அவ்வழகான அதிகாலை நேரத்தில் மேள தாளங்களின் ஒலி மண்டபத்தில் நிறைந்திருக்க, கூடவே சொந்த பந்தங்களின் வருகையும் மண்டபத்தில் நிரம்பி வழிந்தது.
புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது! பிரம்ம முகூர்த்தத்தில் தான் திருமணம் நடக்கவிருந்தது சர்வேஷ்வரனுக்கும் கீர்த்தன்யாவிற்கும்.
முகூர்த்த நேரத்தை அறிந்த அன்று “அம்மா… ஏர்லி மார்னிங்கே முகூர்த்தமா?” என்று சர்வேஷ் அன்னையிடம் கேட்க, “ஆமாடா.. பொண்ணு வீடு தான் முகூர்த்த நேரம் பாத்து குறிச்சு சொல்லி இருக்காங்க. நாலே முக்காலுக்குள்ள கல்யாணம்” என்றார் இன்பவள்ளி.
அதைக் கேட்டு அங்கே இருந்த அனைவருக்கும் மலைப்பு தான்! அதுவும் சதீஷ்வரன் அழாத குறையாக “இன்பூ.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா? நாலு மணிக்கு சூரியன் கூட எழுந்துரிச்சு இருக்க மாட்டாரு. நீங்க என்னடான்னா கல்யாணமே பிளான் பண்றீங்க? அப்ப மூணு மணிக்கெல்லாம் எழுந்திருக்கணுமா?” என்று பாவமாய் கேட்க,
அவனை முறைத்த இன்பவள்ளி, “உனக்கென்னடா…. எப்ப எழுந்தாலும் குளிச்சு கிளம்பி ஒரு பேண்ட், ஷர்ட் போட்டா வேலை முடிஞ்சது. ஆனா, எங்க நிலமை எல்லாம் யோசிச்சு பாரு. ரெண்டு மணிக்கே எழுந்திருக்கணும். எவ்ளோ சடங்கு இருக்கு தெரியுமா?” என்று இன்பவள்ளி பெரு மூச்சு விட,
“ரெண்டு மணிக்கேவா?” என்று அலறிய சதீஷ், “அதுக்கு நீங்க தூங்கவே வேணாம் இன்பூ டார்லி. அப்படியே நைட் சாப்பிட்டு ஸ்ட்ரைட்டா குளிச்சு கிளம்ப ஆரம்பிச்சிடுங்க” என்றவன்,
“என்ன சுகரு.. நான் சொல்றது சரி தான!” என்று சக்ரவர்ஷினியிடம் சொல்ல, அவளோ இவனை முடிந்த மட்டும் முறைத்து வைத்தாள்.
“அதுவும் நம்ம சுகரு மேக் அப் போடுறேன் பேர்வழின்னு ஒரு அலப்பறை வேற பண்ணுவா” என்று அவன் மேலும் கிண்டல் செய்ய, அவன் தலையில் ஓங்கி குட்டி இருந்தாள் சக்ரவர்ஷினி.
“அட ரெண்டு பேரும் சும்மா இருங்க” என்று அவர்களை அதட்டிய இன்பவள்ளி, “பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம் பண்றது அவ்ளோ நல்லதுடா. அதான் நானும் மாத்தி வைக்க சொல்லல” என்றவர் மூத்த மகனின் முகத்தை பார்க்க அவனோ யோசனையில் இருந்தான்.
“என்ன சர்வா? மாத்த சொல்லட்டுமா?” என்று மகனின் யோசனை முகம் பார்த்து கேட்க, “இல்லமா.. வேண்டாம். இதே டைமே இருக்கட்டும்” என்றவன், “நான் முதல் நாள் நைட் தான் வருவேன் பொள்ளாச்சிக்கு” என்றான் அசராமல்.
“என்னங்க இவன் இப்படி சொல்றான்?” என்று இன்பவள்ளி கணவனிடம் அதிர்ந்து போய் கேட்க, அவரோ “அன்னைக்கு மும்பைல ஒரு முக்கியமான ‘ஹாஸ்பிட்டாலிட்டி இண்டஸ்ட்ரியல் மீட்டிங்’ நடக்குது. சர்வா அதுக்கு போய் தான் ஆகனும் வள்ளி” என்று வடிவேலனும் மெதுவாக சொல்ல,
“அதை என்னங்க இப்ப வந்து சொல்றீங்க?” என்றவருக்கு அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே வந்தது.
