சர்வேஷ்வரன் மற்றும் கீர்த்தன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கோயம்புத்தூரில் அவர்களின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலேயே அரங்கேறியது.
திருமணத்திற்கு வந்திராத சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில் வட்ட ஆட்கள் என எல்லோரும் ரிசப்ஷனிற்கு வருகை தந்திருந்தனர்.
மேடையில் நடுநாயகமாக இருவரும் அசத்தலான உடைகளில் அழகாக அனைவரின் கண்ணையும் நிறைத்திருக்க, இருவரின் ஜோடிப் பொருத்தமும் பார்க்கவே மனதை அள்ளியது.
மனம் நிறைந்த சந்தோஷம் அவர்களின் முகத்தில் அழகான புன்னகையை கொடுத்திருக்க அவர்கள் குடும்பமே அவர்களை பார்த்துப்பார்த்து பூரித்து போனார்கள்.
அதுவும் நீலகண்டன் கீர்த்தன்யா முகத்தில் இருந்த அளவில்லா ஆனந்தத்தை வைத்தே புகுந்த வீட்டில் அவளின் மகிழ்வான வாழ்வை பற்றி புரிந்து கொண்டார்.
தம்பியிடமும் “மணி… கீர்த்தி மவ நல்ல இடத்தில வாக்கப் பட்டு போய் இருக்காடா! அங்க பாரு புள்ள மூஞ்சில இருக்க சந்தோஷத்தை” என்று கண்ணில் மெல்லிய நீர் படலத்துடன் சொன்னவர்,
“வீட்டுக்கு போனதும் சுத்தி போட சொல்லணும். நம்ம புள்ள மேல நானே கண்ணு வைக்கிறேன்” என்று வேறு சொல்லிக் கொள்ள, மணிகண்டனுக்கும் அதே நிலை தான்!
மகளின் பூரித்த முகமும், அகத்தின் நிறைவு முகத்தில் படர புன்னகையுடன் நின்றிருந்த விதமும், மாப்பிள்ளையின் முகம் காணும் போதெல்லாம் அவள் முகம் காட்டும் பிரியங்களும் என அவர்களின் சந்தோஷமான இல்லற வாழ்வை புரிந்து கொண்டவர், மருதமலை முருகனுக்கு மனதார நன்றி கூறிக் கொண்டார்.
“தானா வீடு தேடி வந்த சம்மந்தம். பெரிய இடம். பிள்ள எப்படிப் போய் சமாளிப்பாளோ அப்படி இப்படின்னு ரொம்ப பயந்தேன் ண்ணா. ஆனா புள்ள முகத்துல தெரியுற சந்தோஷம் பாத்து இப்ப மனசு நிறைஞ்சு போச்சு” என்றவர்,
“இனி என்ன வேணும்? சம்மந்தி அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரி. பிள்ளங்களையும் அருமையா வளத்து இருக்காங்க. நல்ல குடும்பம்” என்றவர், “இனி கீர்த்தி வாழ்க்கையை பத்தின பயம் கொஞ்சமும் எனக்கு இல்ல அண்ணா” என்றார் நெகிழ்வான குரலில்.
மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்தனர். அன்றைய நாளின் சந்தோஷம் அனைவரின் முகத்திலும் அழகாய் தெரிய, குடும்ப புகைப்படம் எடுக்கும் போது அனைவரின் முகத்திலும் பிரகாசம் தான்!
அதுவும் கீர்த்தன்யாவின் குடும்பத்துடன் மட்டும் தனியே நின்று புகைப்படம் எடுக்கும் போது அவர்கள் அனைவரையும் ஒரே ஃபிரேமிற்குள் கொண்டு வருவதற்குள் புகைப்படக் கலைஞர் அசந்து தான் போனார்.
அதன் பின்னர் சர்வேஷ் மற்றும் கீர்த்தன்யாவை மட்டும் தனியே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஹோட்டலின் டரேஸ் பகுதிக்கு அழைத்து வந்து விட்டனர் புகைப்பட குழுவினர்.
ஹோட்டலின் மேல் மாடியில் சின்னதாக கார்டன் பகுதி இருக்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அவ்விடம். இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த இடம் கொள்ளை கொண்டது மனதை.
