சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் அப்படியே கூம்பிப்போக, அதை காண சகியாமல் முகத்தை திருப்பினான் ஷியாம்.
“சார்?” அவள் மீண்டும் அழைத்தபோது, கை நீட்டி தடுத்தவன்,
“பேசாத! இன்னும் ஒரு வார்த்தை பேசாத! இன்னும் எதெல்லாம் சொல்லி ஏமாத்தலாம்ன்னு நினைச்சு என் பின்னாடியே சுத்திட்டு இருக்க? நான் நீ மட்டும்தான் ஏமாத்துக்காரின்னு நினைச்சேன்! ஆனா, நேத்து…!” என்று நிறுத்தியவன்,
“ஹும்! அப்பாவை பார்த்து தானே புள்ளை கத்துக்கும்!” என்றான் முனகலாய்.
எதிர்ப்பக்கம் சத்தம் வராது போக, திரும்பியவன் அவள் அப்படியே நிற்பதை பார்த்து,
“இன்னும் எதுக்குடி என் மூஞ்சியை பார்த்துக்கிட்டே நிக்குற? போ இங்கிருந்து… என் கண்ணு முன்ன வராத! போடி!” என்றதோடு, வேகமாய் அவளிடம் வந்து கையை பிடித்து அறைக்கு வெளியே இட்டு சென்றான்.
எல்லோரும் இவர்களையே பார்க்க, “போன்னு சொல்றேன்ல? போடி!” என்று தள்ள,
“டேய்…!” என அதட்டிக்கொண்டு வந்தார் மார்த்தாண்டம்.
அதுவரை சும்மா நின்றவள் மார்த்தாண்டத்தை பார்த்ததுமே “அங்கில்ல்ல்ல்ல்ல்!!” என வீரிட்டு அழ, அவள் போட்ட சப்தத்தில் திடுக்கிட்டான் அவன்.
வந்தவர், “என்னடா செஞ்சுட்டு இருக்க?” என்று சத்தம் போட, வேலையாட்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தான் கடை திறக்கப்பட்டதால் பாதி ஷட்டரில் சுத்தம் செய்யும் வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது.
“வாயை திறந்து சொல்லு ஷியாம்!” அவர் இன்னும் கத்த, “நல்லா கேளுங்க அங்கிள்! ஏதோ நீங்க கெஞ்சி கேட்டீங்களேன்னு வேலைக்கு வர ஒத்துக்கிட்டேன்! இவர் என்னன்னா, போடி வாடிங்குறாரு… சூடு சுரணை இல்லையாங்குறாரு… பத்தாததுக்கு என் கையை புடிச்சு வேற இழுக்குறாரு!” அழுதுக்கொண்டே ராகம் போட்டு அவள் குறை படிக்க, மலைத்துப்போய் பார்த்தான் ஷியாம்.
என்னவோ இவனை அவள் இதற்குமுன் பார்த்து பழகியதே இல்லை என்பதை போல பேசுகிறாளே!
மாமனின் பார்வையில் கலவரமானவன், “ஐயோ மாமா… நீங்க நினைக்குறமாதிரி ஒன்னும் இல்ல… இவளை பத்தி உங்களுக்கு தெரியாது!” என சொல்லும்போது அவள் இன்னும் சத்தமாய் தேம்ப,
“என் பிரண்ட் பொண்ணு இவ! எனக்கே பொண்ணு மாதிரி! நான் போஸ்டிங் குடுத்து அழைச்சுட்டு வந்துருக்கேன்… உன் மாமாக்கு நீ செய்யுற மரியாதை இதானா?”
“என்ன போஸ்டிங் குடுத்தீங்க?”
அவர் “ரிலேஷன்ஷிப் மேனேஜர்” என்றதும், “ஏதே?” திகைத்தவன், “அப்படியொரு போஸ்டிங் இதுவரை இல்லையே நம்ம ஷோரூம்ல” என்றான் அவளை முறைத்துக்கொண்டே.
“ஐயையோ மாமா! நான் சும்மா தான் பாத்தேன்!” பதறினான்.
