“வடிவேலன் குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி” என்ற பெயரை தாங்கி இருந்த கட்டிடத்தின் பிரம்மாண்டத்தை கண்டு கண்களை அகல விரித்தாள் கீர்த்தன்யா.
“இவளோ பெரிய ஹோட்டலா உங்களோடது” என்று பிரம்மிப்புடன் கணவனிடம் கேட்க, பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தியவன் தனது சீட் பெல்ட்டினை கழற்றியபடி “நம்மளோடது” என்று திருத்தினான்.
“ஹ்ம்ம்…” என்று நாக்கை கடித்துக் கொண்டவள், “இப்ப தான பாக்குறேன். கொஞ்சம் பழகனும்ல” என்று சொன்னபடி அவனுடன் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்த நொடியில் இருந்து பணியாளர்கள் ஒவ்வொருவரும் பணிவாக அவனுக்கு மரியாதையுடன் வணக்கம் வைத்தபடி அவளுக்கும் அதே மரியாதையை கொடுத்து வாழ்த்துக்களும் தெரிவிக்க, அந்த சூழலை பதட்டத்தோடும் சின்ன தயக்கத்தோடும் ஏற்றுக் கொண்டவள் கணவனோடு தன்னை இருத்திக் கொண்டாள்.
அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தவன் அவர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டு தனதறைக்கு அவளை அழைத்து வந்தான்.
உள்ளே வந்த நொடியில் இருந்து இந்த நொடி வரை பிரம்மிப்பு தான் கீர்த்தன்யாவிற்கு. அவனின் அறையை நின்றபடி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளை சுவாரஸ்யமாய் நெருங்கியவன்,
“வந்து உக்காரு கீர்த்து..” என்றபடி அவளை பின்னிருந்து கட்டிக் கொள்ள, அவன் செயலில் சட்டென்று அவனிடம் இருந்து வேகமாக விலகியவளை என்ன என்பது போல் பார்க்க,
“கட்டிக்கிட்டு உக்காருன்னா…” என்று சிணுங்கியபடி அங்கு போடப் பட்டிருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தாள். தானும் உடன் சென்று அமர்ந்தவன்,
“என்ன சாப்பிடுற நீ?” என்று கேட்க, “இப்ப தான் சாப்பிட்டு வந்தோம்” என்று மறுத்தவள், “கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றபடி மீண்டும் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
நடுநாயகமாக வடிவேலனின் புகைப்படம் இருக்க, அடுத்து சர்வேஷின் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்கள் உணவு சார்ந்தவையாகவும், அவர்களின் ரெஸ்டாரன்ட் பெயரை தாங்கிய புகைப் படங்களும் என வரிசையாய் இருந்தது.
கூடவே, சர்வேஷின் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவின் போது எடுத்த புகைப்படமும் இருக்க அதனை ஆவென பார்த்தவள் “நீங்களா இது?” என்று கேட்க,
“பின்ன நான் இல்லாம? வேற யாராம்?” என்று புன்னகை செய்தவன், “சீக்கிரம் ரூமை சுத்தி பாத்து முடி. ஹோட்டல ஒரு விசிட் போய்ட்டு வந்திடலாம்” என்றான் அவளிடம்.
அப்போது அறைக் கதவு தட்டப்பட “உள்ள வா சதீஷ்” என்றான் இங்கிருந்தே. சதீஷும் உள்ளே வர, “சதீஷ்னு எப்படிங்க கரக்ட்டா சொன்னீங்க?” என்று கீர்த்தன்யா ஆச்சர்ய பாவனையுடன் கேட்க, கண் சிமிட்டி புன்னகை செய்தான் சர்வேஷ்.
“அதெல்லாம் தட்டுற ஸ்டைல் வச்சு சொல்லிடுவாங்க அண்ணா” என்ற சதீஷ், “வெல்கம் அண்ணி” என்று அவளிடம் ஒரு பூங்கொத்தை நீட்டி,
“ஹப்பா… அண்ணன் ரூம்குள்ள அம்மா, வர்ஷி தவிர்த்து எந்த லேடீசும் வந்தது இல்ல. புரோஃபெஷனல்லி ஸ்டாஃப்ஸ் வருவாங்க. அதை தவிர்த்து இன்னைக்கு தான் உங்க விஜயம்!” என்று புன்னகைத்தவன்,
“ஜோடியா பாக்க எவளோ நல்லா இருக்கு தெரியுமா? அதுவும் அதிசயமா அண்ணன் மூஞ்சில பிரகாசமான பல்ப் இன்னைக்கு தான் எரியுது” என்று கிண்டலுடன் சொல்ல, “டேய் போதும்டா..” என்றான் சர்வேஷ்வரன் தம்பி செய்த அலப்பறையில்.
