தன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் கண்ணீர் சூட்டில் பதறி “கீர்த்து என்னமா?” என்று அவள் கன்னம் பற்றி கேட்க, அவ்வளவு தான் கண்ணீர் இறங்கி விட்டது கன்னத்தில்.
ஒன்றுமில்லை என்று மீண்டும் தலை அசைத்தவளுக்கு மனதிற்குள் அவ்வளவு வலித்தது.
மீண்டும் மனைவியின் கண்களை ஆழமாக நோக்கி “ஒண்ணுமே இல்லையா கீர்த்தன்யா?” என்று அழுத்தமாக கேட்க அவன் கேள்வியில் கீர்த்துமா காணாமல் போய் கீர்த்தன்யா வந்திருப்பதை கண்டு உதடு பிதுங்கியது அழுகையில்.
“பிளீஸ்.. சர்வா” என்று குரல் நடுங்கச் சொல்ல, அந்தக் குரலில் எதுவும் கேக்காதயேன் என்னும் மன்றாடல் இருப்பதை உணர்ந்தவனுக்கு எதோ அவளின் மனதை போட்டு படுத்துகிறது என்று புரிந்து போனது.
நிச்சயம் வீட்டாட்கள் அவளின் மனம் நோகும் வண்ணம் எதுவும் பேசி இருக்கப் போவதில்லை! அது திண்ணம்!
‘வேறு யார்?’ என்றவன் யோசிக்கும் பொழுதே ‘வேறு யாராக இருக்க முடியும்? வேண்டாத விருந்தாளியாக வந்திருந்த தன் அத்தையின் கணவராக தான் இருக்க முடியும்?’ என்று யூகித்த நொடி தன் மேல் சாய்ந்திருந்த மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து,
“மாமா என்ன சொன்னாங்க?” என்றான் அழுத்தமாக. அவன் சரியாக கணித்து கேட்ட விதத்தில் விதிர்த்து போனாள் கீர்த்தன்யா.
“இல்ல… அதெல்லாம் இல்ல” என்று அவள் படபடக்க, “கீர்த்தன்யா….” என்றான் கடுமையான முகத்துடன்.
அதில் இன்னும் அழுகை வர, “சர்வா.. பிளீஸ்..” என்றாள் கெஞ்சலாக.
“….”
வார்த்தைகள் வரவில்லை அவனிடம்! அழுத்தமான பார்வையை மட்டுமே அவளிடம் பதித்திருக்க, அந்தப் பார்வைக்கே அவளுள் எல்லாம் சிதறிப் போனது.
“சர்வா.. அவுங்க பேசினாங்க தான். ஆனா என்கிட்ட இல்ல…” என்றவள், “ப்ச் கஷ்டமா இருந்தது தான். விடுங்க. தூங்கி எழுந்தா சரி ஆகிடுவேன் நான்” என்றாள் சமாதானமாக. உள்ளுக்குள் அன்னை சொல்லிய விஷயமே ஓடிக் கொண்டிருந்தது.
அவர் சொன்னது எவ்வளவு உண்மை! நடந்தது தெரிய வந்தால் நம்மால் தேவை இல்லாத சங்கடமும் சண்டையும் அவர்களுக்குள் வந்து விடும் என்று அமைதியாக இருக்கச் சொன்னாரே?? தான் தான் இப்போது தேவை இல்லாமல் மனதின் அலைப்புறுதலை அவன் மடி மீது படுத்து காட்டிக் கொடுத்து விட்டோமோ என்று தவித்துப் போனாள்.
ஆனால், அவன் பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை!
“ஐயோ.. இப்படி பாத்து பாத்தே என் கிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிடுறீங்க நீங்க? அத்தை சொன்ன மாதிரி ஒன்னு மறைக்க முடியாது போல உங்க கிட்ட இருந்து!” என்றவளுக்கு கணவனின் பார்வைக்கே அவனிடம் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டி விடத் துடிக்கும் தன் மனதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யமும் அச்சமும் பிறந்தது.
“விடுங்களேன்” என்று சொல்லிப் பார்க்க, அசையவில்லை அவளின் கணவன். சொல்லாமல் விட மாட்டான் என்று புரிந்து போனது அவளுக்கு!
