தன் முன்னே சுட சுட இருந்த சூப்பை ஒரு பார்வை பார்த்த கீர்த்தன்யா எதிரே அமர்ந்திருந்த கணவனை சிரிப்புடன் பார்க்க, அவனோ அந்த சூப்பினை கொண்டு வந்திருந்த சபரிநாதனை பார்த்தான்.
அவனோ வழக்கம் போல் சர்வேஷின் பார்வையில் வியர்த்து வழிய நின்றிருக்க, தொடங்கி விட்டான் சர்வேஷ் அவனது காய்ச்சி ஊற்றும் வேலையை!
“என்ன இது சபரி?” என்றதும் கீர்த்தன்யா கணவனை முறைக்க, அவனோ அவளை கண்டு கொள்ளாமல் சபரியை துளைத்தான் பார்வையால்.
அவன் கேட்டதில் கிடுகிடுவென கால்கள் எல்லாம் நடுங்க “சார்.. மட்டன் போன் சூப் சார். மேடம் கேட்டிருந்தாங்க” என்றதும்,
“உங்க மேடம் கேட்டா.. கேட்டபடி அப்படியே பெப்பரை அள்ளி போட்டு கொண்டு வந்து கொடுப்பியா?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப அவனோ பாவமாய் கீர்த்தன்யாவை பார்த்தான்.
கணவனிடம் அவன் மாட்டிக் கொண்டு முழிப்பதில் அப்படி ஒரு புன்னகை கிளம்பியது கீர்த்தன்யாவிற்கு!
அவள் சிரிப்பதை கண்டதும் இன்னுமே பாவமாய் அவளைப் பார்த்த சபரி “மேம்.. பிளீஸ் ஹெல்ப் மீ மேம்” என்றான் பள்ளிச் சிறுவனாய்!
“அங்க என்ன மேன் கெஞ்சுற? இங்க பேசு” என்றதும் “பேச முடிஞ்சா பேச மாட்டோமா சார்” என்று மெல்ல முணுமுணுக்க, அச்சுப் பிசகாமல் அப்படியே அவனின் வார்த்தைகள் சர்வேஷின் செவிகளை அடைந்து விட இன்னுமே நன்றாக முறைத்தான் அவனை!
“சார்.. பிளீஸ் சார்.. நான் வேணும்னே போடல சார். மேடம் தான் சூப்ல நல்ல பெப்பர் போட்டு கொண்டு வர சொன்னாங்க. அதான் போட்டு கொண்டு வந்தேன்” என்று பதறியவன்,
“சூப் ரெடி பண்ண போறதுக்கு முன்னாடியே நான் கெஞ்சினேன். மேம்.. நிறைய குக்ஸ் இருக்காங்க. என்னை விட சீஃப் குக்ஸ் இருக்காங்க. அவுங்க கிட்ட கேளுங்களேன்னு. மேடம் நான் தான் செய்யணும்னு ஆர்டர் போட்டு வந்தாங்க. அந்த ஆர்டரோட பெப்பர் தூக்கலா போட சொல்லி இன்னொரு ஆர்டர் வேற! அப்பயும் சொன்னேன். மேம் சாருக்கு தெரிஞ்சா திட்டுவாருன்னு.. அதுக்கு சொன்ன மாதிரி சூப் போட்டு கொண்டு வரலேன்னா அப்புறம் நீங்க செய்ற எல்லா டிஷ்லையும் நான் சில்லி பவுடர் போட்டு உங்க கிட்ட நான் தான் அதை போட்டேன்னு சொல்லி மாட்டி விடுவேன்னு மிரட்டினாங்க” என்று நொந்து போய் சொன்னவன்,
“நான் என்ன சார் பண்ண முடியும்? போட்டா நீங்க திட்றீங்க! காரம் போடலேன்னா மேம் மாட்டி விடுவேன்னு மிரட்டிறாங்க! எப்படியும் உங்க கிட்ட வாங்கி கட்டிக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு. அதை எப்படி வாங்கி கட்டிக்கிட்டா என்ன? இதோ அவுங்க கேட்ட மாதிரியே கொண்டு வந்து கொடுத்துட்டேன். உங்க கிட்டயும் டோஸ் வாங்கியாச்சு” என்று வேறு சொல்லிக் கொள்ள,
அவன் சொன்ன விதத்தில் கீர்த்தன்யா தன் மேடிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு பெரிதாக சிரிக்க, சர்வேஷிற்கும் அப்படி ஒரு புன்னகை.
