ் கத்துக்கிட்டேன்” என்றதும்
“தமிழ் எல்லாரும் ஈசியா கத்துக்கலாம். ஆனா இங்கிலிஷ் ரொம்ப கஷ்டம் எனக்கு. நான் ஊர்லதான் படிச்சேன், இங்க இருக்கவங்க எல்லாம் கான்வென்ட்ல படிச்சிருக்காங்க, என்னால அவங்க அளவுக்குப் பேச முடியறதில்லை” என்று சொல்லும்போதே யமுனாவின் குரலில் ஒரு வருத்தம்.
“இங்கிலிஷ் ஒன்னும் கஷ்டமில்ல, படிச்சா ஈஸிதான். நீ எவ்வளவு அழகா அன்னிக்கு இங்கிலிஷ் பேச ட்ரை பண்ணின தெரியுமா? அதுக்கே ஒரு தைரியம் வேணும்மா. இந்த புக்ல எல்லாம் கதை மாதிரி இருக்கும், நம்ம பேசுற மாதிரி இருக்கறதால ஈசியா உனக்கு அண்டர்ஸ்டாண்ட் ஆகும் ரா” என்று சூர்யா சொல்லவும் யமுனா புத்தகத்தை வாங்கிக் கொண்டாள்.
“நீங்களும் கேம்ப் வந்திருந்தீங்களா?”
“ஆமா, நான் ஸ்டாலின் ராமு எல்லாரும் வந்தோம்” என்றான்.
பின் இருவருமாக நூலகம் விட்டு வெளியே வந்தார்கள். யமுனாவின் கல்லூரி விடுதிக்கு அவள் நடந்தே செல்ல, சூர்யாவும் உடன் நடந்தான்.
நடக்கும்போது யமுனாவின் கொலுசொலி சூர்யாவின் செவி தீண்ட, அந்த இன்னிசையில் இவன் இதயம் தாளமிட்டது. கொஞ்சம் கூர்ந்து கவனித்து பார்க்க
“அது என் கொலுசு சத்தம், இப்படி சத்தம் செய்யுதுன்னுதான் போடாம இருக்க நினைச்சேன். ஆனா வீட்ல விடமாட்டாங்க” என்றாள் யமுனா.
“அதெல்லாம் இல்ல ரா. உன் கொலுசு சத்தம் ரொம்ப நல்லாயிருக்கு” என்றதும் யமுனா ஒருமாதிரி குறுகுறுவென பார்க்க
“ஏய்! டோண்ட் மிஸ்டேக் மீ! இந்த வண்டி சத்தமெல்லாம் கேட்கும்போது இது ரொம்ப நல்லாயிருக்கு. எங்கம்மா கூட இப்படித்தான் பெரிய கொலுசு போட்டிருப்பாங்க, அவங்க நடந்தாலே வீடு ஃபுல்லா ஒரு மியுசிக் கேட்கும், இப்ப நாங்க ப்ரண்ட்ஸ் தங்கியிருக்கும் பேச்சுலர் ரூம்ல அதெல்லாம் ஒன்னும் இருக்காது. அம்மாவோட கொலுசு சத்தம் வைச்சே அவங்க எங்க வராங்கன்னு தெரியும்” என்று அம்மாவின் நினைவுகளில் மூழ்கி அதை அனுபவித்து சூர்யா பேச, அதை யமுனாவும் ஆர்வமாய்க் கவனித்தாள்.
உண்மையில் யமுனாவிற்கு சூர்யாவின் மேல் இருந்த பயம், பதட்டம் எல்லாம் இப்போது கொஞ்சமும் இல்லை. அவன் இயல்பான பேச்சு, பார்வை கண்ணியமான நடத்தை எல்லாம் நங்கைக்கு ஒரு நட்புணர்வை நல்கிட, பேசிக்கொண்டே நடப்பது ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லை.
“ஓஹ்! உங்கம்மா ஞாபகம் வந்துடுச்சா? நீங்க எப்போ ஊருக்குப் போவீங்க? உங்க ஊருக்குப் பஸ்சா இல்லை டிரெயின் இருக்கா?” என்று யமுனா கேட்க
“அம்மா இப்போ இல்லை, எங்க ஊருக்கு டிரெயின்ல போவேன்” என்று சொல்ல யமுனாவிற்குப் பாவமாய்ப் போய்விட்டது.
