விடிந்ததும் முதலில் கண் விழித்தது சர்வேஷ் தான். வழக்கமாக எழுந்து கொள்ளும் நேரத்திற்கே அவனின் தூக்கம் கலைந்திருக்க, அவன் கைகளுக்குள் கலைந்த ஓவியமாய் அவன் மனைவி!
அகம் நிறைந்த அதிகாலை பொழுது அத்தனை அழகாய் அவனிதழலில் புன்னகையை தோற்றுவித்தது! கைகளுக்குள் சுருண்டு போய் உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் அத்தனை அசதி!
மார்பில் இருந்தவளின் முகத்தை மெல்ல தலையணைக்கு மாற்ற, “சர்வா..” என்று மெல்ல சொன்னபடி அவனிடமே மீண்டும் ஒட்டிக் கொண்டாள்.
அவள் செயலில் உள்ளம் தேனாய் தித்திக்க, மீண்டும் அவளை அள்ளிக் கொள்ளச் சொல்லி நச்சரித்த உணர்வுகளை அவளின் களைப்பான முகம் பார்த்து கட்டுப் படுத்திக் கொண்டவன், மெல்ல அவளின் தலை கோதியபடி படுத்திருந்தான்.
அவளைப் பிரிந்து எழுந்து கொள்ளவே மனம் வரவில்லை. அதுவும் தன்னை விடாமல் கட்டிக் கொண்டு உறங்கும் அவளின் செயல் மனதை கரைக்க, “என்னடி பண்ற என்னை?” என்றபடி அவள் முகத்தின் மேல் படர்ந்த முடிகளை மெல்ல விலக்கி விட்டவன்,
“நீ என்னை அழகா சமாளிக்கிற! என்னால தான் சமாளிக்க முடியாது போல!” என்று புலம்பிக் கொண்டான். நேற்று இரவு அவள் நம்பிக்கையாக சொன்ன வார்த்தைகள் இன்னுமே நெஞ்சில் நிழலாடியது.
“சமாளிக்க முடியாத அளவு நீங்க நடந்துக்க மாட்டீங்கன்னு நம்பிக்கை இருக்கு” என்றாளே…
“என்னை சமாளிக்க உன்னால மட்டும் தான் முடியும்” என்று மனைவியின் முகம் பார்த்து மெல்ல சொன்னவன், அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான். அதற்கு மேல் நகர துடித்த இதழ்களை கட்டுப் படுத்திக் கொண்டு கண் மூடியவன்,
இதற்கு மேல் அருகிருந்தால் அவள் தூக்கத்தை கலைத்து.. காலையை மீண்டும் இரவாக்கி விடுவோம் என்று அஞ்சி அவளை விலக்கினான்.
போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டவன், குளித்து தயாராகி கீழே வர பூஜை அறையில் தாயின் குரல் கேட்டது.
முதல் முறையாக அன்னையின் முகம் பார்க்க அத்தனை அவஸ்தை கொண்டான்! அதுவும் அவனிடம் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்யும் அன்னையிடம்!
“அம்மா இருக்காங்களே..” என்று வாய் விட்டே புலம்பியவன் தலை கோதிக் கொண்டு அங்கேயே நிற்க, பூஜை முடித்து வந்த இன்பவள்ளி மகன் வந்து நிற்பதை கண்டு “சர்வா.. எழுந்தாச்சா?” என்றவர்,
“போய் சாமி கும்பிட்டு வா. காஃபி போட்டு வைக்கிறேன்” என்று அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் அடுக்களை நோக்கி சென்று விட்டார்.
“ஊஃப்… இன்பூ டார்லிங் தேங்க் யூ” என்று மெல்ல அன்னையை எண்ணி புன்னகை செய்தவன், கடவுளை வணங்கி விட்டு டைனிங் ஹால் சென்றான்.
காஃபியை கொடுத்த இன்பவள்ளி என்ன பேசுவாரோ என்று சர்வேஷ் நிதானமில்லாமல் இருக்க, அவன் நாளிதழை புரட்டிய வேகத்திலேயே அதனை உணர்ந்து கொண்டார் இன்பவள்ளி.
மெல்ல சிரித்துக் கொண்டவர் “காஃபி ஆறிட போகுது சர்வா குடிச்சிட்டு படி” என்றபடி சென்று விட, அப்போது தான் ஆசுவாசம் அடைந்தான் சர்வேஷ்வரன்.
