சதீஷின் அறை இருக்கும் தளத்திற்கு லிஃப்டின் மூலம் இவர்கள் செல்ல, சரியாக அத்தளத்திலிருந்த மற்றொரு லிஃப்ட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறினாள் மதிஷாலினி!
சர்வேஷ்வரனும் அவளை கவனிக்கவில்லை. கீர்த்தன்யாவும் கவனிக்கவில்லை. இருவரும் சதீஷின் அறையை அடைந்ததும் அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
அண்ணனும் அண்ணியும் ஒன்றாக வந்து நிற்பதை சுத்தமாய் எதிர் பாராதவன் ஒரு நொடி திகைத்து பின் மறு நொடியே தன்னை சமாளித்துக் கொண்டு,
“அண்ணா.. அண்ணியை கூட்டிட்டு ஏன் இவளோ தூரம்? நான் தான் வரேன்னு சொன்னேனே” என்றான் லகுவாய் தன்னை காட்டிக் கொள்ள முயன்று!
“இப்பல்லாம் எனக்கும் அப்படி ஆகிடுச்சு” என்று சிரிக்க, “வெல்கம் டூ த கிளப் அண்ணி” என்றவன் அண்ணனின் துளைத்தெடுக்கும் பார்வையை சமாளிப்பதற்காக,
“நம்ம கூட்டணி அண்ணனுக்கு பிடிக்கல போல. பாருங்க எப்படி முறைக்கிறாருன்னு” என்றான் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு.
சர்வேஷின் பார்வை இன்னும் அவனிடம் இருந்து பிரியாமல் இருப்பதை உணர்ந்து “சொல்லுங்க அண்ணா. கூப்பிட்டு இருந்தீங்க?” என்றான் சாதரணமாக.
அவனின் முக மாற்றத்தை சரியாக கவனித்து விட்டவனோ என்னமோ நிகழ்ந்து இருக்கிறது என்று கண்டு கொண்டாலும் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் பேசுபவனை விசாரிக்கவும் முடியவில்லை மனைவியின் முன்னாள்.
இல்லம் சென்றதும் கேட்டுக் கொள்ளலாம் என்றவன் “உன் இன்பூ டார்லி நாலு தடவை போன் பண்ணியும் நீ எடுக்கல போல” என்றதும் ஒரு நொடி முகம் மாறியவன்,
எப்போதும் தானாகவே ஒரு விஷயத்தை இழுத்து எதையாவது பேசி வளவளத்துக் கொண்டு வருபவன் இன்று பேரமைதியுடன் வருவது சர்வேஷிற்கே ஒரு மாதிரியாக இருந்தது.
கீர்த்தன்யாவும் அதை கவனிக்க, “என்ன சதீஷ்? கொட்டுற அருவி மாதிரி பேசுவீங்க. இப்ப இவளோ சைலண்ட்” என்று கேட்க,
அவள் கேட்டதும் அண்ணனின் முகத்தை தான் சட்டென்று திரும்பி பார்த்தான். காரை ஓட்டிக் கொண்டிருந்தவனும் தம்பியை கண்டு கொண்டதின் அடையாளமாய் புருவங்களை ஏற்றி இறக்க, அண்ணனிடம் பார்வையை விலக்கியவன்,
“அதில்ல அண்ணி.. கொஞ்சம் ஸ்டொமக் அப்சட். அதான்” என்றான் அடுத்த பொய்யை!
“ஐயோ… என்ன சாப்பிட்டீங்க. எதுவும் ஒத்துக்கலயா?” என்றவள் “வீட்டுக்கு போனதும் அத்த கிட்ட சொல்லி ஹாட் வாட்டர் குடிங்க. கொஞ்சம் பெட்டரா இருக்கும்” என்றாள் அக்கறையுடன்.
“சரி அண்ணி” என்றவன் கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டான். அடுத்து இல்லம் வரும் வரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
இல்லம் வந்ததும் இன்பவள்ளி இளைய மகனைக் கண்டு “டேய் சதீஷா… என்னடா போன எடுக்கல” என்று கேட்க, “கொஞ்சம் வேலையா இருந்தேன்மா” என்றான் அன்னையிடம் எதோ நியாபகத்தில்.
