ஷியாமளன் எப்படி அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தான் என்பது அவனுக்கே தெரியாது. கிட்டத்தட்ட பித்துப்பிடித்த நிலையில் இருட்டிப்போன நேரத்தில் அவன் வீட்டிற்குள் நுழைய அவனுக்காக காத்திருந்த மார்த்தாண்டத்துக்கு அவன் வரும் நிலை கண்டு நெஞ்சமே பதறியது.
“ஷியாமா… என்னடா ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்க?” வாசலுக்கே சென்று அவன் கையைப்பிடித்துக்கொண்டு அவர் விசாரிக்க, அவரை உணர்வின்றி வெறித்தவன் கையை உருவிக்கொண்டு தளர்ந்த நடையோடு உள்ளே சென்றான்.
மார்த்தாண்டத்துக்கு உயிரே இல்லை. ஷ்யாமளனுக்கு ஏதாவது பிரச்சனை என்று ஒரு துளி தெரிந்திருந்தாலும் அவர் சற்று நிதானமாய் என்ன ஏது என விசாரிக்க ஆரம்பித்திருப்பார்.
ஆனால், அன்று மாலை வரை உற்சாகமாக சுற்றியவன், இப்போது பாதி உயிர் போனது போன்று வந்து நிற்பதை கண்டதும் அவருக்கு நெஞ்சுக்கூடே பதறியது.
அவரை வெற்றுப்பார்வை பார்த்தவன், பார்த்துக்கொண்டே இருந்தான். மார்த்தாண்டத்தின் பதட்டம் அவனுக்கு நன்றாக புரிந்தது. சிலை போல் பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு ஒரு கட்டத்தில் உணர்ச்சி வெடித்து உதடு பிதுங்க, எதிரே இருந்தவரை கட்டிக்கொண்டு கதறிவிட்டான்.
மார்த்தாண்டத்துக்கு மனம் விட்டே போனது, அவன் அழுகையை பார்த்து. யாரும் இல்லாதவனை எல்லாமுமாய் இருந்து தாங்கியதாய் அதுவரை எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு அவனது இந்த துயரம் காண சகிக்கவில்லை. இதைக்காணவா இத்தனை பாடுபட்டு வளர்த்தேன் என அவர் மனம் புழுங்க, காரணம் தெரியாவிட்டாலும்,
“ஒன்னும் இல்ல கண்ணா,,, எல்லாம் நல்லதுக்கு தான்… சரியாகிடும்! ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று பொதுவாய் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவர் தோளை கட்டிக்கொண்டு சிறு பிள்ளைப்போல தேம்பி தேம்பி அழுதவன், “அவ என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டா மாமா!” என்று கதறியபோது தான் மார்த்தாண்டத்துக்கு உயிரே வந்தது.
அதுவரை என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு இருந்தவருக்கு, அவன் சொன்னதை கேட்டதும் தான்,
‘அட, காதல் தோல்வியா?’ என்று மனம் ஆசுவாசமடைந்தது.
இப்போது சற்று தெம்பாகவே அவன் முதுகை தட்டிக்கொடுத்தவர், “போனா போறா விடு… உன் அருமை தெரியல! அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்கல” என்று சொல்ல, விலுக்கென்று நிமிர்ந்தவன்,
“நோ’ன்னு சொல்லிருந்தாக்கூட பரவால மாமா… என்னை ஏமாத்திருக்கா! நான் ஏமாந்துருக்கேன்” என்றவன்,
அழுதுக்கொண்டே ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடித்தான் ஷியாம்.
மார்த்தாண்டத்துக்கு அந்த முகமறியா பெண்மீது அத்தனை வெறுப்பு. இந்த காலத்துல இப்படி எல்லாம் கூட பொண்ணுங்க இருக்காங்களா?” என்று திகைத்துப்போனார்.
“நானா அவளை தேடிப்போனேன்? நானா தினம் தினம் அவளுக்கு ஃபோன் பண்ணேன்? நானா அவளை அடிக்கடி பார்க்கனும்ன்னு கூப்பிட்டேன்? இல்ல நான் தான் அவக்கிட்ட கண்டதையும் சொல்லி வழிஞ்சேனா?” என்றவன்,
“யாரையும் திரும்பிக்கூட பாக்காம தானே இருந்தேன்? அவளா வந்தா… மொத்தமா மாத்துனா… இவதான் எல்லாம்ன்னு நான் முடிவு பண்ண நேரம் எல்லாமே ‘பொய்’ன்னு சொல்றா! எப்படி மாமா முடியுது அவளால?” என்றான் அவரிடம்.
அவன் பேசட்டும்… மனதில் இருப்பது எல்லாம் கொட்டி தீர்க்கட்டும் என்று அமைதியாய் அவனுக்கு செவிமடுத்தார் மார்த்தாண்டம்.
“என் அம்மா மாதிரி நினைச்சேன் மாமா!” என்றவன் குலுங்கி அழுக, அந்த யாரென்றரியா பெண் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லவேண்டும் என்று நினைத்தார்.
