தொடங்கும் முன்னே “வேண்டாம்” என்று முடித்து விட்டவனை பாவமாய் பார்த்தவள் “என்ன கேட்க வந்தேன்னு தெரியுமா? எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்று கேட்க,
“அதான் முகத்துல எழுதி ஒட்டாத குறையா ரியாக்ஷன் கொடுக்கிறயே! அப்புறம் என்ன?” என்றவன், “அதைப் பத்தி எதுக்கு உனக்கு! ஜஸ்ட் லீவ் இட் கீர்த்து” என்றான் முடிவாக.
“இல்ல.. அன்னைக்கு அவுங்க வீட்டுக்கு போய் ரொம்ப பேசிட்டீங்களா?” என்று திணறி ஒரு வழியாக கேட்டு விட, அப்படி ஒரு முறைப்பு அவன் முகத்தில்.
கோபம் கொண்டு விட்டான் என்று புரிந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால். “சொல்லுங்களேன்” என்க, “அவுங்களை விட கேவலமா பேசல. போதுமா” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
கணவன் கோபமாக சொன்னதும் முகமே விழுந்து விட, “இதுக்கு தான் கேக்காதேன்னு சொன்னேன்! கேட்டா தான..” என்று அயர்வாய் சொன்னவன்,
“அது முடிஞ்சு போச்சு. இனி நீ அதைப் பத்தி யோசிக்க வேண்டாம். இனி நீ உன்னையும் நம்ம குழந்தையையும் பத்தி யோசிச்சா மட்டும் போதும்” என்று சொல்லி விட,
“சும்மா கேட்டேன். வேற ஒன்னும் இல்ல” என்றவள் அவன் சொன்னதில் சிரித்து “என்னையும் குழந்தையும் யோசிச்சா போதுமா? அப்ப சர்வா வேணாமா?” என்று கிண்டலுடன் கேட்க,
பொய்யாக முறைத்தவன் “அதையும் நீயே சொல்லேன்.. சர்வா வேண்டாமா” என்று அவளின் அன்பும் காதலும் தந்த அழகுத்திமிருடன் அவன் கேட்ட விதத்தில் தன்னையே தொலைத்தவள் அவன் முகத்தோடு தன் முகத்தை அழுத்தி,
“சர்வா இல்லேன்னா சர்வமும் இல்லையே இந்த கீர்த்தி பொண்ணுக்கு!” என்றாள் பெருங்காதலுடன்!
முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் சொன்னதில், மெய் மறந்தவனின் நொடிகள் ஒவ்வொன்றும் அவளோடு உறைந்து கலந்தது.
வளர்மதியின் இல்லம் சென்று என்ன பேசினான், என்ன செய்தான் என அதற்கு மேல் அவள் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. அவனும் சொல்லவில்லை.
அவன் சொல்லவில்லை என்றாலும் அவளுக்கு நன்றாகவே விளங்கியது. நிச்சயம் அவனிருந்த கோபத்தில் வளர்மதியை வார்த்தைகளால் நன்கு புடைத்திருப்பான் என. ஆனாலும் உள்ளுக்குள் ஓர் பயம். எங்கே அவர் ஏதேனும் கூடுதலாக பேசி இருப்பாரோ என்று. பேசி இருந்தாலும் கணவன் விட்டிருக்க மாட்டான் என்பதால் அவரைக் குறித்த சிந்தனையை தனக்குள்ளேயே துண்டித்துக் கொண்டாள்.
ஆனால் அவனின் மனைவி நினைத்ததிற்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது சர்வேஷின் பேச்சும் செயலும்!
மும்பையில் இருந்து வந்ததும் முதல் வேலையாக வளர்மதியின் இல்லத்திற்கு சென்று நின்று விட்டான் கொதிப்புடன்.
இது வரை அத்தையை உறவுக்காகவென்று மட்டுமே மதித்து வந்திருந்தான். ஆனால், அவர் வீடேறி வந்து இத்தனை அளவிற்கு அநாகரீகமாக மனைவியிடம் பேசி விட்டுச் சென்றதை கேள்விப் பட்டதும் அவரை மனிதப் பிறவியாக கூட மதிக்கத் தோன்றவில்லை அவனுக்கு.
