“இன்னும் கொஞ்ச நேரத்துல நமக்கு கல்யாணம் கீர்த்துமா!” என்று அவன் சிரிக்க, “ஹான்.. ஆமாமா” என்று அவளின் திக்கித் திணறி தலையை ஆட்டிக் கொள்ள,
“ஹோய்.. என்ன அந்த பக்கம் மண்டையை ஆட்டுவ போல” என்றவனின் குரலில் சோர்வு நீங்கி கொஞ்சம் கொஞ்சமாய் குறும்பு குடியேறியது.
“ஹ்ம்ம்… ஆமாமா” என்று அதற்கும் அவள் தலை ஆட்டிக் கொண்டு பதில் சொல்ல, சர்வேஷிற்கு அப்படி ஒரு புன்னகை.
“டயர்டா தான் இருந்தேன். இப்ப இல்ல” என்றான் மென்மையான குரலில்.
“ஓ..” என்று கீர்த்தன்யா அமைதியாகி விட, “கல்யாணத்துக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த கீர்த்தி பொண்ணு கால் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல” என்றவனின் பேச்சில் கீர்த்தன்யாவிற்கு “அச்சோ…” என்றாகி விட்டது.
“அது… நீங்க ரெண்டரை மணிக்கு தான் வந்ததா நிகி சொன்னா. அதான்.. பேசணும்னு… கூப்பிடனும்னு நினைக்கல. கை பட்டிடுச்சு. தானா…” என்று உளறி கொட்ட,
“இல்ல.. அதான் சும்மா கூப்பிட்டேன்..” என்று மேலும் உளற, “ஹ்ம்ம் அப்புறம்…” என்று மேலும் அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்க ஆவலுடன் ‘அப்புறம்’ போட்டுக் கொண்டிருந்தான் சர்வேஷ்வரன்.
“அப்புறம்.. வேற ஒன்னும் இல்ல” என்று அவள் சொல்லி விட, “ஒண்ணுமே இல்லையா கீர்த்துமா?” என்றவனின் ஆழ்ந்த குரலில் கீர்த்தன்யா மனம் திறந்து கொண்டது.
“எப்படி இருக்கீங்க நீங்க? ரொம்ப சோர்வா இருக்கீங்க. வாய்ஸ் அவ்ளோ டல்லா வருது? எப்ப தூங்குனீங்க? எப்ப எழுந்தீங்க? கஷ்டமா இருக்கா..? ரெஸ்ட்டே இருந்திருக்காது தான?” என்று அவன் மீதுள்ள அக்கறையில் கேட்டுக் கொண்டே வந்தவள்,
ஒரு கட்டத்தில் முடியாமல் “எனக்கு..அது.. உங்களை.. உங்களை பாக்கணும் போல வருது” என்று கலங்கி விட்டாள்.
ஒரே மண்டபத்தில் தான் இருவரும் இருக்கிறார்கள். அறைகளின் இடைவெளி மட்டுமே அவர்களை பிரித்து வைத்திருந்தது.
“ஐயம் ஓகேமா. உண்மைய சொல்லனும்னா ரெண்டரை மணிக்கு தான் வந்தேன். வந்ததும் படுத்திட்டேன். அவ்ளோ டயர்ட்! தல வலி வேற ஒரு பக்கம்! நீ கால் பண்றதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் அம்மா வந்து எழுப்பிட்டு போனாங்க. இப்ப தான் பிரஷ் பண்ணிட்டு வந்து காஃபியோட உக்காந்து இருக்கேன். இன்னும் ரெடி ஆகல. இனிமேல் தான் ஆகனும்” என்று அவனும் அவள் கலக்கம் உணர்ந்து சொல்ல,
“என்னது இன்னும் ரெடி ஆகலயா?” என்று அவள் திகைத்து கேட்க, அதில் மீண்டும் புன்னகை அவன் முகத்தில்.