“அம்மா… நேத்து தான் அதுக்கான டேட் அனோன்ஸ் பண்ணாங்க. முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நாம மேரேஜ் டேட் தள்ளி வச்சு இருக்கலாம்! இப்ப என்ன பண்ண முடியும்? இன்விடேஷன் எல்லாம் கொடுத்து முடிச்சாச்சு. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்!” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டவன்,
“கல்யாணம் உனக்கு தான்! அந்த நினைப்பு உனக்கு ஆரம்பத்துல இருந்தே இருக்கான்னு தெரியல எனக்கு. பொண்ணை மட்டும் ரொம்ப பிடிச்சு இருந்தா போதுமா? இப்ப முதல் நாள் நைட்டு தான் வந்து இறங்க போறானாம்! சம்மந்தி வீட்டுக்கு என்னடா பதில் சொல்றது?” என்று இன்பவள்ளி கடுகடுக்க,
“நான் சொல்லிக்கிறேன்மா” என்று முடித்துக் கொண்டான் சர்வேஷ்வரன். அதற்கு மேல் அவனிடம் என்ன பேச முடியும்?
திருமண நாளின் முதல் தினமன்று மும்பையில் இருந்து கிளம்பி முகூர்த்த நேரத்திற்குள் வந்து விடுவேன் என்று சொல்லும் மகனை என்ன செய்ய என்பது போல் தான் பார்த்தார்.
அவனுக்கும் யோசனை தான்! ஆனால், அன்று மும்பை செல்வதை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலை! இவர்கள் குழுமத்தின் சி. ஈ. ஓவாக இவன் தான் செல்ல வேண்டிய கட்டாயம்! இல்லை என்றால் கூட, சதீஷை செல்லச் சொல்லி இருக்கலாம்.
சரி… பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவன் தானே மணிகண்டனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி இருந்தான்.
“மாப்பிள்ளை.. என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றீங்க? முதல் நாள் சொந்த பந்தம்லாம் இங்க கூடி இருப்பாங்க. என்ன பதில் சொல்ல? நிறைய பேச்சு வருமே” என்று வெகுவாக கலங்கிப் போனார்.
“புரியுது மாமா. ஆனா, இதை என்னால தவிர்க்கவே முடியாது. அப்படி தவிர்த்தா நிறைய அடி விழும் தொழில் ரீதியா! மும்பைல இருக்க ஹோட்டல் பிரான்ச்கு மதிப்பில்லாம போய்டும்” என்று எடுத்துச் சொன்னவன் அவரின் பதிலுக்காக காத்திருக்க,
“மாப்பிள்ளை… இங்க சமாளிக்க முடியாது. ரொம்ப கஷ்டம். யாரும் எசகு பிசகா கேட்டா என்ன சொல்ல?” என்றார் கலக்கம் நீங்காமல்!
“யாரு கேட்டாலும் உண்மையவே சொல்லுங்க மாமா!” என்றவன், “சங்கடமான சூழ்நிலை உருவாகும் தான். ஆனா, வேற வழியும் இல்ல மாமா” என்றவனிடம் அதற்கு மேல் அழுத்திச் சொல்ல முடியவில்லை.
“பத்திரமா போய்ட்டு வந்து சேருங்க மாப்பிள்ளை” என்று மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தார்.
நீலகண்டனிடம் சொன்ன போது அவரோ பெரும் அதிருப்தியுடன் “இதென்னடா மணி புது கூத்தா இருக்கு. முதல் நாள் ராத்திரி வந்து இறங்குனா அவனவன் என்ன நினைப்பான்? நீயும் சரி பத்திரமா போய்ட்டு வாங்கன்னு சொல்லி இருக்க? நான் பேசுறேன். அதெல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே வந்து நிப்பாரு பாரு! மாப்பிள்ளை நம்பரை கொண்டா” என்று வீர வசனம் பேசியவர் சர்வேஷிற்கு அழைத்து,
“மாப்பிள்ளை… இப்ப தான் மணி விஷயத்தை சொன்னான். அதெப்படி மாப்பிள்ளை முதல் நாள் நைட்டு வரது சரி படும்! நல்லா இருக்காதுங்களே. என்ன வேலையா இருந்தாலும் போட்டுட்டு வாங்க மாப்பிள்ளை! கல்யாணம் முடிஞ்ச பின்ன பாத்துக்கலாம்” என்று குழைவான குரலில் அதிகாரத்துடன் சொல்ல, அவரின் அதிகாரம் எல்லாம் அவனிடம் எங்கே எடுபட?
