தோட்டத்தில் அமர்ந்து மலர்களை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தன்யாவின் கவனத்தை தாயின் பரபரப்பான குரல் கலைத்தது.
“கீர்த்தி.. கீர்த்தி…” கிட்டத்தட்ட தெய்வானை ஓடியே வர, “ம்மா.. எதுக்குமா இப்படி ஓடி வரீங்க? அப்படி என்ன அவசரம்? பொறுமையா வரலாம் தானே!” என்றபடி அவரைப் பிடித்து நிறுத்த,
“அவசரம் தான்” என்றவர் சற்று மூச்சு வாங்கி விட்டு “மாப்பிள்ளை வந்திருக்கார்” என்றதும் கீர்த்தன்யாவின் கண்கள் மெல்லிய அதிர்ச்சியில் விரிந்தது.
“எப்பமா? இங்கயா?” நம்ப முடியாமல் கேட்டவள் தாய்க்கு பின்னே தெரிந்த கணவனின் வருகையில் அப்படியே நின்று விட்டாள்.
மகள் கண்டு கொண்டதையும் பார்த்த தெய்வானை “உன் கிட்ட இங்க வரத சொல்லலையா?” என்று கேட்க அவனைப் பார்வையால் தழுவிக் கொண்டே இல்லை என்று தலை அசைத்தாள்.
“சரி. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நீ இப்ப போய் அவரை கவனி” என்று மகளை அனுப்பி வைத்தவர் தானும் உடன் சென்றார்.
“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்ற தெய்வானை “இப்ப தான் வந்தீங்களா?” என்று விசாரித்து ஊமையாகி நின்றிருந்த மகளை ஒரு பார்வை பார்க்க, “வாங்க” என்று மெல்லிய குரலில் அழைத்தாள் அவனை.
அவள் அழைத்ததற்கு சிறு தலை அசைப்பை மட்டும் பதிலாக தந்தவன் தெய்வானையிடம் திரும்பி “திடீர்னு தான் கிளம்பி வந்தேன் அத்தை. கீர்த்திய நானே கூட்டிட்டு போலாம்னு” என்று சொல்ல, அவன் சொன்னதில் நெகிழ்ந்து போய் அவனைப் பார்க்க அவனோ ஒரு கடைக்கண் பார்வையை கூட அவளுக்கு கொடுக்கவில்லை.
அதில் முகம் கூம்பி விட்டாலும் “சொல்லவே இல்லையே நீங்க கூட்டிட்டு போக வரீங்கன்னு” என்று மெல்லிய குரலில் வரப் பெற்ற தைரியத்துடன் கேட்க அவளை ஒரு பார்வை அழுத்தமாய் பார்த்தவன், “நீ சொன்னியா?” என்றதும் கண்ணில் நீர் திரண்டு விட்டது அவளுக்கு.
ஒரு கேள்வி தான். நியாயமான கேள்வியும் கூட!
ஆனால் பதிலின்றி அவனை கண்ணீருடன் வெறிக்க மட்டுமே முடிந்தது அவளால்.
அதைக் கண்டு மேலும் கோபம் வரப் பெற்றவன் அதற்கு மேல் அவளிடம் பார்வையை திருப்பவில்லை. எங்கே தன் கோபம் அவளிடம் கரையுடைத்து விடுமோ என்று வாயை மூடிக் கொண்டான்.
தெய்வானை தான் அவனின் கோபத்தில் பயந்து போய் “மாப்பிள்ளை.. சின்ன பொண்ணு. எதோ தெரியாம பண்ணிட்டா. நானும் அவ இப்படி வந்ததும் கண்டிச்சு திட்டி தீர்த்துட்டேன். உங்க கோபம் நியாயமானது தான்” என்று பதட்டத்தில் அவனுக்கு விளக்கங்களை அடுக்கிக் கொண்டே போக,
“அத்த நீங்க பதட்டமாக வேணாம்” என்றவன் “நடந்த எதையும் ஒரு வார்த்தை கூட இப்ப வரைக்கும் இவ என் கிட்ட சொல்லாதது தான் வருத்தம். இவளோ நடந்து இருக்கு. சொல்லி இருக்கணும் தான” என்றவனின் குரல் கோபத்தை மறைக்க முடியாத அளவிற்கு இருந்தது.