“அண்ணா யூ பீ சைலண்ட்..” என்றவன் அவன் முறைப்பதை பொருட்படுத்தாமல் “நீங்களே சொல்லுங்க அண்ணி! எந்நேரம் பாத்தாலும் அலர்ட் ஆறுமுகம் மோட்ல இருந்தா என்ன செய்ய முடியும்? மனுஷன் புடிச்ச புள்ளையார் கணக்கா இருப்பாரு” என்றவன் சட்டென்று சிரித்து,
“நானும் இன்பூ டார்லியும் புடிச்ச பிள்ளையார், இடிச்ச புளி.. இப்படி ரக ரகமா பேர் வச்சிருக்கோம்னு தெரிஞ்சும் அசர மாட்டாறே” என்க, அவன் சொல்லச்சொல்லல கீர்த்தன்யாவிடம் அப்படி ஒரு புன்னகை.
அப்பப்பா…. உள்ளே வந்ததில் இருந்து பாய்ந்தோடும் வெள்ளமாய் சலசலத்து பேசிய சதீஷ்வரனை கண்டு வியப்பு தான் அவளுக்கு.
அதை சரியாக உணர்ந்து கொண்ட சர்வேஷோ “அவனுக்கு வாய் வலிக்கவே செய்யாது கீர்த்தி. விட்டா மேடை பேச்சாளர் ஆகிடுவான்” என்று தம்பிக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, “அண்ணனென்ன தம்பியென்ன???” என்று அதற்கும் அவன் ஆரம்பித்து விட,
“டேய்… முடியலடா! முதல் நாளே உன் அண்ணிய ஓட வச்சிடாத” என்றான் தம்பியின் அட்டகாசம் தாங்க முடியாமல்.
“ஏன்…? அதெல்லாம் ஓட மாட்டேன். எவ்ளோ கலகலன்னு இருக்கு தெரியுமா? எங்க வீட்ல எல்லாம் இப்படி இருக்க முடியாது. அப்பா, பெரியப்பா இல்லாத நேரம் தான் இப்படிலாம். அதுவும் இந்த அளவுக்கு சிரிச்சு பேசி கலகலன்னு எல்லாம் இருக்க மாட்டோம். நீங்க சொன்னீங்கல்ல.. அலர்ட் ஆறுமுகம் மோட் தான் எப்பவும். எப்ப வேணாலும் அப்பா பெரியப்பா வந்திடுவாங்கன்னு பயந்து பயந்து இருப்போம்” என்றவள்,
“நான் இங்க வந்ததுல இருந்து வீடே ஜேஜேன்னு இருக்கு காலைல இருந்து. அதுவும் அத்த, வர்ஷி, சதீஷ் மூணு பேரும் சேர்ந்தாங்கன்னா அப்பப்பா அரட்டைக்கு பஞ்சமே இல்ல. எவ்ளோ ஜாலியா இருக்கு வீடு” என்றவள் தன்னை மறந்து சொல்லிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவருக்குமே மனம் கனத்து போனது!
சாதாரண சிரிப்பு பேச்சிற்கு கூடவா அவர்கள் வீட்டில் கெடுபிடி என்றும் தோன்றி விட, அவள் சொல்வதை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அமைதியை உணர்ந்ததும் தான் கீர்த்தன்யா தான் சொன்னவைகளை உணர்ந்தாள். மெல்ல விரலால் நெற்றியை தட்டிக் கொண்டு “அது… ஒரு ஃப்ளோல… கண்டன் நம்பர் ஒன், நம்பர் டூ பத்தி வந்திட்டு…” என்று சங்கடமும் அசட்டு சிரிப்புமாய் சொல்ல,
“கண்டன் நம்பர் ஒன், டூவா… அது என்ன அண்ணி?” என்று சதீஷ் தீவிர ஆர்வத்துடன் கேட்க, சட்டென்று சிரித்த கீர்த்தன்யா “எங்க அப்பா, பெரியப்பா பேரை தான் சுருக்கி இப்படி வச்சிட்டேன். நீல”கண்டன்” ப்ளஸ் மணி”கண்டன்” இஸ் ஈக்குவல் டூ கண்டன் நம்பர் ஒன் அண்ட் டூ” என்று பாவனையாக அவள் சொல்லிய விதத்தில் சதீஷுடன் சேர்த்து தானும் குபீரென்று சிரித்து விட்டான் சர்வேஷ்வரன்.