“ச்ச! ஷியாம், இதை நான் உன்கிட்ட எதிர்ப்பார்க்கலை!” அதிருப்தியாய் முகத்தை திருப்பியவர், “சைக்காலஜி படிச்சா புள்ள நம்ம கடைக்கு வேலைல இருந்தா வர கஸ்டமர் மனசு புரிஞ்சு வியாபாரம் நல்ல நடக்கும்ன்னு, மாட்டேன்னு சொன்னவளை கூட கன்வின்ஸ் பண்ணி இந்த வேலைக்கு வர வச்சுருக்கேன்! என் மேல மரியாதை இருந்தா, அதுல கொஞ்சம் இந்த பொண்ணுக்கும் கொடு!” என்றவர்,
“வாமா!” என்றுவிட்டு அவர் அறைக்கு போக, செய்வதறியாது நின்றவனிடம், பழிப்புகாட்டிவிட்டு நொடிப்பொழுதில் ஓடி சென்றாள் ஜனனி.
ஓடியவளின் துள்ளல் எல்லாம் அவரின் அறைக்குள் நுழையும் வரை தான்! அங்கிருந்த சேரில் மொத்த ஆற்றலும் வடிந்தவள் போல சரிந்தவள் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்க,
“அட, என்ன நீ? இதுக்கெல்லாம் அப்சட் ஆவியா?” என்றார் மார்த்தாண்டம்.
“ஸாஃப்ட்’டா தான் இருந்தான்!” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் மார்த்தாண்டம்.
‘உன்னால் தான் அவன் இப்படி மாறிவிட்டான்’ என்று சொல்லாமல் சொல்லியதை போல தோன்றியது அவளுக்கு. சொல்லவில்லை என்றாலும் அது உண்மைதானே!
அவள் மௌனமாய் இருக்க, “இப்படி என் ரூம்ல வந்து முகத்தை தொங்கப்போட்டுட்டு இருக்கவா நான் உன்னை வேலைக்கு வர சொன்னேன்?” என்றார்.
“ப்ச்! ஷியாம்க்கு என்னை பாக்க புடிக்கல போல அங்கிள்! இன்னைக்கு ரொம்ப ஹார்ஷ்’ஷா பேசிட்டாரு!”
“இருந்துட்டு போட்டும்! அவன் இன்னும் மோசமா பேசுனாலும் வாங்கிக்கோ! எப்போ திருப்பி கவனிக்கணுமோ அப்போ வட்டியும் முதலுமா செய்!” என்றுவிட்டு குறும்பாய் சிரித்தவரை பார்த்து அவளும் சிரிக்க,
“சரி எழுந்துரி! நான் சொன்ன மாதிரி செய்!” என்றார்.
உடனே தயங்கியவள், “உங்களுக்கு எதுவும் தெரியாதுங்குற மாதிரி எதுக்கு அங்கிள் நடிக்கனும்?” என்றாள் பாவமாய்.
அவன் தன்னோடு சேர்த்து தகப்பனையும் திட்டுவது தாளவில்லை அவளுக்கு.
“எனக்கு எல்லாம் தெரிஞ்சுதுன்னு தெரிஞ்சா ரொம்ப முரண்டுப்பிடிப்பான்டா! இப்போ ‘நீதான் அந்த பொண்ணு’ன்னு சொல்ல தயங்குறவன், அது எனக்கு ஏற்கனவே தெரியும் தெரிஞ்சுட்டா, எனக்காக கூட உன்னை கிட்டயே சேர்க்க மாட்டான்! அங்கிள் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்! எனக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்! அவ்ளோதான்!” என்று முடித்துவிட்டார்.
வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற வேலையாட்களை திட்டிவிட்டு அறைக்குள் நுழைந்துக்கொண்ட ஷியாமளனுக்கு மண்டை காய்ந்தது.
‘இந்த மாமா வேற இவ யாருன்னு தெரியாம லூசு மாதிரி செஞ்சுட்டு இருக்காரு!’ என்று நினைத்தவன், ‘சொல்லிடுவோமா? அது அவ தான்னு சொல்லிடுவோமா?’ என்று ஒரு கணம் நினைத்தான்.
ஆனால், மறுகணமே ஏதோ ஒன்று தடுக்க, ‘அவளை ரொம்ப நல்லவனு நினைச்சுட்டு இருக்காரு! நம்ம ஏன் அவர் நினைப்பை கெடுக்கணும்’ என்றும் எண்ணிக்கொண்டான்.