அவன் சிரிப்பதை கண்டு இதான் சாக்கு என்ற சபரி “விட்டிடுங்க சார். இப்படியே ஓடிப் போய்டுறேன்” என்றதும், சர்வேஷ் தலை அசைக்க மின்னலாய் அவ்விடத்தை காலி செய்தான் சபரிநாதன்.
“ஆளை விடுங்க சாமி” என்ற ரீதியில் வேக வேகமாக செல்லும் அவனைக் கண்ட இருவரும் பெரிதாய் புன்னகைக்க, மனைவியிடம் “அவன் கிட்ட இப்படி எதாவது செய்யச் சொல்லி அவனை என் கிட்ட மாட்டி விடுறதே உனக்கு வேலை” என்று அவளை கடிந்தவன்,
“நீ கேட்டன்னு உன்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது நான்” என்றான் முறைப்புடன்.
“நான் என்ன பண்ணட்டும்? எனக்கு சபரி அண்ணா பண்ற எல்லா டிஷ்ஷும் பிடிச்சிருக்கு. அவரு பண்ற நான் வெஜ் ஐட்டம்லாம் காரசாரமா சூப்பரா இருக்கும். அதான் வந்து சாப்பிடணும்னு தோணுச்சு” என்க, “அதுக்கு இப்படியா பெப்பரை கொட்ட சொல்லுவ?” என்றான் சூப்பில் மிதந்த மிளகு தூளை பார்த்தபடி.
“நான் என்ன வேணும்னேவா காரம் சாப்பிடுறேன்? எனக்கு அதான் சாப்பிட தோணுது” என்றதும்,
“தோணும்டி தோணும்… ஆ ஊன்னா ஊறுகாய், காரமா புளிக் குழம்பு, வத்த குழம்புன்னு அம்மாவை செஞ்சு கொடுக்க சொல்லி சாப்பிட்டு அப்புறம் வயிறு அரிக்குது சர்வான்னு என்கிட்ட வந்து நிப்ப!” என்றதும்,
“பின்ன யாரு கிட்ட போய் நிக்கணும்னு சொல்லுங்க. நின்னர்லாம்” என்றாள் மிதப்பாக.
“வர வர வாய்க் கொழுப்பு கூடிப் போச்சு உனக்கு!”
“எல்லாம் சகவாச தோஷம் தான்” என்றாள் அவனை கண்டு கண் சிமிட்டி!
“சகவாச தோஷமா.. அடிங்..” என்றவன் குனிந்து அவளின் ஏழு மாத மேடிட்ட வயிற்றை இரு கைகளாலும் தாங்கி “உங்க அம்மா உன் சித்தப்பா கூடவும் அத்த கூடவும் சேர்ந்து ரொம்ப கெட்டுப் போய்ட்டா” என்று புகார் வாசிக்க,
தந்தையின் குரல் கேட்டு உள்ளே குழந்தை தன் அசைவினால் அவனின் கைகளை ஸ்பரிசிக்க உடலெங்கும் சிலிர்த்தது அவனுக்கு.
“டாடி பேசுறது கேக்குதா?” என்றவன் வயிற்றில் காதைப் பொறுத்தி “எனக்கு நீங்க பேசுறது கேக்கலயே? என்ன பேசுறீங்க?” என்று அனைத்தையும் மறந்து கண்கள் ஒளிர பேசிக் கொண்டே சென்றவனை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை கீர்த்தன்யாவிற்கு.
அவனும் அவனது உயிரும் மட்டும் உறவாடும் இந்த பொழுதுகள் ஒவ்வொன்றும் அவளின் பொக்கிஷத் தருணங்கள்!