“நேத்து பெரிய மாமாவும், மாமாவும் போன் பண்ணின போது எனக்கு ஒண்ணுமே புரியல. கடைசில அவுங்க கேட்கப் போய் தான் எல்லாம் தெரியும்” என்றவனிடம் அவ்வளவு ஆதங்கம்.
அவர்கள் கேட்கும் நிலைக்கு ஆகி விட்டதே என்று. போதாக் குறைக்கு தன்னிடம் பேசும்போது இருவருமே கலங்கிப் போய் மகளின் வாழ்வு எப்படி இருக்குமோ என்று பயத்துடன் பேசிய விதத்தை எண்ணி இப்போதும் வருந்தினான்.
“எனக்கும் மும்பைல சூழ்நிலை ரொம்ப கெடுபிடி தான். ஆனா இவளோ பெரிய அளவில பிரச்சனை ஆகி இருக்குன்னு சொன்னா அதை கண்டுக்க கூட முடியாத அளவுக்கு நான் வேலை பாக்குற ஆள் இல்ல. எதோ ஒரு ஆல்டர்னேஷன் பண்ணிட்டு வந்து இருப்பேன். இல்லையா அங்க இருந்தே சார்ட் அவுட் பண்ணி இருப்பேன். என்னால பண்ணி இருக்க முடியும். அதை விட்டுட்டு ஒரு வார்த்தை சொல்லல. மெசேஜ் கூடவா பண்ண முடியாது. அப்படியே கிளம்பி வந்திருக்கா இவ” என்றதும் கீர்த்தன்யாவிற்கு தாளவில்லை.
அவனின் வார்த்தைகள் மனதை பிசைந்தது. அவனிடம் சொல்லாமல் விட்டது எவ்வளவு தூரம் கணவனை பாதித்து உள்ளது என்று தவித்தவள் “அதில்லங்க நான்…” என்று ஆரம்பித்தவளை ஒரு பார்வை பார்த்தவன் “அப்புறம் பேசிக்கலாம் நாம” என்று பட்டென்று கத்தரித்து விட்டான் அவளுடனான பேச்சை.
அவளுடன் பேசவே கூடாது என்கிற முடிவோடு தான் அவன் வந்ததே. ஆனால் தெய்வானையின் முன்பு அந்த முடிவை முழுமையாய் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் மனைவியின் கலங்கித் தவித்த முகத்தை கண்டும் அவனின் கோபம் கரைய தான் இருந்தது. இழுத்துப் பிடித்து பேசிக் கொண்டிருந்தான் அந்த நொடி!
கீர்த்தன்யா குனிந்த தலை நிமிராமல் நிற்க, தெய்வானை கைகளை பிசைந்தார் என்ன சொல்வது என்பது போல். மருமகன் கோபத்தை மதிக்கத் தான் முடிந்தது அவராலும்.
இந்த இரு நாட்களாக கீர்த்தன்யா கலை இழந்த முகத்துடன் தான் வீட்டிற்குள் நடமாடினாள். மணிகண்டனும் நீலகண்டனும் கவனித்து என்ன விஷயம் என்று தெய்வானையை நச்சரித்து இருக்க அவரும் வேறு வழியின்றி அனைத்தையும் இருவரிடமும் சொல்லும் படி ஆகி விட்டது.
கேட்ட இருவருக்குமே பேரதிர்ச்சி. புகுந்த வீடு சென்ற நாளில் இருந்து எந்த ஒரு கவலையும் அவளை அண்டியது இல்லை என்று அறிந்து தான் இருந்தனர் இருவரும்.
அவர்களின் குடும்பம் மொத்தம் கீர்த்தன்யாவை தாங்கி இருக்க சர்வாவை கேட்கவே வேண்டாம். மகளின் முகத்தில் இருக்கும் நிறைவான புன்னகையும், மிளிரும் மகிழ்ச்சியும் அவர்களின் அழகான இல்லற வாழ்க்கையை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.
ஆனால் இப்போது வடிவேலனின் தங்கையின் ரூபத்தில் அதுவும் இப்படி ஒரு கீழ்த்தரமான பேச்சை எல்லாம் சகித்துக் கொள்ளவே முடியவில்லை இருவராலும். நீலகண்டன் தான் பெருந்தவிப்பிற்கு ஆளாகிப் போனார்.