“போட்டுட்டு வர வேலை எல்லாம் இல்ல மாமா! முடிச்சிட்டு வர வேலை தான்!” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
“இந்த சூழ்நிலை வரும்னு நினைக்கல. இல்லேன்னா கல்யாண தேதியை தள்ளி வைக்க சொல்லி இருப்போம். இப்ப தவிர்க்க முடியாது. போய் தான் ஆகனும். உங்க கிட்ட யாரு என்ன கேள்வி கேட்டாலும் உண்மைய சொல்லியே சமாளிங்க” என்றவன்,
“அப்படி சமாளிக்க முடியாத ஆளுங்க கிட்ட எல்லாம் என் மாப்பிள்ளை கிட்ட கேட்டுக்கங்கன்னு சொல்லிடுங்க. என் கிட்ட வந்தா நான் பாத்துக்கிறேன்” என்று கூலாக சொல்லி விட, நீலகண்டனுக்கே மண்டை காய்ந்து விட்டது!
அதுவும் அவனின் அழுத்தமான பேச்சில் அடுத்து அவனிடம் தன் அதிகார த்வனியை காட்ட முடியவில்லை அவரால்! அப்படி ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை நிறைந்த அழுத்தமாக இருந்தது அவனின் பேச்சு!
இறுதியில் மணிகண்டனை போல் அவரும் இறங்கி வந்து “சரிங்க மாப்பிள்ளை” என்று தான் சொல்ல வேண்டியதாக இருந்தது.
“தரகர் சொன்ன மாதிரி கொஞ்சம் கடுசு தான்” என்று மெல்ல முணுமுணுத்த நீலகண்டன், “நம்ம நேரம்… சமாளிச்சு தான் ஆகனும் மணியா” என்றார் நொந்த குரலில்.
தாய் மூலம் இந்த செய்தியை கேட்ட கீர்த்தன்யாவிற்கு திடுக்கிடலாக தான் இருந்தது. “முதல் நாள் நைட்டு தான் வருவாங்களா?” என்றவளுக்கு மெல்லிய பயம் ஆக்கிரமித்தது மனதை.
அதுவும் விடியலில் முகூர்த்தம்! இவன் வந்து இறங்கும் நேரம் என்ன? எப்போது வருவான்? என்று அன்றிலிருந்தே மனம் அல்லாடத் தொடங்கி விட்டது அவளுக்கு.
அந்த மெல்லிய பயம்.. இதோ முகூர்த்த நேரம் வரை அவளை அண்டி இருக்க, தன் அக்காக்களின் கை வண்ணத்தில் அழகாய் தயாராகி இருந்தாள் மணப்பெண்ணாக!
அழகு நிலைய பெண்களை எல்லாம் அழைத்திருக்கவில்லை. கண்டன்கள் இருவரும் அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளும் ரகமும் இல்லை. அது தெரிந்த கதை தான் என்பதால், நிகிதா தான் முன்பே ஒரு காஸ்மெட்டிக் கடையையே வாங்கி வந்திருந்தாள்.
அவளே தன் சித்தியும் தோழியுமானவளுக்கு மேக் அப்பை போட்டு விட, சகோதரிகள் நால்வரும் புடவையை கட்டி விட்டனர்.
அதுவும் புடவையை பிரிக்கும் போதே அதன் பொழிவும், பட்டின் கனமும் அவர்களை வியப்படையச் செய்தது.
கீர்த்தன்யாவின் இரண்டாம் சகோதரியான சபர்மதி “நீ சொன்னப்ப கூட நான் நம்பல நிகி. ஆனா, மாப்பிள்ளை செலக்ஷன் சூப்பர். கீர்த்திக்கு அம்சமா பொருந்தும் இந்த கலர்” என்றார் அவர் கைகளில் இருந்த மயில் வர்ண பட்டுச் சேலையை பிரித்தபடி.
“நமக்கெல்லாம் அப்பாவும் பெரியப்பாவும் இப்படி எடுக்கல! கீர்த்திக்கும் எடுத்திருக்க மாட்டாங்க. நல்ல வேள மாப்பிள்ளை வந்தாரு அன்னைக்கு. இல்லேன்னா இவளுக்கும் மாரியம்மன் கோவிலுக்கு கூல் ஊத்துற புடவை தான்” என்று நர்மதா கிண்டல் செய்ய, அனைவருமே சிரித்தனர்.
ஆம்! நால்வருக்கும் ஒரே மஞ்சள் நிறத்தில் தான் திருமண பட்டையும் எடுத்திருந்தனர் கண்டன்கள் இருவரும். கீர்த்தி தான் நிறைய விஷயங்களில் விதி விலக்காகிப் போனாள்.
அதைக் கண்டு சகோதரிகள் யாருக்கும் பொறாமையும் இல்லை! தாங்கள் அனுபவிக்காதது! அவளாவது அனுபவிக்கட்டும் என்று மகிழ்வாக எண்ணிக் கொண்டனர்.