பார்த்ததும் கீர்த்தன்யாவின் முகத்திலும் அவ்வெளிச்சம் பொட்டாக பட்டுப் படர்ந்தது. “அழகா இருக்கு சர்வா” என்று கணவனிடமும் சொன்னவள், கார்டனின் நடுவே ஊஞ்சல் ஒன்றும் இருப்பதனை கண்டு “அச்சோ… இந்த ஊஞ்சல் அவ்ளோ அழகு” என்றாள் முகம் மலர்ந்து.
மனைவியின் ஒவ்வொரு அசைவிற்கும் உள்ளம் உருகித் தான் போனான் அவள் கணவன். இருவரையும் நிற்க வைத்து அழகழகாக புகைப் படம் எடுத்தவர்கள் இறுதியாக ஊஞ்சலில் அவளை அமரச் சொல்லி, பின்னிருந்து சர்வேஷை அவள் கழுத்தோடு கையிட்டு அணைவாக நிற்க சொல்ல அற்புதமாய் வந்திருந்தது அந்த புகைப்படம்.
மகிழ்விற்கு குறைவில்லாத நொடிகள் தான் அவை எல்லாம். இருவரிடமும் புகைப்படத்தை கேமராவில் காண்பிக்க, பார்த்ததும் இருவருக்குமே அத்தனை பிடித்துப் போனது அதனை!
“பெர்பெக்ட் பிக்சர்” என்று பாராட்டி “இதை வால் சைஸ் ஃப்ரேம்கு செலக்ட் பண்ணிடுங்க” என்றவன், மனைவியை மட்டும் தனியே ஊஞ்சலில் அமர வைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னான்!
மெஜந்தா நிற வண்ணத்தில் கற்கள் வேலைப்பாடுகள் கலந்த அந்த லெஹங்கா கீர்த்தன்யாவிற்கு பாந்தமாய் பொருந்தி இருக்க அத்தனை அழகாய் பொழிவாய் இருந்தவளை காணக்காண மனமெங்கும் இன்பச் சாரல் தான் அவனுக்கு!
அவர்களும் அவன் சொன்னது போலவே எடுத்துக் காண்பிக்க, அதுவும் அவன் மனதைப் பறித்தது. ஒரு வழியாக அனைத்தும் முடிந்து அவர்கள் கிளம்ப, ஊஞ்சலில் சென்று அமர்ந்தவன் முகம் மெல்லிய களைப்பை காட்டியது.
“டயர்ட் ஆகிட்டிங்க நீங்க” என்றவள் அவனை நெருங்க, கை நீட்டி அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன், “கொஞ்சம்…” என்றபடி அவள் முகத்தையே விடாமல் பார்க்க, அவன் பார்வைகள் தந்த தாக்கத்தை தாள முடியவில்லை அவளால்!
“கார்ஜியஷ் கீர்த்துமா நீ” என்றபடி இன்னுமே ரசித்தான் மனைவியை. “அப்பப்பா என்ன பார்வை இது? என்னால முடியல” என்றபடி அவன் கழுத்தில் தன் முகத்தை மறைத்துக் கொள்ள,
“என்னைப் பார்த்து இன்னுமென்ன வெட்கம்?” என்று கேட்டு மேலும் மேலும் தன் செயலால் அவளை வெட்கம் கொள்ள வைக்க, நாணங்கள் எல்லாம் நேசங்களின் செயலில் மறைந்து போனது.
நேரம் செல்லச் செல்ல குளிர்ந்த காற்று வீசத் துவங்க, “போகலாம். எல்லாரும் அங்கே ஹால்ல நமக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றபடி அவள் எழுந்து கொள்ள தானும் அவளோடு எழுந்து கீழே வந்தான்.
வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் கிளம்பி சென்றிருக்க, குடும்ப நபர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். அந்த குடும்ப நபர்களில் ஜீவராஜனும் அவரின் மகள் மதிஷாலினியும் இருந்தார்கள்.
திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து அழைத்திருந்ததை போல், வரவேற்பு நிகழ்ச்சிக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தார்கள் வடிவேலன் தம்பதியினர். ஆனால், அதில் முற்றிலும் கடமை உணர்வு மட்டுமே இருந்தது.
பந்தத்தை பாராட்டி எல்லாம் அழைக்க இருவருமே எண்ணி இருக்கவில்லை. அதுவும் அன்று வளர்மதி வந்து பேசி விட்டுச் சென்றதை எல்லாம் நினைக்க நினைக்க இன்னுமே நெஞ்சில் வெறுப்பு தான் வந்தது.
