மதிஷாலினி சதீஷை விரும்புகிறேன் என்று சொல்லியது முதல் கட்ட அதிர்ச்சியை தந்தது என்றால், அவரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று உறுதியுடன் பிடிவாதக் குரலில் சொல்லியது அடுத்த கட்ட அதிர்ச்சியாகிப் போனது இன்பவள்ளிக்கு.
“ஷாலு… என்னமா சொல்ற?” என்று இன்பவள்ளி திகைப்பு நீங்காமல் கேட்க, “ஆமா அத்தை.. எனக்கு சதீஷ் அத்தானை ரொம்ப பிடிக்கும்” என்றவள், “நீங்க தான் எதாவது பண்ணனும்” என்று வேறு சொல்லி அழுக, இன்பவள்ளிக்கு ஒன்றும் ஓடவில்லை.
என்ன செய்வது? என்ன சொல்வது? என்று புத்தி மரத்துப் போன நிலையில் இருந்தார்.
மூத்த மகனின் வரவேற்பு நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது என்னும் சந்தோஷம் சில மணி நேரங்கள் கூட நீட்டிக்கவில்லை. அதற்குள் இளைய மகனை விரும்புகிறேன் என்று மதிஷாலினி சொன்னதும் தலை கிறுகிறுத்து போனது அவருக்கு.
“என்ன அத்தை? அமைதியா இருக்கீங்க? நான்.. நான் சதீஷ் அத்தானை விரும்புறது பிடிக்கலையா? இல்ல என்னைய பிடிக்கலையா?” என்று அவள் கேட்கும் போதே குரல் உடைந்து கேவல் வெடிக்க, சுற்றி இருந்த ஒன்றிரண்டு பணியாளர்களின் கவனம் இவர்கள் மேல் விழுந்தது.
அதனை கவனித்தவர் “ஒன்னுமில்ல நீங்க வேலையை பாருங்க” என்று அவர்களின் கவனத்தை தங்கள் மேல் இருந்து திசை மாற்றியவர், “ஷாலு முதல்ல கண்ணைத் துடை! இதென்ன இப்படி அழுகுற பழக்கம்?” என்று அதட்ட,
“இல்ல நீங்க சொல்லுங்க? உங்களுக்கு பிடிக்கல தான? அதானே அமைதியா இருக்கீங்க?” என்று மீண்டும் அழுக, அவளின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது அவரால்.
எங்கே தான் சம்மதம் சொல்லாமல் இது சரி வராது, வேண்டாம் என்று எதேனும் சொல்லி விடுவேனோ என அவள் பயம் கொள்வது புரிய, “அழுகையை நிறுத்து முதல்ல. அப்புறம் நிதானமா பேசலாம்” என்றார் இன்பவள்ளி சற்று அழுத்தமாக.
“ஹ்ம்ம்…” என்று கண்ணை துடைத்துக் கொண்டவளின் கண்களில் மருந்துக்கும் பொய் இல்லை. இளைய மகன் மீதான காதலும், அவன் கை சேர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்புமே அக்கண்களில் அலாதியாக தெரிய,
இன்பவள்ளிக்கு மதிஷாலினியின் முக பாவங்கள் மகன் மேல் அவள் கொண்டுள்ள ஆசையை அப்பட்டமாய் வெளிச்சம் போட்டுக் காட்ட, மனக்கண்ணில் இளைய மகனையும் ஷாலினியையும் நிற்க வைத்துப் பார்த்தார்.
மூத்த ஜோடியைப் போலவே இவர்களையும் நினைத்துப் பார்க்கும் போதே திருப்தியாக இருந்தது அவருக்கு! ஆனால், நினைத்தது போல எல்லாம் நிறைவேற வேண்டுமே?
இதென்ன எளிதாக முடியக் கூடிய விஷயமா? எத்தனை குடும்ப ரீதியான சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்று அவரின் மூளை யோசிக்க, மதிஷாலினிக்கு அத்தையின் மௌனம் வேறு தவிப்பை பல மடங்காக்கியது.