இப்படி மௌனத்தாலே தன்னை ஆட்டிப் படைக்கும் அவனின் மேல் செல்லக் கோபம் கூட அப்போதைக்கு வர, “படுத்துறீங்க நீங்க” என்று அலுத்துக் கொண்டவளின் குரலில் இப்போது கலக்கத்தையும் மீறி அவன் மீதான ஊடல் இருந்தது.
அவனுக்கு அது புரிந்தாலும் அவள் சொல்லும் வரை மௌனம் மட்டுமே அவனிடம். அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் சில நொடிகள் அமைதியாய் இருக்க தன்னிடம் அனைத்தையும் சொல்ல அவளை தயார் செய்து கொள்கிறாள் என்று உணர்ந்து சர்வேஷும் அமைதியாய் இருந்தான்.
கைகள் மட்டும் உயர்ந்து ஆதூரமாய் மனைவியின் தலை கோத, அடுத்த நொடி அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்திருந்தாள் கீர்த்தன்யா!
கேட்டவனின் உடலும் முகமும் இறுகி விட்டது. அவளை மேலும் அணைத்துக் கொண்டவன், முன்பை விட அதிகமாய் மௌனம் காக்க அதுவே அவன் தன் கோபத்தை கட்டுப் படுத்த பெரும் பாடு படுகிறான் என்று புரிந்தது.
“இதுக்கு தான் சொல்ல வேண்டாம்னு இருந்தேன்? இப்பப் பாருங்க.. கோபம் வருது” என்று அவன் முகம் நிமிர்ந்து பார்க்க,
சட்டென்று முகத்தை இயல்பாக்கிக் கொண்டவன், “நீ என்ன சொன்ன அவருக்கிட்ட?” என்றான் பதிலுக்கு.
அதில் கண்கள் விரிய அவனை பார்த்தவள் “நான் என்ன சர்வா பெரியவங்க கிட்ட போய் பேச முடியும்? அதுவும் உங்க மாமா கிட்ட” என்று கேட்க, “பெரியவங்கன்றது அவுங்கவுங்க நடந்துக்குற விதம் பொறுத்து தான் கீர்த்து” என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னவன்,
“நீ பேசி இருக்கணும்? எதுக்காக அமைதியா விட்ட? இல்ல என்கிட்ட, அப்பா அம்மா கிட்டயாவது சொல்லி இருக்ககணும்” என்று கோபமாக சொல்ல,
“நீங்க இப்படி கோபப் படாதீங்க முதல்ல! இதுக்கு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். உங்க முகமே மாறிப் போச்சு. விட்ருங்க. இதை மறந்திடலாம்” என்று சொன்னவள்,
“நீங்க இதை பெருசு பண்ண கூடாது. உங்க மாமா கிட்ட எதுவும் கேட்டுக்க வேண்டாம். அப்புறம் எங்க வீட்ல ரொம்ப கஷ்ட படுவாங்க. அவுங்களால தான் தேவை இல்லாத சங்கடம் வரும்னு நினைப்பாங்க. அதனால தான் பெரியப்பா, அப்பா யாரும் எதுவும் சொல்லிக்கல என்கிட்ட. இல்லேன்னாலும் சொல்லி இருக்க மாட்டாங்க தான். நிகிதா தான் தாங்க முடியாம வந்து சொல்லிட்டா” என்றவள்,
“இதை உங்க அத்தை கிட்ட போய் பேசி சண்டை ஆக்கிட கூடாது சர்வா” என்றாள் மெல்லிய அழுத்தத்துடன். ஆனால், உறுதியாக.
அவன் மௌனமாக இருப்பதை கண்டு “சண்டை போட்டா அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்று வேறு சொல்ல, “என்ன இருக்கு?” என்றான் குறும்புடன்.
மனதிற்குள் வளர்மதி மற்றும் ஜீவராஜனின் பேச்சில் கோபம் கனன்றாலும் அதைக் குறித்து மனைவியிடம் மேற்கொண்டு பேச விரும்பவில்லை அவன். இதை தனியே தான் சமாளிக்க வேண்டும் என்று எண்ணி அப்பேச்சினை மனைவியிடம் தொடரவில்லை.
