அசைவற்று நின்றிருந்த கீர்த்தன்யாவை பார்க்கவே இந்திராவால் முடியவில்லை. “கீர்த்தி.. அவுங்க குணமே இப்படி தான்மா. நீ கலங்காத. சர்வேஷ் தம்பிக்கு போன் போட்டு எல்லாத்தையும் சொல்லிடு. மத்ததை தம்பி பாத்துக்கும். நீ கவல பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் கீர்த்தன்யா சொன்னதை கேட்டு திகைத்து விட்டார்.
“கீர்த்தி… என்னமா இது.. இதுக்குப் போய்.. வேண்டாம்மா… வள்ளியம்மா சாய்ந்திரம் வந்திருவாங்க. வர்ஷினி பாப்பாவும் வந்திடும். இன்னும் அர பொழுது தானே. அது வரை நான் கூட இருக்க போறேன்” என்றவர் எவ்வளவோ சொல்லிப் பார்க்க அதனை எல்லாம் கேட்கும் மன நிலையில் கீர்த்தன்யா இல்லை!
“ப்ளீஸ் க்கா.. என்னால முடியாது. நான் கிளம்புறேன். எப்படியும் அவுங்க வர நாலு நாள் மேல ஆகும்! என்னால.. என்..என்னால அது வரை சமாளிக்க முடியாது இங்க. அவுங்க இல்லாம…” என்று வெடித்த அழுகையுடன் சொன்னவள், “அத்தை கிட்ட மட்டும் போன் பண்ணி சொல்லிட்டு கிளம்புறேன்” என்றாள்.
“எனக்கு இங்க இனிமேல் தனியா இருக்க முடியல இந்திராக்கா. நான் அவுங்க வந்ததும் வரேன். இப்ப அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்” என்றிருந்தாள் அவரிடம்.
இந்திராவிற்கு தாளவில்லை. நொந்து போய் பேசும் அவளின் தோற்றத்தை கண்டு கவலை கொண்டவர் “சர்வா தம்பிக்கு தெரிஞ்சா கோபப்படுவாருமா… நீ இரேன்” என்று கெஞ்சிப் பார்க்க கிஞ்சித்தும் அசையவில்லை கீர்த்தன்யா.
அவளுக்கு இப்போது அதிகம் தாயின் அரவணைப்பு வேண்டியதாய் இருந்தது. கணவனும் இல்லாத நிலையில் மேலும் அங்கே ஒரு நொடி கூட இருக்கப் பிடிக்கவில்லை. வளர்மதி வீசிச் சென்ற வார்த்தைகள் இன்னுமே நெருஞ்சி முள்ளாய் மனதை தைக்க கிளம்புவதில் குறியாய் இருந்தாள்.
கெஞ்சிய இந்திராவிடம் முடியவே முடியாது என்று சொல்லி விட்டு இன்பவள்ளிக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டே இருந்தது. ஆனால், ஏற்கப்படவில்லை! இரண்டு மூன்று முறை முயற்சித்து பார்க்க அழைப்பு ஏற்கப் படாததும் “அத்த கல்யாண வீட்ல இருக்கதால போன் சவுண்ட் கேக்கல போல இந்திராக்கா. நீங்க சொல்லிடுறீங்களா” என்க, இந்திரா மனதே இல்லாமல் சரி என்றார்.
தான் இருக்கும் நிலையில் பேருந்தில் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தவள், வீட்டில் மற்றொரு கார் டிரைவர் இருக்க அவரோடு கிளம்பி விட்டாள். அவர் காரை உயிர்ப்பித்ததுமே “கொஞ்சம் ஸ்லோவா போங்கண்ணா..” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் கிளம்பியதும் இந்திரா மீண்டும் இன்பவள்ளிக்கு அழைக்க, அப்போதும் அழைப்பு ஏற்கப் படவில்லை. “ஐயோ.. என்ன பண்ணுவேன். இப்படி இந்த பொண்ணு கிளம்பி போய்டுச்சு. அம்மாவும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க” என்று புலம்பியவர் சக்ரவர்ஷினிக்கு அழைத்தார்.
கல்லூரியில் ப்ரேக் டைமில் இருந்தவள் வீட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் புருவம் சுருக்கியபடி அழைப்பை ஏற்றாள்.
“வர்ஷினி பாப்பா… நான் இந்திரா பேசுறேன்” என்றதும்
“சொல்லுங்க இந்திராக்கா. என்ன இப்ப கூப்பிட்டு இருக்கீங்க?”
“அது வந்து பாப்பா.. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவர் குரலில் இருந்த பதட்டத்தை அறிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த தோழிகளிடம் இருந்து தள்ளி வந்து “என்ன ஆச்சு அக்கா? ஏன் இவளோ பதட்டமா பேசுறீங்க” என்று விசாரிக்க, “நான் என்னன்னு சொல்லுவேன்” என்று புலம்பியபடி ஆரம்பித்தவர் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடிக்க வாயடைத்து போனாள் சக்ரவர்ஷினி.