“ஆமா” என்று லகுவாக சொல்லியவன், “நீ?” என்று கேட்க, “ஹ்ம்ம்.. அதெல்லாம் ஆகிட்டேன்” என்றவள், “காஃபி கூட டேப்லெட் போட்டுக்கங்க. இன்னைக்கு முழுக்க சமாளிக்கணுமே?” என்று கவலையுடன் சொல்ல,
“ஆமா.. நீங்க தல வலியோட இருந்தா எப்படி சமாளிப்பீங்க? அதுவும் அக்னி குண்டத்துல உக்காரும் போது புகையா வேற வரும். மேள சத்தம் வேற… வரிசையா ஆளுங்க வேற வந்துட்டே இருப்பாங்க” என்று அவன் சொல்ல வருவதன் உள்ளர்த்தம் புரியாமல் கீர்த்தன்யா அப்பாவியாய் சொல்ல,
“டேய்… கீர்த்தி பொண்ணு..” என்று அடக்கமாட்டாமல் சிரித்து விட்டவன், “அப்புறம் அடுத்து…” என்று கள்ளப் புன்னகையுடன் கேட்க, “அடுத்து என்ன? கோவில் போய்ட்டு வீட்டுக்கு போவோம். அப்ப வேணும்னா நீங்க ரெஸ்ட் எடுக்கலாம்” என்று சொல்ல,
“ரெஸ்ட் எடுத்திட்டு..” என்று அவன் இழுக்க, அப்போது தான் குரலில் இருந்த விஷமமும் அவர்கள் பேச்சு சென்று முடியும் விஷயமும் புரிபட, படபடவென வந்து விட்டது கீர்த்தன்யாவிற்கு.
“ஹான்…” என்று அவள் அவன் பேச்சிலும் சிரிப்பிலும் திகைத்து விழிக்க, “கியூட் கீர்த்துமா” என்று சொல்லிக் கொண்டவன்,
“சமாளிக்கலாம்.. கீர்த்தியும் சேர்ந்து என்னை சமாளிக்கிறதா இருந்தா” என்று சொன்ன விதத்தில் குப்பென்று ரத்தம் பாய்ந்து விட்டது அவள் முகத்தில்.
முகம் செஞ்சாந்தாய் சிவந்து விட, அகத்தில் அவன் சொன்னதின் சுவடுகள் மெல்ல தடம் பதிக்க ஆரம்பித்த நேரம் உயிர் பூக்கள் ஒவ்வொன்றும் ஓசையில்லாமல் பூப்பது போல் இருந்தது.
“சமாளிப்ப தான?” என்றவனின் சீண்டலான குரல் உயிரைத் தீண்ட, “நீ.. நீங்க ரெடி ஆகுங்க. டைம் இல்ல” என்று மடமடவென சொல்லி விட்டு அழைப்பை துண்டித்ததும் அலைபேசியை கீழே வைத்து விட்டு இரு கைகளாலும் சிவந்த முகத்தை மூடிக் கொண்டாள்.
அவ்வளவு வெட்கம்!
அவளின் நுன் உணர்வுகளை முழுதாய் விழுங்கிக் கொண்டது அவனின் நெருக்கமான பேச்சுக்கள்!
முகத்தை மூடியபடியே “இப்படி பேசி வைக்கிறாரே!!” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள், அவன் கேட்டது போலவே “எப்படி சமாளிக்க போறோம் இவரை?” என்று கேட்டுக் கொள்ள, மீண்டும் அவன் கேட்டதின் நினைவு!
“அச்சோ.. அவரு கேட்டது வேற.. நான் கேட்டது வேற” என்று அவளுக்கு அவளே விளக்கங்கள் கொடுத்து சிணுங்கிக் கொள்ள, இன்னமும் நீங்காத ரீங்காரமாய் அவன் கேட்டவை செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அச்சோ.. இப்படியா கேட்பார்..!” என்று அடுத்த அரை மணி நேரத்தில் ஆயிரம் முறை இதை தனக்குள் சொல்லிச் சொல்லி சுகமாய் மாய்ந்து போனாள் கீர்த்தன்யா.
அவள் அழைப்பை துண்டித்ததும் சர்வேஷிடம் மந்தகாச புன்னகை! தாய் வந்து எழுப்பி விட்டுச் சென்றதும் கண்களும் உடலும் ஓய்விற்கு கெஞ்சினாலும் ஓய்வெடுக்கும் நாளில்லயே அன்று!
எரிந்த கண்களை பிரித்து எழுந்தவனுக்கு அப்படி ஒரு அசௌகரியம்! அலுப்பும் அசதியும் எழுந்து கொள்ளவே விடவில்லை.