“ஹ்ம்ம்… இப்படிக் கேட்டா என்ன சொல்ல. நீங்க எதுவும் கோபமா பேசிட கூடாது. அது இன்னும் பிரச்சனை தான். பேசக் கூடாது சரியா” என்று கணவனுக்கு உத்தரவு போட,
“ஆமாடி… எனக்கு இங்க வந்து நல்லா ஆர்டர் போடு! இதுல நான் இவளை ஆட்டிப் படைக்குறேன்னு பேச்சு வேற!” என்றவனின் பேச்சில் கீர்த்தன்யா சிரித்து விட, அவள் சிரிப்பதை கண்டதும் தான் ஆசுவாசம் அடைந்தது கொண்டவனின் உள்ளம்!
அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து அதன் தாக்கம் தந்த தகிப்பில் “ஐயோ இப்படி பாக்காதீங்களேன்..” என்றாள் சிணுங்களாக.
“நீ இப்படி என்னை பாக்க வைக்காதயேன்” என்றான் அவனும் அவளைப் போல்!
அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவள் “சர்வா…. டயர்டா இருக்கு…” என்றாள் மெல்ல.
“ஹ்ம்ம்.. எனக்கும்” என்றான் அவளை தனக்குள் அள்ளிக் கொண்டபடி.
“தூங்கலாமே”
“ஹ்ம்ம்… தூங்கலாம்” என்றவன் முன்னேறாமல் அவளின் சோர்வை உணர்ந்து அவளிடம் இருந்து முயன்று பிரிந்து “தூங்கு” என்க, கீர்த்தன்யாவின் மறுப்புகள் எல்லாம் பின்னே சென்று விட்டன அவன் தன் உணர்வுகளை கட்டுப் படுத்திய விதத்தில்!
“சர்வா……” என்றவள், நாணமும் கூச்சமும் போட்டி போட “சமாளிக்கலாம்… கொஞ்சம்…..” என்றாள் அவனை அணைத்துக் கொண்டு. வெக்கம் வேறு எக்குத் தப்பாய் எட்டிப் பார்த்தது அவள் குரலில்!
மனைவி சொன்ன விதத்திலும் சொல்லிய விஷயத்திலும் சொக்கிப் போனவனாய் அவளில் கலந்து நிறைந்தான் அவளின் உயிரானவன்!
***********
இப்போது தந்தை வந்து அவரைப் பற்றிய பேச்சை எடுத்ததும் நேற்று நடந்ததை அசை போட்டவன் “ஷாலினிக்கு இப்பவே என்ன கல்யாணம்?” என்றான் அவர் பேச வந்ததை முன்னிறுத்தி.
“எல்லாம் ஆணவம் தான் சர்வா. பாவம் ஷாலினி. வளர்மதியோட ஆணவத்துக்கு அவ என்ன பண்ணுவா? செக்கண்ட் யியர் இன்னும் முடிக்கல. அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சா படிப்பென்ன ஆகும்?” என்றவர், “அவளுக்கு நம்ம சதீஷை பிடிச்சு இருக்காம்” என்றார் பெரு மூச்சுடன்.
“ஹ்ம்ம் எதிர் பார்த்தேன் இதை” என்றான் சர்வேஷ்வரன் அலட்டிக் கொள்ளாமல். அதில் வடிவேலன் மகனை திகைத்து போய் பார்க்க, “ஆமாப்பா! எதிர் பார்த்தேன் தான். நம்ம வர்ஷி பர்த்டே அன்னைக்கு அத்தை நம்ம வீட்ல வந்து பேசினப்பவே நான் ஷாலினிய நோட் பண்ணேன். அவ பயந்து போய் அவ அம்மா பின்னாடி நின்னுட்டு இருந்தா. ஆனா, அத்தை “என் பொண்ணு தான் இந்த வீட்டு மூத்த மருமகன்னு கத்துனப்ப அவ பார்வை சதீஷை தான் பாத்தது. அத்தை பேசி முடிக்கிற வரைக்கும் அப்பப்ப பயந்து பயந்து அவனை பாத்திட்டு தான் இருந்தா” என்றவன்,
“அப்பவே எனக்கு டவுட் இருந்தது. இப்ப நீங்க சொன்னதும் கண்ஃபார்ம் ஆகிடுச்சு” என்றான்.
