மகனையும் மருமகளையும் ஹோட்டல் அனுப்பி வைத்ததும் இன்பவள்ளி மகளையும் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு சின்ன மகனும் கிளம்பிய பின்னர் கோவிலுக்கு சென்று வரலாம் என ஆயத்தமாக, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
“யாருடா அது? இப்ப தான பிள்ளைங்க எல்லாரும் கிளம்பி போனாங்க” என்று அறையில் இருந்து வந்து போர்டிகோவை எட்டிப் பார்க்க, வளர்மதி இல்லத்து கார் என்றதும் தூக்கி வாரிப் போட்டது அவருக்கு.
“ஆத்தி.. இவ என்ன திடீர்னு வந்து ஆஜர் ஆகுறா? எதுக்கு வந்திருக்கா? அதுவும் அவ மட்டும்?” என்று மனதிற்குள் புலம்பினாலும் நிச்சயம் நல்லெண்ணத்தோடு வந்திருக்க வாய்ப்பில்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டவர்,
செயற்கை புன்னகை ஒன்றினை இதழில் ஒட்ட வைத்துக் கொண்டு “வாங்க அண்ணி” என்று வளர்மதியை வரவேற்றார் இன்பவள்ளி.
முறைத்துக் கொண்டே உள்ளே ஹாலில் வந்து அமர்ந்த வளர்மதி யாரும் இல்லாததை உறுதி படுத்திக் கொண்டு “எங்க அண்ணி? யாரையும் காணோம்?” என்று வீட்டை சுற்றி பார்த்தபடி கேட்க,
இன்பவள்ளி விவரமாய் “எல்லாரும் வெளிய கிளம்பிட்டாங்க அண்ணி. வழக்கம் போல தான்” என்று பட்டுக் கொள்ளாமல் பதில் சொல்லி சிரிக்க,
“ஓ… புதுப் பொண்ணு மாப்பிள்ளையும் போயாச்சா? வந்த நாலு நாள்லயே சர்வாவை மயக்கி ஜோடி போட்டு போய்ட்டாளா உங்க மூத்த மருமக?” என்று குத்தலாக தனது பேச்சை ஆரம்பித்து விட, இன்பவள்ளிக்கு ஒரு நொடி கோபம் வெடுவெடுவென ஏறி விட்டது தலைக்கு!
ஆனாலும், வளர்மதியிடம் வீணாக பேசி அக்கோபத்திற்கு மதிப்பை கொடுக்காமல் “அவன் பொண்டாட்டி.. அவன் கூட்டிட்டு போறான். அதே மாதிரி அவ புருஷன் அவ ஜோடி போட்டு போறா. இதுல என்ன அண்ணி இருக்கு? நாள பின்ன நம்ம ஷாலுக்கு கல்யாணம் பண்ணாலும் இப்படி தான அவளும் அவ வருங்கால புருஷனும் கல்யாணமான புதுசுல ஜோடி போட்டு போவாங்க. தப்பில்லையே?” என்று நெத்தியடியாக சிரிப்பை கடை பிடித்துக் கொண்டு கேட்க,
அதில் வளர்மதியின் முகம் உண்மையாகவே ஆக்ரோஷத்தை காட்டியது. “என்ன அண்ணி? பேச்செல்லாம் பலமா இருக்கு?” என்றவர், “மருமக வந்ததும் பேச்சும் வருதோ என்கிட்ட?” என்று உதட்டை வளைத்து ஏளனமாக கேட்டவர்,
“அவளைப் பாக்க தான் வந்தேன். ஆனா, வீடு தங்காத மருமகளா இருப்பா போலயே? அதுவும் நாலே நாள்ல” என்று வக்கிரமான வார்த்தைகளை கொண்டு தாக்க, இன்பவள்ளியின் முகம் இறுகி விட்டது.
“கல்யாணத்துக்கு வரல. ஆனா, இப்ப என்ன அண்ணி திடீர் பிரவேசம்?” என்று முகத்துக்கு நேராக கேட்ட இன்பவள்ளி, “அதுவும் புதுசா கல்யாணமான ஜோடிய பாக்க வந்திருக்கீங்க வெறும் கைய வீசிட்டு? நீங்க வந்திருக்கதயும் பேசுறதையும் பாத்தா எதுவுமே நல்லது சொல்லி அவுங்கள வாழ்த்த வந்த மாதிரி தெரியலயே?” என்று கூர்மையான பார்வையுடன் கேட்க, வளர்மதி ஒரு நிமிடம் அசைவற்று போனார் இன்பவள்ளியின் இந்த நேரடியான பேச்சில்.