இன்பவள்ளியோ “என்னடா ஒரு மாதிரி இருக்க?” என்றதும் அவரின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் “கொஞ்சம் தலை வலிக்குதுமா. நா போய் தூங்குறேன்” என்று சொல்லி விட்டு யாரின் பதிலிக்கும் காத்திராமல் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
வந்திருந்த சொந்தங்களை வரவேற்க கூட நிற்கவில்லை. சுடு நீரை காலில் ஊற்றிக் கொண்டவன் போல் கடகடவென அறைக்குள் புகுந்து கொண்டவனை மூவருமே ஒரு முறை பார்க்க,
இன்பவள்ளியோ “என்னடா ஆச்சு உன் தம்பிக்கு? இப்படி யாரையும் கண்டுக்காம போறான்” என்றார் கவலையாய்.
“அவன் கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும்மா. நீங்க மத்தவங்களை கவனிங்க” என்றவன் மனைவியிடம் கண்ணை காண்பித்தான். அவளும் புரிந்தார் போல் தலை அசைத்து இன்பவள்ளியிடம்,
“அத்தை வாங்க.. மெஹந்தி போடுறவங்க எத்தன மணிக்கு வந்தாங்க” என்று அவரின் கவனத்தை திசை திருப்பி அவருடன் இணைந்து கொண்டாள்.
சர்வேஷ் வேக வேகமாக மாடிக்கு சென்றவன் தங்களின் மேனேஜர் நாராயணனிற்கு அழைத்து “ஆர்டர்ஸ் லிஸ்ட்ல எதுவும் பிராப்ளமா? இல்ல நாம பிளான் பண்ண ஈவண்ட் ஸ்கெடியூல் இப்படி எதுவும் மாறி இருக்கா?” என்று கேட்க,
“அப்படி எதுவும் இல்லையே சார்” என்ற மேனேஜர் “அப்படி எதுவும் இருந்தா கண்டிப்பா உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன் சார்” என்றார் பணிவுடன்.
“வேற யாரும் இன்னைக்கு வந்தாங்களா? என்னை மீட் பண்ணனும்னு” என்று கேட்க, “இல்லையே சார். யாரும் வரலயே. வந்திருந்தா உங்களுக்கு இன்பார்ம் பண்ணி இருப்பேனே” என்றவரிடம்,
“யாரும் சதீஷை பாக்க வந்தாங்களா?” என்று கேட்க, நாராயணனுக்கு மண்டை காய்ந்து விட்டது அவன் விசாரித்த விதத்தில்.
“சார் சதீஷ் சார் இன்னைக்கு மார்னிங் குக்கிங் ஏரியாவுக்கு வந்து எல்லாம் செக் பண்ணிட்டு மேரேஜ் ஹால்ல டெக்கரேஷன் போய்ட்டு இருந்தது. அதை வந்து விசிட் பண்ணிட்டு ரூமுக்கு போனார். அதுக்கு அப்புறம் நான் அவரை பாக்கல சார்” என்றார் தனக்கு தெரிந்தவற்றை.
“ஓ.. ஓகே நான் பாத்துக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தவனுக்கு இன்னுமே குழப்பம் மிஞ்சியது.
தொழில் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று மேனேஜர் சொன்னதை வைத்து யூகித்து கொண்டவன் “எந்த பிராப்ளமும் இல்லையே” என்றான் யோசனையுடன்.
“சம்திங் ஹாப்பண்ட். இல்லேன்னா சதீஷ் இப்படி இருக்க ஆளில்லையே” என்று தம்பியை குறித்து தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் சிந்தனையுடன் அமர்ந்து விட மீண்டும் மேனேஜரிடம் இருந்து அழைப்பு!
“சார்.. சார்.. லைன்ல இருக்கீங்களா?” என்று அந்தப் பக்கம் நாராயணன் குரல் கொடுக்க “ம்ம் இருக்கேன்” என்றவன், “எந்த டைமிங்னு செக் பண்ணி சொல்லுங்க நாராயணன்” என்றான் அடுத்ததாக.
