“கல்யாணத்துக்கு முன்னாடியே அத்த பேசுற ஆளு தான். ஆனா இந்த அளவுக்கு கேவலமா நடந்துப்பாங்கன்னு நினைக்கல. தேள் கொட்டுற மாதிரி பேசினாலும் கொஞ்சம் நல்லவங்க தான்ற அபிப்ராயம் இருந்துச்சு. இப்ப…” என்றவனின் முகத்தில் அத்தனை ஆசூயை!
செவி வழி கேட்ட தனக்கே இப்படி இருக்கும் போது நேரில் நின்று அனுபவித்தவளுக்கு நிச்சயம் ரணமாக தான் இருக்கும் இந்த நொடி வரை!
தன்னையும் கூடப் பிறந்தவர்களையும் இப்படி பேசிய நபரிடம் ஒரு வார்த்தை கூட திருப்பிக் கொடுக்காமல் நின்றிருந்தவள் மேல் கடுப்பு தான் வந்தது.
“அவுங்க பேசினா.. காதைப் பொத்திட்டு கேட்டுட்டு இருப்பாளா.. திருப்பி கொடுக்க வேண்டாம்” என்று பல்லைக் கடித்தான்.
மும்பையில் இருந்து வந்ததும் இந்திராவிடம் நடந்ததை விரிவாக கேட்டறிந்து மேலும் கொந்தளித்து போனான்.
வடிவேலனும் சதீஷும் மும்பையில் தான் இருந்தனர். மகனின் மூலம் விஷயம் கேள்வி பட்டதும் அவர்களுமே ஸ்தம்பித்து போனார்கள்.
வடிவேலன் முற்றிலும் தங்கையிடம் இதை எதிர்பார்க்கவில்லை. மனதிற்கு அத்தனை வருத்தமாக போனது. மதிஷாலினியின் விருப்பத்தில் ஆரம்பித்த பேச்சு இந்த அளவில் வந்து முடியும் என்று கனவிலும் நினைக்கவில்லை அவர்.
“இனி எந்த உறவும் வேண்டாம் சர்வா. இவளோ தூரம் வந்த பின்னாடி என்ன பேச்சு வார்த்தை” என்று அதிகமான வெறுப்புடன் சொல்லி விட்டார் வடிவேலன். சதீஷோ “எல்லாம் அவளால வந்தது…” என்று மதிஷாலினியின் மேல் கோபம் கொண்டான்.
சர்வேஷிற்கும் இனி வளர்மதியுடன் எந்த ஒரு உறவும் வேண்டாம் என்ற நிலையில் அன்னையிடமும் தந்தையிடமும் சில விஷயங்களை கலந்தாலோசித்து பேசி விட்டு நேராக வளர்மதியின் இல்லத்திற்கு சென்று பேச (?) வேண்டிய விஷயங்களை பேசி முடித்து தீர்த்து விட்டுத் தான் இங்கே வந்திருந்தான்.
இதோ அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் கோயம்பத்தூர் நோக்கி பயணமாக மௌனம் மட்டும் தான் அவர்களோடு இணைந்து பயணித்தது.
கீர்த்தன்யாவிற்கு நா எழவில்லை பேசுவதற்கு. முதல் முறையாக அவனின் கோபத்தை எதிர்கொள்பவளுக்கு அவனை எப்படி அணுகுவது என்று கூடத் தெரியவில்லை.
பிரதானமாக பயமே மனதை நிறைத்திருக்க தன் வேதனைகளை அவனிடம் கொட்ட வேண்டும் என்று காத்திருந்தவளுக்கு வார்த்தைகள் யாவும் உள்ளடங்கி போனது அவனின் இந்த மௌனத்தில்.
இடையில் ரெஸ்ட் ரூம் செல்ல ஹோட்டலில் காரை நிறுத்தியவன் அவளை ஒரு பார்வை பார்க்க, “இல்ல வீட்டுக்கு போகலாம்” என்று மட்டும் சொன்னாள்.
பெரு மூச்சுடன் மீண்டும் காரைக் கிளப்பியவனிடம் “சர்வா.. நான்…” என்று ஆரம்பிக்க அவனோ அவள் ஒருத்தி பேச முயற்சிப்பதை கண்டு கொள்ளாமல் பிஃப்த் கியருக்கு மாற்றி காரின் வேகம் கூட்டினான்.
அதனை கண்டு பதறியவள் “கொஞ்சம் ஸ்லோவா ப்ளீஸ்…” என்றதும் பதட்டத்தில் சொல்கிறாள் என்று எண்ணிக் கொண்டு வேகத்தை குறைத்து சீராக ஓட்டினான்.