“என்ன வாய் நீளுது” என்று வளர்மதி இன்னும் எகத்தாளம் கலந்த ஆக்ரோஷத்துடன் கேட்க, “வாய் எல்லாம் நீளல அண்ணி. அதே சைஸ்ல தான் இருக்கு. வார்த்தை தான் தெளிவா வருது. எல்லா நேரமும் சிரிச்சிட்டே பதில் சொன்னா உரைக்கிற மாதிரி இருக்காதுல்ல. அதுவும் என் மருமகள பத்தி பேசுனா பேசத்தான் செய்வேன்” என்ற இன்பவள்ளி,
“என்ன விஷயமா வந்திருக்கீங்க நீங்க இங்க?” என்று கைகளை கட்டிக் கொண்டு நேர் பார்வையுடன் கேட்டவர், நீண்ட நெடிய வருடங்கள் கழித்து வளர்மதிக்கு தான் சர்வேஷ்வரனின் அன்னை என நிரூபித்து இருந்தார்!
எத்தனை காலத்திற்கு இன்னும் இப்படி சிரித்து சிரித்து பேச முடியும்? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே? என்று இன்பவள்ளிக்கு தோன்றியது.
அதுவும் “வீடு தங்காத மருமக…” என்று சொன்ன போது வளர்மதி முகத்தில் வந்து போன பாவனை…. இன்பவள்ளியின் பொறுமையையே சீண்டி விட்டிருந்தது.
வளர்மதி ஆடித் தான் போனார் இன்பவள்ளியின் இந்த அவதாரத்தில். எப்போதும் தான் வந்தால் சிரித்து குழைவாக மரியாதையுடன் பேசும் தன் அண்ணன் மனைவி இன்று மருமகளை பற்றி பேசியதும் இப்படி சட்டமாக கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாக பேசிய விதம் ஒரு நிமிடம் வாய் அடைக்க செய்திருந்தது.
“என்ன அண்ணி? ஏன் வந்தன்னு கேக்குற மாதிரி இருக்கு உங்க பேச்சு? என் அண்ணன் வீடு இது? நான் வர யாரைக் கேக்கணும்?” என்றவர் அடிக் குரலில் இருந்து கத்த,
“உன் அண்ணன் வீடு தான் வளர். ஆனா, அண்ணி வீடும் கூட! ரெண்டு பேரையும் நீ பிரிச்சு பேசிறதுல என்ன அர்த்தம்?” என்று பின்னால் கேட்ட அண்ணன் குரலில் தூக்கி வாரிப் போட்டது வளர்மதிக்கு.
வடிவேலன் நிதானமாக வந்து மனைவியின் அருகில் அமர, இன்பவள்ளியிடம் தெரிந்த இறுக்கத்தில் அவருக்கும் கவலையாகிப் போனது.
எப்போதும் கலகலவென வளைய வரும் மனைவி! ஒவ்வொரு முறையும் வீடு வரும் போதெல்லாம் தன் தங்கை என்ன பேசினாலும் முகத்தில் புன்னகை மாறாமல் பேசி சரி கட்டி அவளை அனுப்பி வைக்கும் மனைவி இன்று இறுக்கமும் கோபமுமாக அமர்ந்திருப்பதை கண்டு அவருக்கும் தங்கையின் மேல் அளவு கடந்த அதிருப்தி உண்டானது.
அவரும் அறையில் இருந்த படி அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தானே இருந்தார். அதுவும் புதிதாக மணம் முடித்து வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி அவதூரான விதத்தில் பேசியதோடு மட்டுமின்றி ஏளனமாக மனைவியை பேசிய விதம் வேறு அவரின் பொறுமைக்கும் சோதனையை கொடுத்திருக்க, அதற்கு மேல் பொறுக்காமல் வெளியே வந்து விட்டார்.
சர்வாவிற்கு அந்த வாரம் உடல் நிலை சரியில்லாததாலும், மறு வீடு சென்று வந்ததாலும் அந்த வாரம் முழுக்க வடிவேலன் மற்றும் சதீஷ்வரன் இருவரும் தான் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர்.