“நான் அவளுக்காக அழல மாமா! என்னை நினைச்சு அழுறேன்! எவ்ளோ முட்டாளா இருந்துருக்கேன்! அவ என்னை ஏமாத்துறது கூட தெரியாம எல்லாத்தையும் உண்மைன்னு நம்பி…” முகம் கசந்தவன்,
“மேல இருந்து என் அம்மா பார்த்துட்டே இருப்பாங்கல்ல?” என்றான் விரக்தியுடன்.
“லூசு மாதிரி பேசிட்டு இருக்காத! உன்மேல ஒரு தப்பும் இல்லை… ஏமாத்தனும்ன்னு முடிவு செஞ்சு வரவங்க எப்பேர்ப்பட்ட கொம்பனையும் அசாதாரனமா வளைச்சு போடுவாங்க! வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்குற நீயெல்லாம் எம்மாத்திரம்?”
அவன் இன்னமும் அப்படியே இருக்க,
“மாமா சொல்றேன் கேளு… இன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு நாளைல இருந்து வழக்கம் போல சந்தோசமா இரு!!! ஒரு தகுதி இல்லாத பொண்ணுக்காக நீ இவ்ளோ நேரம் அழுததே தப்பு… இதுல இன்னும் இன்னும் நீ மூஞ்ச தூக்கிவச்சுக்கிட்டு சுத்துறது உனக்கு தான் அசிங்கம்…” என்றார்.
அவன் அப்படியே இருக்க, “இந்த மாமா வாழ்றதே உனக்காக தான்! நீ சிரிச்சு சந்தோசமா இருக்கிறது தான் எனக்கு நிம்மதி! என் நிம்மதி உனக்கு முக்கியம் இல்லன்னு நினைச்சீன்னா… உன் விருப்பம்… எப்படி வேணுனா இரு” என்றவர் எழுந்துக்கொள்ள,
நொடியில் அவர் கரம் பற்றியவன், “அழ மாட்டேன்” என்றான் மெல்லிய குரலில் அழுத்தத்துடன்.
ஷியாமளன் அன்றிரவோடு தன் வருத்தத்தை நிறுத்திக்கொண்டான். நிறுத்திக்கொண்டான் என்பதை விட மறைத்துக்கொண்டான் என்பது தான் நிஜம்.
தினமும் அவள் குறுஞ்செய்தியில் விடிந்து, மாலை அவளோடு கழிந்து இரவில் வரும் ‘குட் நைட்’ குறுஞ்செய்திக்காக காத்திருந்து… இதற்கிடையே என்ன சாக்கிட்டு அவளுக்கு அழைக்கலாம் என்றெல்லாம் அவளை சுற்றியே ஓடிக்கொண்டிருந்த அவனது சமீபத்திய நாட்களின் வழமையை ஒரே நாளில் மறப்பது அத்தனை சாத்தியமானதாய் இல்லை அவனுக்கு.
மொபைல் சத்தம் கொடுத்தாலே அவள் ஞாபகம்தான். கடிகாரம் மணியடித்தாலே அவளை பார்க்க செல்ல வேண்டும் என்று சொல்லும் மனமும், எழ துடிக்கும் கால்களும் அவனை வெகுவாய் இம்சித்தன.
இதில் தான் இயல்பாய் இருப்பதாய் வேறு மாமனிடம் காட்டிக்கொள்ளவேண்டும். அயர்ந்துப்போனான் அவன்.
எங்கேனும் சில நாட்கள் சென்று வரலாமா என்றுக்கூட தோன்றியது. மாமாவிடம் பேச வேண்டும் என்று அவன் நினைக்கும்போதே, அவன் அரை கதவை தட்டிக்கொண்டு, “உள்ளே வரலாமா தம்பி?” என்ற குரல் கேட்க, பார்த்தவன் திகைத்துப்போனான்.
‘இவர் அவள் தந்தையாயிற்றே!!!’
பரசுராம் வாசலிலேயே நிற்க இவன் உள்ளே அழைக்கவும் மறந்து நிற்பதை கண்டவர், தன் வருகை பிடிக்கவில்லையோ என்று எண்ணி, “உங்களை பார்க்க முடியுமான்னு கேட்டேன்! அன்னைக்கு நம்ம பேசி பழகுனதை பார்த்த ஆளுங்க, நேரே உள்ளேயே போக சொல்லிட்டாங்க… அதான் வந்தேன்” என்றார் தயக்கமாய்.
நொடியில் சுயம் வந்தவன், “சாரி சார்… உள்ள வாங்க” என்றான்.
‘அன்று உரிமையாய் அங்கிள் என பாதம் பணிந்தவன், இன்று யாரோ போல் ‘சார்’ என்று விளிக்க மனம் சுணங்கியது அவருக்கு.
காட்டிக்கொள்ளாமல் இருக்கையில் வந்து அமர்ந்தார் அவர்.
“என்ன சாப்புடுறீங்க?” சம்பிரதாயமாய் கடமைக்கு அவன் கேட்க, அதை உணர்ந்தவர், நாசூக்காய் மறுத்து விட்டார். அவனும் கட்டாயப்படுத்தவில்லை.