“உன் அம்மாக்கு தெரியுமா இது?” என்று இன்பவள்ளி கேட்க,
“ம்ம்ஹும்…” என்று பலமாக தலை அசைத்தவள், “தெரிஞ்சா கொன்னுடுவாங்க” என்று பயத்துடன் சொல்ல, “ப்ச்.. பயபப்படாத ஷாலு” என்ற இன்பவள்ளி யோசனையுடன்,
“இதை சட்டுன்னு பேசிட முடியாது. ஏகப் பட்ட சிக்கல் இருக்கு. பிரச்சனை கண்டிப்பா வெடிக்கும். பாத்து தான் உன் அம்மா கிட்ட வந்து பேசணும். ஏற்கனவே சர்வாக்கு உன்னை கட்டி வைக்க நினைச்சு அது நடக்காம போச்சுன்னு உங்க அம்மாக்கு பயங்கர கோபம். இப்ப சின்னவனுக்கு கேட்டா நிச்சயம் உங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க” என்றவர்,
“இதை சதீஷ் கிட்ட வேற சொல்லணும்?” என்று பெரு மூச்சை விட, “அத்.. அத்தானுக்கு பிடிக்கும் தானே” என்று தவிப்புடன் கேட்க, அந்தத் தவிப்பைக் கண்டு என்ன சொல்ல முடியும் அவரால்?
எந்த அளவிற்கு மதிஷாலினி இளைய மகனை விரும்புகிறாள் என்று புரிந்திருந்த போதும் இளைய மகனின் சம்மதமும் வேண்டுமே!
ஒரு தாயாக அவனின் சந்தோஷமும் அவருக்கு முக்கியம் அல்லவா? எனவே அவளிடம் எந்த வித நம்பிக்கையையும் வெளிப்படையாக கொடுக்க முடியாத சூழலில் இருந்தார் இன்பவள்ளி.
அவளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு “உடனே எல்லாத்தையும் கேட்டா நானும் என்ன செய்வேன் ஷாலு? கொஞ்சம் கொஞ்சமா தான் இதை வீட்ல எல்லார் கிட்டையும் பேசணும்” என்றார் பொறுமையாக.
அவளுக்கும் அத்தை சொல்ல வருவது புரிந்தது. இருந்தாலும் அம்மாவின் அவசரத்தை எப்படித் தடுக்க? அவர் ஒன்றை நினைத்தால் நினைத்ததை முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்.
அவர் நினைத்து நடக்காமல் போன ஒரே விஷயம் சர்வேஷ்வரனுக்கு தன்னை மணம் முடிக்க எண்ணியது தான்! அதற்கு சர்வேஷ்வரன் தாயின் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தான். ஆகையால், அது நிறைவேறாமல் போய் விட்டது.
ஆனால், இப்போது அப்படியல்லவே!!! அன்னையின் எண்ணப்படி நல்ல வசதியான அந்தஸ்த்தானா, தன் அண்ணனின் குடும்பத்தை விட ஒரு படி மேலே பணக்கார குடும்பத்து மாப்பிள்ளை அமைந்தால் அடுத்த நொடி அவள் மணப்பெண்ணாக மாறுவது உறுதி!
சர்வேஷ்வரனை தனக்கு மணம் முடிக்கும் எண்ணம் இருந்த போது கூட, அவளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை வளர்மதி. “உனக்கு சர்வா தான் மாப்பிள்ளை! அவன் தான் உன் புருஷன்” என்று கட்டளையாகவே சொல்லி இருந்தார்.
அப்போதே உள்ளம் சதீஷ்வரனை எண்ணி கதறினாலும் அன்னையின் கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் எப்போதும் தலை அசைத்து பழகி இருந்தவள் அப்போதும் பயந்து தலை அசைத்து வைத்தாள்.
