சுற்றி இருந்த ரோஜா அழகினை கண்டு ஒரு நொடி திகைப்பில் மூழ்கியவளுக்கு மறு நொடி கண்கள் முழுவதும் ரோஜாவால் நிறைந்து தளும்பின.
நிச்சயம் இதனை எதிர் பார்க்கவில்லை கீர்த்தன்யா! அதுவும் இத்தனை அழகான ஒரு தோட்டம்…….! ஒரு நொடி தன் வீட்டில் தான் இருக்கிறோமா என்று கூட தோன்றி விட்டது.
மெய் மறந்து நின்றிருந்தவளுக்கு கணவனின் செயலில் கண்கள் பனித்துப் போயின! மெல்ல திரும்பி அவனைப் பார்த்தவள் “எப்போ.. இதெல்லாம்?” என்றாள் குரல் கரகரக்க.
பின்னிருந்து அவளின் தோள்களை பற்றி இருந்தவன் அவள் நெற்றியில் முட்டி “இந்த ஒரு வாரமே வேலை போய்ட்டு தான் இருந்தது. இன்னைக்கு தான் முடிஞ்சது. பின்னாடி மாடிக்கு வரதுக்கு தனி ஸ்டெப்ஸ் இருக்கும்ல. அந்த வழியா தான் நர்சரி ஆளுங்க வந்து செட் பண்ணி கொடுத்திட்டு போனாங்க. உனக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் இப்படி” என்றான் சிரிப்புடன்.
“மூச்சு முட்டுது…” என்று அவன் அன்பின் வெளிப்பாட்டை தாங்க மாட்டாமல் சொன்னவள் மீண்டும் பார்வையை திருப்பி கண்களில் நிறைத்துக் கொண்டாள் அந்த அழகினை!
பார்க்கப் பார்க்க மலர்ந்தாடிக் கொண்டிருந்த ரோஜாவை போலவே அவளின் மனமும் கணவனுக்காய் மலர்ந்து விகசித்து இருந்தது அவனின் அளப்பரியா காதலில்!
அவனுக்குத் தன்னைப் பிடிக்கும் என்று தெரியும்! ஆனால், தனக்குப் பிடித்தவையும் பிடிக்கும் என்று இன்று தான் நேரில் கண்டு கொள்கிறாள்.
“என்ன கீர்த்தி பொண்ணுக்கு பேச்சே வர மாட்டேங்குது” என்று அவள் முன்னர் வந்து நிற்க, “பேச்சு நிக்கிற அளவுக்கு இவளோ பண்ணி இருக்கீங்க! அப்புறம் எப்படி பேச்சு வரும்?” என்றாள் கண்கள் பனிக்க.
“ஹே கீர்த்து…” என்றவன் அவளைத் தன் புறம் திருப்ப கண்களில் அவனுக்கான காதல் மின்ன “தாங்க்ஸ்” என்றாள் மெல்ல இதழ் பிரித்து.
அவளை நெருங்கி நின்றவன் “எதுக்கு?” என்று கிசுகிசுப்பாய் கேட்க, கீர்த்தன்யாவின் கண்கள் நிலம் நோக்கியது!
நெருங்கி நின்று பேசியவனின் முகம் நெஞ்சுக்குள் புகுந்து பல மாயங்கள் புரிந்தன. இருவருக்கும் இடையே இடைவெளிகள் சிறிதளவு இசைக்க, அதனின் தாளத்தை குறைக்க முடிவு செய்தபடி இன்னும் நெருங்கினான் மனைவியை.
“பிடிச்சிருக்கா?” என்றவனின் ரகசிய குரலிலும் ரசனையான செயலிலும் மயங்கிப் போனாள் கீர்த்தன்யா.
எதைக் கேட்கிறான் என்று தெரிந்தும் அவனின் நெருக்கத்தில் வார்த்தைகள் வராமல், சுற்றும் முற்றும் பார்வையை திருப்பியவள்,
“யாராவது பாக்க போறாங்க. நாம மேல இருக்கோம்” என்று மெல்ல சொல்லியவளின் மென்மைக் குரல் மேலும் அவனின் கிறக்கத்தை தூண்டுவதாய்!!!
