“அச்சோ அழகு என் மருமக” என்று அதற்கும் அவர் மருமகளை கொஞ்சிக் கொள்ள, “அத்தை…” என்று மெல்ல சிணுங்கியவளின் பார்வை ஹாலில் அமர்ந்து சதீஷுடன் பேசிக் கொண்டிருக்கும் கணவனை தீண்டியது.
தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவனின் முக பாவனையை கண்டவள், நேற்றிரவு அவனின் பரிமாணத்தை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள். முயன்று அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டவள் இன்பவள்ளியிடமும் இந்திராவிடமும் பேசியபடி அங்கே தன்னை பழகிக் கொண்டாள்.
“அண்ணா.. நெக்ஸ்ட் வீக் சண்டே எந்த ஈவன்ட்ஸ்சும் இல்ல. ஒரே ஒரு பர்த்டே பார்ட்டி தான் நம்ம ஹோட்டல்ல புக் ஆகி இருக்கு. அதை நம்ம ஸ்டாஃப்ஸ்சே ஹான்டில் பண்ணிக்குவாங்க” என்றான் சதீஷ் அவர்களின் அட்டவணையை பார்த்து.
“அப்ப அன்னைக்கே ரிசப்ஷன் வச்சுக்கலாமா ப்பா?” என்று வடிவேலன் கேட்க, “ஹ்ம்ம்.. நமக்கு ஓகே அப்பா. கீர்த்தன்யா வீட்ல எப்படின்னு கேட்கணும்” என்றவன் எழுந்து வந்ததில் இருந்து தன் கண் முன்னே வராமல் தாயின் பின்னே சுற்றித் திரியும் மனைவியின் மேல் செல்லக் கோபம் வர, இதனை சாக்காய் வைத்து அவளை அழைத்தான்.
“கீர்த்தன்யா…” என்று அவன் கிட்சனை நோக்கி குரல் கொடுக்க, “நீ போ கீர்த்தி. உன்னை கூப்பிடுறான் பாரு” என்று இன்பவள்ளி அவளை அனுப்ப, “அச்சோ” என்று இருந்தது அவளுக்கு.
எல்லோர் முன்பும் அவனிடம் சென்று அமர முடியாமல் அவஸ்தை பட்டவள் “நீங்களும் வாங்க அத்தை” என்று இன்பவள்ளியை துணைக்கழைக்க,
“நல்ல கதையா இருக்கே! அவன் கிட்ட பேச நான் என் வீட்டுக்காரரையும் சின்ன மகனையும் துணைக்கு கூப்பிடுவேன். நீ என்னைய கூப்பிடுறியா?” என்று சிரிக்க, மீண்டும் சர்வேஷின் அழைப்பு.
கீர்த்தன்யா கெஞ்சியபடி அவரை பார்க்க, “நல்ல பொண்ணு போ. எனக்கு ஏத்த மருமக” என்று சலித்து கொண்டவர் ஹாலிற்கு அவளோடு வர, அன்னையின் பின்னே வந்தவளை கண்டவன் புருவங்கள் உயர்ந்து கூடவே, உதட்டில் புன்னகையும் மலர்ந்தது.
அனைவரும் இருப்பதை எண்ணி முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டவன், அவர்கள் வந்ததும் கீர்த்தன்யா இன்பவள்ளியின் அருகிலேயே அமர்ந்து கொள்ள, “இருக்கு உனக்கு..” என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டவன்,
“நெக்ஸ்ட் வீக் சண்டே ரிசப்ஷன் வைக்கலாம்னு இருக்கோம் கீர்த்தன்யா. உனக்கு ஓகே வா? உங்க வீட்ல அன்னைக்கு எல்லாரும் வர பாசிபிலா?” என்று கேட்க, அவன் கேட்ட தோரணையில் பெக்கே பெக்கேவன விழித்தவளை கண்டு,
“அண்ணி.. அண்ணா உங்களை தான் கேக்குறாங்க” என்றாள் சக்ரவர்ஷினி.
“ஹான்… அப்பாவையும் பெரியப்பாவையும் கேட்கணும்” என்றவள் நல்ல பிள்ளையாய் பதில் சொல்ல, “சுத்தம்…” என்று ஒரு சேர முணுமுணுத்தனர் சதீஷும் சக்ரவர்ஷினியும்.
“சரி அவுங்க கிட்ட நான் பேசிக்கிறேன். உனக்கு ஓகே வா?” என்று அவளின் சம்மதத்தை கேட்க, “ஹான்.. எனக்கா?” என்றவள் இன்னுமே விழிக்க, அன்னையை போல் விழித்தவளை கண்டு சிரிப்பு வந்தாலும் அவளாக ஒரு முடிவினை கூட சொல்லாமல் இப்படி இருக்கிறாளே என்று ஆயாசமாக வந்தது அவனுக்கு.