அவனின் குரலிற்கு உள்ளுக்குள் குழந்தையின் அசைவுகள் அலாதியாக இருக்க ஆனந்தக் கூத்தாடம் தான் தகப்பன் ஆகப் போகின்றவனுக்கு!
உரையாடிக் கொண்டிருந்தவன் மனைவியின் முகம் நிமிர்ந்து பார்க்க, புருவம் உயர்த்தி என்னவென்றால் கண்களால்.
“உன்னை கண்டுக்காம பேபி கிட்ட மட்டும் பேசுறேன். சிரிக்கிற?” என்று அவளை சீண்ட, புன்னகை குன்றாமல் “சந்தோஷமா இருக்கு! சிரிக்காம என்ன பண்ண சொல்றீங்க?” என்றவள்,
“எங்க என்னைப் பாத்து சொல்லுங்க?என்னை கண்டுக்காம இருக்க முடியுமா உங்களால?” என்று அவனைச் சீண்ட,
“பதில் சொல்லுங்க முதல்ல” என்றாள் அவன் கேசத்தை களைத்தபடி.
“ஹ்ம்ம்.. எப்படி கண்டுக்காம இருக்க முடியும்? அதான் பக்காவா என்னை பொண்டாட்டி தாசனா மாத்தி மயக்கி வச்சு இருக்கியே” என்றான் மயக்கத்துடன்.
“யாரு… நானு… உங்கள.. பொண்டாட்டி தாசனா மாத்தி… மயக்கி… வச்சிருக்கேன்…” என்று நிறுத்தி நிதானமாக கேட்க, எல்லாப் பக்கமும் தலை அசைத்தான் நமட்டுச் சிரிப்புடன்.
“கை தவறி விழுந்த போட்டோவை தானா போய் எடுத்து… மயங்கி.. இந்தப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அத்தை கிட்ட கண்டிஷன் போட்டு ஆசை ஆசையா கட்டிக்கிட்டு இவரே பொண்டாட்டி தாசன் ஆவாராம்! கேட்டா நாங்க மாத்தினோமாம்.. மயக்கினோமாம்.. கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலை தானே உங்களுக்கு!” என்றதும்,
“அதெல்லாம் நல்லாவே ஒட்டிக்கிச்சு” என்றான் அவளின் முகம் நெருங்கி.
நெருங்கி வந்தவனை நெருங்க விடாமல் அவன் காதைத் திருகியவள், “தள்ளுங்க நான் சூப் குடிக்கணும்” என்றாள் அதனை கையில் எடுத்தபடி.
“இன்னைக்கு நைட்டு இருக்கு எனக்கு” என்று அயர்வாய் சொன்னவன், “ஆயின்மெண்ட் காலி ஆகிடும்” என்றான் தலையில் கை வைக்காத குறையாய்.
“ஆமாமா… இப்பல்லாம் நல்லா தான் பேசுவ. நைட்டு பாக்கனுமே” என்றவனின் அலைபேசியில் அழைப்பு வர, “கொஞ்சம் மட்டும் குடி கீர்த்து. மட்டன் பீசஸ் மட்டும் சாப்பிடு” என்று அவளுக்கு அறிவுறுத்தியவன் அழைத்தது யாரென்று எடுத்துப் பார்க்க இன்பவள்ளி தான் அழைத்திருந்தார்.
“அம்மா தான் கூப்பிட்டு இருக்காங்க. வீட்ல கெஸ்ட் எல்லாம் வர ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றவன் அவருக்கு அழைத்தான்.
“சொல்லுங்கமா”
“சர்வா.. கிளம்பியாச்சாப்பா?”
