அன்று மாலை அனைவரும் இல்லம் வந்ததும் இவ்விஷயத்தை இன்பவள்ளி பகிர்ந்து விட “சொல்லியாச்சு தானே ம்மா. இனி அவ புரிஞ்சு நடந்துகிட்டா நல்லது” என்றதோடு முடித்துக் கொண்டு அவனறைக்கு எழுந்து சென்று விட்டான் சதீஷ்.
அவனின் அக்கறையற்ற பேச்சைக் கேட்டு அனைவருக்கும் அதிருப்தி தான் என்றாலும் இன்பவள்ளி நொந்தே போனார் மகனின் இந்த பேச்சில்.
“என்னங்க இவன்? இப்படி பேசுறான்? ஷாலினி நிலமைய என்னால சொல்ல முடியலங்க. இன்னைக்கு பேசும் போது அவ்ளோ கலங்கி போய் பேசுனா” என்றார் வேதனையுடன்.
“அந்த மாப்பிள்ளை வீடு என்னைக்கு வராங்களாம்?” என்று வடிவேலன் விசாரிக்க, “நாள கழிச்சு வராங்கலாம். வெள்ளிக் கிழமன்னு சொன்னா” என்றவர்,
“நாளைக்கு நாம வேணும்னா போய் உங்க தங்கச்சி கிட்ட பேசிப் பாக்கலாமா?” என்று கேட்க,
“என்னன்னுமா கேட்பீங்க? என் சின்ன பையனுக்கு உங்க பொண்ணை கொடுங்கன்னா?” என்ற சர்வேஷின் கூற்றில் இன்பவள்ளியின் முகம் கசங்கி விட்டது.
உண்மை தானே! என்னவென்று கேட்க? சதீஷ் ஒப்புக் கொண்டு ஒத்துழைத்து இருந்தால் வளர்மதியிடம் சென்று ஸ்திரமாக பேசலாம்! அப்படிப் பேசினாலே வளர்மதியின் ஆட்டம் தாங்க முடியாததாக தான் இருக்கும். இந்த நிலையில் என்ன வென்று போய்ப் பேச முடியும்?
ஷாலினிக்காக சென்று பேசினாலும் உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்? என்று கேட்டு அதற்கே பெரும் பிரளயத்தை கிளப்பி விடுவார் வளர்மதி.
“என்ன தான்டா செய்றது?” என்று இன்பவள்ளி மூத்த மகனிடமே வெறுத்துப் போய் கேட்க, “விட்ருங்கமா. இப்படித் தான் நடக்கும்னு சில விஷயங்கள் இருக்கும் போது அதை நம்மளால மாத்த முடியாது” என்றவன்,
“மதிஷாலினிக்கு நல்ல லைஃப் அமையனும்னு மட்டும் வேண்டிப்போம்” என்று அவனும் எழுந்து சென்று விட்டான்.
அடுத்த நாளில் அனைவரும் சற்று சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாலும் இன்பவள்ளியின் கவலை தோய்ந்த முகம் மட்டும் மாறவில்லை.
அதைக் கண்ட சதீஷிற்கு ஒரு மாதிரியாக இருக்க, “இன்பூ டார்லி.. இப்ப ஏன் பியூஸ் போன பல்பா இருக்க?” இன்று காலை உணவு அருந்தும் நேரம் அவரை வம்பிழுக்க,
“ஏதாவது பேசினா பாத்துக்க. அவ்வளவுதான் நீ” என்றவரின் குரலில் கிஞ்சித்தும் விளையாட்டுத் தன்மை இல்லை. மாறாக அத்தனை கோபம்.
அனைவருக்குமே இன்பவள்ளியின் இந்த கோபம் ஆச்சரியமூட்டியது. அவரின் கோபம் எல்லாம் கற்பூரம் போன்றது தான். உடனே காற்றில் கரைந்து போகும்.
ஆனால் இவ்விஷயத்தில் அப்படி இல்லை என்று அனைவருமே புரிந்து கொண்டனர். அன்னையின் இந்த கோபப்பேச்சை கண்டு சதீஷ் ஒரு நிமிடம் மௌனமாகிப் போனவன் மறு நொடியே,
“இன்பு டார்லிங் ஃபயர் மோட்ல இருக்காங்க போல. கூல் ஆனதும் டீல் பண்ணிக்கலாம்” என்றபடி உணவை உண்டு விட்டு அண்ணனோடு கிளம்பி விட்டான்.
காரில் சென்று கொண்டிருந்தபோது சதீஷ் அண்ணனின் முகத்தை நொடிக்கு ஒரு முறை பார்க்க, “சொல்லுடா என்ன விஷயம்?” என்றான் சர்வேஷ்வரன்.
“உங்களுக்கும் என் மேல கோபமா ண்ணா?” என்றான் அண்ணனிடம்.
“கோபம்லாம் இல்ல சதீஷ். இந்த விஷயத்துல உன்னோட இந்த ஒப்பினியனும் கரெக்ட் தான். ஆனா அம்மாவ நெனச்சா தான் வருத்தமா இருக்கு. இத்தன வருஷத்துல அவங்க இவ்ளோ டல்லாகி நான் பார்த்ததே கிடையாது. அப்பப்ப எதாச்சு பிரச்சனை வந்து சோர்ந்து போனாங்கன்னாலும் உடனே சரியாயிடுவாங்க. ஆனா இந்த முறை ரொம்பவே சோர்ந்து போயிட்டாங்க. இன்னும் அம்மா நார்மல் ஆகல சதீஷ். ஷாலினிய நினைச்சு ரொம்பவே கவலைப்படறாங்க” என்றான்.