அதுவும் அதை சர்வேஷ் சரியாக கண்டு கொண்டு விட, இருவருக்குமே படபடப்பு தான் அன்று மாலை. இந்திரா உளறி கொட்டியதும் இன்பவள்ளி அமைதியாக நிற்க,
“அம்மா…” என்றவனின் அழுத்தமான அழைப்பில் வழக்கம் போல் அவரின் பார்வை கணவனை நாடியது. வடிவேலன் அவரை கண்ணமர்த்தி ஆறுதல் படுத்த, அமைதியாக வந்து கணவனின் அருகில் அமர்ந்து கொண்டார்.
பெரியவர்கள் இருவருக்குமே வளர்மதி வந்து பேசி விட்டுச் சென்றதை குறித்து மகனிடம் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லை. எப்படி சொல்ல முடியும்? அவன் மனைவியை பற்றி அவர் வந்து பேசி விட்டுப் போனதை எல்லாம் கேட்டு அவர்களுக்கே அத்தனை கோபம் வந்திருக்க, மகனிடம் சொன்னால் பெரும் பிரச்சனையில் தான் முடியும் என்று அமைதியாக இருந்தார்கள்.
கணவனின் கோப முகத்தை கண்டு கீர்த்தன்யா சற்றே மிரண்டு போய் இருக்க, அனைவருமே அமைதியாக தான் இருந்தார்கள்.
வடிவேலன் தான் “சர்வா.. வளரை பத்தி தெரியாததா? எப்பப் பாரு தேவை இல்லாத பேச்சு தான். இன்னைக்கு வந்தப்ப கல்யாணத்துக்கு அவளை வழிய போய் நாமளே சமாதானம் பண்ணி கூப்பிடலேன்னு கொஞ்சம் கூட பேசிட்டா. அதான் வள்ளி கொஞ்சம் அப்செட் ஆகிட்டா” என்று ஒருவாறு சொல்லி சமாளிக்க,
இன்பவள்ளியும் இப்போது வேக வேகமாக “உன் அத்தை பேசுறது எல்லாம் தேவை இல்லாத பேச்சு தானே சர்வா. விடு” என்று சொல்ல, “தேவை இல்லாத பேச்சுன்னு தெரிஞ்சும் ஏன் உங்க முகம் இப்ப வரைக்கும் டல்லா இருக்குமா?” என்று அவன் கூர்மையயுடன் கேட்க, இன்பவள்ளி மௌனமாக இருந்தார்.
“அந்த அளவுக்கு பேசிட்டு போய் இருக்காங்க” என்று பல்லை கடித்து கொண்டு கடுகடுத்தவன், “இனி அவுங்க இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது ப்பா” என்று தந்தையிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட,
“அவளும் அப்படித் தான் சொல்லிட்டு போனா சர்வா. ஆனா, நாம நம்ம கடமையை செய்யாம இருக்க வேணாமே. அவ வீம்பு எத்தன நாளைக்கு” என்றவர் இன்னும் சமாதானமாக பேச,
“அம்மா முகம் இப்படி ஆகுற அளவுக்கு பேசி இருக்காங்கன்னா கண்டிப்பா அவுங்க நல்ல விதமா எதுவும் பேசி இருக்கப் போறதில்ல ப்பா. அப்படி பேசி நம்ம சந்தோஷத்தை கெடுக்குறவங்களோட என்ன ரிலேஷன் மெயின்டெய்ன் பண்ண வேண்டி இருக்கு?” என்று சூடாக கேட்டவன்,
“எல்லாரும் இல்லாத நேரம் வந்து பேசிட்டு அவுங்க வெத்து வேட்டு அதிகாரத்தை காட்டிட்டு போறது தானே அவுங்க வழக்கம்” என்று இன்னும் கடுகடுத்தவன்,
“இன்னொரு முறை இது நடந்தா நானே நேர்ல போய் பேச வேண்டியது வரும் ப்பா” என்று சொல்லி விட்டு விறுவிறுவென மாடியேறி சென்று விட்டான்.
அவன் கோபம் கண்டு அனைவருக்குமே திகிலாக தான் இருந்தது. அதுவும் கீர்த்தன்யா மிரண்டே போனாள். சக்ரவர்ஷினியும் சதீஷும் தான் பேசிப் பேசி அவளை சகஜ நிலைக்கு திருப்பி இருந்தனர்.