ஆனால், உள்ளுக்குள் திடமான நம்பிக்கை! நிச்சயம் சர்வேஷ் அத்தான் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார் என்று! தன்னிடம் அவன் பேசிய நிகழ்வுகள் சொற்பமே என்றாலும் பேசிய ஒரு சில நிகழ்வுகளில் கூட சக்ரவர்ஷினியிடம் எப்படி பேசுகிறானோ அதே போல் தான் தன்னிடமும் பேசி இருக்கிறான் என்றவளுக்கு நிச்சயமாக அன்னையின் எண்ணம் ஈடேறப் போவதில்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
அது மட்டுமின்றி வளர்மதி ஒன்றும் அண்ணனுடன் உறவு பலப்பட வேண்டும் என்று நினைத்தெல்லாம் சர்வாவிற்கு ஷாலினியை கட்டி வைக்க எண்ணவில்லை!
வடிவேலன் குழுமத்தின் மூத்த வாரிசு!
எக்கச்சக்க பொறுப்புகள்!
ஏகப் பட்ட சொத்துக்கள்!
அதற்கு தலை மகன் அவன் தான்!
அவனுக்கு மனைவியாக மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனின் அந்தஸ்த்தில் தானும் பங்கு கொண்டு அப்படியே அனைத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு டாம்பீகமாக வளம் வரலாம்!
கூடவே, அனைவரையும் ஆட்டி வைக்கலாம் என்றெல்லாம் எண்ணித்தான் அவர் தன் சொந்த மகளை அவ்வீட்டின் மூத்த மருமகளாக்க எண்ணியது.
ஆனால், அந்த எண்ணமெல்லாம் சர்வாவின் முன்னால் தவுடு பொடியாகிப் போனது தான் வளர்மதியின் கர்வமும் அகங்காரமும் பலமாய் அடி வாங்கிய இடம்!
“என் மக தான் இந்த வீட்டு மூத்த மருமக” என்று அன்று அன்னை ஆவேசமாக சொன்ன போது மதிஷாலினியின் உள்ளம் திடுக்கிட்டுத் தான் போனது! கூடவே, அவளின் பார்வை மெல்ல யாரும் அறியா வண்ணம் சதீஷை தொட்டு விட்டு மீண்டது!
எங்கே அன்னையின் ஆவேசத்திற்கு சாதகமாக எதேனும் நடந்து விடுமோ என்று அவள் பயந்த நொடி சர்வேஷ் அலட்டிக் கொள்ளாமல் அன்னைக்கு பதிலடி கொடுத்ததும் தான் நிம்மதி பெருமூச்சு வந்தது அவளிடம்.
ஆனால், அவளே எதிர் பாராதது தான் அடுத்து வளர்மதி மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிய நிகழ்வு! எப்படித் தடுக்க? யாரிடம் சென்று சொல்ல? என்று ஒன்றும் புரியவில்லை.
அப்படி அவள் தடுமாறிக் கொண்டிருக்கையில் தான் வடிவேலனும் இன்பவள்ளியும் வீட்டிற்கு வந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தது.
இந்த வாய்ப்பை விட்டால் நிச்சயம் யாரிடமும் தன் மனதை பற்றி சொல்ல முடியாது என்று உறுதியாக எண்ணியவள், எப்படியோ அன்னையிடம் கேட்டு தந்தையின் கெஞ்சலுக்கு அவரும் தன்னை அனுப்பியது பெரிய விஷயம் தான் என்று வந்து விட்டாள்.
முதலில் சதீஷ்வரனிடம் சென்று பேசலாமா என்று தான் யோசித்தாள். ஆனால், அவனோ அண்ணனின் வரவேற்பு நிகழ்ச்சியில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தான்.
சொந்த பந்தங்கள், வந்திருந்த விருந்தினர்கள் என அவனை சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருக்க, அவனிடம் சென்று எப்படி பேசுவது? எதில் இருந்து ஆரம்பிப்பது என்னும் குழப்பம் வேறு!