இன்பவள்ளி அவர்களை முறைக்க, சதீஷோ தாயின் முறைப்பை கண்டு கொள்ளாமல் “அண்ணி.. அப்படியே அம்மா மாதிரியே பண்றீங்களே? அண்ணா இப்படி அம்மா கிட்ட எதாவது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசரா கேக்கும் போது அம்மா அப்பாவை இப்படி தான் பாப்பாங்க. அப்புறம் என்னை ஒரு லுக் விடுவாங்க. நீங்களும் அதே மாதிரி.. சேன்சே இல்ல போங்க” என்று சதீஷ் சிரிக்க,
சக்ரவர்ஷினியோ சர்வேஷிடம் “அண்ணா.. பாவம் அண்ணா அண்ணி.. நாலே நாள்ல அவுங்களையும் இப்படி ஆக்கிட்டீங்களே” என்று சொல்லி சிரிக்க, அசடு வழிந்தாள் கீர்த்தன்யா. கூடவே, கணவனை கடைக்கண்ணால் முறைக்க அவனோ கள்ளப் புன்னகையை கண்களில் தேக்கி ‘அபப்டியா?’ என்று கண்ணாலேயே கேட்க,
“ஆத்தி….” என்று அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டவள், “எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே தான்” என்று சொல்ல, “ஹப்பாடி.. இதுக்கு இத்தனை அக்கப்போரு அண்ணி” என்று சதீஷ் மீண்டும் மீண்டும் சிரிக்க,
“டேய்… சும்மா இருடா என் மருமகள விடாம கிண்டல் பண்ணிட்டு” என்று அவனை அதட்டிய இன்பவள்ளி கணவனிடம் திரும்பி “நீங்க சம்மந்தி வீட்ல பேசிட்டு முடிவு பண்ணுங்க. அவுங்க பக்கட்டும் சரின்னா அப்பவே ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என்றார்.
“சரி வள்ளி. நான் பேசிட்டு சொல்றேன்” என்ற வடிவேலன், “நீ ரெண்டு நாள் இன்னும் லீவ் எடுத்துக்கிறியா சர்வா? இல்ல ஹோட்டல் வர ஐடியாவா?” என்று வடிவேலன் கேட்க,
“இல்லப்பா ஏற்கனவே ஒன் வீக் ஆகப் போகுது. இன்னைல இருந்து வரேன்” என்று அவன் சொன்னவுடன் “என்ன.. இன்னைக்கே கிளம்புறாங்களா” என்று தான் இருந்தது கீர்த்தன்யாவிற்கு.
“ஏன்டா இந்த ஹனிமூன் எல்லாம்” என்று இன்பவள்ளி ஆரம்பிக்க, “ரிசப்ஷன் முடிஞ்சு பாத்துக்கலாம்மா” என்று விட்டான் முடிவாக. அதற்கு மேல் அவனிடம் எங்கே போய் கேட்க?
“க்கும்… இவனோட…!” என்றவர், “ரிசப்ஷன் முடிஞ்சு அடுத்து ஹோட்டல், ரெஸ்டாரன்ட், சென்னை மும்பைன்னு கதை கட்டுவான்” என்றவர் மருமகளின் காதினுள் முணுமுணுக்க கீர்த்தன்யாவிற்கு அத்தனை சிரிப்பு அவரின் பேச்சை கேட்டு.
காலை உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்ததும் சர்வேஷ் ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அவனின் பின்னே அறைக்கு வந்தவள் அவன் தன்னிடம் ஏதும் கேட்பான் என்று அவன் முகம் பார்த்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்க,
அவனோ அவள் ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்தவன் போல் தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.