இத்தனை கீழிறங்கி பேசுவதற்கு எவ்வளவு வன்மம் இருந்திருக்க வேண்டும் மனதிற்குள்? அதுவும் மனைவியின் மொத்த குடும்பத்தையும் இழுத்து பேசி இருக்க அவனின் கொதிநிலை அடங்கிய பாடில்லை.
அவனின் வருகையை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை என வளர்மதியின் அதிர்ச்சியான முகமே காட்டிக் கொடுத்தது.
ஜீவராஜனும் மதிஷாலினியும் அவனின் வரவை கண்டு திகைத்து நின்றனர். அதுவும் அவன் முகத்தில் தெரிந்த உக்கிரம் கண்டு ஒன்றும் புரியவில்லை இருவருக்கும்.
பின்னே… விஷயம் தெரிந்தால் தானே அவனின் இந்த வருகை ஏன் என புரிந்திருக்கும்!
அண்ணன் வீடு சென்று அவரின் மருமகளிடம் ஆடிய ஆட்டத்தை இருவரிடமும் பகிர்ந்திருக்கவில்லை வளர்மதி.
பகிரக் கூடிய அளவிற்கு அதுவொன்றும் நல்ல விஷயமும் இல்லையே.
அன்று மகள் நிச்சயம் செய்ய வந்த வீட்டாரின் முன்பு தன் முடிவைச் சொன்னதும் பெரும் அவமானமாகி விட, கண் மண் தெரியாத ஆத்திரத்தில் அவளை அடி நொறுக்கி விட்டார். (அத்தனை அடி வாங்கியும் மதிஷாலினியின் முடிவு மாறவில்லை என்பது தனிக் கதை!)
அதன் பின்னரும் கூட அவரின் ஆத்திரம் மட்டுப்படவில்லை. வெளியே சென்று வருகிறேன் என்று தனக்கு அடங்கிப் போகும் கணவனிடம் தகவல் சொல்லி விட்டு நேரே அண்ணன் இல்லத்திற்கு கிளம்பி விட்டார் இன்பவள்ளியிடம் நாக்கைப் பிடுங்கும் அளவிற்கு கேள்வி கேட்கவென்று!
“மூத்த மகனுக்கு வேணாம்னு சொல்லிட்டு ரெண்டாவது மகனுக்கு என் மகளை மயக்கி வளைச்சு போடப் பாக்குறீங்களா?” என்று அவரின் ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கலாம் என்று வந்திருக்க,
ஆனால் அன்று இன்பவள்ளி அங்கே இல்லாமல் கீர்த்தன்யா மட்டும் இருப்பதை தெரிந்து ஒரு முடிவோடு அவளை அழைத்து என்னவெல்லாம் பேச முடியுமோ அனைத்தையும் பேசி விட்டார்.
அன்று விதைத்து விட்டு வந்ததற்கு இன்று அறுவடை தினம் என விதி முடிவு செய்திருந்தது போலும்… வந்திருக்கும் தன் அண்ணன் மகனை கண்டு அதிர்ச்சியுடன் நின்றார் வளர்மதி.
மேலும் அவன் என்னவெல்லாம் பேசப் போகிறானோ என பயந்து மகளுக்கும் கணவனுக்கும் அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகி விடுமே என பதறி “நீங்க உள்ள போங்க” என்றார் அப்போதும் ஆணையாகவே!
அவர் சொன்னதும் உதடு வளைத்து ஏளனமாக அவரைப் பார்த்த சர்வேஷ், “ஏன் ரெண்டு பேரையும் போகச் சொல்றீங்க? உங்க லட்சணம் தெரிஞ்சு மானம் பறிபோய்டும்னு பயமா?” என்று எள்ளலுடன் கேட்க, வளர்மதிக்கு அவனின் பேச்சில் மூச்சு விடக் கூட முடியவில்லை.
வார்த்தைகளில் அனல் தெறிக்க பேசியவனின் முன்னே வாயை மூடிக் கொண்டு மட்டுமே நிற்க முடிந்தது அவரால். எங்கே பேசினால் அடித்து விடுவானோ என்று பயந்தே போனார் அவனின் ஆவேசமான தோற்றம் கண்டு.