அவனிடம் பேசவேண்டும் என்று வந்துவிட்டார். ஆனாலும், பேச்சை துவங்க தயக்கமாய் இருந்தது.
பேசிதானே ஆகவேண்டும்? என்ற நிதர்சனம் உரைக்க, குரலை செருமியவர், “தம்பி?” என்று ஆரம்பித்தார்.
“எல்லாம் சொன்னாப்பா அவ!” என்றதும், ஷியாமளன் உடல் இறுகியது.
“ஒரு வாரமா எதையோ பறிகொடுத்தவ மாதிரி தேமேன்னு இருந்தா… படிப்பு முடிஞ்சுதுன்னு வருத்தம் போலன்னு நினைச்சேன்! ஏதோ போட்டி இருக்கு, அதுல ஜெயிக்கனும்ன்னு வேற சொல்லிட்டே இருப்பா! ஒருவேள அந்த பயமா கூட இருக்கும்ன்னு நினைச்சு நான் கண்டுக்கல, நேத்து ராத்திரி ஒரே அழுகை… பெரிய தப்பு பண்ணிட்டேன்னு… பதறிடுச்சு எனக்கு! என்னனு விசாரிச்சா சொல்றா எல்லாத்தையும்” என்றவர் அப்படியே பேச்சை நிறுத்தினார்.
கண்ணாடியை கழட்டி மெதுவாக கைக்குட்டையால் கண்களை ஒற்றி எடுத்தார்.
‘அழுகிறாரா?’ அதிர்ந்துப்போனான்.
மூக்கை உறிஞ்சியவர், “சின்ன வயசுல இருந்தே அம்மா இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு ரொம்ப செல்லம் கொடுத்தேன்… அதை அவ எப்பவும் தப்பா பிரயோகிச்சதே இல்லை… அந்த வகைல என் பொண்ணு மேல ரொம்ப பெருமை எனக்கு” என்றவர்,
“இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வச்சு இப்போ என்னை கூனி குறுக வச்சுட்டா! சத்தியமா இப்படி ஒரு விஷயம் அவ பண்ணிருப்பான்னு நான் நினைக்கவே இல்ல தம்பி” என்றார்.
ஷியாமளன் அமைதியாய் இருந்தான்.
“விளையாட்டுக்கு கூட அவளை நான் அடிச்சதே இல்லை! ஆனா, நேத்து ராத்திரி எனக்கு வந்த கோவத்துல கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுப்போட்டுட்டேன்” என்றதும் துடித்துப்போன ஷியாமளன் அதை வெளியே காட்டிகொள்ளாமல் இருக்க அரும்பாடுப்பட்டான்.
“காலைல உடம்பெல்லாம் கொதிச்சுது! நல்ல ஜுரம்… மாத்திரை குடுத்து தூங்க வச்சுட்டு நேரா உங்ககிட்ட தான் மன்னிப்பு கேட்க வந்தேன்” என்றவர் சட்டென எழுந்து நின்று கைக்கூப்பினார்.
அவர் செய்கையில் திகைத்து, எழுந்துவிட்டான் ஷியாமளன்.
“என்னை மன்னிச்சுடுங்க தம்பி… என் பொண்ணை நான் சரியா வளர்க்கல!” என்றவர்,
“மத்தவங்க மனசை படிப்பான்னு தான் இந்த படிப்புல சேர்த்தேன்… மனசை உடைப்பான்னு நினைக்கல! உங்க முகத்தை பார்க்கக்கூட எனக்கு கஷ்டமா இருக்கு! அவ சார்பா உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றார் தலைகுனிந்து.
“விடுங்க சார்… பரவால்ல” அவரை இப்படி பார்க்க மிகவும் சங்கடமாய் போனது அவனுக்கு.
“இல்ல தம்பி… நீங்களா இருக்கப்போய் இது பிரச்சனை இல்லாம போச்சு அவளுக்கு. இதே இன்னொருதன்னா சொல்ல முடியுமா என்ன என்ன செய்வான்னு?” என்றார். உண்மைதானே!? எல்லோரும் ஷியாமளனாய் இருப்பார்களா?!
“வரேன் தம்பி!” என்றவர் கதவு வரை சென்றுவிட்டு தயங்கினார்.
“அவ இப்படி செஞ்சுட்டாங்குறதுக்காக அவளை ரொம்ப மோசமா நினைச்சுடாதீங்க தம்பி! அவ ரொம்ப நல்லவ தான்… என்னவோ உங்ககிட்ட இப்படி ஒரு கிறுக்குத்தனம் பண்ணிட்டா!” என்றார்.
உதடுகளை இறுக்கமாய் மூடிக்கொண்டிருந்தான் ஷியாமளன்.
“உங்களை மாதிரி ஒரு மருமகன் கிடைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்… மனசு இருந்தா யோசிங்க” மொட்டையாய் தன் விருப்பத்தை சொல்லிவிட்டு அவர் போயிருக்க,
தெளிந்த குட்டையென சிறுது சிறிதாய் மாறிக்கொண்டிருந்த அவன் மனதில் சிறு கல் போல வந்து விழுந்தது பரசுராம் வருகை.