அவர்கள் சிரிப்பில் தானும் இணைந்தவள் கணவனின் சிரிப்பை ரசித்தபடி தொலைந்து தான் போனாள். தன்னை ரசிக்கும் மனைவியின் பார்வையை உணராதவனா அவன்? தம்பியின் கவனம் கவராமல் அவளை நோக்கி கண்ணை சிமிட்டியவன் பேரழகனாக தான் தெரிந்தான் அவளின் கண்களுக்கு!
“அவுங்களுக்கு இது தெரியுமா?” என்று சதீஷ் கேட்டது தான் தாமதம்! “ஆத்தி…” என்று நெஞ்சில் கை வைத்தவள் “அதெல்லாம் தெரியாது சதீஷ். சொல்லிடாதீங்க” சட்டென்று சூழ்ந்து விட்ட படபடப்புடன் அவள் திகைத்து போக,
அவள் படபடப்பில் இருவரின் புன்னகையும் சற்று அடங்கியது. “அண்ணி ரிலாக்ஸ்… யாரு சொல்லப் போறா இப்ப? சொன்னாலும் அண்ணனை மீறி உங்க கண்டன் டாடீஸ் எதாவது சொல்லிட முடியுமா என்ன?” என்று அண்ணனை பெருமையாக பார்த்தபடி சொன்னவன்,
“உங்களுக்கு தெரியுமா? உங்க பெரியப்பா அண்ணா கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் வர விஷயம் தெரிஞ்சு பேசினாரு. செம பல்ப் வாங்கினது தான் மிச்சம்” என்று சொல்லி சிரிக்க கணவனை கண்கள் விரிய பார்த்தவள்,
“அப்படியா?” என்று கேட்க, சுருக்கமாக நடந்ததை சொன்னவன், “அப்புறம் உங்க பெரியப்பா பேசவே இல்ல” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
அதில் கணவனை முறைத்தவள் “உங்க கிட்ட யாரு தான் பேச முடியும்? ஒரு வகைல நீங்களும் கண்டன் நம்பர் த்ரீ தான்” என்று கீர்த்தன்யா பட்டென்று சொல்லி விட,
வெடித்து சிரித்த சதீஷ்வரன் “அண்ணி.. சேன்ஸே இல்ல! பால் (Ball) இல்லாமையே சிக்ஸர் அடிச்சிட்டீங்க போங்க.. ஐயோ இந்த தரமான சம்பவத்தை இன்பூ டார்லி கிட்ட சொல்லியே ஆகணும். இன்பூ டார்லி குஷியோ குஷி ஆகிடுவாங்க” என்றவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு சிரிப்புடன் வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும் சர்வேஷின் பார்வை முறைப்புடன் அவள் மேல் விழ, “அச்சோ” என்றவள், “தெரியாம சொல்லிட்டேன்” என்றாள் பாவம் போல்!
அவள் பாவனையில் பார்வை மாற்றம் பெற இருந்தாலும் முயன்று கட்டுப் படுத்திக் கொண்டு “நான் கண்டன் நம்பர் த்ரீயா உனக்கு?” என்று மூக்கை விடைத்துக் கொண்டு கேட்டவன், “அதென்னடி எனக்கும் கண்டன்னு பேர் வைக்குற. என் பேர் சர்வேஷ்வரன் தான! சர்வகண்டன் இல்லையே?” என்று வேறு அவனே எடுத்துக் கொடுக்க, அவன் சொன்ன விதத்தில் குபீர் சிரிப்பு தான் அவளிடம்.
“ஹையோ சூப்பருங்க நீங்க. சர்வகண்டன்.. இது கூட நல்லா இருக்கே.. ச்சே இப்ப சதீஷ் இல்லையே. இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்” என்று குழந்தையாய் குதூகளித்து சிரித்தவளின் புன்னகையில் முற்றிலும் தன்னை இழந்தவன், அவளோடு அவளின் புன்னகையையும் மொத்தமாய் தனக்குள் அள்ளிக் கொண்டான்.