ஆகையால், இன்று மகன் சென்றதும் அவர் இல்லத்தில் இருந்து கொள்ள, மனைவி கோவில் செல்லலாம் என்று சொன்னதும் தானும் கிளம்ப ஆயத்தமான நேரம் தான் வளர்மதி வந்தது.
தான் இருக்கும் விஷயத்தை மனைவி சொல்லாத போதே இன்று வளர்மதியின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று மனைவி முடிவு செய்து விட்டதாக புரிந்து கொண்டார் வடிவேலன். எனவே தான் அவரும் வெளியே வரவில்லை.
ஆனால், ஒரு கட்டத்தில் தங்கையின் பேச்சு எல்லையை கடக்கவும் தாங்க முடியாமல் மனைவி பொறுமையை இழுத்து பிடித்து பேசுவதையும் உணர்ந்து வெளியே வந்து விட்டார்.
வளர்மதிக்கு அண்ணனை கண்டதும் உடல் எல்லாம் வியர்த்து விட்டது. கல்யாணத்திற்கு அழைத்தும் வளர்மதி வர எண்ணவில்லை. ஜீவராஜனையும் செல்ல அனுமதிக்கவில்லை.
தன் கோபம் உணர்ந்து அண்ணனும் அண்ணியும் வீடு தேடி வந்து தன்னை சமாதானம் செய்து கெஞ்சி கூத்தாடி திருமணத்திற்கு வா என்று அழைப்பார்கள் என்று அவர் ஒரு புறம் மனதிற்குள் மனக்கோட்டை கட்டி வைத்திருக்க, அவை எல்லாம் மணல் கோட்டையென சரிந்து போனது தான் அந்தோ பரிதாபம்!
பத்திரிக்கை வைத்ததோடு சரி! அதன் பின்னர் அவரைப் பிடித்துக் கொண்டு யாரும் திருமணத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று தொங்கவில்லை. அதிலேயே வளர்மதியின் அகம்பாவமும் இறுமாப்பும் அடி வாங்கி இருந்தது.
திருமணத்தில் அத்தை முறைக்கு நின்று செய்ய வேண்டிய சடங்கினை கூட வேறு ஒரு உறவுக்கார பெண்மணியை வைத்து செய்திருந்தார் இன்பவள்ளி. அதனையும் சொந்த பந்தங்கள் மூலம் அறிந்து கொண்டவருக்கு உள்ளம் கொதிநிலைக்கே சென்று விட்டது.
அத்தனை இளக்காரமாகவா போய் விட்டோம் என்று உள்ளம் காந்தியது. சரி கல்யாணம் முடிந்து வந்த பின்னராவது தன்னை வந்து பார்ப்பார்கள், பேசுவார்கள், சமாதானம் செய்வார்கள் என்று எண்ணி காத்துக் கொண்டிருந்தவருக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பொறுத்து பொறுத்து பார்த்தவர் தானே நேரில் வந்து ஒரு கை பார்த்து விடலாம் என்று தான் ஆவேசமாக கிளம்பி வந்திருந்தார்.
அதுவும் முக்கியமாக அண்ணனும், அண்ணன் பெற்ற பிள்ளைகளும் என யாரும் இல்லாத நேரமாக வருவது தான் அவரின் வழக்கம்.
இன்றும் அப்படியே தான் வந்திருந்தார். அப்படி வந்தால் தான் அண்ணியும் சர்வேஷின் மனைவியும் மட்டும் இருப்பார்கள். தான் இஷ்டத்திற்கு பேசி விட்டுச் செல்லலாம்! புதிதாக வந்திருப்பவளிடம் தன் டாம்பீகத்தையும் அதிகாரத்தையும் காட்டலாம் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் வந்தவருக்கு அண்ணனின் இருப்பு பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்தது.
யாரும் இருக்க மாட்டார்கள் என்று தானே பத்து மணிக்கு மேல் வந்தோம்? இங்கே வந்து பார்த்தால் அண்ணன் இருப்பதை கண்டு அத்தனை படபடப்பு. அதையும் இன்பவள்ளி தன்னிடம் சாதுர்யமாக மறைத்ததை எண்ணி இன்னுமே ஆவேசம் வந்தது.