“பாத்தா பாக்கட்டும்!” என்றவன், “என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரியுற கீர்த்துமா” என்றான் மயக்கம் மேலிட!
கண்களை அவன் மீதான நேசம் மொத்தமும் ஆட்கொள்ள, காதல் ததும்பிய விழிகளுடன் அவனை ஏறிட்டவள் அவன் பார்வையின் பரிபாஷையில் மீண்டும் இமைகளை தாழ்த்திக் கொண்டாள்.
இருந்த நூலளவு இடைவெளியும் அவனை மேலும் இம்சையூட்ட அவளை சுற்றி வளைத்தன அவனின் கரங்கள்!
இடைவெளியை குறைத்து இடையை பற்றியவனின் முகம் பார்க்கவே அத்தனை வெட்கம் வந்தது அவனை கொண்டவளுக்கு!
வெட்கத்திற்கு ஈடாக காதலும் பெருக்கெடுக்க கண்களை இறுக மூடித் திறந்தவள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவன் கன்னத்தில் மின்னல் வேகத்தில் இதழ் ஒற்றி எடுத்தாள்.
அவனின் ஆசைக்கு மனைவியிடம் இருந்து வந்த முத்தம் போதவில்லை என்றாலும் மயங்கித் தான் போனது அவனின் மனம்!
“மயக்குற கீர்த்து… ஜஸ்ட் ஃப்ளாட் நான்” என்றவன் அவளின் கன்னத்தில் தன் மீசையின் அழுத்தத்தை ஆழமாய் விதைத்தான்.
அங்கிருக்கும் ரோஜாக் கூட்டத்திற்கு இணையாக குப்பென்று சிவந்து விட்ட மனைவியின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டவன்,
“இந்த ரோசும் அழகா சிவந்து பூக்குதே” என்று இரு கண்களையும் சிமிட்ட, முகம் செஞ்சாந்தாய் சிவந்து போனது அவளுக்கு.
மெல்ல அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், “இப்படி பண்ணீங்கன்னா அப்புறம் எனக்கு மண்டைக்குள்ள எந்த வேலையும் ஓடாது” என்றபடி சுகமாய் கண்களை மூடிக் கொண்டவளுக்கு, அவன் மார்பில் கதகதப்பு அத்தனை இதத்தை கொடுத்தது.
தன் மேல் சாய்ந்தவளை பனியாக தழுவிக் கொண்டவன், “மண்டைக்குள்ள வேற எதுவும் ஓட வேண்டாம். என்னை மட்டுமே யோசி!” என்றான் விஷமமாய்.
அவளுக்கோ “அய்யோ.. இப்படி அவஸ்தையூட்டுகிறானே…” என்று நாணம் மீதூறியது.
கூடவே அவன் சொன்னதை கேட்டு காதாலாய் புன்னகை தவழ்ந்தது இதழ்களில்.
‘ இனி இவரைத் தவிர்த்து வேற எதையும் யோசிச்ச மாதிரி தான்!’ என்றவள் அவன் மார்பில் மேலும் முகத்தை அழுத்திக் கொண்டாள்.
“ஓய்.. என்ன கீர்த்து?” என்றான் செவிகளில் அதரங்களை உரச விட்டபடி.
“ஒண்ணுமில்ல” என்றவளின் இதழ்களின் அசைவு அவன் மார்பினை வருட, இருவரையும் அந்த ஏகாந்த வேலை தென்றலாய் தாலாட்டியது.
தன்னிலை மறந்து சுகமாய் ஒருவரில் இருந்து மற்றொருவர் மீள விரும்பாமல் ரோஜா கூட்டத்தின் மையத்தில் மையம் கொண்டிருந்தனர்.