“இல்லமா இனிமேல் தான் கிளம்பனும்”
“இன்னுமா நீங்க கிளம்பல. இந்த சதீஷ் பயலுக்கு போனை போட்டு ஓய்ஞ்சு போனேன். எடுக்கவே இல்ல. அதான் உனக்கே கூப்பிட்டேன்” என்றவர்,
“அவனுக்கு எதுவும் முக்கியமான வேலையா கொடுத்திருக்கியா சர்வா. இவளோ தடவ நான் கூப்பிட்டு எடுக்காம இருந்ததில்லை. எவ்ளோ முக்கியமான வேலையா இருந்தாலும் ரெண்டு நிமிஷம் எடுத்து வேலைல இருக்கேன் இன்பூ டார்லின்னு சொல்லிட்டு வச்சிடுவான். இன்னைக்கு என்னடான்னா நாலு தடவை கூப்பிட்டும் எடுக்கல” என்றார்.
தாய் சொன்னதில் புருவங்கள் சுருங்க யோசித்தவன் “நான் என்னன்னு பாக்குறேன்மா” என்று சொல்ல,
இன்பவள்ளியோ மனதிற்குள் ‘ஒரே வரில முடிகிறத பாரு… இடிச்ச புளி… என்னைக்கும் இடிச்ச புளி தான்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவர்,
“சரிப்பா சீக்கிரமா கிளம்பி வாங்க. சதீஷையும் கூட்டிட்டு வந்திடுங்க. இப்பவே சொந்தக்காரங்க சிலர் வந்தாச்சு. எல்லாரும் கீர்த்தியை தான் கேக்குறாங்க” என்றவர்,
“வீட்ட டெக்கரேட் பண்றதுக்கும் ஆள் வந்தாச்சு. மெஹந்தி வைக்க வர பொண்ணும் வந்தாச்சு. இப்பயே மெஹந்தி வைக்க ஆரம்பிச்சா தான் சாயங்காலத்துக்குள்ள காயும். கீர்த்தியும் நைட் தூங்கலாம் ஃப்ரீயா” என்று சொல்லி விட்டு வைக்க,
“கிளம்பனுமா?” என்றாள் கீர்த்தன்யா.
“ம்ம்… ஆமா! கிளம்பி வர சொல்றாங்க அம்மா” என்றவன், “சீக்கிரம் வா போகலாம். உனக்கு மெஹந்தி போட வந்துட்டாங்களாம்” என்றான்.
நாளை தான் கீர்த்தன்யாவிற்கு வளைகாப்பு. அதற்காக தான் இல்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.
அவர்களின் ஹோட்டலில் பெரிய அளவில் வைக்கலாம் என்று சர்வேஷ் நினைக்க “வேணாம் சர்வா. கண்ணு பட்டு போய்டும். வீட்லயே வச்சுக்கலாம்” என்று சொல்லி இருந்தார் இன்பவள்ளி.
கீர்த்தன்யாவும் தெய்வானை இப்படியே சொல்லியதாக சொல்லி வேண்டாம் என்று விட நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து இல்லத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிளம்பும் முன்னால் சதீஷையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று அவனுக்கழைக்க, அவனோ அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் முயற்சிக்க போனை கட் செய்தான் சதீஷ்.
“என்னாச்சுங்க?” என்றாள் கணவனுடன் நடந்தபடி.
“சதீஷயும் கூட்டிட்டு போகலாம்னு கால் பண்ணேன். அட்டன் பண்ண மாட்டேங்குறான். இப்ப எதுவும் ஒர்க்கும் இல்லையே?” என்றவன், மீண்டும் முயற்சிக்க இம்முறை அழைப்பை ஏற்றவன்,
“அண்ணா ஒரு ஃபைவ் மினிட்ஸ். வந்திடுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டான் அடுத்த நொடியே.
அவன் குரலில் இருந்த தீவிரமும், ஒரு வித இறுக்கமும் வெகு வித்தியாசமாக பட்டது சர்வேஷிற்கு.
“என்னங்க? சதீஷ் என்ன சொன்னார்?” என்றாள் கணவனின் யோசனையான முகம் கண்டு!
“ஒண்ணுமில்ல கீர்த்து. நான் போய் என்னன்னு பாத்திட்டு வரேன். நீ லான்ஜ் ஏரியால உக்கார் கீர்த்து” என்று விட்டு நகர, “நானும் வரேன்” என்றவளை மறுக்க முடியாமல், “சரி வா” என்று அழைத்துச் சென்றான்.