சில நொடிகள் அறைக்குள் வெப்பம் சூழ்ந்து கொள்ள, இதழாடலின் விளைவாக இருவரின் மூச்சுக் காற்றும் சீரற்ற முறையில் அறைக்குள் வளம் வந்தது.
“யாரும் வந்திட போறாங்க…” என்று கணவனின் மார்பில் சாய்ந்து இளைப்பாறிய படி சொன்னவளிடம் “பர்மிஷன் இல்லாம யாரும் வர மாட்டாங்க கீர்த்து..” என்றான் கிறக்கம் விலகாத குரலில்!
மேலும் முன்னேறிய கணவனின் கைகளை தடுத்தபடி “ஹோட்டல் விசிட் போகலாம்னு சொன்னீங்க?” என்று திசைமாற்ற முயல, “விவரம்டி நீ!” என்று கொஞ்சிக் கொண்டவன், அவள் நாடியை பற்றி தன் முகம் காண வைத்து,
“உண்மையாவே சொல்லு. நான் கண்டன் நம்பர் த்ரீயா?” என்று தீவிரமாக கேட்க, அதில் குறும்பாய் புன்னகைத்து “த்ரீன்னு சொல்லிட முடியாது! வேணும்னா டூ அண்ட் ஹால்ஃப்னு சொல்லலாம்” என்று சிரிக்க,
அவள் சிரிப்பில் கரைந்து நெற்றியோடு நெற்றி முட்டியவன், “சேட்ட புடிச்ச செல்ல பொண்டாட்டி!” என்று அவளை கொஞ்சிக் கொண்டவன் “வா போகலாம்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு ஹோட்டலை சுற்றி காண்பிக்க சென்றான்.
மேலே உணவு தயார் செய்யும் குக்கிங் ஸ்பாட்டிற்கு சென்றதும் அனைவரும் அவனிடம் சிறு பயத்தோடும் மரியாதையோடும் நடந்து கொள்ள, “அப்பப்பா.. எல்லோரையும் பார்வையால் ஆட்டி தான் வைத்திருப்பான் போலும்” என்றிருந்தது கீர்த்தன்யாவிற்கு.
தன்னையும் பார்வையால் தான் ஆட்டி வைத்துள்ளான்! ஆனால், அப்பார்வையின் பொருளும் உணர்வும் தான் வேறு என்று அறிந்ததும் மனதோரம் மார்கழியின் குளுமை!
அவள் போக்கில் கணவனை பற்றி எண்ணி மெல்ல சிரித்துக் கொண்டவளிடம் வந்தார் கலைவாணன்!
“என்னமா? எங்க பையன் என்ன சொல்றார்? நல்லா பாத்துக்குறாரா உன்னை?” என்று கேட்டபடி வர, அவரின் பேச்சில் சுயம் பெற்றவள் “ஹான்.. நல்லா பாத்துக்குறாங்க அங்கிள்” என்றாள்.
திருமணத்தின் போதே கலைவாணன் வந்திருந்தமையால் அவர் நன்கு பரிச்சயம் தான் கீர்த்தன்யாவிற்கு.
“பாத்துக்கலேன்னா சொல்லு.. தட்டி வைக்கலாம்” என்று சர்வேஷின் தோளில் தட்டியபடி சொல்ல, “உங்களால இப்படி அண்ணா தோள்ல தான் தட்ட முடியும் கலை அங்கிள்” என்று வந்த சதீஷின் கைகளில் இரண்டு வெள்ளை நிற பீங்கான் கின்னங்கள் இருந்தன.
அவனின் பின்னே ஒரு செஃப் வந்து நின்று பவ்யமாக சர்வேஷிற்கும் கீர்த்தன்யாவிற்கும் வணக்கம் வைத்தான்.
“அண்ணி இவரு தான் நம்ம துக்டா செஃப்” என்று சதீஷ் சிறு கேலியுடன் அவனை அறிமுகம் செய்து வைக்க, அவன் சொன்ன பெயரில் கலைவாணன் சபரிநாதனை பார்த்து சிரித்து வைத்தார் என்றால் கீர்த்தன்யா புரியாத சிரிப்புடன் பார்த்தாள்.
