“நான் கூப்பிடும்போதெல்லாம் கிளம்பி வந்துடுறீங்களே… அவ்ளோ வெட்டி ஆபீஸரா சார் நீங்க?!” கடற்கரை மணலில் வீடு கட்டிக்கொண்டே வினவியவளிடம் பொய் கோபம் காட்டிய ஷியாம்,
“இனி வரவே மாட்டேன் பாரு” என்றான் கோபம் போல.
“வராதீங்க…” என தோள் குலுக்கியவள்,
“நானே உங்களை தேடி வருவேன்… வீட்டுக்கு, ஷோரூம்’க்கு.. இன்னும் எங்க எல்லாம் போறீங்களா… அங்க எல்லாம்” என்று குறும்பாய் கண்ணடிக்க,
‘கேடியாயிற்றே இவள்… செய்தாலும் செய்வாள்!’ என்று நினைத்தவன், கடமை தவறாது அவள் கட்டும் வீட்டிற்கு மண்ணள்ளி கொடுக்க ஆரம்பித்தான்.
சீக்கிரமே அந்த மணல் மாளிகை உருவாகிவிட, “இது ஹாலு… இது கிட்சன்… இது பெட்ரூம்… எனக்கு மட்டும் ஸ்பெசலா… பெருசா….” வரைபடம் விளக்கிய ஜனனியிடம்,
“மண்ணு எல்லாம் அள்ளி கொடுத்து உதவின எனக்கு ஒரு ரூம் இல்லையா?!” என்றான் பாவம் போல.
“பார்ரா… கொத்தனார் வீடு கட்டி கொடுத்தாரேன்னு வீட்டுக்குள்ளயா வச்சுக்க முடியும்? அது மாதிரி தான்… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!” என்றாள் அவள் கெத்தாய்.
வெளியே முறைப்பாய் முகத்தை வைத்துக்கொண்டாலும் அவனுக்கு அவள் மீது கோபமே வருவதில்லை.
“சார்… பசிக்குது” சின்ன பிள்ளை போல தூரத்தில் இருந்த பானிபூரி வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டவளை உள்ளுக்குள் கொஞ்சியவன்,
“வா!!!” என்று அவளை எழுப்பிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
“அப்பப்ப பண்றதுக்கே உங்க கை இவ்ளோ பெருசா இருக்கே!!!” முழுக்கை சட்டையை அரைக்கைக்கு மடித்துவிட்டது போக துணியை மீறி திமிறி தெரிந்த புஜத்தை பார்த்துக்கொண்டே சொன்னாள் ஜனனி.
“தட்’ஸ் காட்’ஸ் கிப்ட்”
“ப்ச்… இந்த கையை தூக்கிக்கிட்டு நடக்க எவ்ளோ கஷ்டமா இருக்கும்” வருத்தம் போல சொன்னவள்,
“நான் வேணுனா ஒரு கைய பிடிச்சுக்கவா!? உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான்” என்றுவிட்டு அவன் பதில் சொல்லும் முன்னே தன் இருகரம் கொண்டு அவன் ஒரு கரத்தை அவள் கோர்த்துப்பிடித்துக்கொண்டு மேற்கொண்டு நடக்க,
ஷியாமளனுக்கு உலகம் மறந்தது. உடல் மொத்தமும் ஜிவுஜிவு என ரத்த ஓட்டம் பாய்வதை போன்றதொரு சிலிர்ப்பு…!!!
இணைந்திருந்த இருவர் கரங்களின் மீதிருந்த அவன் பார்வை விலகவே இல்லை.
அவன் கால்கள் தரையில் இல்லாமல் மனதால் விண்ணில் மிதந்தான்.
லேசா அழகுல தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்கிறேன்
உன் கூட நடக்கும் போது
மழையில்லாம நெனஞ்சு போகுறேன்
“எப்பப்பாரு கும்பலா இருக்க இடமாவே கூட்டிட்டு வந்து என்னை இடிப்பட விடுற ஜானு!”
இத்தனை நாள் பழக்கத்தில் ‘ஜனனி’ ‘ஜானு’வாகியிருந்தாள்.
ஞாயிறு மாலை அந்த ஷாப்பிங் மாலின் கும்பலில் நெருக்கடியடித்துக்கொண்டு அவளோடு நடப்பதை பிடிக்காதவன் போல சலித்துக்கொண்டு சொன்னான் ஷியாம்.
‘நீ இருக்கும்போது நான் ஏன் அங்கேல்லாம் பார்க்க போறேன்’ என்று நினைத்தவன், சிரித்துக்கொண்டான்.
ஜனனி எல்லா தளங்களுக்கும் அவனை இழுத்துக்கொண்டு சுற்றினாள்.
முடிந்தவரை அவளோடு சுற்றியவன், அவள் எதுவுமே வாங்காமல் இருப்பதைக்கண்டு, “அவசரமா ஒன்னு வாங்கணும், கூட வாங்கன்னு தானே சொன்ன… இப்போ ஒண்ணுமே வாங்காம சுத்துற?” என்று கேட்க,
“அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்” என்றாள் அவள்.
“அப்படி என்ன வாங்கணும்?”