ஜீவராஜன் ஒன்றும் புரியாமல் “சர்வா.. என்னபா? என்ன ஆச்சு? ஏன் இவளோ கோபமா வந்திருக்க? முதல்ல உட்காரு.. அப்புறம் பேசிக்கலாம்” என்க,
“என்ன மாமா? அதிசயமா இருக்கு? நீங்க அத்தையை கேட்காம பேசுறீங்க” என்று நக்கலாக சொன்னதும் அவர் முகம் கருத்து விட,
“ஏய்.. எங்க வந்து யாரு கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” என்று வளர்மதி ஆத்திரத்தில் ஏகத்திற்கும் கத்த,
“எங்க வந்து பேசுறேன்னு உங்களுக்கு தெரியாதா.. எங்க அப்பா சம்பாதிச்சு உங்களுக்கு கொடுத்த வீட்ல தான் வந்து நின்னு பேசிட்டு இருக்கேன்! சொல்லப் போனா எங்க வீட்ல தான் வந்து நின்னு பேசிட்டு இருக்கேன்” என்றதும் வளர்மதியின் உள்ளம் திடுக்கிட்டது.
“என்ன இப்ப பேசுங்க பாக்கலாம்…. எங்க போச்சு உங்க தேள் கொடுக்கு வாயும், வார்த்தையும்” என்றவன், “பேச முடியலல்ல.. பேச முடியாது!… பேசவும் கூடாது இனி” என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தவன்,
“பேசி இருக்கதுக்கே நீங்க இன்னும் அள்ள வேண்டியது நிறைய இருக்கு” என்றவன் அங்கிருந்து டீப்பாய் மேல் சில பல பத்திரங்களை வீசி எறிந்தான்.
கூடிவிட்ட திகைப்புடன் வளர்மதி என்னவென்று அதனை பார்க்க, “இதெல்லாம் ஊர்ல இருக்க சொத்து பத்திரம். உங்களுக்கு சேர வேண்டியது. அப்பாவோட சம்மதப் படி எல்லாத்தையும் பிரிச்சு உங்க பேருக்கு எழுதியாச்சு. கேவலம் இந்த சொத்து காசுக்கு ஆச பட்டு தான உங்க பொண்ணோட வாழ்கையை என் கூட முடிச்சு போட பாத்தீங்க…” என்று உட்சபட்ச வெறுப்புடன் மொழிந்தவன்,
“இனி உங்க கூட எந்த ஒரு உறவும் வேண்டாம்” என்றதும் வளர்மதி வாயைத் திறக்க எத்தனிக்க,
“உங்க கூட ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு முடிவு பண்ணது நான் மட்டுமில்ல. அப்பாவும் அம்மாவும் கூட. ஏன்னா இனி உங்களால எங்க வீட்டுக்குள்ள எந்த ஒரு பிரச்சனையும் மன சங்கடமும் வந்திறக் கூடாதுன்னு தான். வந்த வரைக்கும் போதும். நீங்க பேசின வரைக்கும் போதும்” என்று அழுத்தமும் இறுக்கமும் நிறைந்த குரலில் சொன்னவன்,
“என் வார்த்தையையும் மீறி மறுபடியும் இதே மாதிரி வந்து பேசினா அப்புறம் பூட்ஸ் கால் தான் உங்களுக்கு சரி வரும்” என்று விட்டான் மிரட்டலாகவே!
வளர்மதி வாய்யடைத்தமதியாகிப் போனார் அவனின் ஆவேசத்தில். அதுவும் பூட்ஸ் கால் என்றதும் போலீஸ் வரை செல்வானா?? என்று பற்றிக் கொண்டு வர, “என்ன விட்டா பேசிட்டே போற” என்று அவனின் முன்னர் வந்து நின்று எகுற,
“நீங்க பேசினது விட நான் பேசி இருக்கது கம்மி தான்னு நினைக்கிறேன்” என்றதும், “அப்படி என்ன தான் ஆச்சு…? என்ன போய் பேசிட்டு வந்த?” என்று ஜீவராஜன் சர்வேஷின் கோபத்தை தாங்க முடியாமல் கேட்டே விட, சர்வேஷின் முகம் ஜிவுஜிவுத்தது.
வளர்மதியோ ‘பேசிவிட்டு வந்ததை சொல்ல எனக்கென்ன பயமா…’ என்ற ரீதியில் அனைத்தையும் சொல்ல, ஜீவராஜனும் உறைந்து போனார்.
மதிஷாலினிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி! அன்று தான் உறுதியாக தன் முடிவினை சொல்லி விட்டதும் பெற்ற மகள் என்றும் பாராமல் தன்னை மட்டும் தான் அத்தனை பேசி அடித்து நொறுக்கி இருந்தார் அன்னை என்று இருந்தவளுக்கு,
மாமாவின் வீட்டிற்கு சென்று சர்வேஷின் மனைவியிடம் இப்படி முறையின்றி பேசி இருப்பார் என நினைத்திருக்கவில்லை. அதுவும் அவர் சொன்ன வார்த்தைகள்…!
கேட்டதும் நெஞ்சம் விண்டு விட்டது அவளுக்கு. ஒரு மகள் இருக்கிறேன் என்னும் சிந்தனை அன்னைக்கு இல்லவே இல்லையா என்று வேதனை கொண்டவள்,
பெற்ற என்னையே அன்று அவர் காதில் கேட்க முடியாத அளவிற்கு அவ்வளவு இழிவாக பேசி இருக்க, கீர்த்தன்யாவிடம் கேட்கவா வேண்டும் என்று தோன்ற அத்தனை வெறுப்பும் கசப்பும் தாயின் மீதெழுந்தது.
இன்றும் செவிகளில் அன்றவர் பேசிய ஒவ்வொன்றும் கேட்டுக் கொண்டிருந்தது. அதனை நினைக்கக் கூட பிடிக்காதவளாக கண்களை இறுக மூடித் திறந்தாள்.
அவர் சொன்னதும் அங்கே அமைதி மட்டுமே இருக்க, மீண்டும் வளர்மதி “அப்படி என்ன நான் பேசினேன்? உள்ளதை தானே சொன்னேன்? சொன்னாலும் சொல்லலேன்னாலும் ஓடிப் போன….” அவ்வளவு தான்.. முடிக்கவில்லை அவர் அடுத்து சர்வேஷ் செய்த காரியத்தில்!
மதிஷாலினி காதைப் பொத்தி கண்களை இறுக்கமாக மூடி விட ஜீவராஜன் பதறி மனைவியின் அருகில் வந்து நின்று விட்டார்.
உடைந்து நொறுங்கி இருந்த டீப்பாயை ஒரு பார்வை பார்த்தவன் “இன்னும் ஒரு வார்த்தை வரக் கூடாது சொல்லிட்டேன்” என்று கர்ஜிக்க, நடு நடுங்கிப் போய் நின்றிருந்த வளர்மதி எச்சில் கூட்டி விழுங்கினார்.
ஜீவராஜன் அதே நடுக்கத்துடன் “சர்வா.. என்னபா இதெல்லாம்… அராஜகமா இருக்கு..” என்க, “உங்க ஒயிஃப் பேசினது மட்டும் அராஜகம் இல்லையா!” என்றவன், “என்ன பேசினாங்கன்னு சொன்னாங்க தானே! இந்த அளவுக்கு பேசினது கேட்டுட்டு என் கிட்ட பொறுமையை எப்படி எதிர் பாக்குறீங்க நீங்க!” என்று கேட்டவன்,
“வேற யாரா இருந்தாலும் இந்த அடி அவுங்க மேல விழுந்து இருக்கும்!” என கொந்தளித்து விட்டான் மொத்தமாய்.
அவனின் ஆவேசத்தில் அடுத்து அங்கிருக்கும் யாருக்கும் பேச நா எழவில்லை. டீப்பாயின் மீதிருந்த பத்திரங்கள் மொத்தமும் சிதறி இருக்க, அதனை ஒரு பார்வை பார்த்தவன் “இந்த வீட்டோட பத்திரமும் இதுல தான் இருக்கு. போனா போகுதுன்னு இதுவும் உங்க பேருக்கே அப்பா எழுதிட்டார். எடுத்துக்கோங்க” என்றவன் நக்கலாய் சொல்லி விட்டு,
“சொன்னது நியாபகம் இருக்கட்டும்! இனி உங்க மூச்சு காத்து கூட எங்க வீட்டுப் பக்கம் படக் கூடாது” என்று சொல்லி விட்டு கிளம்ப,
“வந்தா என்ன செய்வ?” என்றார் வளர்மதி அப்போதும் தெனாவெட்டாக!
