உன் இதழ்களில் என்றும் என் முத்தத்தின் ஈரமடி கண்ணம்மா !!!
விடிந்தும் தெளியாத அந்த சாம்பல் வண்ண வானம் போல விடிந்தும் சுசீந்திரனுக்கு தெளிவு பிறக்கவில்லை. நேற்றைய அவளின் நெருக்கம் சொல்ல வந்தது என்ன? அவளின் கோபங்கள் குறைந்து விட்டதா? எதனால்? எப்படி?
இல்லை தனிமையின் தவிப்பில் இருந்தவளின் நெருக்கமா அது?
இருக்காதே, நான் நெருங்கிய கணங்களில் எல்லாம் அவள் உடலும் மனமும் உருகாமல் உறைந்தல்லவா போனது. என்ன நடந்தது நேற்று மட்டும்? கேள்விகளால் அவன் நினைவுகள் நிறைந்திருக்க விழித்தெழுந்தவனோ அருகில் அவள் இல்லை என அறிந்ததும் அவளைத் தேட, அப்பொழுதுதான் முகம் கழுவி வெளியே வந்தாள் மஹிமா.
“எழுந்துட்டியா சுசி? சரி நீயும் பல் தேச்சுட்டு வா நான் டீ வைக்கிறேன்.” என்று அவன் முகம் பார்த்து அவள் பேசிவிட்டுப் போக, இத்தனை நாளாக எங்களுக்குள் பிரச்சனை என்பது நிஜமா இல்லை அது என் கனவா? என ஒரு நிமிடம் குழம்பிப் போனான் சுசீந்திரன்.
அவள் இயல்பாக பேசி நான் தான் தவறாக புரிந்து கொள்கிறேனா? இல்லை அவளுக்குள் மாற்றங்கள் இருப்பது நிஜமா? மாற்றங்கள் நிஜம் என்றால் என்னை மன்னிப்பாளா? மீண்டும் கேள்விகள் அவனைத் துவளச் செய்ய காலையிலேயே சோம்பலாக தோன்றியது.
‘நேத்தெல்லாம் ஒழுங்கா தூக்கமே வரல. அவளை தேவை இல்லாம பக்கத்துல இழுத்து கைக்குள்ள தூங்க வைக்கிறேன்னு என் தூக்கம் கெட்டது தான் மிச்சம். வழக்கம் போல அம்மிணி தாலாட்டு பாடவும் நல்லா தூங்கிட்டாங்க.’ என நொந்து கொள்பவன் போலவே புன்னகைத்துக் கொண்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மெத்தையில் கால் நீட்டி படுத்திருப்பதே தனி சுகமாகத் தெரிய எழுந்து கொள்ள மனம் வரவில்லை. படுத்துப் புரண்டவனுக்கு நினைவு வர அவளின் கையேட்டைத் தேடினான். வழக்கம் போலே மெத்தையின் அருகிருந்த மேசையின் மேல் வைத்திருந்தாள்.
எடுத்தவன் கடைசியாக என்ன எழுதியிருக்கிறாள் என பார்க்க ‘இருமுனை வாள் கொண்டு இருவரும் தாக்கிக் கொள்ள காயம் பட்டதென்னவோ முத்தத்தின் ஈரத்தில் முளைவிட்ட எங்களின் காதல் தான்.’ என்று எழுதி இருந்தாள்.
அவள் எழுதியதை கண்கள் வாசிக்கும் போதே நெஞ்சை அரிக்கத்தான் செய்தது. ஆனாலும் நிஜம் அதுதானே. காதலாகி, காத்திருந்து, கை சேர்ந்தவளை கரம் பிடித்தவன் அவன்.
கடந்து வந்த பாதை எல்லாம் அவனுக்கு நினைவில் இல்லை. அர்ஜுனனின் கண்களில் தெரியும் இலக்கு போலவே அவனும் அவனது காதலும்.
தப்பாமல் இலக்கை அடைந்து வெற்றிவாகையும் சூடிவிட்டான். ஆனால் அதை அடைய அவன் கடந்த பாதையின் கசடுகள் இன்னும் கசப்பை அவர்களின் காதல் வாழ்வில் வீசியிருக்க கசங்கித்தான் போயிருக்கிறான் காதல் பாடும் கவிபாரதி.