அவரிடம் கூட அவளை பற்றிய எண்ணவோட்டம் தவறாகிபோவதை அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை உணராதவன்,
‘அவ எங்க வேலைக்கு வந்தா எனக்கென்ன வந்துச்சு? அவ என்ன பொழுதுக்கும் என் கண்ணு முன்னாடியேவா சுத்தப்போறா? நான் உண்டு என் ரூம் உண்டுன்னு வேலையை பார்க்க போறேன்!’ என அவன் எண்ணி முடிக்கும் முன்னே, அவன் அறை கதவு திறக்கப்பட்டு,
“அலோ சாரே!” என்று வந்து நின்றாள் ஜனனி.
“ஏய்… என்ன வேணும் உனக்கு?” அவன் கத்த, அவளுக்கு பின்னே இன்னும் இருவர் நுழைந்தனர்.
ஒரு மேசையை இருவரும் தூக்கிக்கொண்டு வர, “என்ன செய்யுறீங்க? இதை எதுக்கு இங்க போடணும்?” என்றான் அவர்களிடம்.
“பெரிய சார் தான் போட சொன்னாரு சார்!” என்றவர்கள் அடுத்தடுத்த பொருட்களை எடுத்து வர சென்றுவிட,
“அங்கிள் தான் என்னை உங்க ரூம்ல டேபிள் போட்டுக்க சொன்னாங்க! அவங்க ரூம் குட்டியா இருக்குமாம்! இடம் பத்தாதாம்!” என்றவளை கொடூரமாய் முறைத்தான்.
“என்னை முறைக்குறீங்க? ஓ? உங்களுக்கு பிடிக்கலையோ? அப்போ சரி, நான் அங்கிள் கிட்டே சொல்றேன்!” என்றவள், “அங்கில்ல்ல்ல்!” என கத்திக்கொண்டு கதவை திறக்கப்போக, “வாயை மூடு… வாயை மூடு” என அவசரமாய் கத்தினான் ஷியாம்.
“என்னவோ பண்ணித்தொல! ஆனா, என்கிட்ட பேச மட்டும் செய்யாத!” என்றவன் அவன் இருக்கையில் கண்ணை மூடி அமர்ந்துவிட்டான்.
மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர் எல்லாம் வந்து அமர்ந்தது அவளுக்காக!
ஒரே அறையில் கைக்கெட்டும் தொலைவில் இருப்பவளை பார்க்காமல் இருப்பதே பெரும் பிரயர்த்தனமாய் இருந்தது அவனுக்கு.
கடைவிழியில் அவள் இருப்பு படிந்துக்கொண்டே இருந்தாலும் நேராய் அவளை பார்ப்பதை முற்றிலுமாய் தவிர்க்க நினைத்து, அந்த நினைவே அவனுக்கு அழுத்தத்தை கொடுக்க, சற்று வெளியே செல்லலாம் என எழுந்தவனை அறைக்குள் வைத்தே சிறை செய்ய வந்தார் மார்த்தாண்டம்.
“ஷியாமா… ஆடிட்டருக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம்! இந்த மாச ஆடிட்டிங் நம்மளை பார்க்க சொல்றாரு!” என்று வர,
“எது? நம்ம பாக்குறதா? என்ன விளையாடுறாரா? இதென்ன எங்கேயும் இல்லாத பழக்கம்?” என்று போனை கையில் எடுத்துக்கொண்டே அவன் கேட்க, அவன் கையில் இருந்து அதை வாங்கியவர்,
“நான் எல்லாம் பேசிட்டேன்! நீ என்ன பண்ற? இந்த மாச ஆடிட்டிங் மட்டும் முடிச்சு வைக்குற!” என்றார்.
“எனக்கு அதெல்லாம் பண்ணத்தெரியாது!”
“அதான் தெரியுமே எனக்கு! நீ நம்ம ஜனனி கூட சேர்ந்து இதெல்லாம் செஞ்சுடு!” என்றார் அசால்ட்டாய்.
“அதெல்லாம் சரிப்படாது! நான் என் பிரண்ட் கிட்ட சொல்லி இந்த மாசத்துக்கு மட்டும் ஒரு ஆடிட்டர் பாக்குறேன்!” என்றான்.