“இந்திராக்கா… என்ன சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள், “அம்மா கிட்ட சொன்னீங்களா? அண்ணி அண்ணாக்கு போன் பண்ணாங்களா?” என்று வரிசையாக கேட்க,
“ஐயோ எவ்வளவோ சொன்னேன்மா.. சர்வா தம்பிக்கு போன் போடுன்னு. கீர்த்தி கேட்கவே இல்ல. வள்ளி அம்மாக்கு போன் பண்ணுச்சு. ஆனா அம்மா எடுக்கல. என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிடுச்சுமா. டிரைவர் தான் கூட்டி போய் இருக்கார். எனக்கு ஒண்ணுமே புரியலமா. நானும் வள்ளி அம்மாக்கு கூப்பிட்டு பாத்தேன். அம்மா எடுக்கல. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம உனக்கு கூப்பிட்டேன்” என்றார்.
“சரி இருங்க நான் அம்மாக்கு கூப்பிடுறேன்” என்றவள், “இல்ல.. முதல்ல அண்ணிக்கே கூப்பிடுறேன்” என்று கீர்த்தன்யாவிற்கு அழைத்தாள். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்று வர மீண்டும் இந்திராவிற்கு அழைத்து “அக்கா.. அண்ணிக்கு கால் போகல. நான் அண்ணாக்கே கூப்பிட்டு விஷயத்தை சொல்றேன்” என்றவள் சர்வேஷ்வரனுக்கு அழைத்தாள்.
ஒரு நொடியில் ஏற்றவன் “வர்ஷி.. ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். காயம் ஆனவங்கள்ல ஒருத்தர் ரொம்ப சீரியஸா இருக்கார். அவருக்கான ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு. நானே உனக்கு திரும்ப கூப்பிடுறேன்” என்று அவசரமும் அந்தரமுமாக அவன் பேச, சக்ரவர்ஷினிக்கு தான் சொல்ல வந்ததை சொல்லவே முடியவில்லை அவனின் பரபரப்பில்.
“எதுவும் முக்கியமான விஷயமா வர்ஷி..” அத்தனை பரபரப்பிலும் தங்கையின் பின் தங்கிய குரலை கணித்து கேட்க, “அது அண்ணா… வீட்ல…” என்று அவள் ஆரம்பிக்க அங்கே டாக்டர் வந்து விட்டார் அவனிடம் பேச.
“டாக்டர் வந்துட்டார் வர்ஷி. உனக்கு அப்புறம் கால் பண்றேன். பேசலாம். இப்ப முடியாது” என்று சொல்லி விட்டு அவளின் பதிலிற்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
அவளுக்கும் அண்ணனின் சூழ்நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் சென்றிருக்கும் காரியமும் பெரியது தான். வீட்டில் நடந்த விஷயமும் மிகப் பெரியது தான்.
அழைப்பை துண்டித்ததும் மீண்டும் அன்னைக்கு அழைத்துப் பார்த்தாள். இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டு இன்பவள்ளியும் “சொல்லு வர்ஷி…” என்க, “அம்மா ஃபன்ஷன் முடிஞ்சதா? கிளம்பியச்சா நீங்க?” என்று கேட்க,
“ஏன்டி இவளோ அவசர அவசரமா பேசுற. அப்படி என்ன தல போற விஷயம்” என்று சாவகாசமாக பேசிய இன்பவள்ளி “இனிமேல் தான் கிளம்பனும்” என்றார்.
“ஐயோ அம்மா..” என்ற சக்ரவர்ஷினி “சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வாங்க முதல்ல” என்க, “என்னடி இவளோ டென்ஷனா பேசுற?” இன்பவள்ளிக்கு மகளின் பதட்டமான பேச்சில் ஒன்றும் விளங்கவில்லை.
“அம்மா… உங்களுக்கு இந்திரா அக்கா, அண்ணி கூப்பிட்டு இருக்காங்க. பாத்தீங்களா?” என்று கேட்க, “இல்லையே வர்ஷி…” என்றவர் ஒரு முறை மொபைலை சரி பார்க்க எண்ணற்ற அழைப்புகள் வீட்டு எண்ணில் இருந்தும் கீர்த்தன்யாவிடம் இருந்தும் வந்திருப்பதை கண்டு,
“ஆமா வர்ஷி.. ஏன் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கூப்பிட்டு இருக்காங்க?” என்றவர் “எனக்கு மொபைல் சவுண்ட் கேட்கல” என்க, அம்மா..அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்கமா…” என்றதும் இன்பவள்ளிக்கு திக்கென்று இருந்தது.