அடுத்து என்ன வருமோ என பயந்தபடி அவன் முந்தைய பக்கத்தைத் திருப்ப, ‘முத்தங்கள் எல்லாம் முடிந்தேவிட்டதா? இதழ்களின் ஈரம் காயும் முன்னே விதைத்துவிடு மீண்டும். மரணத்திலிருந்து மீண்டு முளைவிடட்டும் நம் முத்தக் காதல்’ என்று எழுதி இருந்தவள் சிவப்பு வண்ணத்தில் சிறிதாய் இதழ்கள் வரைந்திருந்தாள்.
அதை முதலில் மேலோட்டமாக படிக்க அதன் பொருள் அப்படி ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் சற்றே யோசிக்க, ‘முத்தம் குடுத்து இந்த ஊடலை முடிச்சுவைக்க சொல்றாளோ?’ என்று அவனுக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது.
மீண்டும் கையேட்டை அதன் இடத்தில் வைத்தவன் எழுந்து சென்று தன்னை சுத்தம் செய்து மீண்டும் கூடத்துக்கு வர சதீஷ் அதுவரையிலும் உறக்கத்தில் தான் இருந்தான்.
அவனை பார்வையால் தீண்டியவன் சமையலறைக்கு வர மஹிமா ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவளின் பின்புறம் வந்தவன் என்ன செய்கிறாள் என எட்டிப் பார்க்க, அவனது அசைவு தெரிந்து சட்டெனத் திரும்பியவள் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.
“சுசீ, இந்த சின்ன வெங்காயம் நீ கொஞ்சம் உரியேன், சாம்பாருக்கு போட. அப்படியே கொஞ்சம் வடைக்கும் வேணும்” என்றாள் கரித்த கண்களை இறுக மூடியபடி.
“ஹ்ம்ம், நான் உரிக்கிறேன். நீ போயி முதல்ல முகம் கழுவீட்டு வந்து டீயை போடு.” என்றான் அவள் கைகளிலிருந்து கத்தியை வாங்கியபடி.
“ஹ்ம்ம்” என்றபடி சென்று முகம் கழுவி வந்தவள், “டீ போட மசாலா இடிச்சா சதீஷ் எழுந்துடுவான். கொஞ்சம் வெயிட் பண்ணு சுசீ.” என்றாள் மெதுவாக.
மெல்ல பேசியபடி இருவரும் இட்லி சாம்பார் சட்னி என சமையல் செய்ய சற்று நேரம் சென்றே எழுந்து வந்தான் சதீஷ்.
“என்ன? ரெண்டு பேரும் கிச்சன்ல என்ன பண்றீங்க? மறுபடியும் உங்க சமையலுக்கு நான் தான் எலியா? மச்சி நீயாச்சும் பரவாயில்ல. எனக்கு இன்னும் ஒருதரம் கூட கல்யாணம் ஆகல டா.” என்றவனை நக்கல் பார்வை பார்த்தவன்,
“ஒருதரம் தப்பு பண்ணி ஆயுள் தண்டனை வாங்கியும் நானெல்லாம் எப்படி தினமும் தைரியமா வந்து நிக்கிறேன். நீயெல்லாம் இதுக்கே பயந்தா எப்படி மச்சி?” என சுசீந்திரன் பதில் சொல்ல இடுப்பில் கை வைத்தபடி இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள் மஹிமா.
“இப்படியே பேசினா ரெண்டு பேரும் காலைல விரதம் தான் இருக்கணும். போங்க போயி பொழைக்கிற வழிய பாருங்க.” என்றவளும் சமையல் வேலையில் மூழ்கினாள்.
மூவரும் பேசியபடி காலை உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தாலும் சுசியின் கண்கள் அவளை அடிக்கடி அளப்பதும் யோசிப்பதுமாகவே இருந்தது. அவனுக்கு காரணம் தெரிய வேண்டும். அவள் நேற்று நெருங்கி வந்ததன் காரணம்.
மறந்து மன்னித்தேன் என கண்டிப்பாக சொல்ல வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் அவள் அவனை பிரிந்திருக்கவும் மாட்டாள், தன் தோற்றத்தை மாற்றி இருக்கவும் மாட்டாள். எதுவும் இல்லை என்றால், ‘நேற்றைய இணக்கம் ஏன்?’ அறிய ஆவல் இருந்தும் கேட்க முடியவில்லை.