“இதெல்லாம் டிரெய்லர் அண்ணி. இன்னும் நெற்றிக் கண் திறப்பாரு ஹோட்டல்ல ஃபுட் டேஸ்ட் அப்பல்லாம்” என்று சிரித்த சதீஷ்,
“அத்த ஒரு நாள் செமயா வாங்கி கட்டிக்க தான் போறாங்க அண்ணா கிட்ட. விதி வலியது” என்று சொல்லி விட்டுச் செல்ல, முகம் காணாத வளர்மதியின் மேல் அப்போதே மெல்லிய வெறுப்பு கீர்த்தன்யாவிற்கு வந்து விட்டிருந்தது.
ரிசப்ஷனிற்கு வளர்மதியை அழைக்க வேண்டாம் என்று வடிவேலன் சொல்லிப் பார்க்க, இன்பவள்ளி தான் அதனை மறுத்திருந்தார்.
“நாம ஏன் கூப்பிடாம விடணும்? உங்க தங்கச்சி அதுக்கும் சேர்த்து ஒரு நாள் வீடேறி வந்து பேசிட்டு போவாங்க” என்று சொல்ல, வடிவேலன் ஆயாசத்துடன் மனைவியை பார்த்தார்.
“உண்மை தாங்க. என்ன தான் வீட்டுப் படி மிதிக்க மாட்டேன்னு வீர வசனம் பேசிட்டு போனாலும் உங்க தங்கச்சி சொன்ன வார்த்தைக்கு கட்டுப் பட்டெல்லாம் இருக்கிற ரகம் இல்ல. அடுத்து எப்ப வேணாலும் வருவாங்க. இப்ப வந்து பேசிட்டு போன மாதிரி இன்னும் கூடவே பேசிட்டு போக வாய்ப்பிருக்கு. அதுக்கு நாமளே ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரணும். நம்ம கடமை போய் சொல்லி அழைக்கிறது தான். வரதும் வராததும் அடுத்து உங்க தங்கச்சி விருப்பம்” என்றவரின் சொல்லை வடிவேலனாலும் மறுக்க இயலவில்லை.
ஆகையால், நேரில் சென்று கடமைக்காக அழைத்து வந்து விட்டார்கள். அவர்கள் அழைத்த விஷயம் தெரிந்து சர்வா தாயையும் தந்தைையையும் சேர்த்தே காய்ச்சி எடுத்தது தனிக் கதை! அதற்கு இன்பவள்ளி கணவனிடம் சொன்னது போலவே மகனிடமும் சமாதானம் சொன்ன போது அவரை இன்னும் காய்ச்சி எடுத்தது அதன் கிளைக் கதை!
அண்ணனின் அழைப்பை ஏற்று வளர்மதி வர எண்ணவில்லை. ரோஷமாக “நான் எதுக்கு போறேன்! எனக்கென்ன வேற வேலையா இல்ல. என் மக இருக்க வேண்டிய இடத்துல இன்னொருத்தி நின்னு இளிச்சிக்கிட்டு இருப்பா. அதைப் பாத்து நான் வெந்து சாகனுமா? என் வயித்தெரிச்சலை கிளப்பணுன்னு தான் ரெண்டு பேரும் வீடு தேடி வந்து பத்திரிக்கை வச்சிட்டு போறாங்க. நான் வர மாட்டேன்” என்று கணவனிடம் அகங்காரமாக ஆடித் தீர்த்து விட்டார் வளர்மதி.
ஆக்ரோஷமாக கணவனிடம் ஆடித் தீர்த்தாலும் அடுத்த நாளே “நான் வரல. ஆனா, நீங்க போய்ட்டு வாங்க. அங்க போய் அந்தக் குடும்பம் என்ன ஏது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்க” என்று கணவருக்கு கட்டளை பிறப்பிக்க,
வளர்மதிக்கு வாழ்க்கைப்பட்ட நாளில் இருந்து அவரின் கட்டளையே தன் சாசனம் என வாழ்ந்து வரும் அப்பாவி ஜீவனான ஜீவராஜனுக்கு இப்போதும் மனைவியின் சொல்லைத் தட்டும் எண்ணம் சிறிதும் இல்லை.
“சரி மதி. நான் போய் பாத்துட்டு வரேன்” என்றவர், “ஆனா, மச்சான் எதுவும் கேட்டா?” என்று பயந்து யோசிக்க, “என்ன கேட்டுடுவார் என் அண்ணன்? மிஞ்சி மிஞ்சி போனா வளர் ஏன் வரலேன்னு நல்ல விதமா தான் கேட்பாரு. அதையும் மீறி அவரு மூத்த பிள்ளை ஏன் வந்தீங்கன்னு கேட்டா உன் அப்பா அம்மா தான் வீடேறி வந்து அழைச்சிட்டு போனாங்க. அதான் பேருக்கு நானாவது வரலாம்னு வந்தேன்னு சொல்லுங்க” என்று கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல் ஒவ்வொன்றையும் அவருக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பினார்.