மும்பையில் வேலை முடிந்ததும் உடனே ஃப்ளைட்டில் கோயம்பத்தூர் வந்து சேர்ந்து அங்கிருந்து காரில் பொள்ளாச்சி வந்து சேர நள்ளிரவு ஆகி விட்டது. காரில் வரும் போதே அறை குறை உறக்கம் இருந்தாலும் அன்றைய தினம் மொத்தமும் சிறு ஓய்வு கூட இல்லை அவனுக்கு.
இங்கே வந்து படுத்ததும் உறங்கி இருந்தான். மீண்டும் ஒரு மணி நேரத்தில் இன்பவள்ளி வந்து எழுப்பி விட்டுச் சென்றிருந்தார். தலை வேறு பாரமாக இருக்க அன்னையிடம் சொல்லி காஃபியை வரவழைத்து அப்போது தான் பருக இருந்தான்.
அச்சமயம் எதிர் பாராத விதமாக மனைவியாகப் போகிறவளின் அக்கறையான அழைப்பு!
அவளின் பேச்சில் கலக்கம் இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க காதலின் சுவடுகள் இன்பமாய் அவன் இதயத்தில் தடம் பதிக்க, பாரமேறிய தலையில் இதமாய் வருடி கொடுத்தது போல் இருந்தது அவளின் வார்த்தைகள்!
தான் சீண்டியதற்கு தடுமாறிப் போனவளின் முக பாவனையை காண பெரும் ஆவல் எழ, “வெட்டிங் டே மார்னிங் இவளோ ஸ்வீட்டா அமையும்னு நினைக்கல! தாங்க்ஸ்டா கீர்த்துமா” என்று சொல்லிக் கொண்டவன், வேக வேகமாக தயாராக ஆரம்பித்தான்.
முகூர்த்த நேரமும் நெருங்கி விட, இதோ.. மண மேடையில் மணக் கோலத்தில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இருவரும் ஒன்று சேர்ந்து அன்று தேர்ந்தெடுத்திருந்த புடவையில் அழகோவியமாய் இருந்தவளை கண்டவனுக்கு கண்களில் எரிச்சலையும் மீறி அப்படி ஒரு ரசனை!
பார்வையை அகற்றி கொள்ளவெல்லாம் நினைக்கவில்லை! ஆசையாய் மணந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் அருகமர்ந்து இருக்க, யாரின் பார்வைகளையும் கண்டு கொள்ளவில்லை அவன்!
அவ்வப்போது அவளின் அமைதியான முகத்தை நினைத்த நேரம் எல்லாம் திரும்பி பார்த்து ரசித்து என அவளை அவஸ்தை கொள்ள வைத்தான்.
சுற்றி இருந்த சொந்தங்கள் கூட்டம் கிண்டலில் இறங்க, “இப்படி பார்த்து வேற வைக்கிறாரே…” என்று மௌனமான வெட்கத்துடன் அலுத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது கீர்த்தன்யாவால்!
“கொஞ்சம் திரும்புங்களேன்… என்னால முடியல” என்று மனதோடு அவனிடம் சொல்லிக் கொள்ள, சுற்றமும் உற்றமும் மறந்து அவன் ஒருவனே மதியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தன்யா.
கெட்டி மேளச் சத்தம் காதை அடைந்ததும் தான் சுயத்திற்கு வந்து அவனை தானாக நிமிர்ந்து பார்த்தாள். அவனின் பார்வையில் “அச்சோ…” என்று முகம் சிவந்து முணுமுனுத்தவளை தெவிட்டாமல் பார்த்தவன்,
“அழகு கீர்த்துமா” என்று ஆசையாய் சொல்லியபடி மனம் நிறைந்த ஆனந்தத்துடன் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான் சர்வேஷ்வரன்.
சொந்தங்களின் ஆசிகள் பூக்களால் அவர்களை நிறைக்க, கரம் கோர்த்து காலம் முழுக்க வாழவிருந்த இருவரின் நெஞ்சங்களிலும் சந்தோஷத்தின் சங்கீதங்கள் சுகமாய் ஸ்வரம் மீட்டின!