இதில் ஜீவராஜனும் அவளை விட்டு அசையவில்லை. எங்கே தனியாக சென்று அவனிடம் பேச? அதுவும் எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க? என்று பலவாறாக குழம்பி தவித்து இறுதியாக உண்ண வரும் நேரத்தில் இன்பவள்ளியை தனியே பிடித்து விட்டாள்.
யாரிடம் சொல்லி தீர்வு காண்பது என்று யோசித்தவளுக்கு அத்தையிடமே சொல்லி விடலாம். அதுவே சாலச் சிறந்தது என்கிற சிந்தனை தோன்ற, உடனே அவரை நாடி வந்து இதோ அனைத்தையும் சொல்லி விட்டாள்.
அவர் வீட்டில் அனைவருடனும் பேச வேண்டும் என்று சொல்வதை கேட்டு “புரியுது அத்தை. ஆனா, அம்மாவோட அவசரமும் பிடிவாதமும் ஜாஸ்தியா இருக்கு. அவுங்க எதிர்பார்க்கிற மாதிரி மாப்பிள்ளை அமைஞ்சிட்டா கல்யாண ஏற்பாட்டை பண்ணிடுவாங்க” மதிஷாலினி சொல்வதும் உண்மை தானே என்று யோசித்த இன்பவள்ளி விரைவாக இந்த விஷயத்தை கணவனிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
“சரி ஷாலு. நீ பயப்படாத. நான் இன்னைக்கு நைட்டே உன் மாமா கிட்ட இதைப் பத்தி பேசுறேன்” என்று அவளுக்கு தைரியம் அளிக்க, “அத்த… எல்லாம் சரியா நடக்கும் தானே. நீங்க கண்டிப்பா வந்து பேசுவீங்க தானே அம்மா கிட்ட?” என்று பரிதவிப்புடன் கேட்டவளை கண்டு பாவமாய் போய் விட்டது இன்பவள்ளிக்கு.
“எல்லாம் நல்லதாவே நடக்கும் ஷாலு. நீ தைரியமா இருக்கணும். சும்மா இப்படி அழுக கூடாது” என்று சொல்லி அவளைத் தேற்றி உணவருந்த அழைத்துப் போனவருக்கு எப்படி இதனை கையாள்வது எனும் சிந்தனை ஓடத் துவங்கியது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் விடை பெரும் நேரம் மீண்டும் அத்தையிடம் தன் கோரிக்கையை கண்களால் கெஞ்சி நியாபகப் படுத்தி விட்டு ஜீவராஜனுடன் கிளம்பினாள் மதிஷாலினி.
இல்லம் வந்ததும் அன்று இரவு வடிவேலனிடம் இன்பவள்ளி அனைத்தையும் கூறினார். மனைவி கூறியதை கேட்டு வடிவேலன் முகத்தில் பலத்த யோசனை!
“என்னங்க? அமைதியா இருக்கீங்க?” என்று இன்பவள்ளி கணவனை பார்க்க,
“வளர் இதுக்கு ஒரு போதும் ஒத்துக்க மாட்டா வள்ளி. அதான் யோசனையா இருக்கு” என்ற வடிவேலன்,
“வளரை விடு! முதல்ல சதீஷ் இதுக்கு ஒத்துக்குவானான்னு தெரியாது. அன்னைக்கே கல்யாணம் பத்தி பேசினப்ப அவன் விளையாட்டா பதில் சொல்லி இருந்தாலும் இப்போதைக்கு ஐடியா இல்லாத மாதிரி தான் அவன் கிட்ட இருந்து பதில் வந்தது. இதுல மதிஷாலினி மேல அவனுக்கு எந்த மாதிரி ஒரு எண்ணம்னு தெரியல. ஒரு வேளை அவனும் சர்வா மாதிரி பதில் சொன்னா ரொம்ப கஷ்டம்” என்று அவர் எல்லா கோணத்திலிருந்தும் யோசித்து பேச,
குடும்ப ரீதியாக மட்டுமே சட்ட சிக்கல்கள் இருக்கும் என்றெண்ணிய இன்பவள்ளிக்கு இப்படி உணர்வு ரீதியாகவும் எதேனும் சிக்கல்கள் வரக் கூடும் என்று அந்த நொடி தோன்றாமல் போனது.