“என் பொண்ணு பண்ணா.. நம்ம வீட்ல எல்லா பொண்ணும் அப்படி பண்ணி இருக்குமா? என்ன பேச்சு இதெல்லாம். தாங்க முடியல மணி” என்று தம்பியிடம் புலம்பி அழுதே விட்டார்.
“கீர்த்தி மவ ரொம்ப கலங்கி போய் இருக்கும் போல மணி. அதான் நம்ம வீடு தேடி வந்து இருக்கு. இல்லேன்னா இவளோ நாள்ல நம்மள தேடி வந்தது இல்ல தான” என்றவர்,
“நாம தான் ரொம்ப கண்டிச்சு கட்டுப்பாடா வளத்தோம். அடிக்கடி கோபப் பட்டு வார்த்தையால புள்ளைங்கல நோகடிச்சி இருக்கோம். ஆனா சம்மந்தி வீட்டு ஆளுங்க தங்கத் தட்டுல தான் வச்சு தாங்குறாங்க நம்ம பொண்ண. அது அந்த அம்மாக்கு பொறுக்கல. மனசுல வஞ்சத்த வச்சிட்டு இப்படி வந்து பேசிட்டு போய் இருக்கு” என்றவர்,
“இது இப்படியே தொடர்ந்தா என்ன பண்ண முடியும். விட்டா சரி வராது மணி. மாப்பிள்ளை கிட்ட பேசுவோம்” என்க, “என்னனு அண்ணே பேசுறது… இவளோ அசிங்கமா பேசி இருக்காங்க அந்த அம்மா. சம்மந்தியோட தங்கச்சி வேற. என்னனு கேட்க முடியும்?” என்று நொந்து போய் சொன்னவர், “ஆனா கீர்த்தி இப்படி கிளம்பி வந்தது சரி கிடையாதுண்ணே. நாளைக்கு நான் போய் அவளை விட்டுட்டு வந்திடுறேன்” என்றார்.
“இன்னும் மாப்பிள்ளை மும்பைல இருந்து வரல. சம்மந்தியும் அங்க தான் இருக்காரு. அவுங்களுக்கு இன்னும் கீர்த்தி இங்க வந்தது தெரியாதுன்னு தானே தெய்வானை சொன்னா” என்றவர்,
“மொதல்ல அவுங்களுக்கு சொல்லணும். சொல்லிட்டு நாளைக்கு நாம கொண்டு போய் விட்டுட்டு வரலாம்” என்று நீலகண்டன் பிடிவாதமாய் சொல்ல,
“நாம கூப்பிட்டா தொந்தரவு பண்ற மாதிரி ஆகிடாதா” என்று தயங்கினார் மணிகண்டன்.
“இப்ப தான் ரெண்டு நாள் ஓடிப் போச்சே. எப்படியும் எல்லாம் சரி பண்ணி இருப்பாங்க” என்ற நீலகண்டன் “இல்லேன்னாலும் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பேசிடலாம். பேசத் தானே வேணும்” என்று விடவில்லை அவர். மணிகண்டனும் சர்வேஷிற்கு அழைத்து விட்டார்.
மும்பையில் அனைத்து வேலைகளையும் ஓரளவு முடித்து இருந்தார்கள். காயம் கொண்டவர்களை காப்பாற்றி இருக்க சற்றே ஆசுவாசம் மூவருக்கும். ஹோட்டலில் இருந்த சர்வேஷ் மாமனாரின் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் புருவம் சுருக்கியபடி “கீர்த்தி அப்பா கால் பண்றார்….” என்று யோசனையுடன் அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க மாமா..” என்றவன் “நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க,
“மாப்பிள்ளை.. நல்லா இருக்கோம்.. “வேலையா இருக்கீங்களா?” என்று கேட்க,
“இல்ல மாமா. ஃப்ரீயா தான் இருக்கேன்” என்று மும்பைக்கு வந்திருந்த விஷயத்தை குறித்து சுருக்கமாய் சொன்னவன்,
“இங்க எல்லாம் கொஞ்சம் சரி பண்ணியாச்சு. ரெண்டு நாள்ல கிளம்பி வந்திடுவோம்” என்றவன் அவர் எதோ சொல்ல வருவதை உணர்ந்து,
“சொல்லுங்க மாமா… என்ன விஷயம்? திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க? குரல் வேற மாதிரி இருக்கு?” என்று கேட்டதும் மணிகண்டனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
அந்த நொடி மாப்பிள்ளையிடம் நடந்ததை சொல்ல முடியாமல் வேதனை மனதைக் கவ்விக் கொண்டது. யாருமே சொல்லாத நிலையில் தான் மட்டும் சொல்லி எதுவும் பிரச்சனை ஆகி விடுமோ என்று வேறு ஒரு புறம் பயம் வந்து விட சட்டென்று மௌனமாகி விட்டார்.