அவர் சொன்ன நேரத்தை கேட்டவனுக்கு தாங்கள் அவனின் அறைக்கு செல்லும் முன்னர் தான் என்று புரிய “ஓகே நாராயணன். தேங்க் யூ” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.
உள்ளுக்குள் ஆயிரம் யோசனைகள் படை எடுத்தன. எதற்காக மதிஷாலினி சதீஷை சந்திக்க வந்திருக்க வேண்டும் என்று குழம்பியவனுக்கு ஒரே விஷயம் மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.
ஷாலினி ஒரு போதும் சதீஷை மறக்கப் போவதில்லை! அவன் மனம் அறுதியிட்டு இதனைக் கூற பெரு மூச்சு கிளம்பியது அவனுக்கு!
எப்படி இதனை சமாளிக்க என்று ஒன்றும் புரியாமல் இங்கும் அங்குமாக நடந்தவன் அறைக் கதவு திறக்கப் படும் சத்தத்தில் தன்னிலை அடைந்தான்.
கீர்த்தன்யா தான் வந்திருந்தாள். “என்ன ஆச்சுங்க? ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றவள், “சதீஷ்?” என்று கேள்வியாக கேட்க ஆம் என்பது போல் தலை அசைத்தவன்,
“சின்ன பிரச்சனை தான். சார்ட் அவுட் பண்ணிக்கலாம்” என்றான் முழுதாய் அவளிடமும் எதையும் சொல்லாமல்.
ஷாலினியின் வருகை குறித்து மனைவியிடம் சொல்லி விடலாம் தான். ஆனால், இந்த நொடியில் சொல்லத் தோன்றவில்லை. சொன்னால் அவளின் மனநிலை மாறக் கூடும் என்றவன் இந்த நொடியின் முக்கியத்துவத்தை கலைக்க விரும்பவில்லை.
அவன் சுருக்கமாக சொல்லியதை வைத்தே விஷயம் கொஞ்சம் கடினமானது தான் என்று புரிந்து கொண்டவள் “சார்ட் அவுட் பண்றது கஷ்டம்னு நீங்க சொல்றதுல இருந்தே தெரியுது. என்னனு பாத்து சதீஷ் கிட்ட பேசுங்க. பாவம் இப்படி எல்லாம் இருக்கிற ஆளில்ல. ரொம்ப கலகலப்பா இருப்பார்” என்றவள்,
“இந்நேரம் வரை அத்தை ஒரே புலம்பல் கீழ. அவரு இப்படி ஒண்ணுமே பேசாம போனதை பாத்திட்டு ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க” என்றவள்,
“இன்னும் வர்ஷியும் காலேஜ்ல இருந்து வரல. அவ இருந்தாலாவது அத்தைக்கு எதுவும் வித்தியாசமா ஃபீல் ஆகி இருக்காது” என்றாள்.
மனைவி என்னவென்று முழுதாக கேட்டுக் கொள்ளாத போதும் அனைத்தும் சீராகி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசியதை கேட்டு அவளை நெருங்கி அணைத்து கொண்டவன்,
“பிரச்சனை தான். ஆனா இப்ப உன் கிட்ட சொல்ல முடியல கீர்த்து” என்றதும் “சொல்லாம விட்டப்பவே புரிஞ்சுது” என்று புன்னகைத்து கொண்டவள்,
“நீங்க போய் சாப்பிடுங்க. எனக்கு மெஹந்தி போடுறவங்களை நம்ம ரூமுக்கே வர சொல்லிட்டேன். கீழ அத்தனை பேர் இருக்காங்க” என்றதும்,
“ஓகே. பாக்துக்கோ. நான் வரேன்” என்று கீழிறங்கி சென்று விட்டான். மனதிற்குள் இன்று என்ன நிகழ்ந்திருக்கும் என்னும் பதட்டம் இருக்கத் தான் செய்தது. மதிஷாலினி என்ன பேசி இருப்பாள்? அதற்கு சதீஷின் எதிர் வினை என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போதே நிச்சயம் அவனிடம் இதனைக் குறித்து பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.