“என்ன கண்டுக்கவே மாட்டேங்குறாங்க” என்று மெல்ல முணுமுணத்தவள், எழுந்து வாட்ரோபை திறக்க, ரெஸ்ட் ரூம் சென்று வர, என அவன் கண் முன்னால் தன் இருப்பை உணர்த்தி விட முயன்றபடி இல்லாத சேட்டை எல்லாம் செய்ய ஒரு கட்டத்தில் முடியாமல் அவளை இழுத்து கைகளுக்குள் நிறுத்திக் கொண்டவன்,
“என்ன கீர்த்து பண்ற?” என்று பட்டென்று கேட்க, அதில் இதழ் விரித்து அவனைத் திகைத்து பார்த்தவளின் மேல் பித்தம் கொண்டு இதழாக்கம் புரிந்தவன்,
அவள் மெல்ல மயங்கி நின்றதை கண்டு நமட்டுச் சிரிப்புடன் “காலைல இருந்து என்னை பாக்கவே இல்ல. இப்ப ரூமுக்குள்ள வந்ததும் என்ன அலப்பறை நான் உன்னை பாக்கணும்னு? ஏன் நீயா வர மாட்டியா? எதுவும் கேட்க மாட்டியா? பாக்க மாட்டியா” என்று கேட்டு புருவமுயர்த்த,
“ஹான்..” என்று விழித்தவள், மெல்ல மயக்கம் நீங்கி “என்ன கேட்டீங்க?” என்று கேட்டு வைக்க, “ஊஃப்.. படுத்துறடி என்னை” என்று அலுத்துக் கொண்டவன், மீண்டும் தான் கேட்டதை கேட்க,
“அ.. அது.. கீழ எல்லாரும் இருக்காங்க. எப்படி பாக்க முடியும். பேச முடியும். கேட்க முடியும்” என்று அவனைப் போல பதில் சொன்னவள், அவனை நிமிர்ந்து கொஞ்சமாய் கொஞ்சலுடன் முறைத்து,
“நீங்க மட்டும் என்ன? என்கிட்ட பேசினீங்களா? என்னமோ டீச்சர் மாதிரி கேள்வி கேக்குறீங்க. எனக்கு எப்படி பதில் சொல்றதுன்னே தெரியல” என்றவள், “கடைசில சதீஷ், வர்ஷி கிட்ட பல்ப் வாங்கினது தான் மிச்சம்” என்றாள் அவன் மார்பில் கை வைத்து அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்தபடி.
அவளின் முயற்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போக, “என்கிட்ட இருந்து எங்க ஓடப் பாக்குற?” என்றவன் நமட்டுச் சிரிப்புடன் அவளை இன்னுமே அவஸ்தை கொள்ள வைக்க,
“நீங்க ரெடி ஆகிட்டீங்க தான! ஷர்ட்லாம் கசங்கிடும். விடுங்க” என்றவள் இன்னுமே அவனை முறைத்தபடி தான் இருந்தாள். அவள் சொன்ன பாவனைலேயே புரிந்து போனது அவனுக்கு.
தான் இன்று கிளம்புவது பிடிக்கவில்லை என்று. “கசங்குனா கசங்கட்டும் கீர்த்து. வித் ப்ளஷர்” என்று மெல்ல அவளிடம் இளைப்பாற, “அச்சச்சோ..” என்று ஆகிப் போனது அவளுக்கு.
இன்பமாய் சில நொடிகள் அவர்களை சூழ்ந்து கொள்ள, மார்பில் கண் மூடி சாய்ந்து கொண்டவளிடம் “நீயும் தான் என்கூட வர. கிளம்பு” என்றான்.
“என்னது நானுமா? எங்க? இப்பவா” என்று அவள் மெல்லிய திகைப்புடன் கேட்க, “ஆமா நீயும் தான்!” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
“இப்ப சொல்றீங்க?” என்று வேறு கேட்க, “எப்ப சொன்னா என்னடி? மனுஷனை போட்டு சோதிக்காம கிளம்பு. இல்லேன்னா….” என்றவனின் பார்வை மாற்றத்தில் “இதோ கிளம்பிட்டேன்..” என்று துள்ளி விலகாத குறையாக விலகி கிளம்பத் துவங்கினாள்.
சற்று நொடிகளுக்கு முன்னர் இருவரும் ஒருவரில் ஒருவர் மெய் மறந்து இருந்ததில் அவனின் சட்டை உண்மையாகவே கசங்கி இருக்க,
“சொன்ன மாதிரியே ஆக்கிட்ட என் ஷர்ட்டை..” என்று அவளை வம்பிழுத்து ஒரு வழி செய்து விட்டான். அதன் பின்னர் அவளோடு ஹோட்டலுக்கு கிளம்ப, “இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடா” என்ற இன்பவள்ளி,
“புடவைலாம் எதுக்குமா. சுடியே போட்டிருக்க வேண்டியது தானே” என்று சொல்ல, “இல்லத்த. இவுங்க திடீர்னு சொன்னதும் கிளம்பினேன். முதல் தடவைல அதான்” என்றவள், “நீங்களும் வாங்களேன்” என்று அழைக்க சர்வேஷ் நன்றாகவே அவளை முறைத்து
“அங்க உன்னை யாரும் கடிச்சு முழுங்கிட மாட்டாங்க. அம்மாவை நல்லா துணைக்கு கூப்பிடுற” என்று பல்லை கடிக்க, “அவனுக்கு பொறாமை கீர்த்தி” என்றவர்,
“அதான் உன் புருஷன் இருக்கானே. அவனே போதும். அங்க போய் இன்னும் இவன் பண்ற அலப்பறை எல்லாம் தெரிஞ்சுகிட்டு வா” என்று அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைத்தார்.