சிறிது நேரம் கியர் மாற்றும் சத்தமும் ஹாரன் ஒலி மட்டுமே காரிற்குள் கேட்டது.
சற்று நேரத்தில் பேச வேண்டியவைகளை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு பெரும் தயக்கத்துடன் “சர்வா.. நான்…” என்று திக்கியவள் அவனின் இறுகிய முக பாவனையில் கண்ணீருடன் நிறுத்தி விட்டாள்.
என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை. அவனின் முகம் காட்டிய கடுமையில் பயந்து இறுக மூடிய வாயை இல்லம் வரும் வரை திறக்கவில்லை கீர்த்தன்யா.
வீடு வந்து சேர்ந்ததும் தான் ஒரு வித நிம்மதி அவளுக்குள். முகம் மாறாமல் எப்போதும் போல் தன்னிடம் பேசிய மாமியாரை கண்டு உள்ளம் குற்ற உணர்வில் தவிக்க “சாரி அத்த” என்றவளிடம்,
“அதெல்லாம் எதுவும் பேச வேண்டாம். முதல்ல போய் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்றதும் மீண்டும் கண்கள் கலங்கின.
முயன்று கட்டுப் படுத்திக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தவள் கணவனின் முகம் பார்க்க அவனோ இயல்பாய் போனை தூக்கிக் கொண்டு பால்கனி நகர்ந்து விட்டான்.
மௌனத்தை உடைக்காமல் தன்னிடம் இருந்து எட்ட நிற்பவனிடம் பேசவே அச்சம் கொண்டது உள்ளம்.
அவனோ வராத போன் காலை அட்டன் செய்து பேசுபவன் போல் பால்கனி வந்தவன் அறைக்குள் எட்டிப் பார்க்க கலங்கிய முகத்துடன் நின்று இருந்தவளை கண்டு “இப்ப கூட தானா வந்து பேசுறாளா.. சொல்றாளா..” என்று கடுகடுத்தவன்,
“கேட்டா பயம்னு சொல்லுவா… வரட்டும்.. அவளா எப்ப வந்து பேசுறான்னு பாக்குறேன்” என்றவன் அவளின் பக்கம் முகத்தை திருப்பவும் இல்லை. பேசவும் இல்லை.
மாலை கடந்து இரவு வரை இந்த நிலையே நீடிக்க மாடிக்கு சென்று விட்டான். மலர்களின் மத்தியில் நின்றவனுக்கு மனைவியோடு இருக்கும் உணர்வு உள்ளத்தில்.
எனவே அங்கேயே இருந்து கொண்டான். “இப்பவும் தேடி வராளா பாரு..” என்று பொடுபொடுத்தவன், “வராட்டி போடி” என்று கடுப்புடன் அங்கேயே இருந்த அறையில் உறங்கியும் போனான்.
மறு நாள் காலை விழித்ததும் மனைவி அருகில் இல்லாதது உணர்ந்து நேற்றைய இரவில் அவளின் கண்ணீர் நினைவில் வர, “ஒன்னும் சொல்லாம அழுக மட்டும் வரும்..” என்று அப்போதும் அவளை… அவளின் செயலை எண்ணி திட்டியவன் கீழே சென்றான்.
அறையை திறந்ததும் மனைவியை பார்க்க, அவள் முதுகினை காட்டியபடி படுத்திருந்தாள். உறக்கத்தில் இருப்பவளை பார்த்துக் கொண்டே குளிக்கச் சென்றான்.
குளித்து உடை மாற்றி வந்தவன் கண்ணாடி முன்னால் நின்று தலையை வார சீப்பினை எடுக்க, மனைவியிடம் இருந்து வந்த மெல்லிய அனத்தல் குரல் அவனின் கவனத்தை அவள் மேல் குவிக்கச் செய்தது.
“கீர்த்தி…” அவளின் அருகே வந்தவன் அப்போது தான் அவளின் விடாத அனத்தலை கவனித்தான்.
பதறிப் போய் அவளின் தோள் தொட்டு திருப்ப, மறு நொடி பட்டென்று தன்னையும் மீறி கையினை எடுத்து விட்டான். உடல் நெருப்பாய் கொதித்தது கீர்த்தன்யாவிற்கு.
“ஹே கீர்த்து…” பதறி அவளை அள்ளி மார்பில் சாய்க்க, அவளுடலின் அனல் இவனைச் சுட்டது. முகமெல்லாம் அழுதழுது சிவந்து வீங்கிப் போய் இருக்க, கண்ணிமைகள் இரண்டும் தடித்துப் போய் இருந்தது.
