“இன்பவள்ளி உக்கிரவள்ளியா மாறியதன் மாயம் என்னவோ” என்றபடி அவரின் கன்னம் கிள்ள,
“டேய்.. விடுடா ஹால்ல தான் எல்லாரும் இருக்காங்க” என்று மகனின் கையை தட்டி விட்டவர், “சாப்பிட்டு போய் மறுபடியும் கதவை சாத்திக்க” என்றார் கடுப்புடன்.
“இன்பூ… சத்தியமா செம தல வலி. நல்ல தூக்கம் வேற. அதான் வெளிய வரவே இல்ல. வந்தாலும் இவளோ ஆண்ட்டிஸ் மத்தியில நான் என்ன பண்ண போறேன்?” என்று வேறு வியாக்கானம் பேச அவனின் வாயிலேயே நாலு போடு போட்டவர்,
“இந்த வாய் சாயங்காலம் எங்கடா போச்சு?” என்றதும் “அதெங்க போகும்? அவன் கிட்ட தான் ஒட்டிக்கிட்டு இருக்கும் எப்பவும்” என்றபடி வந்தான் சர்வேஷ்.
“ம்ம்..உன் புடிச்ச புள்ளையார் புள்ளையே சொல்லியாச்சு பாரு இன்பூ டார்லி! என் வாய்லாம் என்னைக்கு ஆஃப் ஆகும்!” என்றான் அண்ணனிடம் முகத்தை திருப்பாமல்.
“ஆமாமா.. என்னைக்கும் ஆஃப் ஆகாது. இப்படி வயிறு வலி வந்தா தான் ஆஃப் ஆகும்!” என்றதும் சதீஷிற்கு புரை ஏறி விட, இன்பவள்ளியோ “வயிறு வலியா? தல வலின்னு தான சொன்னான்” என்றார் இன்பவள்ளி.
சர்வேஷ் தம்பியை பார்க்க அவனோ “தல வலி தான்மா. வீட்டுக்கு வரும்போது தல வலில குழம்பி கார்ல வயிறு வலின்னு அண்ணா கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஆனா வயிறு வலி எல்லாம் இல்ல. தல வலி தான்” என்று ஏகத்திற்கும் இரண்டு வலிகளையும் மாற்றி மாற்றி சொல்லி திருதிருத்தான்.
அவன் சொன்ன விதத்தில் இன்பவள்ளிக்கே தலை வலி வந்துவிடும் போல் இருந்தது. மூத்த மகனை பார்க்க சர்வேஷ்வரனின் பார்வையோ சதீஷிடம் தான்.
“அப்ப ஸ்டொமக் அப்செட் இல்லையா உனக்கு” என்றதும், “இல்லண்ணா. தல வலி தான்” என்றான் திக்கித் திணறி.
“என்னடா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்றீங்க” என்று இன்பவள்ளி அப்பாவியாய் கேட்க, அன்னையிடம் எதையும் சொல்லாமல் “சாப்பாடு எடுத்து வைங்கமா” என்றான் சர்வேஷ்.
அதற்கு மேல் அவன் எதையும் பேச மாட்டான் என்று புரிந்து போக “ஒருத்தன் வாயைத் திறக்காம நம்மள குழப்புறான். இன்னொருத்தன் வாய தொறந்து குழப்புறான்” என்று தன் போக்கில் புலம்பிக் கொண்டார் இன்பவள்ளி.
உண்டு முடித்ததும் “நாளைக்கு சீக்கிரம் ரெடி ஆகி வந்துடுங்கடா. சம்மந்தி வீடு நாளைக்கு சீக்கிரமா வந்திடுவாங்க” என்று இரு மகன்களிடமும் சொல்லியவர் சென்று விட,
அண்ணனிடம் இருந்து நழுவி சென்று விடலாம் என்ற நோக்கத்துடன் “குட் நைட் ண்ணா” என்று எழுந்தவனிடம்,
அவனை அழுத்தமாய் பார்த்தவன் “உன் நடிப்பெல்லாம் இன்பூ டார்லி நம்பலாம். நான் இல்ல” என்றவன் “வந்து சேரு. நான் முன்னாடி போறேன்” என்று கடகடவென மாடி ஏறி அவன் சென்று விட,
“கண்டு பிடிச்சுடுவாருன்னு தெரியும்! ஆனா, இவளோ ஃபாஸ்ட்டாவா. நாளைக்கு பொண்டாட்டிக்கு வளைகாப்பு. ஆனா இப்ப இந்த மனுஷன் என்கிட்ட விசாரணை நடத்த போறார்.” என்று தலையை கோதிக் கொண்டவன்,
“எல்லாத்தையும் சொல்லாம விட மாட்டாரு சதீஷா. பாப்போம். முடிஞ்ச அளவு சமாளிப்போம்” என்று தானும் மேலேறினான்.