“இந்தாங்க முதல்ல இந்த குலாப் ஜாமுனை பிடிங்க” என்றபடி அவள் கைகளில் கின்னத்தை கொடுத்து, “சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றவன் மற்றொன்றை அண்ணனிடம் நீட்டினான்.
“ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க அண்ணி. அதான் ஸ்வீட். இல்லேன்னா காரம் தான்” என்று அண்ணனை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னவன்,
“அண்ணா.. நீங்களும் குலாப் ஜாமூன் சாப்பிடுங்க” என்று வேறு சொல்ல, கையில் இருந்த பீங்கான் கின்னத்தை ஒரு பார்வை பார்த்தவன் தம்பியை முறைக்க,
“சும்மாவே மனுஷன் காய்ச்சுவார்! இதுல தம்பிகாரன் வேற ஏத்து ஏத்துன்னு ஏத்தி விடுறாப்புல” என்று எண்ணிய சபரிக்கோ உண்டு விட்டு தன் முதலாளி என்ன சொல்ல போகிறாரோ என்று சற்றே படபடப்பாகவும் இருந்தது.
பின்னே, சதீஷின் கட்டளையின் பேரில் இனிப்பை சற்று தூக்கலாக அல்லவா போட்டிருந்தான் குலாப் ஜாமூனில்!
உண்டு விட்டு கீர்த்தன்யா கண்களை மூடி அதன் சுவையில் லயித்து “வாவ்.. செம ஸ்வீட் அண்ட் டேஸ்ட்டி!” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, அதே சமயம் முகத்தை சுழித்து “ஓவர் ஸ்வீட்!” என்றான் சர்வேஷ்வரன்.
சபரிநாதன் பாவமாய் இருவரையும் மாறி மாறி பார்த்தான். யார் சொல்வதை எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு குழப்பம் தான் மிஞ்சியது.
முதலாளியின் மனைவி சொல்வதை ஏற்றுக் கொண்டு புன்னகையுடன் தலை அசைத்து “தேங்க்ஸ் மேடம்” என்று சொல்ல ஆசை தான்! ஆனால், அவள் கணவன் அதற்கும் சேர்த்து வறுத்து எடுத்து விட்டால்…. என்று தோன்றிய நேரம் ‘ஆணியே புடுங்க வேணாம். தேமேன்னு நிப்போம்’ என்றபடி பாவமாய் நின்று விட்டான்.
கணவன் சொன்னதை கேட்டு அவன் பக்கம் திரும்பியவள் “நல்லா ஜீராவோட தித்திப்பா தானேங்க இருக்கு” என்று கீர்த்தன்யா கேட்க,
“அண்ணி அதான் பிரச்சனையே… அண்ணாக்கு இனிப்பு அதிகமா இருந்தா காரம் பத்திக்கும்” என்று சொல்ல, அவளுக்கு அப்போது தான் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நிற்கும் செஃப்பின் நிலை புரிந்தது.
இனிப்பு விவகாரத்தில் முன்பே கணவனிடம் வாங்கிக் கட்டி இருப்பான் போல என்று எண்ணியவள் “ஸ்வீட் பிடிக்காதா?” என்று கணவனிடம் கேட்க, அவள் கேட்டதற்காக “பிடிக்கும் பிடிக்கும்!” என்று தொண்டையை செருமிக் கொண்டு சொன்னவன்,
“அதுக்குன்னு இப்படி ஓவர் சுவீட்டா இருந்தா எப்படி?” என்று சபரியை ஒரு லுக் விட, அதில் அரண்டே போனவன் “சார் சார்.. நான் ஜீரால சுகர் கம்மியா தான் ஆட் பண்ணலாம்னு இருந்தேன். சதீஷ் சார் தான்! மேடம் வராங்க. இனிப்பு தூக்கலா போடு மேன்னு சொல்லிட்டு போனாரு. என் ஃபால்ட் இல்ல சார்” என்று அலறியே விட, அனைவருக்குமே புன்னகை தான்.
கீர்த்தன்யா அவனிடம் “உண்மையாவே நல்லா இருக்கு நீங்க பண்ணது” என்று அவனுக்கு பாராட்டினை வழங்கியவள், அவன் கணவனிடம் பயந்து போய் முழிப்பதை கண்டு,
“என்னங்க.. விடுங்களேன். பாருங்க அவருக்கு எப்படி வேர்த்து போச்சுன்னு” என்றாள் கணவனிடம்.