முதல் முறையாக அன்னையை கண்டு அவன் தடுமாறினான். ஏனோ முகம் பார்க்கவே வெட்கம் வருவது போலிருக்க சுத்தமாய் முடியவில்லை அவனால்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக அன்று அன்னையின் மௌனம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க “இன்னைக்கு தான் அம்மா நம்மள பாத்து உளறல” என்று சொல்லிக் கொண்டவனுக்கு தாயிடம் தடுமாற வைத்த தாரத்தை எண்ணி அப்படி ஒரு புன்னகை!
“கீர்த்து.. உன்னால தான் எல்லாம்! அம்மாவைக் கூட பாக்க முடியல” என்று செல்ல ரசனையுடன் அவளை கொஞ்சிக் கொண்டவன் காஃபியை பருகி முடித்தான்.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக எழுந்து வர கிட்சனிற்கும் ஹாலிற்கும் நடந்து கொண்டிருந்த அன்னையிடம் “கீர்த்தி இன்னும் எழுந்துக்கலமா. தூங்குறா” என்று அவனாகவே சொல்லி வைக்க, இன்பவள்ளிக்கு முதல் முறையாக தன்னிடம் தன்னைப் போல் இல்லா விட்டாலும் சிறிதளவு தடுமாறும் மகனை கண்டு அப்படி ஒரு சிரிப்பு.
கூடவே, மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும்! மகனின் முகத்தை வைத்தே அவர்களின் சந்தோஷத்தை உணர்ந்து கொண்டார். எதுவும் அவனிடம் பேசிக் கொள்ளாமல் தான் இன்று வளைய வர, அவனோ சிறிதாக தடுமாறுவதை கண்டு சிரிப்பு வந்தது அவருக்கு.
அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் “சரிடா. எழுந்ததும் வரட்டும்” என்றவர் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட, அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை அவனால்!
“ஸ்ஸ்.. சொதப்பிடுவோம் போல சர்வா..” என்றவன் ஹாலிற்கு வர வடிவேலன் அமர்ந்திருந்தார். அவரோடு இணைந்து கொண்டவனிடம் இயல்பாய் காலை வணக்கம் வைத்தவர் அடுத்து தொழில் பற்றி பேசத் துவங்க சற்றே இயல்பிற்கு வந்திருந்தான் சர்வேஷ்வரன்.
“ரிசப்ஷன் ஏற்பாடு எப்ப சர்வா பண்ணலாம்?” என்று வடிவேலன் கேட்க, “ஹ்ம்ம்.. சண்டேல பிளான் பண்ணலாம் ப்பா” என்றவன், “குட் மார்னிங் ண்ணா” என்று வந்த தம்பியிடம்,
“சதீஷ்.. அடுத்த வார சண்டே நமக்கு எதுவும் ஆர்டர்ஸ், ஈவன்ட்ஸ் இருக்கா?” என்று கேட்க, “அண்ணா.. காலங்காத்தால எழுந்து வந்ததும் காப்பித் தண்ணி கூட குடிக்க விடாம கடமையை பத்தி பேசுறீங்க பாத்தீங்களா?” என்று அழாத குறையாய் சொல்ல, “சரிடா காஃபிய குடிச்சிட்டு சொல்லு” என்றான் சிரித்தபடி.
“ஹ்ம்ம்.. இது நல்ல புள்ளைக்கு அழகு” என்றவன், அன்னை வந்து சுடச்சுட காஃபியை தந்ததும் “காலையில் தினமும் கண் விழித்தால் எனக்கு காஃபி தருவது இன்பூ…. காஃபி என்றாலே இன்பூ…” என்று பாட, அவன் செய்த கலாட்டாவில் அனைவருமே சிரித்து விட்டனர்.
“ஆமா.. இன்பூ இன்பூனு எனக்கு நல்லா ஐஸ் வை! அப்பப்பா.. இந்த சின்னவன் அலப்பறை தாங்க முடியல” என்று அலுத்துக் கொண்டவர் கணவரிடம் “என்னங்க அடுத்து இவனுக்கு ஒரு பொண்ணு பாத்து கட்டி வச்சிட்டா தான் இந்த இன்பூக்கு விடுதலை” என்றார்.