“என்னது வளர் அண்ணியா?.. அவுங்க எதுக்கு? நாம யாருமே வீட்ல இல்லையே?” என்க, “ஐயோ அம்மா.. நாம இல்ல.. அண்ணி இருந்தாங்க தான” என்ற சக்ரவர்ஷினி இந்திரா சொல்லியவை அனைத்தையும் சொல்லி முடிக்க இன்பவள்ளிக்கு தலை கிறுகிறுத்து போனது.
“அம்மா.. அம்மா.. லைன்ல இருக்கியா?” என்று வர்ஷினி அந்தப் புறம் இருந்து கத்த, “வர்ஷி.. என்னடி இது?” என்று பேரதிர்ச்சியுடன் சொன்னவர், “நான் இப்பவே வீட்டுக்கு கிளம்புறேன்” என்று புறப்பட “என்னையும் கூட்டிட்டு போமா. நானும் வரேன்” என்றாள்.
நேராக கல்லூரிக்கு சென்று அவளையும் அழைத்துக் கொண்டு இல்லம் வந்து விட்டார் இன்பவள்ளி. அவர்கள் வந்ததும் இந்திரா பதட்டமாக “அம்மா கீர்த்தி கிட்ட எவ்வளவோ சொன்னேன் மா. போக வேண்டாம்னு.. ஆனா கிளம்பியே ஆகனும்னு கிளம்பிடுச்சு” என்றவர்,
“வளர்மதி அம்மா பேசுனது கொஞ்ச நஞ்சம் இல்லமா. அவ்வளோ பேசிட்டாங்க” என்றவர் இறுதியாக அவர் வன்மத்துடன் சொல்லியவைகளையும் தயக்கத்துடன் சங்கடத்துடன் சொல்லி முடிக்க, இருவருமே விக்கித்து போயினர்.
“ச்சீ.. என்ன பேச்சு இது! இப்படி எல்லாம் பேச முடியுமா” என்றார் இன்ப வள்ளி கண்ணில் நீர் வர ஆதங்கமும் கோபமுமாக. சக்ரவர்ஷினிக்கு முகம் கசங்கி விட்டது.
“ம்மா என்னமா இது? நம்ம வீடேறி வந்து இப்படி பேசிட்டு போய் இருக்காங்க. பாவம்மா அண்ணி” என்றவள், “அண்ணிக்கு கால் பண்ணேன். நாட் ரீச்சபில்னு வந்ததுமா” என்றாள்.
கலங்கி சிவந்த கண்களை துடைத்த இன்பவள்ளிக்கு துக்கம் பெருகியது. இப்படி நம் வீட்டில் வாழ வந்த பெண்ணை வளர்மதி அளவுக்கு அதிகமாக வஞ்சித்து பேசி இருக்க அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை அவரால்!
அங்கிருப்பவர்கள் யாரும் ஒரு சுடு சொல் கூட இதுவரை கீர்த்தன்யா மீது வீசியது இல்லை. எப்போதும் சந்தோஷமும் சிரிப்புமாக வலம் வந்த பெண் இன்று தங்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படி அவசர அவசரமாக கிளம்பிச் சென்றது மனதிற்கு அத்தனை ரணத்தை கொடுத்தது.
“எப்படி தாங்கினாளோ இந்த பேச்சை எல்லாம்” இன்பவள்ளி வேதனையுடன் சொல்ல, “சர்வா அண்ணாக்கு கூப்பிட்டேன்மா இதை சொல்லலாம்னு. அங்க டாக்டர் வந்துட்டாங்க பேச. காயம் பட்டதுல ஒருத்தவங்களுக்கு ரொம்ப சீரியஸான கண்டிசன் போல. பேசவே முடியல” என்றாள்.
“ஹ்ம்ம்.. காலைலயே அப்பா சொன்னார் வர்ஷி” என்றவர் “கீர்த்திக்கு கால் பண்ணா போகல. டிரைவருக்கு கால் பண்றேன்” என்று அவருக்கு அழைத்தார்.
“சொல்லுங்கம்மா” என்று அவர் சொன்னதும் கீர்த்தன்யாவிடம் கொடுக்கச் சொன்னார் இன்பவள்ளி. கண் மூடி இருக்கையில் சாய்ந்திருந்த கீர்த்தன்யாவிடம் அவர் இன்பவள்ளி அம்மா பேசுகிறார் என்று அழைபேசியை நீட்ட தயக்கத்துடன் வாங்கியவள் “அத்த…” என்றதும் மீண்டும் கண்கள் உடைபெடுத்து விட்டன.
“கீர்த்தி… எதுக்கு இந்த அழுக? ஏன் இப்படி பண்ண? நாங்க வர வரைக்கும் இருந்திருக்கலாம் தானே. நானும் வர்ஷினியும் வந்துட்டோம் வீட்டுக்கு. நீ திரும்ப வீட்டுக்கு வாடா” என்று சொல்ல,