“நல்லா தான் இருக்கு சபரி” என்று அதிசயமாய் அவனிடம் பாராட்டாய் சொன்னாலும் “ஆர்டர் வரும் போதெல்லாம் இப்படி பண்ணாதீங்க” என்று சொல்லி விட்டே அனுப்ப, கலைவாணனும் சதீஷும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவனைப் பார்த்து வைத்தார்கள்.
மாலை வரை அங்கேயே நேரம் செல்ல கணவனின் தொழில் ரீதியான பரிமாணத்தை கண்டு வியந்து பிரம்மித்து மகிழ்ந்து மற்றும் சலித்து என கொண்டவனின் அனைத்து அவதாரங்களையும் ஓரளவு அறிந்து கொண்டாள் கீர்த்தன்யா.
இல்லம் வந்ததும் அன்றைய நிகழ்வுகள் மொத்தமும் சக்ரவர்ஷினியிடமும் இன்பவள்ளியிடமும் சிறு பிள்ளையென கதையாக சொல்லியவள், “உங்க பையன் அங்க அப்படியே வேற ரகம் தான் அத்தை” என்று சொல்லிக் கொண்டே போனாள்.
அனைத்தையும் புன்னகையுடன் கேட்டாலும் இன்பவள்ளியிடம் ஏதோ ஒன்று குறைந்தது. அதை கீர்த்தன்யாவே உணர அவர் பெற்ற மகன்கள் உணராமல் இருப்பார்களா?
“என்ன இன்பூ டார்லி…. மூஞ்சில மஞ்ச பல்ப் எரியுது. ஏன்? பிலிப்ஸ் பல்புக்கு என்ன ஆச்சு?” என்றபடி அவரின் அருகே அமர்ந்து கேட்க, “பிலிப்ஸ் பள்புக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் ஒன்னுமில்லடா..” என்றார் சமாளிப்பாக.
ஆனாலும், உள்ளுக்குள் வளர்மதி இன்று வந்து பேசி விட்டுப் போனதன் தாக்கம் முகத்தில் அப்படியே தெரிந்தது. மருமகள் வந்து ஆசை ஆசையாக அனைத்தையும் சொல்ல தொடங்கியதும் அவளுக்காக தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள முயன்றார்.
ஆனாலும், சதீஷ் கேட்டு விட, சர்வேஷ் அழுத்தமாய் அவரை பார்த்த பார்வையிலேயே எங்கே அனைத்தையும் சொல்லி விடுவோமோ என்று பயந்து போனார்.
“டயர்டா இருக்கும். போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நான் எதாவது சாப்பிட செஞ்சு எடுத்திட்டு வரேன்” என்று சொல்லி விட்டு எழ,
“யாருமா வீட்டுக்கு வந்தா?” என்று சர்வேஷின் குரலில் இன்பவள்ளியின் நடை அப்படியே நின்று போனது. வடிவேலன் பெரு மூச்சுடன் மனைவியை பார்க்க, இனி மகன் அனைத்தையும் அறிந்து கொள்ளாமல் விட மாட்டான் என்று அப்போதே புரிந்து போனது அவருக்கு.
“அதெல்லாம் யாருடா வரப் போறா. நானும் அப்பாவும் தான் கோவில் போய்ட்டு வந்தோம்” என்றவர் அவன் முகம் பார்க்காமல் தடுமாறி பதில் சொல்லி விட்டு அடுக்களை பக்கம் நகர, “இந்திராக்கா” என்றவனின் அழைப்பில் அடித்து பிடித்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றார் இந்திரா.
இன்பவள்ளி பார்வையாலேயே இந்திராவை எச்சரிக்க, “இன்னைக்கு யாரும் வீட்டுக்கு வாந்தாங்களா?” என்று கேட்டு முடிக்கும் முன்னரே இந்திராவின் தலை வேக வேகமாக ஆம் என்ற ஆடியது மட்டுமில்லாமல், “உங்க அத்தை வளர்மதி வந்திருந்தாங்க தம்பி” என்று வேறு சொல்லி முடித்திருக்க சர்வவேஷின் பார்வை கூர்மையுடன் அன்னையிடம் படிந்து தந்தையிடம் வந்து முடிந்தது.