அவனது மனதில் இருக்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் தேடித் கொண்டிருந்தாலும் புறத்தே காலை உணவு உண்டு முடித்து சதீஷ் கிளம்பத் தயாராகி இருந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சதீஷ் எங்களை மீட் பண்ண இவ்வளவு தூரம் வந்ததுக்கு.” என்றவளை பார்த்த சுசீந்திரன், “ஹலோ மேடம் சார் உங்களை பார்க்க ஒன்னும் இந்தியால இருந்து வரல. வேலையை பார்க்க வந்த டிக்கெட்ல உங்கள பார்த்துட்டு போறாரு.” என்றான் எப்போதும் போல் இடக்காக.
“ஹுக்கும் நானாவது ஓசி டிக்கெட்ல உங்கள பார்க்க வந்தேன். நீயெல்லாம் உள்ளூர்லயே என்னை ஒதுக்கி தான் வச்சிருக்க. போடா பேச வந்துட்டான்.” என்றவன் தொடர்ந்து, “இதுக்கு தான் மஹி இந்த கம்ப்யூட்டர் படிச்சவனுங்கள நம்பவே கூடாது. புதுப் புது எடிஷன் போட்டு அப்பப்ப மாறிக்கிட்டே இருப்பானுங்க. நம்மள பாரு இன்னமும் நூறு வருஷம் ஆனாலும் H2 கூட O சேர்ந்தா வாட்டர்ன்னு தான் சொல்லுவோம். மோசமானவங்க மஹி சூதானமா இருக்கணும் நீ” என்று அவனும் கலாய்த்தபடி மஹியிடம் விடை பெற்று சுசியுடன் கிளம்பி இருந்தான், அவன் தங்கி இருந்த விடுதி அறை நோக்கி.
மகிழுந்தில் செல்லும் போது சுசீந்திரன் தான் பேச்சை முதலில் தொடங்கினான். “மச்சி நிஜமாவே ரொம்ப தேங்க்ஸ் டா. நீ சொல்லாட்டி கடைசிவரை என் தப்பு எனக்கு தெரியாமலே போயிருக்கும். அதெல்லாம் தாண்டியும், எங்க காதலை புரிஞ்சுகிட்டு நீ ஒதுங்கிப் போனது, யு ஆர் ரியலி கிரேட் டா.” என்றான் மனதில் நிறைந்த அவன் கல்லூரி நாட்களின் நினைவுகளோடு.
“ஹ்ம்ம், நானும் அதை அன்னைக்கு பேசி இருக்க கூடாது மச்சி. எனக்கே பிடிக்குமா? பிடிக்காதான்னு தெரியாது. பிடிக்கும்னா அது என்ன மாதிரியான பிடித்தம்ன்னு எல்லாம் எதுவும் யோசிக்காம உன்கிட்ட வந்து பேசி உன்னையும் காயப்படுத்தி, சாரி மச்சி.
ஆனா இன்னைக்கும் அவளோட attitude, எனக்கு அன்னைக்கு போலவே ஆச்சர்யம் தான் மச்சி. வெற்றி பெரும் ஆணுக்கு பின் இருக்கும் வேகம் மாதிரி அவ. நீ லக்கி டா.
இன்னைக்கு உங்க ரெண்டு பேர் கண்ணிலும் அந்த காதல் தெரியிது. உங்களோட புரிதல், உங்க காதல் இதுக்கு நடுவுல நான் இல்ல மச்சி யார் வந்தாலும் அவங்களுக்கு தன் டைம் வேஸ்ட். ‘நீங்க மேட் பார் ஈச் அதர்’ன்னு சொல்லலாம்.” என்றான் உணர்ந்து மென்னகையோடு.
நம் மனதை தொடும் பெண்கள் எல்லாம் காதலிகள் அல்ல என உணர்ந்தவன் அவன். அதே போல் தன் தவறையும் அறிந்து ஒத்துக் கொள்ளும் நாயகன் சதீஷ். அவனுக்கான நாயகியும் அவனைத் தேடி விரைவில் வருவாள்.
அவனது இடத்தில் சதீஷை இறக்கி விட்டு மன நிறைவோடு சுசீந்திரன் திரும்ப அவர்களது இல்லத்திற்குள் வரும் போது மீண்டும் அவனின் குழப்பங்களும் கேள்விகளும் வந்து சூழ்ந்து கொண்டது.