“என்னது… கல்யாணமா? இப்பவேவா? ஏன் நான் சிங்கிள் சிறுத்த குட்டியா வளம் வர்றது உனக்கு பொறுக்கலயா?” என்று அலறிய சதீஷ், அன்னையிடம் “யார் யாரோ அன்னை என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று” என்று பாட அதில் இன்னுமே சிரிப்பலை அங்கே.
கீர்த்தன்யாவும் தலைக்கு குளித்து தயாராகி கீழே வந்து விட, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு அத்தனை இதம் மனதினுள். இது போன்ற காலை எல்லாம் அவளின் இல்லத்தில் விடிந்ததாக நினைவில்லை. விசேஷம் என்றால் மட்டுமே அனைவரும் ஒன்று கூடுவர். இங்கே தினமும் விஷேசம் தான் போலும் என்று பார்த்ததும் புரிந்தது அவளுக்கு.
மருமகள் வந்ததும் பூஜை அறை சென்று விளக்கேற்றி வர சொன்ன இன்பவள்ளி அவளுக்கும் காஃபியை தர, கணவனின் புறம் மட்டும் பார்வையை திருப்பாமல் வெகு கவனமாக அத்தையுடன் ஐக்கியமாகி கொண்டாள் கீர்த்தன்யா.
அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்தும் அவன் புறம் பார்வையை திருப்பவில்லை. நாணம் ஒரு பக்கம் இருந்தாலும், மொத்த குடும்பமும் இருக்கும் நேரத்தில் அவனிடம் பார்வையை திருப்பிக் கொள்ள முடியவில்லை.
தான் வருவதற்கு முன்னாள் நடந்த கலாட்டாவை மருமகளிடம் சொல்லி சிரித்த இன்பவள்ளி “உன் புருஷன் தான் கொஞ்சம் அழுத்தம். பேச மாட்டான். வார்த்தையே வாங்க முடியாது அவன் கிட்ட. ஆனா, இந்த சின்னதுங்க ரெண்டும் இருக்குதுங்களே? அப்பப்பா வாயை திறந்தா சில்லறையா கொட்டும் வார்த்தைங்க! அதுவும் இந்த சதீஷ் பய.. அவன் இல்லேன்னா எனக்கு ஒண்ணும் ஓடாது! இன்பூ.. இன்பூன்னு ஒரு வழி பண்ணிடுவான்” என்றவர்,
“சின்னது ரெண்டும் பெரியவன் மேல உயிரையே வச்சிருப்பாங்க கீர்த்தி. சர்வாவும் அப்படித் தான். என்ன? அவன் கொஞ்சம் அமைதி. இதுங்க அப்படியே நேர் எதிர்” என்று தன் மக்களின் புகழ் பாடிக் கொண்டிருக்க,
அவருக்கு சமையலில் இயல்பாய் உதவி செய்தபடி “ஏன் அத்தை அவுங்க மட்டும் அமைதி?” என்று ஆர்வமாக கேட்டு வைக்க, “என்னமோ தெரியல கீர்த்தி? சர்வா பிறந்ததுல இருந்தே அப்படி தான்!” என்றவர் பெரு மூச்சை விட்டுக் கொண்டு,
“அவன் வயித்துல இருக்கும் போது நானும் ரொம்ப சந்தோஷமா எல்லாம் இருந்தது இல்லமா. என் மாமியாரும் நாத்தனாரும் பண்ணாத கொடுமை இல்ல. அதனால ரொம்ப கஷ்டமா இருக்கும். நாம இருக்கிற விதம் வயித்துல இருக்க பிள்ளையையும் பாதிக்கும். அப்பல்லாம் நானும் இவளோ கலகலன்னு இருக்க மாட்டேன். ரொம்ப அழுத்தம். பிடிவாதம். சண்டை.. அப்படி இப்படின்னு தான் வாழ்க்கை போச்சு. அப்புறம் மாமியார் போய் சேர்ந்ததும் தான் கொஞ்சம் அழுத்தம் இல்லாம இருந்தேன். ஆனாலும், நாத்தனார் கொடுமை இருக்கத் தான் செஞ்சது. ஒரு கட்டத்துக்கு மேல அசால்ட்டா அவளையும் டீல் பண்ண ஆரம்பிச்சிட்டேன்” என்றவர்,
“இப்ப வரைக்கும் அதோட கொடுமை இருக்கு தான்! ஆனா, கண்டுக்க ஆளில்ல” என்று சொல்லி சிரிக்க, அவர் சொன்னதை கேட்டவளுக்கு கலவையான உணர்வுகள்.