கூடவே இமை ஓரம் கண்ணீரின் தடம். ஒருக்களித்து படுத்து இருந்தவளின் வலது பக்க பின்னந்தலை மொத்தமும் சில்லென்று ஈரமாய் இருந்தது.
தலையணையை பார்க்க, அங்கேயும் கண்ணீரின் ஈரம். துடித்தே போனான் சர்வேஷ்வரன். “கீர்த்திமா” என்று அவளின் கன்னம் தட்ட, அவளோ முணங்கிக் கொண்டே இருந்தாள்.
“ஹே.. கீர்த்தும்மா.. கண்ணை திறடா” என்றகனுக்கு நெஞ்சாங்கூடே காலியாகி விட்ட உணர்வு. அவளை கைகளில் அள்ளிக் கொள்ளப் போனவனின் சட்டை காலரைப் பற்றி கொண்டவள், “சர்…வா…” என்று அனத்தியபடி இருக்க, இவன் உயிர் இங்கே அதன் வலிமையை இழந்து கொண்டிருந்தது.
எதையோ சொல்ல முயன்று பின் மயங்கி அவன் மார்பில் சாய்ந்தவளை கண்டதும் உயிரே இல்லை அவனுக்கு.
கைகளில் அள்ளிக் கொண்டு கீழே வந்தவன் வாசலை நோக்கி விரைய மகனின் செயலில் பதறிய இன்பவள்ளியும் வர்ஷினியும் என்னவென்று கேட்க, “காய்ச்சல் கொதிக்குதுமா. மயங்கிட்டா” என்றவன் முகம் இரத்தப் பசையை இழந்து இருந்தது.
டிரைவர் காரை கொண்டு வந்து நிறுத்தியதும் காரில் ஏறிக் கொண்டான் மனைவியை மடியில் தாங்கியபடி. இன்பவள்ளியும் வர்ஷினியும் உடன் வர அனைவரையும் பதட்டம் சூழ்ந்து கொண்டது.
“சீக்கிரம் ரொம்ப நடுங்குறா…” என்றவனின் குரலில் கண்ணீருடன் கூடிய நடுக்கம்.
இன்பவள்ளிக்கு மகனின் துடிப்பை கண்டு அத்தனை பயம் பிடித்துக் கொண்டது. இதுவரை இப்படி ஒரு பரிமாணத்தை அவனிடம் கண்டதே இல்லை.
மருத்துவமனை வரும் வரை சர்வேஷின் கண்ணீர் பார்வை மொத்தமும் கீர்த்தன்யாவின் மேல் தான்! அவளோ கண்களை மூடுவதும் திறப்பதுமாக மயக்கத்தில் எதையோ அவனிடம் சொல்லி விடப் போராடியவள் போல் அவனின் முகத்தை பார்க்க,
அவளின் வலது கையை முயன்று பற்றியவள் வயிற்றில் வைத்து… எதையோ அவனுக்கு உணர்த்தி விட முயன்றாள்.
ஆசை ஆசையாக அவனிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி வைத்திருந்ததெல்லாம் இந்த நொடி தவுடு பொடியாகிப் போனதில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவன் மார்பை சுட்டது.
வாய்மொழியால்.. அவன் மார்பில் சாய்ந்து கொண்டு.. காதலாக… அவர்களின் தித்திப்பான வாழ்கையின் அச்சாரமாக கிடைத்திருந்த பொக்கிஷத்தின் வரவை அவனிடம் ரோஜா கூட்டத்தின் மத்தியில் வைத்து சொல்ல வேண்டும் என்று பல்வேறு கனவுகளில் இருந்தாள்.
ஆனால், இந்த நொடி… எங்கே சொல்லாமல் விட்டால் சொல்ல முடியாமலே போய் விடுமோ என்று அஞ்சியவள் அவனின் கையை மேலும் தன் வயிற்றோடு அழுத்த, சர்வேஷிற்கு அந்த நொடியில் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை.
எதோ வலியில் துடிக்கிறாள் என்று எண்ணி கலங்கிப் போனான்.
“சீக்கிரம் ஃபாஸ்ட்டா…” என்று ட்ரைவரிடம் படபடக்க, அவன் கன்னங்களை பற்றிக் கொண்டவள், வயிற்றின் மீதிருந்த அவன் கையை சுட்டிக் காட்டி “ப்பா…பா” என்று முணங்க சர்வேஷின் கண்கள் நிலை குத்தி நின்று விட்டன அவளின் முகத்தில்.