“சாரிங்க” என்று சொல்ல
“இட்ஸ் ஓகே!” என்று சொல்லி இருவரும் நடக்க, யமுனாவின் நடை ஓரிடத்தில் நின்றது.
“என்னாச்சு?” என்று பின்னால் திரும்பி சூர்யா கேட்க
“ஷ்!” என்று வாயில் விரல் வைத்து யமுனா சொன்ன தோரணையில், சூர்யாவின் இதயம் ஸ்வரம் இசைத்தது. அங்கிருந்த ஒரு டீ கடையில்
“மாங்குயிலே! பூங்குயிலே!” என்று பாடல் டேப் ரீகார்டரீல் ஓட யமுனாவின் நடை அன்ன நடை என்பார்களே அப்படியானது. அவ்வளவு பொறுமையாய் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தாள்.
“எனக்குப் பிடிச்ச பாட்டு இது. கரகாட்டக்காரன் படத்துல வரும். அதான் கவனிச்சேன்” என்று ரசித்து சொல்ல
“ஓஹ் இந்த படம் பார்த்தாச்சா? யார் நடிச்சது?” என்று கேட்டான்.
“அது ராமராஜன் நடிச்ச படம். ரொம்ப நல்லாயிருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க, ஆனா நான் பார்க்கல”
“ஏன்ட்டி.. ?” என்று ஆரம்பித்தவர் “ஏன்?” என்று மாற்றவும் யமுனா
“உங்க பாஷையில பேசுறீங்க, அதுல ஒன்னும் தப்பில்ல” என்று சொல்லவும் ஒரு புன்னகையுடன்
“ஏன்ட்டீம்மா?” என்றான் சூர்யா.
“அது எங்கப்பா படம் பார்க்க எல்லாம் அனுப்ப மாட்டார். இங்க காலேஜ் சேர்ந்த புதுசுல படம் வந்துச்சு, அப்போ எல்லாம் யார்கூடவும் பழகல, அதனால் படம் பார்க்கல. பாட்டு நிறை வாட்டி ரேடியோல, டேப் ரீகார்டர்ல கேட்டிருக்கேன்” என்று யமுனா சொல்லவும் அந்த படத்தின் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டான்.
ஒருவழியாக யமுனாவை கல்லூரி விடுதியில் விட்டு அவன் வீடு நோக்கி செல்ல, அவன் முகத்தில் சூர்யோதயம்தான். அவன் மகிழ்ச்சியைக் கண்டவர்கள்
“டேய்! இன்னிக்கு நம்ம சைட்ல ஒரு புது ப்ளேயர், பாகிஸ்தான் சைட்லயும் ஒரு புது ப்ளேயர்டா. தலைவன் கபில் தேவ் செமையா ஆடினார், நீ மிஸ் பண்ணிட்ட” என்று ஸ்டாலின் சொல்ல சூர்யாவின் முகத்தில் அப்படியொரு பொலிவு.
“என்னடா கோங்க்ரா? பயங்கரமா சிரிக்கிற?” என்று ராமு கிண்டல் செய்ய
“நான் யாரைப் பார்த்தேன் தெரியுமா?” என்று கேட்டான் சூர்யா.
“டேய்! ஸ்ரீதேவியைப் பார்த்தியா?” என்று ஸ்டாலின் வாய்ப்பிளக்க
“சூர்யா! என்னடா சிரஞ்சீவியைப் பார்த்தியா?” என்று ராமு கேட்க இல்லையென்று தலையசைத்தான்.
“நான் யமுனாவைப் பார்த்தேன், பேசினேன்” என்று எல்லாம் சொல்ல
“கணக்கு சொல்லிக் கொடுத்தே அந்த பொண்ணைக் கணக்குப் பண்ணியிருக்க டா” என்று ஸ்டாலின் கிண்டலடித்தான்.
“டேய்! லேது ரா! ஜஸ்ட் ப்ரண்ட் போலத்தான் பேசினா. அவ கூட பேசிட்டு இருந்தப்போ டைம் போறதே தெரியல. அவ்வளவு நல்லா இருந்துச்சு ரா” என்றான்.