“புதுசா வரவனை எல்லாம் எவ்ளோ தூரம் நம்ப முடியும் சொல்லு? அதுமில்லாம ‘டூவீலர் மேளா’ நடந்துச்சே! அதோட கணக்கும் இன்னும் தெளிவா பாக்காம கடக்கு! இதெல்லாம் எவ்ளோ நேரம் , எவ்ளோ நாள் ஆனாலும் சரி, ரெண்டு பேரும் ஒண்ணா உட்காந்து செஞ்சு முடிங்க!” என்றவர், மேற்கொண்டு அவனை பேசவே விடாமல்,
“உன் பீரோ’ல தான் எல்லா ஃபைலும் இருக்கு! ஒன்னு ஒண்ணா பொறுமையா எடுத்து பாருங்க, என்ன?” என்றுவிட்டு ஜனனிக்கு ஒரு ‘பை’ சொல்லிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார்.
‘நீங்களுமாச்சு, உங்க கணக்குமாச்சு!’ என முறுக்கிக்கொண்டு அவன் வெளியேற பத்து நொடிகள் எடுக்குமா? அவனுக்கு அதெல்லாம் செய்யக்கூட தோன்றவில்லை. ஏதோ ஒரு கட்டாயத்தில் அங்கே அவனை கட்டிபோடப்பட்டிருப்பதை போல சலித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“சார், ஆரம்பிக்கலாமா?” அவன் முன்னே வந்து நின்றாள் ஜனனி.
“என்னத்த?” எரிச்சலாய் அவன் கேட்க,
“கணக்கு பண்றதை தான்!” என கண்ணடித்தாள் அவள்.
பின்னங்கழுத்தை பரபரவென தேய்த்துக்கொண்டான். அன்னையின் முகத்தை அவன் சில கணங்கள் அப்படியே வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க,
‘மனம் விரும்புதே…
உன்னை… உன்னை… உன்னை….
மனம் விரும்புதே!’ அமைதியான அறையில் அலறலாய் ஒலித்தது அவளது அலைபேசி.
அவன் உள்ளத்தின் ‘தட் பிச்சைக்காரன் தட்டு’ உணர்ச்சிகள் எல்லாம் உயர் வெப்பநிலையில் கொதித்துக்கொண்டிருந்தது.
அவளோ சாவதானமாய், “அப்பா? சொல்லுங்கப்பா!” என்று அளவளாவிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் பொருத்து பார்த்தவனுக்கு அதற்கு மேலும் அவள் சம்பாஷணையை கேட்க பொறுமை இல்லை.
“ஜனனி…!!!” பல்லைக்கடித்துக்கொண்டு அவன் அழைக்க,
‘ப்பா! எங்க முசுட்டு பாஸு கூப்புடுது… கால் யூ லேட்டர்’ என முணு முணுத்தபடி அவள் போனை வைத்தது அவனுக்கு தெள்ளத்தெளிவாய் கேட்கதான் செய்தது.
அவன் முன்னே வந்து, “யெஸ் சார்!” என்றாள் பவ்யமாய்.
“நம்ம இங்க வேலை பாக்க வந்துருக்கோம் ஜனனி! வேலையை தான் முதல்ல பாக்கணும்!” கண்டிப்புடன் சொல்ல,
“நீங்களுமா சார்!?” என்றாள்.
“என்ன நீங்களுமா?”
“இல்ல, நீங்களும் இங்க வேலைக்கு தான் வந்துருக்கீங்களா? ஐ தாட் இட்ஸ் யுவர் ஓன் ஷோரூம்!” அப்பாவி போல கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்தவன், அருகே இருந்த பீரோவை திறந்து சில கோப்புகளை எடுத்து மேசையில் போட்டான்.
“ஸ்டார்ட்” என சொன்னதும், பொறுமையாய் ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்க ஆரம்பித்தாள் ஜனனி. பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு புத்தகம் போல இருந்ததை பீதியை மறைத்துக்கொண்டு அவள் வெறிக்க,
சற்று நேரம் அப்படியே போக, வேறொரு கோப்புக்காக மறுபடியும் பீரோவை திறந்தான் ஷியாமளன். அவன் இழுத்த வேகத்தில் பாரம் குறைந்த பீரோ லேசாக ஆட, அதன் மேற்புறத்தில் கட்டிவைத்திருந்த பழைய கோப்புகள் எல்லாம் ஒருமுறை குலுங்கி விட்டு நின்றது. ஜனனி யதார்த்தமாய் கவனித்துவிட்டு மீண்டும் கோப்புக்குள் தலையை நுழைத்துக்கொண்டாள்.