“மாமா.. என்ன ஆச்சு? லைன்ல இருக்கீங்களா?” என்று கேட்க “ஹான்… இருக்கேன் மாப்பிள்ள” என்றவர்,
“கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்” என்று திணற நீலகண்டன் போனை வாங்கி விட்டார் தம்பியிடம் இருந்து.
“என்ன விஷயம்.. ஏன் இப்படி தயங்குறீங்க?” என்று சர்வேஷ் புரியாத பாவனையில் பேச “நான் நீலகண்டன் பேசுறேன் மாப்பிள்ள. நல்லா இருக்கீங்களா?” என்று நல விசாரிப்பின் உரையாடல் முடிந்ததும்,
“மாப்பிள்ள.. நீங்க மும்பைக்கு போய்ட்டீங்க. இங்க நடந்தது உங்களுக்கு இன்னும் தெரியாது. அதை சொல்லத் தான் கூப்பிட்டோம்” என்றவர் “கீர்த்தி பொள்ளாச்சி வந்து ரெண்டு நாள் ஆச்சு” என்றதும்,
“ஏன் மாமா.. என்ன ஆச்சு கீர்த்திக்கு..?” என்றவன் சட்டென்று பதட்டத்துடன் கேட்க, “ஐயோ உடம்புக்கு எல்லாம் எதுவும் இல்ல மாப்பிள” என்றவர் “உங்க அத்தை கீர்த்திய பாத்து பேசிட்டு போய் இருக்காங்க” என்றதும் ஒரு நொடி திகைத்தவனுக்கு புரிந்து விட்டது எதோ பிரச்சனை என்று.
நீலகண்டன் அனைத்தையும் சொல்லி இறுதியாக வளர்மதி இழிவாக சொன்னதையும் சேர்த்து சொல்லிய போது அவர் குரல் உடைந்து போனது. கேட்டுக் கொண்டிருந்தவனோ தாடை இறுக உறைந்து போய் இருந்தான்.
“என் பொண்ணு ஓடிப் போனவ தான் மாப்பிள்ள. ஆனா, என் தம்பி பொண்ணுங்க சொக்க தங்கம். நாங்க கண்டிச்சு வளத்தோம். அந்த கண்டிப்புக்கு கட்டுப் படுற பொண்ணுங்க தான் அஞ்சு பேரும். ஆனா என்னைக்கும் எங்க மரியாதையை காப்பத்துற பொண்ணுங்க எல்லாரும். நாங்க கண்டிக்கிறது எதுக்குன்னு தெரிஞ்சு அதுக்கு ஒத்துழைச்சு எங்கள புரிஞ்சிக்கிட்டு வளந்த பொண்ணுங்க” என்றவர்,
“அப்படிப் பட்ட பொண்ணுங்கள உங்க அத்தை பேசின பேச்சு காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருக்கு மாப்பிள்ள” என்றவர் அடுத்து அவர் பேசியதையும் சொன்னார்.
“கீர்த்திய பாத்து ‘ஓடிப் போனவ வீட்ல இருந்து தான வந்திருக்க. நீயும் எவன் கூடையாவது கண்டிப்பா ஓடிப் போய் தான் வந்திருப்ப. உன்னைய எங்க கொண்டு போய் தள்ளுறதுன்னு தெரியாம என் அண்ணன் வீட்ட மயக்கி கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டாங்க. இனி இங்க இருந்து எங்க எவன் கூட ஓடிப் போக போறியோ…உன் அக்காளுங்க எல்லாம் அவஅவ புருஷன் கூட தான் இருக்காங்களா இல்ல.. அவுங்களும் ஓடிப் போய்ட்டாங்களான்னு புள்ளை கிட்ட கண்ட மேனிக்கு பேசி இருக்காங்க” என்று கலங்கிக் கொண்டே சொன்னவர்,
அனைத்தையும் கேட்டவன் பெரும் சீற்றத்துடன் கல்லென இறுகிப் போனான். கண்களை இறுக மூடித் திறந்தவனுக்கு கோபாவேசத்தில் மூச்சுக்கள் தாறு மாறாக வெளி வந்தது.