தென்றல் தாலாட்ட, ரோஜா கூட்டம் மௌனமான மணம் பரப்ப, இருவருக்கும் இடையே இடைவெளிகளின்றி ஆத்மார்த்தமான அணைப்பு!
அன்றைய தினத்தின் தாக்கம் சிறிதும் குறையாமல் இப்போதும் கணவனின் தோள் சாய்ந்தபடி அமர்ந்தவளுக்கு மனதிற்குள் அத்தனை மகிழ்வு!
“நீங்க கீழ போங்க. நான் ரோஸ்லாம் பறிச்சு முடிச்சிட்டு வரேன்” என்றவளை தனியே விடாமல் தானும் அவளோடு பேசியபடி மலர்களை பறிக்க உதவி செய்தான்.
இருவரும் பேசியபடி ரோஜாக்களை ஒவ்வொன்றாக பறிக்க பேச்சில் இடையே சதீஷ் மற்றும் மதிஷாலினி குறித்த பேச்சும் இடையிட,
“சதீஷ் என்னங்க சொல்றார்? இப்பவும் அதே பதில் தானா?” என்று கீர்த்தன்யா கணவனிடம் கேட்க நீண்ட பெரு மூச்சை மட்டுமே பதிலாக கொடுத்தான் சர்வேஷ்வரன்.
அதிலேயே தெரிந்து போனது அவளுக்கு இன்னும் சதீஷின் மனம் மாறவில்லை என்று! மனைவியிடம் சதீஷ் மற்றும் மதிஷாலினி விஷயத்தை பகிர்ந்து இருந்தான் சர்வேஷ்வரன்.
அது மட்டுமின்றி அன்று ஹோட்டலில் சதீஷிடம் பேசிய பின்னர் வீட்டில் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய படுத்தப் பட்டது.
சக்ரவர்ஷினி கூட சதீஷிடம் “அத்தை தான் சதீஷ் ண்ணா டேன்ஜர். ஆனா ஷாலு சாஃப்ட் டைப் தான்” என்று சொல்லிப் பார்க்க,
சதீஷோ “சுகரு… நான் ஒத்து வராதுன்னு சொல்றதே அந்த டேஞ்சர் பார்ட்டியை நினைச்சு தான். இதெல்லாம் நடக்குற காரியமா? நடந்தாலும் நமக்கு தேவை இல்லாத சங்கடமும் சண்டையும் தான் அத்தையால காலம் முழுக்க வரும். நினைச்சாலே தலை சுத்துது” என்றான் அவளிடமும்.
இன்பவள்ளி தான் இரண்டாம் மகனின் இந்த முடிவில் நொந்தவள்ளி ஆகிப் போனார். அவன் பக்க நியாயமும் வாதமும் அவருக்குப் புரிந்தது தான்!
ஆனால் அன்று தன்னிடம் உறுதியாக தன் முடிவினை சொன்ன மதிஷாலினியின் முகமே அவர் கண் முன் வந்து வந்து சென்றது. உறுதியாக சொல்லி இருந்தாலும் அவளின் பயத்தையும் அன்று கண்டிருந்தாரே!
எனவே மகனை கரைக்கும் முயற்சியில் இறங்க முடிவு செய்தவர் “டேய்.. சதீஷா அவ ரொம்ப உன்னை விரும்புறாடா. உனக்கு ஏத்த ஜோடி கூட. பக்கத்தில நிக்க வச்சு கற்பனைல பாத்தப்ப எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா?” என்று இன்பவள்ளி உருக்கமாய் பேச, அன்னை சொன்னதை கேட்டு கடுப்பு தான் வந்தது சதீஷ்வரனுக்கு!