“என் ஸ்கூட்டிக்கு ஒரு கீசெயின்” என்று சொன்னதும் நின்று விட்டான் அவன்.
“என்னாச்சு?”
“அடிப்பாவி… ஒரு கீ செயின் வாங்கவா இவ்ளோ அலைய விடுற?” என்றவன்,
“அத்துனூன்டு கீ செயின் வாங்க இவ்ளோ பெரிய மால் வரணுமா?” என்றான்.
“வாங்குறது சிறுசா பெருசாங்குறது முக்கியம் இல்லை! மனசுக்கு பிடிச்சுருக்காங்குறது தான் முக்கியம்!” தத்துவம் சொன்னவள்,
“போன மாசம் இந்த கடைல ஒரு கீசெயின் பாத்தேன்! அதுதான் வேணும் எனக்கு! வாங்க போவோம்!” என்றுவிட்டு கடைக்குள்ளே நுழைந்தாள்.
அந்த கடையை பார்த்ததும் ‘இதே ஃப்ளோர்’ல இந்த கடையை கிராஸ் பண்ணித்தான் ரெண்டு தடவ போனோம்!’ என்று புரிய,
‘உன் நிலைமை இவளோட கொஞ்சம் கஷ்டம் தான் போலயேடா!’ என்று தனக்குத்தானே எண்ணிக்கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே இருந்த சிப்பந்தியிடம் தன் வாய்திறமையை காட்ட ஆரம்பித்திருந்தாள் ஜனனி.
‘ரைட்டு! இப்போதைக்கு முடியாது!’ என்று நினைத்தவன், அங்கிருந்த பொருட்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
சிறுது நேரத்தில் அவன் கவனம் முழுவதும் அதில் போனது. அவளுக்காக எதை வாங்கலாம் என்ற சிந்தையோடு கண்ணில் படும் பொருட்களை எல்லாம் ஆராய்ந்தவனுக்கு சுற்றம் மறக்க, சிறிது நேரத்தில் யாரோ தன்னை அழைப்பது போன்று தோன்ற, திரும்பினான்.
திடுக்கென்றானது அவனுக்கு. சுற்றிலும் நடந்துப்போகிறவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே கடக்க, அதிலும் சிலபேர் சுவாரஸ்யமாய் இவர்களை பார்க்க, ஒரு மாதிரி ஆகிப்போனது அவனுக்கு.
அவளோ விரிந்த புன்னகையோடு முதுகின் பின்னே மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை அவன் புறம் நீட்டி,
“நான் எப்பவும் நினைப்பேன்… சந்தோஷம் ‘ச’ ல ஆரம்பிக்குதுன்னு… ஆனா, உங்களை பார்த்த பின்னாடி தான் புரிஞ்சுது… என் சந்தோஷம் ‘ஷ’ ல ஆரம்பிக்குதுன்னு!!!” என்று சொல்ல…
ஷியாமலனுக்கு வெட்கவெட்கமாய் வந்தது. ஒரு கை கொண்டு புருவம் திருத்துவதை போல முகத்தை மறைத்துக்கொண்டான்.
அதோடு விட்டாளா அவள்?!
“யூ ஆர் தி மோஸ்ட் அடோரபில் மேன், ஐ ஹேவ் எவர் ஸீன்…
தேங்க் யூ சோ மச் ஃபோர் மேக்கிங் மீ ஹேப்பி!
உங்களுக்கும் என்னை பிடிக்கும்ன்னா ‘அக்சப்ட் மை ப்ளார்ஸ்!” என்று இன்னும் உயர்த்தி அந்த பூங்கொத்தை நீட்ட, இப்போது நன்றாகவே முகத்தை மூடிக்கொண்டான்.
“சார்… ப்ளீஸ்!!!!” என்றாள் ராகமாய்.
சுற்று இருந்த சில இளசுகள் விசிலடித்து, ‘வாங்குங்க… வாங்குங்க!’ என்று படுத்த, வாழ்க்கையில் அப்படி ஒரு சந்தோச சங்கடத்தை அவன் அனுபவித்தே இல்லை.
யாரையும் கண்க்கொண்டு பார்க்க வெட்கம் பிடுங்கித்தின்றது.
“ப்ளீஸ்…!!!!” அவள் இன்னமும் ராகம் போட, அவளை இதற்குமேல் இதே நிலையில் நீடிக்க விட மனமில்லாது வெட்கம் விட்டு, அவள் நீட்டிய பூங்கொத்தை வாங்கிக்கொண்டான் ஷியாமளன்.
அவன் வாங்கியதும் எழுந்தவள், “ஹே!!!!” என்று குதிக்க, அவளுக்கு ஈடாய் யாரென்றே தெரியாது இன்னும் சிலரும் ஆரவாரம் செய்து ஷியாமலனை ஒரு வழியாக்கி விட்டனர்.
அடடா… எனக்கென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும் தான்
நிக்காம போதை ஏறுது
“ஹே… என்ன பண்ற?”
இரவு பத்துமணிக்கு அவளுக்கு அழைத்துவிட்டு ஒருமாதிரி ஆழ்ந்த குரலில் பேசினான்.