ரிசப்ஷன் செல்லும் தினம் மதிஷாலினியும் தானும் வரேன் என்று தந்தையிடம் சொல்ல, “நீ எதுக்குடி அங்க?” என்று எகிறினார் மகளிடம். அதில் அரண்டு போய் தந்தையின் பின்னே ஒளிந்து கொண்டாள் மதிஷாலினி.
மனைவிக்கு பயப்படும் ஜீவராஜன் மகள் என்று வந்தால் அந்த பயத்தை கொஞ்சம் ஒதுக்கி விட்டு, கெஞ்சலாக மனைவியிடம் மகளுக்காக பரிந்து பேசுவார்.
அதே போல் இன்றும் மனைவி மகளை அரட்டியதும் மகள் பயந்ததை பார்த்து உருகி விட்டது அவருக்கு. “வரட்டுமே மதி. நாமளும் பொண்ணு வச்சிருக்கோம்னு ஊருக்கு காட்டணும் தானே. அதுவும் நீ வேற இப்பவே ஷாலுக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்ட. வரன் பாக்குறோம்னு அங்க வர சொந்த பந்தங்க கிட்ட நானும் சொல்லி வைக்கிறேன். எப்படியும் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கண்டிப்பா உன் அண்ணன் வீட்டு ரிசப்ஷனுக்கு வரத் தானே செய்வாங்க” என்று சொல்லி மனைவியின் மனதை கரைக்க, வளர்மதியும் கணவர் சொன்னதை யோசித்து சரி என்று பட்டதும் மகளை அனுப்பி வைத்தார் அவருடன்.
வளர்மதியை தவிர்த்து அவர்கள் இருவரும் மட்டும் வருகை தந்திருப்பது ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும், வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் வளர்மதி வராதது குறித்து கேட்ட போது வடிவேலன் தங்கைக்கு அவளின் மகளை மணம் முடிக்கவில்லை என்று வருத்தம். ஆகையால் தான் வரவில்லை என்று பொதுவாக உண்மையை சொல்லி சமாளிக்க,
ஜீவராஜனோ வெளிப்படையாகவே அவர்களுக்கு இடையில் இருந்த பூசல் பற்றி ஒன்றுக்கு இரண்டாக அனைவரிடமும் சொல்லி விட்டிருந்தார் ஒன்று விடாமல். அதுவும் மனைவியின் ஆலோசனை படி தான்!
கூடவே, கீர்த்தன்யா குடும்பத்தை கண்டும் கேட்டும் என அனைத்தையும் அறிந்து கொண்டார் ஜீவராஜன். இதை எல்லாம் சர்வேஷும் கீர்த்தியும் டரேசிற்கு ஃபோட்டோ ஷூட்டிற்காக சென்ற போது சிறப்பாக முடித்திருந்தார்.
உடன் அழைத்து வந்திருந்த மகளையும் அனைவருக்கும் அறிமுகம் வேறு செய்து வைத்தவர், அவளுக்கு இப்போதே வரன் பார்ப்பதாகவும் சொல்லி வைக்க பெரு மூச்சுடன் இதனை கடந்து தான் போனார்கள் வடிவேலன் தம்பதியினர்.
ஆனால், கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருக்கும் பெண்ணிற்கு இப்போதே திருமணமா? என்று எண்ணியவர்களுக்கு வளர்மதியின் மேல் கோபம் தான் வந்தது. ஆனாலும் எதிலும் தலையிடாமல் அமைதியாக இருந்தார்கள்.
சர்வேஷ்வரன் வந்தவர்களை வாங்க என்று அழைத்ததோடு சரி! அதற்கு மேல் அவனின் கவனம் ஜீவராஜன் பக்கம் திரும்பவில்லை.
ரிசப்ஷன் சிறப்பாக முடிந்து உணவருந்த அனைவரும் டைனிங் ஹால் சென்ற நேரம் மதிஷாலினி தந்தையிடம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி விட்டு இன்பவள்ளியிடம் தான் வந்தாள்.