செவி வழி கேட்டதை உள்வாங்கி அதனை சகிக்கவே முடியாமல் போனவனின் உள்ளம் மனைவியை எண்ணி துடித்துப் போனது.
அதே நேரம் தன்னுடன் ஒரு வார்த்தை கூட இதனைக் குறித்து பகிர்ந்து கொள்ளாதவள் மேல் அத்தனை ஆற்றாமையும் கோபமும் பிறந்தது.
மணிகண்டன் போனை வாங்கி “மாப்பிள..” என்று கரகரத்த குரலில் சொல்ல சர்வேஷால் கேட்க முடியவில்லை.
இருவரையும் தான் முதல் முதலாக பார்த்து போது எத்தனை திடகாத்திரமாக பேசினார்கள். ஆனால், இன்று பெற்ற மகளுக்கும் பெறாத மகளுக்குமாய் இருவரும் பேசிய விதம் மனதை பிசைந்தது.
“கீர்த்தி இங்க வந்தது சரி கிடையாது தான் மாப்பிள. ஆனா எதோ தாங்க முடியாம கிளம்பி வந்துட்டா. தப்பு தான்” என்று மன்னிப்பாக சொன்னவர், “நீங்க வர இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னாங்க. நானும் அண்ணனும் நாளைக்கு கீர்த்திய கொண்டு வந்து விட்டர்ரோம்” என்றதும்,
“இல்ல மாமா. நானே நாளைக்கு பொள்ளாச்சி வரேன். வந்து கீர்த்திய கூட்டிட்டு போறேன்” என்றதும் அத்தனை நிம்மதியும் ஆசுவாசமும் பிறந்தது இருவருக்கும்.
“சரிங்க மாப்பிள்ள” என்றவரிடம் “இனி இப்படி நடக்காது மாமா. நீங்க கலங்க வேண்டாம்” என்று மட்டும் சொன்னவனின் குரலில் அத்தனை உறுதி!
அதுவே பெண்ணைக் கொடுத்தவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அவனே வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னதும் மனதை சூழ்ந்திருந்த பயமும் விலகி இருக்க, இனி இது போன்று பிரச்சனை எதுவும் வந்து விடக் கூடாது என்று வேண்டுதல் மட்டுமே இருவரிடமும்.
இதோ அவர்களிடம் சொன்னதை போல அவனும் நேரில் வந்து விட்டான் அவளை அழைத்துப் போகவென்று. அவர்களிடம் தன் வருகையை சொன்னவனுக்கு கீர்த்தன்யாவிடம் சொல்லவில்லை.
‘தன்னிடம் சொல்லி இருக்கலாமே…’ என்பதை தாண்டி ‘ தன்னிடம் கூட சொல்ல முடியவில்லையா’ என்று பெரிதான ஆதங்கம் அவள் மேல் விழுந்தது விட தவிப்புடன் தன்னை பார்வையால் கெஞ்சியவளை கண்டு கொள்ளவில்லை அவன்.
அவனின் வருகையை தெய்வானை மூலம் அறிந்து தோப்பில் இருந்து வீட்டிற்கு வந்த மணிகண்டனிடமும் நீலகண்டனிடமும் ஆறுதல் கூறியவன்,
“இனி எங்க அப்பாவோட தங்கச்சி எங்க வீட்டுக்குள்ள வர முடியாது மாமா. எல்லாம் சால்வ் பண்ணியாச்சு” என்று மட்டும் சொல்லிக் கொண்டான் அதிக விளக்கங்கள் கொடுக்காமல். அவர்களும் எதுவும் விளக்கமாக கேட்டுக் கொள்ளவில்லை.
ஏனோ முகம் பார்த்திராத அந்த வளர்மதியை நினைக்கக் கூட அருவருப்பு கொண்டனர் கீர்த்தியின் வீட்டினர்.