அக்காக்கள் மற்றும் அவர்களின் மகள்கள் உபயத்தில் கீர்த்தன்யா மேலும் அழகுற்று தான் போனாள். நேரம் நான்கை நெருங்கி இருக்க, “இன்னும் அரை மணி நேரத்துல கூப்பிட்டுருவாங்க. தயாரா இரு கீர்த்தி” என்று சொன்னவர்கள், நிகிதாவை அவளுக்கு துணையாக வைத்து விட்டு காஃபி குடிக்க நகர்ந்தனர்.
அக்காக்கள் அனைவரும் சென்றதும் “ஏன் நிகி.. அவுங்க வந்திருப்பாங்க தானே?” என்று மெல்ல கீர்த்தியிடம் கேட்க, “அதெல்லாம் ரெண்டு மணிக்கே வந்துட்டாருன்னு உலவு துறை மூலம் செய்தி வந்தது கீர்த்தி” என்று சிரித்த நிகி,
“உன்னை அம்மா ரெண்டரை மணிக்கு வந்து எழுப்பி விட்டாங்க தான சடங்கெல்லாம் செய்றதுக்கு. அப்ப தான் வர்ஷினி அக்கா எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தாங்க. அண்ணா வந்தாச்சுன்னு” என்று சொல்ல,
“ரெண்டரை மணிக்கு தான் வந்தாங்களா?” என்று கீர்த்தன்யா கவலையான குரலில் கேட்க, “ஹ்ம்ம்.. ஒரு மணி நேரம் தான் தூங்கி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்நேரம் எழுந்து இருக்கணும்” என்று சொன்ன நிகி, கீர்த்தன்யா மிகவும் கவலை கொள்வதை கண்டு,
“ஹோய்… ஏன் இவளோ ஃபீலிங்? அதான் முன்னாடியே தெரிஞ்ச விஷயம் தான? விடு.. நீ டல் ஆகாத” என்று சொன்ன நிகிதா,
“நான் போய் காஃபி குடிச்சிட்டு வரவா? நீ இருந்துப்ப தானே? வெள்ளன எழுந்தது தலை வலிக்கிற மாதிரி இருக்கு” என்று கேட்க, “போய் குடிச்சிட்டு வா நிகி. நான் இருந்துப்பேன்” என்றவள் நிகிதா சென்றதும் தன்னை ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டாள்.
மனமெங்கும் சர்வேஷின் நினைவு தான்! இப்போது எழுந்து இருப்பானா? அவனும் தயாராகி இருப்பானா என்று சிந்தனைகளை அவனை சுற்றியே வளம் வர, ஏனோ அவனிடம் பேச வேண்டும் என்கிற உணர்வு அந்த நொடி வெகுவாய் அவளை ஊடுருவியது.
அலைபேசியை எடுத்து அன்று ஒரு நாள் நிகிதா அனுப்பி இருந்த அவனின் எண்களை பார்த்தாள்.
அழைப்போமா.. வேண்டாமா.. என மனம் சதிராட்டம் ஆட, கைகள் அதன் போக்கில் அவன் எண்களை அழுத்தி விட்டிருந்தது.
“அச்சோ..” என்று சொல்லிக் கொண்டவள், அழைப்பை துண்டித்து விடலாம் என்று நினைத்த நேரம் அந்தப் பக்கம் “ஹலோ…” என்று அவனின் குரல் அவள் செவிகளை தீண்டி சுவாசத்தை நிரப்பியது.
குரலில் அத்தனை சோர்வு! ஆனால், அதையும் மீறி அவனின் இயல்பான குரல் போல தான் தெரிந்தது அவளுக்கு.
“ஹலோ..” என்று மீண்டும் அவனின் குரல் கேட்க, “நான்.. நான் கீர்த்தன்யா பேசுறேன்” என்று அவளின் மெல்லிய குரலை கேட்டு அவன் புறம் ஆழ்ந்த மௌனம்!
அதிகாலை வேளையில் அவளின் எதிர் பாரா அழைப்பு! அதுவும் இன்னும் சற்று நேரத்தில் தன் சரி பாதியாக போகிறவள்! இந்நேரம் அழைத்திருப்பதை கண்டு ஒரு புறம் உள்ளமெங்கும் இனிமையாய் அதிர்ந்தாலும், மற்றொரு புறம் என்ன விஷயம் என்றும் சிந்திக்க வைத்தது.
“ஹலோ.. இருக்கீங்களா?” என்று அவள் மெல்ல கேட்க, “ஹ்ம்ம்.. சொல்லுமா” என்றவனின் குரலில் சோர்வையும் மீறிய காதல்!
எதிர் பாராமல் அழைத்து விட்டாலும், இப்போது என்ன பேசுவது என்று மனம் தயங்க, “அது.. அது.. வந்து.. டயர்டா இருக்கீங்களா?” என்று கீர்த்தன்யா கேட்க, அவன் முகத்தில் கீற்றாய் புன்னகை!