“டேய்! எப்போ உன் லவ்வை நீ யமுனா கிட்ட சொல்லப்போற, அப்புறம் அந்த புள்ளை உன்னை அண்ணனா நினைச்சேன்னு சொல்லப்போகுது” என்று ராமு எச்சரிக்கை செய்ய
“இப்போ போய் சொன்னா, அவ என்னைத் திரும்பியும் பார்க்க மாட்டா ராமு. என்னைப் பிடிக்கனும்னா என்னோட பழகனும். அதுக்கே சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது, முதல்ல கொஞ்ச நாள் போகட்டும் நம்ம இந்த வருஷம் முடிக்கிறதுக்குள்ள சொல்லிடுறேன்” என்றான் சூர்யா.
அதுவொரு வெள்ளிக்கிழமை, இரவு ஏழரை மணிக்கு ‘ஒலியும் ஒளியும்’ ஒளிபரப்பானது. ஸ்டாலின் வழக்கம்போல் ஆறு மணிக்கே ஆண்டனாவை சரியாய் வைத்து இருக்க, அரைமணி நேரத்தில் டீவியில் காட்சி நன்றாய்த் தெரிந்தது.
தெருவில் உள்ள குழந்தைகள், சில பெரியவர்கள் எல்லாருமே ராணியக்காவின் வீட்டில் குழுமிவிட்டனர். தெருவே அமைதியாய் இருந்தது. அங்கு டீவி இருந்தது ராணியக்காவின் வீட்டில் மட்டும்தான். மாதவன் அரசாங்க உத்யோகஸ்தர். ஆகையால் சில பல பொருட்கள் எல்லாம் தெருவில் அவர்கள் வீட்டில் மட்டும்தான் இருக்கும்.
சூர்யா தன் நண்பர்களுடன் சுவரோரம் கடைசியில் உட்கார்ந்திருக்க, இரண்டு புது பாடல்கள் ஓட, அடுத்து மாங்குயிலே பூங்குயிலே பாட்டு ஓடவும் நிமிர்ந்து உட்கார்ந்தவனுக்கு எப்படியாவது யமுனாவைப் படத்திற்கு அழைத்து செல்ல வேண்டுமென அவா பிறந்தது.
“என்னடா அதிசயமா எங்க கூட தமிழ் பாட்டு கேட்க உட்கார்ந்திருக்க, நீ தெலுங்குப் பாட்டுல கேட்கனும்னு நினைப்ப?” என்று ராமு கேள்வி எழுப்ப
“அது யமுனாவுக்குப் பிடிக்கும்டா” என்றதும்
“அடப்பாவி! முழுசா தமிழ் நாட்டு மருமகனா ஆகப்போற போலயே” என்று ஸ்டாலின் சிரித்தான்.
மாங்குயிலே பூங்குயிலே பாடல் கேட்கவும்
“ஹரே! இந்த பாட்டு என் ப்ரியத்தம்மாவுக்கு பிடிச்ச பாட்டு டா, என்ன படம் சொல்லுங்கடா” என்று பரபரத்தான். அவர்களும் படத்தின் பெயரை சொல்லவும் மனதில் பதிய வைத்துக்கொண்டான்.
கோகிலா யமுனாவுடன் கோவிலுக்குச் செல்லப்போவதாக சொல்ல, ஸ்டாலின் நல்ல நண்பனாய் சூர்யாவையும் அழைத்தான். இருவரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு ஒற்றை சைக்கிளில் சென்றனர். அங்கு யமுனா கண்மூடி கடவுளை வணங்கிக் கொண்டிருக்க,
“என்னடி கோகி கோவிலுக்கெல்லாம்?” என்று ஸ்டாலின் மெல்ல விசாரிக்க
“இன்னிக்கு யமுனா பர்த்டே டா, அதான் என்னைக் கூப்பிட்டா” என்று சொல்ல ஸ்டாலின் சூர்யாவைப் பாவமாய்ப் பார்த்தான்.
“டேய்! இன்னிக்கு உன் ஆளுக்குப் பர்த்டேவாம்டா. முன்னாடியே இந்த கோகி சொல்லியிருந்தாலாவது எதாவது கிஃப்ட் வாங்கியிருப்ப நீ” என்று ஸ்டாலின் சொல்ல கள்ளப்புன்னகை சூர்யாவிடம்.