“உன் பொண்டாட்டி வாய் செத்தவளா இருக்கா! அவளுக்கும் சேத்தி நீ வந்து பேசுறியா?” என்றதும், “ஆமா.. சேத்து தான் பேசுறேன்! ஏன்னா என் பொண்டாட்டிக்கு உங்களை மாதிரி அசிங்கமா பேசத் தெரியாது! பேசவும் வராது. பூ மாதிரி அவ! அவுங்க வீட்டு வளர்ப்பு அப்படி” என்றவனின் வார்த்தைகளில் மிளிர்ந்த கர்வத்தில் உடலெங்கும் பற்றி எரிந்தது வளர்மதிக்கு!
“வளர்ப்பா…. அவுங்க வளர்ப்பை பத்தி தான் தெரியுமே?” என்று எகத்தாளமாக சொன்னவரின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை.
திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தவன் “மொத்தமா பேச வைக்காம விட மாட்டீங்க போலயே…” என்றதும் வளர்மதி கண்கள் சுருங்கி அவனைப் பார்க்க, “வருத்தப் படுவீங்கனு சொன்ன பிறகும் இப்படி பேசினா என்ன பண்ண?” என்றவன்,
“அவுங்க வீட்டு வளர்ப்பை பத்தி நீங்க ஏன் பேசுறீங்க?” என்றதும் வளர்மதி கண்கள் அகல அவனைப் பார்க்க ஜீவராஜனின் உள்ளம் எகிறி குதிக்கும் அளவிற்கு இருந்தது.
“ஓடிப் போனதை பத்தியே பேசுறீங்களே..? உங்களுக்கும் அதுல அனுபவம் இருக்குன்னு சொல்ல வரீங்களா?” என்றதும், விக்கித்து விழித்த மகளை ஒரு பார்வை பார்த்த ஜீவராஜன் இதற்கு மேல் விட்டால் அனைத்தையும் சொல்லி விடுவானோ என பயந்து அவனிடம் கை எடுத்து கும்பிட்டு விட்டார்.
“சர்வா.. போதும்! கிளம்பிடு. இனி வளர் அங்க வரவே மாட்டா. நான் பொறுப்பு அதுக்கு” என்றதும் அசட்டையாய் அவரை பார்த்தவன்,
“உண்மை சுடுதோ மாமா” என்றதும் வியர்த்து வழிந்தது அவருக்கு. பதட்டமாக மகளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் “வேண்டாம் ப்பா.. போய்டேன்.. ஷாலுக்கு இதெல்லாம் தெரியாது.. தெரியவும் வேண்டாம்.. நீ எதையும் கோபத்துல உளறிடாத” என்று பதட்டத்தில் அவர் உளறி கொட்டி இருக்க,
“கோபத்துல பேசினாலும் என்ன பேசணும்னு எப்படி வார்த்தையை உபயோகிக்கணும்னு தெரிஞ்சு பேசுறவன் தான் நான்” என்றவன் உங்கள் மனைவியை போல அல்ல என்று சொல்லாமல் சொல்வது புரிந்தது.
அதிர்ந்து விழித்த ஷாலினியிடம், “எல்லாருக்கும் வாழ்க்கைல எல்லாம் கிடைச்சிடுறது இல்ல ஷாலினி. ஜஸ்ட் மூவ் ஆன். அதான் உனக்கு நல்லது. இப்படியே அடமெண்ட்டா இருந்தேன்னா உன் அம்மா கையால நீ அடி வாங்கி தான் சாகனும்” என்று அவளிடமும் தெக்கத் தெளிவாக சொல்லி விட்டவன், வளர்மதியின் ஸ்தம்பித்த தோற்றத்தை கண்டு கொள்ளாமல் வெளியேறி விட்டான்.
அவன் பேசியவை அனைத்தும் குடும்பத்தினர் மொத்தமும் அறிந்தது தான். கீர்த்தன்யாவை தவிற. அவளிடம் சொன்னால் மேலும் கலங்கி தன்னுள் சுருங்கி விடுவாள் என்பதால் அவளிடம் பகிறவில்லை.
குழந்தை உண்டாகி இருக்கும் இந்த சூழலில் அவளுக்கு அழுத்தம் தரக் கூடிய விஷயங்களை அவளிடம் சொல்ல விரும்பவில்லை அவன்.
இதோ… நிர்மலமான முகத்துடனும் வாடாத புன்னகையுடனும் தன் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தவள் இதே போல் என்றென்றும் இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் அந்த ஆசைக்கு சற்றும் குறையாத அன்புடன் அவளை அரவணைத்து கொண்டான் பேராழியாக!