“நேத்து ரிசப்ஷன் வந்த பொண்ணு வள்ளி கிட்ட எல்லாம் சொல்லி அழுதிருக்கா” என்றவர் மனைவி சொன்னதை மகனுடன் பகிர்ந்து கொண்டார்.
அனைத்தையும் கேட்டவன் “ஷாலினிக்கு பிடிச்சிருக்கு ப்பா. நம்ம சதீஷை கேட்டா தான் தெரியும். அவன் மனசுல ஷாலினி பத்தின அபிப்ராயம் என்னன்னு” என்றவன், தம்பியை அழைத்து தன் ரூமிற்கு வரச் சொன்னான்.
“என்ன விஷயம் ண்ணா” என்றபடி வந்த சதீஷ்வரன் தந்தையும் வந்திருப்பதை கண்டு “அப்பா.. நீங்க என்ன இன்னைக்கு விசிட்? ரெஸ்ட் எடுக்கலாமே வீட்ல” என்றான் அவர் அருகில் வந்து அமர்ந்து.
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்” என்றார் வடிவேலன்.
“முக்கியமான விஷயமா? நம்ம வீட்லயே பேசி இருக்கலாமே? இன்பூ டார்லியை விட்டுட்டு அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்றவன், தந்தையும் அண்ணனும் சீரியசாக இருப்பதை கண்டு “சொல்லுங்கப்பா என்ன விஷயம்” என்றான் நல்ல பிள்ளையாக.
வடிவேலன் மூத்த மகனின் முகம் பார்க்க, “அப்பா.. எப்பவும் அம்மா தான் இப்படி பண்ணுவாங்க. இப்ப நீங்க.. அதுவும் அண்ணாவையே லுக் விடுறீங்க?” என்க,
“சதீஷ்… உன் கிட்ட தான் முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் சர்வேஷ்வரன்.
“சரிண்ணா.. சீரியஸ் சீரியஸ்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் , “சொல்லுங்க ண்ணா. என்ன ஆச்சு?” என்றான் நிதானத்துடன்.
“நம்ம ஷாலினி பத்தி என்ன நினைக்கிற?” என்று சர்வேஷ்வரன் கேட்க, “யாருன்னா தல ஒயிஃபா… 2 k ஸ்டார்ட்டிங்ல அவுங்க தான் அண்ணா பல பேரோட கியூட் கிரஷ்” என்று சிரிப்புடன் சொல்ல, வடிவேலன் “சதீஷ்….” என்று இளைய மகனை அதட்டினார்.
சர்வேஷ் தம்பியை முறைக்க, “ஓகே ஓகே.. ஜஸ்ட் ஃபன் தான்” என்றவன், “எந்த ஷாலினிய பத்தி பேசுறீங்க?” என்றதும் இருவருக்குமே அவன் சொன்ன விதத்தில் ‘என்னடா இது?’ என்பது போல் தான் இருந்தது.
“நம்ம வளர் அத்தையோட பொண்ணு மதிஷாலினி” என்று சர்வேஷ்வரன் சொன்னதும் இருவரையும் மாறி மாறி ஒரு மார்க்கமாக பார்த்த சதீஷ்வரன்,
“அந்த அத்தை பொண்ணுக்கு என்ன அண்ணா வந்தது இப்ப?” என்று கேட்க,
“என்ன நினைக்கிற? அதை முதல்ல சொல்லு” என்றான் சர்வேஷ் அதட்டலாக. அதில் கப் சிப்பென்று அடங்கிய சதீஷ்,
“அத்தைக்கும் அத்தை பெத்த பொண்ணுக்கும் சம்மந்தமே இல்லன்னு மட்டும் தெரியும்” என்றதும் இருவரும் அவனை புரியாமல் பார்க்க,
“அத்தை கேரக்டர்… வில்லிக்கு உண்டான பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்கக் கூடிய கேரக்டர். ஷாலினி…” என்றவன், சிறு இடைவெளி விட்டு “அது சரியான மில்க் ஃப்ளோயிங் ஃபேஸ் (பால் வடியும் முகம்) ண்ணா. அப்பிராணி மாதிரி தான் இருப்பா நான் பாத்த வரைக்கும். ஏன் உங்களுக்கே தெரியுமே. அத்தைக்கு பயந்த சுபாவம் தான். உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்க அத்தை வந்து பேசின அப்ப கூட பயந்து போய் நின்னுட்டு இருந்தா தானே” என்றான் தன் மனதில் தோன்றியதை இயல்பாக.