மேலே வந்ததும் “என்ன அண்ணா பேசணும். நாளைக்கு ஃபேன்ஷன் வேற இருக்கு. நீங்க இப்ப மொட்டை மாடிக்கு வர சொல்லி…” என்றவன் அவனின் பார்வையில்,
“இல்ல தூங்கனும்ல.. அதான்” பதட்டத்தை காண்பித்து கொள்ளாமல் தெளிவாய் இருப்பதை போல் அவன் முன்னே நின்றான்.
அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன், “உன் நடிப்புக்கு நடிகர் திலகம் பட்டமே கொடுக்கலாம் போல?” என்றதும் “ண்ணா…” என்றான் புரிந்தும் புரியாமலும்.
“அதான்டா.. நல்லா நடிக்கிறியே! எங்க கிட்ட கார்ல வரும் போது ஒரு உண்மைய மறைக்க அத்தனை பொய் சொன்ன!சொன்ன பொய்ய நியாபகம் வச்சுக்காம அம்மா கிட்ட அப்படியே மாத்தி சொல்ற!” என்றதும்,
“முழுசா மாட்டிக்கிட்ட பங்கு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், “இதெல்லாம் எனக்கு செட் ஆகல தான ண்ணா” என்றதும்,
“உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியும் தான!” என்றவன், “கீர்த்தியும் கண்டு பிடிச்சு கேட்டாச்சு” என்றான்.
“ரைட் ரைட் தான்” என்றவன் “அங்கையும் போன் பண்ணி இன்வெஸ்ட்டிகேஷன் போட்டாச்சா” என்க,
“என்ன பிரச்சனை? எதுக்கு ஷாலினி பாக்க வந்தா?” என்றதும் பெரு மூச்சை விட்டுக் கொண்டவன், அனைத்தையும் சொல்லி முடிக்க சர்வேஷின் முகத்தில் படும் கண்டனம்!
“தப்பு சதீஷ்!” என்றதும், “அண்ணா.. நான் வேணும்னு அப்படி எல்லாம் பேசல.. ப்ச்.. என்ன சொல்ல? கோபம் கோபமா வருதுண்ணா. அத்த வந்து பேசிட்டு போய் எவ்ளோ பிரச்சனை நம்ம வீட்ல. அண்ணி ஹாஸ்பிடல் போற அளவுக்கு கொண்டு வந்து விட்டாச்சு. அவுங்க வந்து இப்படி பேசிட்டு போனதுக்கு இவ தான காரணம்! இவ பிடிவாதம் தான் காரணம். நான் தான் எனக்கு விருப்பம் இல்லேன்னு சொல்லிட்டேன் தான! அதுக்கு அப்புறம் கூட அத்த கிட்ட என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடமா சொல்லி அதுக்கு இங்க வந்து அவுங்க பேசி… ச்சே” என்று வெறுப்பாய் சொன்னவன்,
“இந்த பொண்ணுக்கு எப்படி தான் சொல்லி புரிய வைக்க? இன்னைக்கு நேர்ல வந்து நடந்ததுக்கு சாரி கேக்ககுறாளாம்!! கேட்டு என்ன ஆகப் போகுது? இவ சாரி கேட்டா அத்த பேசினது எல்லாம் இல்லேன்னு ஆகிடுமா?” என்றான் கோபத்துடன்.