“எவ்ளோ நேரமா தான் அந்த ஒரு ஃபைல் மட்டுமே பார்ப்ப?” என்றவன், “நான் ஒரு ஃபைல் தரேன், அதுக்கு பேலன்ஸ் சீட் ரெடி பண்ணு” என்றான் வேண்டுமென்றே.
சொன்னதோடு விடாமல் மீண்டும் பீரோவை திறந்து ஒரு கோப்பெடுக்க, போன முறையை விட நன்றாக ஆடியது பீரோ.
“சார்… ஆடுது!” என்றவளை, “உன் ஆட்டமெல்லாம் என் மாமா கிட்ட தான் பலிக்கும், என்கிட்ட பலிக்காது” என்றவன் உர்ரென திரும்பிக்கொள்ள,
‘அட, மலைக்கொரங்கே!’ என பார்த்து வைத்தாள் ஜனனி.
‘ச்ச! ஒன்னும் ஒரே இதுல உருப்படியா இருக்காது!’ சலித்தபடி மீண்டும் பீரோவை கடுப்புடன் அவன் திறக்க, மேல அடுக்கி இருந்த கோப்புகள் ஒரு வேகத்தில் குலுங்கு குலுங்குவதை கண்டு,
“சார், மெதுவா! ஆடுது பாருங்க!” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “பேசாத டி… பேசாத நீ! என் இஷ்டம், நான் என்னவோ பண்ணுவேன்!” என்றவன் பீரோவை அடித்து சாத்த, அவ்வளவு தான்!!!
‘இதுக்குமேல தாங்காதுடா யப்பா!’ என்று கூட்டமாய் வந்து கீழே நின்றவனின் உச்சந்தலையிலேயே வெறிக்கொண்டு கொட்டியது தூசி படிந்த பழைய கோப்புகள் அத்தனையும்.
எதிர்ப்பாராத தாக்குதலில் திடுக்கிட்டு போனவன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். தலையில் ‘நொச்’ என அத்தனையும் கொட்டிவிட்ட வலி வேறு.
தலையில் ஒன்று விரிந்து கிடக்க, தோளில் தொங்கியது ஒன்று. மத்ததெல்லாம் தொங்கிக்கொள்ள வாட்டம் இன்றி கீழே அவன் காலை கட்டிக்கொண்டது.
அவன் நிற்கும் கோலத்தை கண்ணார கண்டு ரசித்தவள், அவனிடம் வேகமாய் நெருங்கி,
“நீ சுமந்து நிற்கும் புத்தகமாய்
நான் இருந்திருந்தால் கூட,
என் உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுறையேனும் புரட்டிப்பார்த்திருப்பாய் நீ!!!”
உணர்ச்சிதளும்ப சொன்னவள்,
“டக்குன்னு தோனுச்சு! எப்படி இருக்கு?” என்றாள் உற்சாகமாய்.
கவிழ்ந்திருந்த தலையை அவன் நிமிர்த்தி அவளை பார்க்க, தலையில் இருந்த கோப்பு ‘தொப்பென’ விழுந்தது.
“சொல்லுங்க ஷியாம்… கவிதை எப்படி?” என்றாள்.
அதற்கு அவன் பார்த்த பார்வை…!!!
பிச்சைக்கார தட்டையே தூக்கி அடிக்கும் அளவுக்கு ஒரு பார்வை…!
அதில் வெடவெடத்துப்போனவள், “ஹிஹிஹி” என அசடு வழிய,
“குட் கவிதை… பட் வெரி பேட் டைமிங்” என்றுவிட்டு,
“நீங்க இப்படியே இருங்க சாரே… நான் வெளில போய் நாலு பேரை கூட்டிட்டு வரேன்!”
“எதுக்கு?” என்றான் அத்தனை உறுமலாய்.
“அள்ளிப்போட தான்!!!”
“எதை!?” அவன் குரலின் உஷ்ணம் ஏறிப்போனது.
“பைலை சொன்னேன்! நீங்க என்ன நினைச்சீங்க?” அதற்கும் அவள் எதிர்கேள்வி கேட்டு வைக்க,
“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ” கண்ணை மூடிக்கொண்டு அவன் கத்திய கத்தில் அவள் கால்கள் அவள் அனுமதியின்றியே வெளியே ஓடிப்போனது.