“இப்ப என்னங்க பண்றது? ஷாலு அழுதிட்டே சொன்னாலும் கொஞ்சம் பிடிவாதமா தான் சொன்னா. கல்யாணம் பண்ணிக்கிட்டா சதீஷ் அத்தானை தான்னு. ரொம்ப விரும்புறாங்க நம்ம சதீஷ” என்று இன்பவள்ளி அவளையும் யோசித்துப் பேச,
பெரு மூச்சை வெளியிட்ட வடிவேலன் “நம்ம கைல எதுவுமே இல்ல வள்ளி. கொஞ்ச நாள் போகட்டும். வளர் எதுவும் மாப்பிள்ளை அமைஞ்சு அடுத்த கட்டத்துக்கு போற வரைக்கும் நாம எதுவும் போய் பேச வேணாம்” என்று சொல்லி விட, அதிர்ந்து போனார் இன்பவள்ளி.
“என்னங்க இப்படி சொல்றீங்க?” என்று கேட்க,
“ஆமா வள்ளி… அது வரைக்கும் நாம போய் பேச வேணாம். அப்படிப் பேசுனா இன்னைக்கு ஷாலினி வந்து நம்ம கிட்ட பேசிட்டு போனதை பத்தி கண்டிப்பா சொல்ல வேண்டியது வரும். அது தெரிஞ்சு வளர் ரொம்ப கோபப் பட்டு புள்ளைய போட்டு வாட்டிடுவா. கூடவே, எந்த மாப்பிள்ளை வந்தாலும் உடனே கல்யாணம் பண்ணி வைக்குற அளவுக்கு போனாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல. அதனால, அவ ஒரு மாப்பிள்ளை பாத்து அடுத்த கட்டம் போற வரைக்கும் நாம வளர்மதி கிட்ட இதை பத்தி பேச வேணாம்” என்று உறுதியாக கூறியவர்,
“நாளைக்கு ஹோட்டல் போனதும் சர்வா கிட்ட இது பத்தி பேசின பிறகு, சதீஷ் கிட்ட பேசிப் பாக்குறேன்” என்றார்.
“ஹ்ம்ம்.. சர்வா கிட்ட சொன்னா அவன் வேற கோபப் படுவானோ?” என்று இன்பவள்ளி பதற,
“அப்படி எல்லாம் உன் மூத்த புள்ள யோசிக்க மாட்டான்! முதல்ல சதீஷை கூப்பிட்டு கேட்பான்” என்றார் மகனைப் பற்றி நன்கு அறிந்தவராக.
“அதுவும் சரி தான்” என்ற இன்பவள்ளி “அப்ப நாளைக்கு வீட்லயே வச்சு பேசலாமே” என்க, “வீட்ல எல்லார் முன்னாடியும் பேசுறது சரியா வராது வள்ளி” என்றார் வடிவேலன்.
“சரிங்க. நீங்க நாளைக்கு பசங்க கிட்ட பேசிட்டு சொல்லுங்க. எப்படியோ எதுவும் தப்பா நடக்காம இருந்தா சரி” என்ற இன்பவள்ளிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, எதுவும் தவறாக நடக்கப் போவதில்லை என்றாலும் எதுவும் சரியாகவும் நடக்கப் போவதில்லை என்று!!
விதியின் விளையாட்டு மாதிஷாலினியின் விருப்பத்தில் ஆரம்பித்து, வளர்மதியின் கோபத்தில் பயணித்து இறுதியாக சர்வேஷ், கீர்த்தன்யா, சதீஷ், மதிஷாலினி என நால்வரின் வாழ்விலும் சிறப்பாகவே தனது வீரியத்தை காட்டி இருந்தது.