“அத்த ரெஸ்ட் ரூம் போகனும். கூட வாங்களேன்” என்று படபடப்புடன் அழைக்க, இன்பவள்ளியோ வழி தெரியாமல் தான் கேட்கிறாள் போல என்று எண்ணிக் கொண்டு “வர்ஷினிய கூட்டிட்டு போ ஷாலு. அவளை வர சொல்றேன்” என்று சொல்லி விட்டு நகரப் பார்க்க,
பதட்டத்தோடு அவரின் கைகளை பற்றி அவரை நிறுத்தியவள் “அத்த.. பிளீஸ் நீங்களே வாங்க. உங்க கிட்ட பேசணும்” என்றாள் கலக்கத்துடன். எங்கே தந்தை வேறு பார்த்து விடுவாரோ என அச்சம் வேறு ஒரு புறம் அவளை ஆட்டிப் படைத்தது.
எதற்காக இப்படி வியர்த்து வழிய படபடப்புடன் பேசுகிறாள் என்று ஒன்றும் புரியாவிடினும் “சரி வா ஷாலு. நானே வரேன்” என்றபடி அவளோடு அந்த தளத்தில் இருந்து கீழே உள்ள தளத்திற்கு லிஃப்ட்டின் மூலம் அவளை அழைத்து வந்தார்.
அந்தத் தளத்தில் பணியாளர்கள் தவிர்த்து யாரும் இல்லை. எனவே, அங்கிருந்த ஒரு உணவு மேஜையில் அவளோடு சென்று அமர்ந்தவர் “என்ன விஷயம் ஷாலு? ஏன் இப்படி பயந்து போய் இருக்க? என்ன ஆச்சு?” என்று அவள் கைப் பற்றி ஆதூரமாய் கேட்க,
அவ்வளவு தான் அவள் கண்களில் நிற்காமல் ஓடியது கண்ணீர். “என்ன ஷாலு.. என்னன்னு சொன்னா தான தெரியும்?” என்றவருக்கும் மெல்லிய பதட்டம் சூழ்ந்து கொண்டது.
“அத்த.. அ…ம்மா.. அம்மா இப்பவே எனக்கு கல்யாணம் பேசுறாங்க” என்று உதடு துடிக்க சொல்ல, இன்பவள்ளிக்கு கவலையாகிப் போனது.
சற்று நேரத்திற்கு முன்னர் ஜீவராஜனின் பேச்சை வைத்து அவரும் இதனை அறிந்திருதார் தானே! எனவே கவலையாக அவளின் முகம் பார்த்து “இப்ப தான் உன் அப்பா ரெண்டு மூணு பேரு கிட்ட சொல்லிட்டு இருந்தார் ஷாலு. எனக்கும் கவலையா தான் போச்சு. இப்ப தான் செக்கண்ட் யியர் படிக்கிற நீ. அதுக்குள்ள என்ன அவசரம்” என்று ஆதங்கமாக கேட்க,
இன்னும் கூடிப் போன அழுகையுடன் “அத்த.. அம்மா நீங்க சர்வேஷ் அத்தானுக்கு என்னை கட்டி வைக்கலேன்னு கோபத்துல இந்த முடிவு எடுத்து இருக்காங்க” என்று குரல் நடுங்கச் சொன்னவள், “எனக்கு இதுல இஷ்டம் இல்ல அத்த” என்றாள்.
“சரி ஷாலு. நீ அழுகாத. நானும் உன் மாமாவும் வந்து அண்ணி கிட்ட பேசுறோம்” என்று அவளை சமாதானம் செய்ய முயல, அவளோ “எனக்கு பயமா இருக்கு அத்த. எங்க அம்மா வேற யாருக்கும் என்னை கட்டி வச்சிடுவாங்களோன்னு” என்று தேம்ப,
அவள் பேச்சில் திகைத்த இன்பவள்ளி “ஷாலு… என்ன சொல்ல வர” என்றவர், “யாரையும் விரும்புறியா?” என்று திகைத்து போய் கேட்க, மெல்ல ஆமோதித்து தலை அசைத்த மதிஷாலினி, அடுத்து சொன்னதை கேட்டு இன்பவள்ளிக்கு மயக்கம் வராத குறை தான்!
“ஆமா அத்.. அத்த. எனக்கு சதீஷ் அத்தானை தான் பிடிச்சிருக்கு. அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றவள் அழுகையுடன் சொன்னாலும்… திடமாக அடமாக சொல்ல, “இதென்னடா சதீஷா உனக்கு வந்த சத்திய சோதனை!!!!!!!!!!” என்று தான் தோன்றியது இன்பவள்ளிக்கு.