“இன்பூ டார்லி….. என்ன ஜோக் காட்டுறியா?” என்று பல்லைக் கடித்தவன்,
“என்ன சொன்ன? கற்பனைல நிக்க வச்சு பாத்தப்ப நல்லா இருந்ததா?” என்றவன், “அதை தான் நானும் சொல்றேன். கற்பனைல வேணும்னா சூப்பரா இருக்கும். நிஜத்துல சொதப்பல் தான். இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் இன்பூ இப்படி சொல்ற?” என்று சலித்தவன்,
“ஆளை விட்ருங்க. இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம். என்னைக்கு கேட்டாலும் என் முடிவு மாறாது மாறாது மாறாது!” என்று முடிவாக கூறியவன் அன்னையின் முகம் சுருங்கவும் அதை தாங்கிக் கொள்ளாமல் அவரின் கன்னம் பற்றி கொஞ்சியபடி,
“டேய்.. அப்ப ஷாலு..” என்றவர் பாவமாக கேட்க, அன்னை கேட்ட விதத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவனுக்கு.
இத்தனை தூரம் வீட்டாட்கள் அனைவரும் அவளுக்காய் பேசும் போதே புரிந்தது அவனுக்கு! எத்தனை தூரம் தன்னை நேசிப்பதை அன்னையிடம் பதிவு செய்து விட்டுப் போய் இருக்கிறாள் என்று.
“அம்மா…. இவளோ தூரம் சொல்றேன். திரும்பியும் ஷாலுன்னா என்ன பண்ணுவேன் நான்?” என்று குரல் மாற சொன்னவன், “அன்னைக்கு அவ உங்க கிட்ட பேசும் போதே அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி உங்களை யாரு பேசச் சொன்னா? இப்ப பாருங்க. எல்லாரும் அவளுக்காக என்னை கன்வின்ஸ் பண்ணப் பாக்குறீங்க? அப்ப நான் சொல்றது உங்க யாருக்கும் புரியல. அப்படித் தானே?” என்று கோபமாக கேட்டு விட, இன்பவள்ளிக்கே இளைய மகனின் இந்தக் கோபம் கண்டு திகைப்பு தான்.
அனைவரும் ஹாலில் கூடி இருக்கும் போது தான் அவர்கள் பேசிக் கொண்டிருக்க தம்பியின் பேச்சைக் கேட்ட சர்வேஷிற்கு அவன் முடிவு மாறுவது கடினம் என்று புரிந்து போனது.
அவனின் விருப்பமின்றி என்ன செய்ய முடியும்? விருப்பமின்றி செய்யக் கூடிய காரியமா கல்யாணம்!!!! இல்லையே!!!!!
அவன் மனமுவந்து மணந்து கொள்கிறேன் என்று சொன்னால் தானே அனைவருக்குமே திருப்தி! அந்த வாழ்க்கையை வாழப் போகும் அவனுக்குமே திருப்தி!
இப்படி அவனிடம் தாங்கள் ஒவ்வொருவராக வலியுறுத்தும் போது அவனை கட்டாயத்தின் பிடியில் சென்று நிறுத்துவது போலாகிறது என்பதை உணர்ந்தவன்,
“அம்மா விட்ருங்கமா. இதுக்கு மேல நீங்க பேசினீங்கன்னா அவனை ரொம்ப கட்டாயப் படுத்துற மாதிரி இருக்கும்” என்றவன்,
“எல்லாரும் அவன் கிட்ட ஷாலினிக்காக பேசிப் பாத்தாச்சு. அவன் முடிவு இது தான்னு சொன்னப்புறமும் அவனை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றதுல எந்த அர்த்தமும் இல்ல. விடுங்க. ஷாலினிக்கு அத்தை பாக்குற பையன் தான் மாப்பிள்ளைன்னா அதை மாத்த நாம யாரு? நம்மளால முடிஞ்சதை நாம செஞ்சாச்சு. இதுக்கும் மேல நம்ம கைல எதுவும் இல்ல” என்றான் தம்பியை பார்த்துக் கொண்டே.
அண்ணன் தனக்காய் யோசித்து பேசியதில் அகம் மகிழ்ந்து போக “தாங்க்ஸ் ண்ணா” என்றவன் “இதுக்கு மேல இந்தப் பேச்சு வேண்டாம் ண்ணா. எல்லாருக்கும் சங்கடம் தான்” என்றான் அனைவருக்கும் பொதுவாக சொல்லும் விதத்தில்.