அவர் அனுபவித்தவை எல்லாம் தன் மருமகள் அனுபவிக்க கூடாது என்று தான் இத்தனை பாசமாக இருக்கிறார் போலும் என்று எண்ணியவளுக்கு இன்னுமே இன்பவள்ளியை பிடித்துப் போனது!
“இன்னுமே கொடுமை பண்றாங்களா?” கீர்த்தன்யா மெல்லிய திகைப்புடன் கேட்க, “ஹ்ம்ம்.. அதுவும் சர்வேஷ்கு பொண்ணு பாக்குறோம்னு தெரிஞ்சு இன்னுமே பேச்சு தான்” என்றவர் வளர்மதியை பற்றியும், திருமணத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை பற்றியும் சொல்லி முடிக்க, கீர்த்தன்யா மலைத்து போனாள்.
அதுவும் அவரிடம் கணவன் பேசிய விதத்தை அறிந்து “இப்படியேவா அத்தை அவுங்க கிட்ட சொல்லிட்டாங்க” என்று வாய் பிளந்து கேட்க,
“ஹ்ம்ம்.. அதான் என் நாத்தனார் கல்யாணத்துக்கு வரவே இல்ல. நான் கூட எதுவும் கலகம் பண்ணவே கல்யாணத்துக்கு வந்து குடும்பத்தோட நிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல” என்றவர், “எப்படியோ பிரச்சனை பண்ண வராம இருந்ததே பெருசு” என்றார் நெஞ்சில் கை வைத்து.
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவளுக்கு கண்ணை கட்டியது. சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற அதை மனதிற்குள் வைத்திருக்கப் பிடிக்காமல் “ஏன் அத்தை.. அந்த பொண்ணுக்கு.. ” என்று கேட்க வந்து பின்னர் நிறுத்திக் கொள்ள, அவளின் கேள்வியை புரிந்து கொண்ட இன்பவள்ளி மெல்ல சிரித்தார்.
“மதிஷாலினி ரொம்ப நல்ல பொண்ணு தான் கீர்த்தி. ரொம்ப பயந்த சுபாவம். வளர்மதி அண்ணி பொண்ணையும் புருஷனையும் கண்ணசைவுல தான் வச்சிருப்பாங்க. ரெண்டு பேரும் அவுங்க சொல்லுக்கு தான் கட்டுப் படுவாங்க. மதிக்கு சர்வா மேல அந்த எண்ணம்லாம் சுத்தமா இருந்தது கிடையாது. அவன் கூட அவ பேசினதே அத்தி பூத்தார் போல தான். அப்படி பேசுறப்ப கூட அண்ணன் கிட்ட பேசுற விதமா தான் பேசுவா. சர்வான்னா எங்களுக்கே கொஞ்சம் உதறும். அவ சின்ன பொண்ணு. சொல்லவா வேணும்? இவன் இருக்க பக்கம் நகரவே மாட்டா. நம்ம சக்ரவர்ஷினி இப்ப காலேஜ் ஃபைனல் யியர். ஷாலு செக்கண்ட் யியர் தான் படிக்கிறா. வயசு வித்தியாசம் வேற. எப்படி இவன் ஒத்துப்பான்?” என்றவர் சட்டென்று மருமகளின் முகத்தை நெட்டி முறித்து,
“அவனை மயக்கின ஒரே மகராசி நீ தான் போ. அவ்ளோ ஃபோட்டோ கொடுத்து பாருடான்னு சொன்னா டக்கு டக்குன்னு எல்லாத்தையும் பேருக்கு புரட்டிப் பாத்து ‘ம்ம்ஹூம்.. எதுவுமே பிடிக்கலன்னு’ டப்புன்னு சொல்லிட்டான். உன் ஃபோட்டோ அவனா எடுத்தான். அவனா பாத்தான். பாத்ததும் கண்ண எடுக்கவே இல்ல தெரியுமா? நாங்க எல்லாம் அப்பவே முடிவு பண்ணிட்டோம். கட்டுனா உன்னை தான் கட்டுவான்னு. அதே மாதிரி கட்டிக்கிட்டான் என் மகன்” என்று சொல்லி சிரிக்க, வெட்கமும் சந்தோஷமும் போட்டி போட்டு அவளை சிவக்க வைத்தது.