“இன்னைக்கும் வந்து பேசினாளே… சாரி சொல்ற சாக்குல வந்து “ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கல அத்தான்னு கேக்குறா… பைத்தியம்! சரியான பைத்தியம்! சும்மாவே இவளை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல. இவளோ நடந்த பின்னாடி எப்படி முடியும்? சரியான லூசா இருக்கா!” என்று காய்ந்தான் அவள் பேசி விட்டுச் சென்றதில்.
அவன் முழுதாய் சொல்லி முடிக்கட்டும் என்று சர்வேஷ் அமைதியாய் இருக்க “எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வந்ததுண்ணா. என் முடிவு தெரிஞ்சும் இவ மனச மாத்திக்காம இப்படி இருக்கா! என்ன சொல்ல? இதுல என் கிட்ட நேரடியாக வந்து பேசுறா.. எவ்ளோ தைரியம்? கடுப்பா வருது இப்ப நினைச்சா கூட” என்றவன்,
அண்ணனை பார்த்து “நீங்களே சொல்லுங்க! இவள எந்த லிஸ்ட்ல சேக்குறது?” என்றதும்,
“அவளுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்னு கேக்குறியே.. அவளுக்கு அவ்ளோ தைரியம் இருக்கப் போய் தான் அவ அம்மா கிட்டயே நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருக்கா” என்றதும் சத்தியமாய் புரியவில்லை அவனுக்கு!
“அண்ணா சும்மாவே மண்டை காய்ஞ்சு போய் கிடக்கேன்! நீங்க இன்னும் காய விடாதீங்க! தெளிவா சொல்லுங்க” என்றான் ஆயாசத்துடன்.
“சதீஷ்..எனக்கு தெரிஞ்சு ஷாலினிக்கு உன் மேல டீப் லவ் இருக்கு. ஆனா கொஞ்சம் கூட உனக்கு அவளை பிடிக்கல அப்படின்னு அந்த ஆதங்கம் தான் அவளை இன்னைக்கு உன்கிட்ட அந்த கேள்வியை கேட்க வச்சிருக்கு. அதுக்காக நீ ரியாக்ட் பண்ணது கொஞ்சம் கூட சரி கிடையாது” என்றதும் தலை குனிந்தான் சதீஷ்.
“அந்த நேரத்துல அவ்ளோ கோபம் வந்தது அண்ணா…” என்றதும் “அத்தை வந்து பேசிட்டு போன கோபத்தை இன்னைக்கு நீ அவ மேல காட்டி இருக்க!” என்றதும் மௌனமாகி விட்டான்.
“அவுங்க பேசினது அளவுக்கு அதிகமானது தான். அதுக்கு நான் போய் நல்லாவே கொடுத்திட்டு வந்துட்டேன். அதோட முடிஞ்சு போச்சு எல்லாம்” என்றவன்,
“இன்னைக்கு ஷாலினி எதுக்காக பேச வந்தான்னு தெரியல. அங்க என்ன நிலவரம்னு கூட நமக்கு தெரியாது. வளர் அத்தை அவுங்க இஷ்டத்துக்கு எதாவது பண்ணி அவளை நோகடிச்சு இருப்பாங்க கண்டிப்பா. நான் அங்க போய் பேசின அன்னைக்கு அவ கன்னம் ரெண்டும் அப்படி சிவந்து வீங்கி இருந்தது” என்றவனிடம்,
“இவளோ நடந்த பின்னாடியும் அவ மனசு மாறுதா” என்று இன்னுமே கடுப்பாக சொல்ல, “மாறும் சதீஷ். ஷீ நீட்ஸ் தட் டைம்!” என்றவன், “மாறும்னா உடனே மாறிடுமா? அவ உன்னை அவ்ளோ தூரம் விரும்பி இருக்கா. உன்னை மறந்துட்டு நெக்ஸ்ட் லைஃப்குள்ள எண்டர் ஆகிறதுக்கு அவளுக்கு டைம் அண்ட் ஸ்பேஸ் தேவை” என்றதும் மீண்டும் மௌனம் அவனிடம்.
“விடு. நீ இன்னைக்கு இப்படி ரியாக்ட் பண்ணி இருக்க வேண்டாம் அவ கிட்ட” என்றவன், “ஓகே லீவ் இட். எல்லாம் சரி ஆகிடும். போய் தூங்கு” என்றதும், “இனி எங்க தூங்க” என்றான் சலிப்பாய்.