அன்றிலிருந்தே சின்ன மகனுடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்தார் இன்பவள்ளி. ஆனால், அவனா விடுவான்?????
இன்பூ இன்பூ… என்று ஆயிரம் இன்பூக்களை வாரி இறைத்து அவரை மலை இறக்கி இருந்தான். அவனோடு சமாதானம் ஆகி விட்டாலும் என்னவோ போலிருந்தது இன்பவள்ளிக்கு.
சதீஷிற்கு மதிஷாலினி மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் மனம் நம்பிக்கையாக நினைக்க, கணவனிடம் சொல்லி அவனிடம் மீண்டும் ஒரு முறை பேசிப் பார்க்கச் சொன்னார் இன்பவள்ளி.
அவ்வப்போது வடிவேலன் மகனிடம் ஹோட்டலில் வைத்து அவனின் முடிவில் மாற்றம் இருக்கிறதா என்று கேட்டால் அவனின் பதிலில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.
விதி தான் இதற்கு தீர்வினை சொல்ல வேண்டும் என்று வடிவேலனும் அதற்கடுத்து மகனிடம் கேட்கவில்லை. நாட்களும் ஓடி விட, இதோ இன்றைய நாள் வரை சதீஷ்வரன் முடிவில் மாற்றம் இல்லை தான்!
சொல்லப் போனால் இந்த விஷயம் குறித்தே மறந்து போயிருந்தான் அவன்! அவனைத் தவிர்த்து அனைவரும் இந்த விஷயத்தை புறந்தள்ள முடியாமல் வளைய வந்து கொண்டிருந்தனர்.
இப்போது மனைவி அதைப் பற்றி கேட்டதும் பெரு மூச்சை விட்டுக் கொண்டு “அவன் முடிவை தான் தெளிவா சொல்லிட்டானே கீர்த்தி!” என்றான்.
அதைக் கேட்ட கீர்த்தன்யாவிற்கும் “அதானே” என்று தான் தோன்றியது. “அந்தப் பொண்ணு தான் ரொம்ப பாவம் சர்வா. சதீஷை மறந்து இன்னொரு லைஃப் அக்சப்ட் பண்ணிக்கணும். அதுவும் அவ்ளோ ஈஸி இல்ல” என்றவள்,
“அதே சமயம் நீங்க சொன்ன மாதிரி சதீஷையும் நாம ரொம்ப ஃபோர்ஸ் பண்ண முடியாது!” என்றவள், “இது எங்க போய் முடியும்னு நினைச்சாலே ஒரு மாதிரி திக் திக்னு இருக்கு” என்றாள் தலையை உலுக்கியபடி.
“அதுக்கு அப்புறம் மதிஷாலினி கிட்ட அத்தை பேசினாங்களா? அவளுக்கு எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, “எதுவும் பேசின மாதிரி தெரியல கீர்த்தி. பேசி இருந்தா அம்மா நிச்சயம் சொல்லி இருப்பாங்க” என்றவன்,
“பாப்போம். எப்படியும் அத்தை மாப்பிள்ளை பாத்துட்டா இந்தப் பிரச்சனை எதோ ஒரு ரூபத்துல முடிவுக்கு வரும்” என்றவன், “பட், நத்திங் இஸ் கோயிங் டூ பி ஈஸி! பாக்கலாம்” என்றான்.
கணவனின் பேச்சில் இருந்த சஞ்சலத்தை உணர்ந்தவள் நந்தவனமாய் இருக்கும் தன் புகுந்த வீட்டில் எந்த ஒரு புயலும் வீசி விடக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டாள்.
ஆனால், முருகன் புன்னகையோடு அவர்களை சோதிக்க காலத்தை வகுத்திருந்தார் போலும்! அவளின் வேண்டுதலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இருந்தது அடுத்து நிகழ்ந்தவை ஒவ்வொன்றும்!