வயிற்றில் இருந்த அவன் கையை தொட்டு காண்பிக்க மூவருமே ஸ்தம்பித்து போனார்கள்.
சர்வேஷிற்கு மனைவி சொன்னதன் அர்த்தம் விளங்கிய நொடி கண்களில் புதிதாய் கண்ணீர் பூத்தது.
எத்தனை இனிமையான செய்தி! ஆனால், அதன் மகிழ்ச்சியை முழுதாய் அனுபவிக்க கூட முடியாதபடி மனைவியின் உடல் நிலை…
அதுவும் அவள் தவிப்பாய் சொன்ன விதம்!!!! உயிரே விண்டு போனது அவனுக்கு!!!
நிமிர்ந்து அன்னையின் முகத்தை கலங்கிப் போய் பார்க்க, “அம்மா…..” என்றான் கண்ணில் இருந்து வழிந்தோடிய கண்ணீருடன்.
“சர்வா.. ஒண்ணுமில்லப்பா. எல்லாம் நல்லதாவே நடக்கும். இதோ ஹாஸ்பிட்டல் வந்தாச்சு” என்க அடுத்து வந்த நொடிகள் ஒவ்வொன்றும் முள்ளின் மேல் உறைந்த நொடிகள் தான் சர்வேஷிற்கு.
அவளை அனுமதித்ததும் இருக்கையில் தோய்ந்து போய் அமர்ந்தவன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான். இன்னுமே கண்ணீர் வரும் போல் இருந்தது.
இன்னுமே அவள் உடலின் வெப்பம் தன்னிடம் இருப்பதை போலொரு பிரம்மை! காரில் நிகழ்ந்தது தான் கண் முன் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
உயிரைக் கண்களில் தேக்கிக் கொண்டு வயிற்றில் தன் கையை வைத்து தன்னிடம் விஷயத்தை உணர்த்தியவளை நினைத்து கனத்தது உள்ளம்.
மருத்துவர் வந்து “ஹெவி ஃபீவர். பிபியும் அப்னார்மலா இருக்கு. அதான் மயங்கி இருக்காங்க. பிரிக்ணன்ட்டா இருக்கவங்கள இவளோ கேர்லஸ்ஸாவா பாத்துக்கிறது” என்று கடிந்து விட்டு,
“டிரீ்ட்மெண்ட் கொடுத்து இருக்கோம். பிபி நார்மல் ஆகிற வரை இங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும்” என்று சொல்லி நகர எத்தனிக்க,
“எத்தன நாள் கணக்கு டாக்டர்” என்று இன்பவள்ளி விளாவரியாக கேட்டறிந்து கொண்டார் மருத்துவரிடம்.
“இரண்டு மாசம் ஆகப் போகுதாம்” என்று மகனிடம் சந்தோஷ முகமாக சொன்னவர், மறு நொடிய வாடி விட்ட முகத்தோடு “இந்த நிலமைல பொள்ளாச்சிக்கு கிளம்பி போய் அலைஞ்சு வந்திருக்கா….” என்று வருத்தம் கொள்ள, முன்பே அவளுக்கு தெரிந்திருப்பது புரிந்தது.
நேற்று வேகமாக காரை ஓட்டிய போது பதறினாள் என்றவன் இப்போது நினைத்துக் கொள்ள உடனே அவளைக் காண உள்ளம் தவித்தது.
நர்ஸ் வெளியே வந்ததும் இவன் எழுந்து கொள்ள “இன்னும் கண்ணு முழிக்கல. டிஸ்டர்ப் பண்ணாம போய் பாத்துட்டு வாங்க” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
“போ சர்வா” என்று அன்னை சொன்னதும் உள்ளே விரைந்தவன் சோர்ந்திருந்தவளின் முகத்தை வருட அவளோ ஆழ்ந்த மயக்த்தில்.
“கீர்த்து..” என்றவனின் குரல் கரகரத்தது. அவளின் வயிற்றை மென்மையாய் மிக மென்மையாக வருட, உள்ளுக்குள் லட்சம் மின்னல்கள்!
“இதையும் சொல்ல முடியலயாடா.. அந்த அளவுக்கு மனசை போட்டு குழப்பி உன்னை நீயே கஷ்ட படுத்தி இருக்க” என்றவன், “என்னையும்… ரொம்ப படுத்திட்ட. ரெண்டு நாளா உன்னைத் தவிர உள்ளுக்குள்ள வேற எதுவும் ஓடல” என்றான் காதல் மிகுந்த ஆயாசத்துடன்!