அண்ணனின் முகம் பார்த்து அதனை கட்டுப் படுத்திக் கொண்டவர், “நீங்களும் அண்ணி பேச்சை கேட்டு இப்படி பேசுறீங்களா அண்ணா? அப்படி என்ன இருக்கு இந்த வீட்டுக்கு வந்தவ கிட்ட? என் பொண்ண விட அவ என்ன பெருசு…” என்று சட்டென்று பூத்த கண்ணீருடன் கேட்க,
“அழுக வேண்டாம் வளர். விஷேச வீட்டு கலை இன்னும் இந்த வீட்ல இருந்து போகல. நீ வீடு தேடி வந்து இப்படி கண்ணீர் வடிச்சு அதோட சுவடை போக்க வேணாம். நீ பேசினது நானும் கேட்டுட்டு தான இருந்தேன்? முகம் சுளிக்க வைக்கிற மாதிரி இருக்கு உன் பேச்சு” என்று கோபத்தில் கடுகடுத்தவர்,
“நீ தரகுறைவா பேசுனது எங்களோட வீட்டு மருமகள பத்தி! சர்வாவோட மனைவி பத்தி! அதைக் கேட்டு எப்படி சும்மா இருக்க முடியும்? வள்ளி பேசுனதுல எந்த தப்பும் இல்ல” என்றவர்,
“சர்வா இருந்திருந்தா இந்நேரம் நடக்கிறதே வேற! தயவு செஞ்சு இனிமேல் இப்படி வக்கிரமான எண்ணத்தோட வரதா இருந்தா இங்க நீ வரவே வேணாம்” என்று முடிவாக சொல்லி விட்டவர்,
“அன்னைக்கு என் மகன் சொன்னான்.. உங்க அதிகாரத்தைக் காட்டுறதா இருந்தா அது என்கிட்ட வேணாம். உங்க உறவு என் அப்பாவோட மட்டும் இருந்திட்டு போகுதுன்னு. இன்னைக்கு நான் சொல்றேன். இன்னும் ஒரு தரம் இப்படி எங்க வீட்டு படியேறி வந்து கீர்த்தன்யா பத்தி இப்படி பேசுறதா இருந்தா அந்த உறவு எனக்கும் வேண்டாம்! என் பிள்ளைங்க சந்தோஷத்தை விட வேற எதுவும் அவ்ளோ பெருசு இல்ல எனக்கு” என்று விட்டார் உறுதியாக.
முகத்தில் அறை வாங்கிய உணர்வு வளர்மதிக்கு. அதுவும் அண்ணனே இப்படி பேசியது அவமானமாக போய் விட, “நான் ஏன் இனி இங்க வரப் போறேன்!” என்று ஆவேசமாக எழுந்து கொண்டவர்,
“நீங்க வேணும்னா பாருங்க. என் மகளுக்கு உங்களை விட நல்ல பெரிய இடமா, அந்தஸ்தான குடும்பமா, சர்வாவை விட ஒரு படி மேலே ஜம்முனு ஒரு மாப்பிள்ளையை பாத்து கட்டி வைப்பேன்” என்று சபதம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவர் சென்ற பின்னர் கணவனும் மனைவியும் இறுக்கம் தளர்ந்து பெரு மூச்சை விட்டுக் கொள்ள, இன்பவள்ளியின் முகம் கலங்கிப் போனது.
“நான் கொஞ்சம் எப்பவும் போல பேசி இருக்கணுமோ?” என்று கவலையுடன் கணவனிடம் சொல்ல,
“இல்ல வள்ளி… இனி வளர்மதி பேச்சு இப்படியே இருந்தா அது நல்லதுக்கில்ல. சர்வாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினை தான்” என்றவர்,
“நீயும் எத்தனை நாள் தான் பொறுமையா இருப்ப? விடு. இனி வளர்மதி நம்ம கூட ஒட்டலேன்னா அதுக்கு முழு காரணமும் அவ தான். நாம இல்ல” என்று மனைவியை தேற்றி,
“கிளம்பு கோவிலுக்கு போகணும்னு சொன்ன தான” என்றபடி அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இங்கே வீட்டில் இத்தனை அக்கப்போர் நடந்திருக்க, தன்னை பற்றி ஒரு ஜீவன் வந்து பேசி விட்டுப் போனதனை எல்லாம் அறியாத கீர்த்தன்யாவோ கணவனுடன் ஹோட்டலில் சென்று இன்னுமே அவனைப் பற்றி அறிந்து கொண்டிருந்தாள்.