“அண்ணா உங்களுக்கு இன்பு டார்லி பத்தி சரியா தெரியல. இன்னும் ரெண்டு நாள்ல பாருங்க. டல் டார்லி பிரைட் டார்லியா மாறிடுவாங்க” என்றவனுக்கு அப்போது தெரியவில்லை அடுத்த நாளில் இருந்தே அவர்கள் குடும்பம் மொத்தமும் கலை இழந்து போகப் போகிறது என்று.
வெள்ளிக் கிழமை பொழுது அமோகமாக விடிய, ஒவ்வொரு பிரச்சனையும் ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் குடும்பத்திற்குள் சம்பவிக்க தொடங்கி இருந்தது.
******************
வெள்ளிக்கிழமை காலை சுப முகூர்த்த வேளையில் வளர்மதியின் இல்லத்தில் மதிஷாலினிக்கும் அவர் பார்த்திருந்த மாப்பிள்ளைக்கும் பெண் பார்க்கும் வைபவத்தோடு சேர்த்து நிச்சயமும் நடக்கவிருந்தது.
நடக்கவிருந்தது தான்! ஆனால் நடந்தேறவில்லை! மதிஷாலினி நடத்தவிடவில்லை!
அன்னையிடம் சொல்ல தைரியம் இல்லாதவள், வந்திருந்த அனைவரின் முன்பும் தலை குனிந்தபடி “எனக்கு இந்த நிச்சயத்தில விருப்பமில்ல. என் மாமாவோட ரெண்டாவது மகனை விரும்புறேன். அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று பொட்டென தன் மனதில் உள்ளதை உடைத்திருந்தாள்! கூடவே, வந்திருந்தோரின் முன்பு வளர்மதியின் கௌரவத்தையும், மரியாதையையும்!
மாப்பிள்ளை வீட்டார் இதனை துளி கூட எதிர் பார்த்திருக்கவில்லை. அவளைப் பெற்றவர்களான வளர்மதியும் ஜீவராஜனுமே இதனை எதிர்பாராமல் இருக்க, வந்திருந்த புதிய நபர்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது அவளின் பேச்சு!
அதுவும் அவளே முன் வந்து அவளின் முடிவினை சொல்லி விட, வந்திருந்தவர்கள் அவரவரின் கருத்தை பேச ஆரம்பித்து விட்டனர்.
“என்ன இது? பொண்ணே இப்படி சொல்றா?”
“அவ விருப்பத்தை கேக்காமையா கல்யாணம் பேசுவீங்க?”
“என்ன பெத்தவங்க நீங்க? அதுவும் சொந்தத்துலயே மாப்பிள்ளை இருக்கும் போது ஏன் நீங்க வெளிய மாப்பிள்ளை தேடி இருக்கீங்க?”
“பொண்ணுக்கு எதுவும் குறையா?”
“பொண்ணோட முகத்தை பாத்தாலே தெரியலையா? கலகலன்னே இல்ல. கண்ணெல்லாம் கலங்கி போய் இருக்கு. இவுங்க கட்டாயப் படுத்தி தான் சம்மதிக்க வச்சு இருப்பாங்க போல” என அனைவரும் அவரவரின் கருத்தை முன் வைத்து பேச ஆரம்பித்து விட்டனர்.
ஒரே சலசலப்பாகி விட, மாப்பிள்ளையின் தாயார் வேறு ஏக வசனத்தில் பேசி வளர்மதிக்கு தான் “அக்கா” என்று நிரூபித்து இருந்தார்.
“படிக்கிற பொண்ணுன்னு சொன்னப்பவே கொஞ்சம் நெருடலா இருந்தது எனக்கு. இருந்தாலும் பொண்ணு நல்லா லட்சணமா இருக்காளேன்னு தான் ஒத்துக்கிட்டேன். இங்க வந்து பாத்தா உங்க பொண்ணு நான் மாமா பையனை விரும்புறேன்னு திண்ணக்கமா வந்து சொல்றா. கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திறீங்களா? என்ன மனுசங்க நீங்க? தட்டு மாத்த வர சொல்லிட்டு இப்ப பொண்ணை விட்டு இப்படி பேச சொல்லி இருப்பீங்க போல? எவ்ளோ தைரியம்? நாங்க என்ன ஈனாவானாவா?” என்று வாய்க்கு வந்த படி அவர் பேச,
மகள் செய்த காரியத்தில் அதிர்ச்சியில் சிலையென உறைந்து போய் இருந்த வளர்மதி அவர் பேச்சைக் கேட்டதும் பொங்கி விட்டார்.
உனக்கு நான் எவ்விதத்திலும் சலைத்தவள் அல்ல என்று வளர்மதியும் அவருக்கு இணையாக இறங்கி பேச ஆரம்பித்து விட, பெரிய பஞ்சாயத்தில் சென்று நின்றது அந்த ‘தட்டு மாற்றும்’ வைபவம்!
ஒரு வழியாக வந்திருந்த மாப்பிள்ளையின் தாயாரை அவரின் சொந்த பந்தங்கள் அடக்கி கூட்டிச் சென்றனர். செல்லும் போது அவர் விட்ட சாபங்களும், தூற்றலும் மதிஷாலினியிடம் தங்கி விட்டுச் சென்றன.
ஒரு வழியாக ஜீவராஜனும் தன்னால் முடிந்த மட்டும் மனைவியை அவர்களுடனான சண்டையில் இருந்து தடுத்திருந்தார். ஆனாலும் வளர்மதி தன் சுயரூபத்தை காட்டாமல் இருக்கவில்லை.
அனைவரும் கிளம்பியதும் வீடே பெரும் நிசப்தத்தில் மூழ்க, மதிஷாலினியின் விசும்பல் சத்தம் கேட்ட அடுத்த நொடி மகளிடம் வளர்மதியின் உக்கிரமான பார்வை திரும்பியது!!!!!!!