“ஹ்ம்ம்.. பயந்து தான் நின்னுட்டு இருந்தா. அத்தையோட வளர்ப்பு அப்படி” என்ற சர்வேஷிற்கு தம்பி சொன்ன “மில்க் ஃப்ளோயிங் ஃபேஸ்” மெல்லிய சிரிப்பை கொடுத்தது.
“நல்ல வேளை அவுங்கள மாதிரி வில்லியா வளர்க்கல. தனக்கு அடங்கி போற பொண்ணா வளத்து விட்டாங்க. இல்லேன்னா பூம் பூம் மாடு மாதிரி உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னதும் தலை ஆட்டிட்டு வந்து நின்னிட்டு இருந்து இருக்க மாட்டா தான” என்றவன்,
“அவளைப் பத்தி இப்ப என்ன பேச்சு?” என்றான் அந்தப் பேச்சே தன்னைச் சுற்றியும் மதிஷாலினியை சுற்றியும் சுழல்வதை உணர்ந்து.
“நேத்து மாமா ஃபன்ஷன்ல எதுவும் பேசினாரா?” என்று குழப்பத்துடன் கேட்க, “இல்ல…” என்ற சர்வேஷ்வரன், “ஷாலினிக்கு கல்யாணம் பேசுறாங்களாம்” என்றான் மெல்ல.
“நினைச்சேன்.. இந்த அத்தைக்கு மூக்கு வேர்த்து இருக்கும். அதான் இப்படி கிளம்பிட்டாங்க போல” என்றவன், “இதான் முக்கியமான விஷயமா! நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போனேன்” என்றான் நெஞ்சில் கை வைத்து.
“இல்லடா இது முக்கியமான விஷயம் இல்ல. இதை விட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு” என்ற சர்வேஷ்வரன் தம்பி தன்னைப் பார்த்து “அதென்ன?” என்று கேட்டதும்,
“நேத்து ரிசப்ஷனுக்கு வந்த பொண்ணு வள்ளி கிட்ட சொல்லி அழுதிருக்கா” என்று வடிவேலனும் சொல்ல, “ஓ.. அத்தை கிட்டப் பேச பயந்து போய் நம்ம சப்போர்ட் கேட்டு வந்திருப்பா போல” என்றவன், “உங்க சிஸ்டர் கிட்ட போய் யாருப்பா பேசுறது?” என்றான் சலிப்பாக.
சர்வேஷ் தம்பியின் தோள் தொட்டு “அவ படிப்பு ஸ்பாயில் ஆகிடும்னு மட்டும் பயப்படலடா. அவ லவ்வும் ஸ்பாயில் ஆகிடுமோன்னு பயப்படுறா” என்க,
“என்னது லவ்வா……” என்று அதிர்ந்தவன், “அண்ணா…. பால் வடியிற முகமா இருக்கேன்னு சொன்னேன். கடைசில இந்த பூனையும் பால் குடிக்குமான்னு யோசிக்க வச்சிட்டா..” என்றவன்,
“இதுக்கு தான் பயந்து போய் நேத்து இன்பூ டார்லி கிட்ட சொல்லி அழுது இருக்காளா… பையன் யாராம்?” என்று வேறு கேட்க,
தொண்டையை செறுமிக் கொண்ட சர்வேஷ்வரன், “நீ தான்….” என்று அலுங்காமல் குளுங்காமல் தம்பியின் தலையில் குண்டொன்றை போட்டவன்,
“இன்னொரு முக்கியமான விஷயமே என்னன்னா… மதிஷாலினிக்கு கல்யாணம் பண்ணா உன்னை தான் பண்ணிக்கணுமாம். வேற யாரையும் பண்ணிக்க மாட்டாளாம். அவ்ளோ டீப் லவ்வாம் உன் மேல” என்று சொல்லி முடிக்க, அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்டு “ண்ணாஆஆஆ…..” என்று அலறி இருந்தான் தம்பிகாரன்!