“ஏன் அவளோ டிஸ்டர்ப் ஆகி இருக்கியா அவ பேசிட்டு போனதுல” என்றதும் “கடுப்பு தான் வந்தது. டிஸ்டர்ப் ஆகுற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல” என்றவனுக்கு அவள் கிளம்பிச் செல்லும் போது தன்னைப் பார்த்த பார்வை இப்போதும் மனதை தைத்து தொண்டைக் குழியை ஏறி இறங்கச் செய்தது.
என்ன பார்வை அது!! உயிரைத் துளைக்கும் அளவிற்கு!! அப்பப்பா அதிலிருந்து வெளி வர முடியாமல் தானே அவன் இத்தனை நேரம் போராடியது!
ஒரு வழியாக தூங்கி எழுந்து குளித்து வந்ததும் தான் சற்றே தெளிவானான்! ஆனால், இப்போது மீண்டும் அவளின் நினைவும் அவள் பார்வை தந்த தாக்கமும் அவனை சிதறடிக்க, அதில் இருந்து வெளி வருவது போல் தலையை உலுக்கிக் கொண்டான்.
அவன் நன்றாகவே தடுமாறி இருக்கிறான் என்று சர்வேஷிற்கு புரிய “போய் தூங்கு சதீஷ்” என்றான் அவனிடம்.
“ம்ம். குட் நைட் அண்ணா” என்றவன் ஏதோ தோன்ற அண்ணனிடம் நின்று “ஏன் அண்ணா.. லவ்வ பத்தி இவளோ தூரம் சொல்றீங்களே? உங்களுக்கு படிக்கும் போதெல்லாம் யார் மேலயும் லவ்லாம் இல்லவே இல்லயா நிஜமா?” என்று கேட்க,
பட்டென்று சிரித்தவன் “போடா. போய் தூங்கு” என்றான் அவன் தோளில் தட்டி.
“நிஜமாவே இல்லையா?” என்று மீண்டும் கேட்க, “டேய்.. என்ன கேள்வி இது?” என்று சிரித்தவனிடம் “எதாவது இன்டரஸ்ட்டிங்கான பதில் வந்தா அண்ணி கிட்ட சொல்லி பத்த வைக்கலாம்னு தான்” என்றதும்,
“உன் சேவை இங்க தேவை இல்ல தம்பி. கிளம்பு” என்றவன், “நீ சொன்ன மாதிரி உன் புடிச்ச புள்ளையார் அண்ணனை எந்த பொண்ணும் லவ் பண்ணி இருக்க மாட்டா. அதுக்கான வாய்ப்பையும் நான் யாருக்கும் கொடுக்கல” என்றவனை மேலும் கீழும் பார்த்தவன்,
“அண்ணி தான் உங்க கிட்ட வந்து சிக்குனதா?” என்றதும் “இந்த கேள்வியை அவ கிட்ட கேளு” என்றதும் “பதில் தான் தெரியுமே” என்றவன்,
“நமக்கு ஆண்டவன் எப்படி தல விதிய எழுதி இருக்கானோ” என்றதும் “ரொம்ப புலம்பாம போடா” என்று அவனை விரட்டி அடித்தவன் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்ததும் “நீ போக மாட்ட போல.. நான் போறேன். கூப்பிட்டாச்சு உன் அண்ணி” என்றதும்,
“எப்படி இருந்த மனுஷன்… இப்ப இப்படி ஆகிட்டிங்க… அண்ணி எள்ளுன்னா எண்ணெயா நிக்கிறீங்களே” என்று கேலி செய்ய, “போடா..” என்று விட்டு கீழே சென்றுவிட்டான் மனைவியை கவனிக்க.
செல்லும் அவனை சிரிப்புடன் பார்த்தவனுக்கு அண்ணனின் வாழ்வை போல் தெளிந்த நீரோடையென தன் வாழ்வும் அமைந்து விட வேண்டும் என்கிற பேராசை முகிழ்த்தது மனதிற்குள்!
ஆனால், அவனிடம் யார் சொல்வது! அவனின் வாழ்க்கை பெரும் இடியாப்பச் சிக்கல் என்று!!!! விதி வலியது தான்!!!!