மறுநாள் காலை வளைகாப்பு இனிதாய் தொடங்க மேடிட்ட வயிற்றுடன் மெஜந்தா நிற பட்டுப் புடவையில் ஜொலித்தவளை காணக்காண கண்கள் போதவில்லை கொண்டவனுக்கு!
சொந்தங்கள் அனைவரும் வந்து நிறைந்திருக்க சந்தனமும் குங்குமமும், தங்கமும் வைரமுமாய் முகத்தில் மின்ன நிறைவான புன்னகை தந்த அழகுடன் வெண்ணிலவாய் ஒளிர்ந்தாள் கீர்த்தன்யா!
அனைவரும் வளையல் அணிந்த பின்னர் சர்வேஷையும் வந்து அணியச் சொல்ல, அவன் அருகில் வந்து குனிந்து முகம் பார்த்ததும் செஞ்சாந்தென வெட்கத்தில் சிவந்தது அவளின் முகம்.
“அண்ணி… முகமெல்லாம் எவ்ளோ பின்கிஷ் ஆகிடுச்சு” என்று சக்ரவர்ஷினி அந்த நிகழ்வுகளை எல்லாம் படம் பிடித்தாள் அழகாக.
“அழகா இருக்க கீர்த்து” என்றவன் சந்தனத்தை அவள் கன்னத்தில் தீட்டியதும் அதன் குளுமை அப்படியே நெஞ்சிற்குள் பதிந்தது அவளுக்கு!
அவளை முதல் முறையாக புகைப்படத்தில் பார்த்த நொடியில் இருந்து இப்பொழுது வரையான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க தேனாய் தித்திக்க, அந்த தித்திப்பு வாழ்நாள் வரை நீங்காது நிறைந்திருக்க வேண்டும் என்கிற ஆசையுடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
“பப்ளிக் பப்ளிக்…” என்று வர்ஷினி, சதீஷ், நிகிதா என அனைவரும் கோரஸ் பாட, “சோ வாட்…” என்றவன் மீண்டும் அவளின் நெற்றியில் முத்தமிட்டான் மனைவியின் முகம் சிவக்க சிவக்க!
இளையவர்களின் கேலியும் கிண்டலும் அட்டகாசமாய் இருக்க கீர்த்தன்யாவிற்கு இரத்தம் பாய்ந்தது போல் முகம் சிவந்து விட்டது.
“சும்மா இருங்க புள்ளைகளா” என்று நீலகண்டன் அதட்டல் போட்டாலும் பெறாத மகளின் முகத்தில் இருந்த அளவில்லா ஆனந்தம் அவரின் இதயத்தையும் குளிரத் தான் செய்தது.
அவருக்கு மட்டுமா.. மொத்த குடும்பமும் அவர்களை வைத்து கண்ணெடுக்காமல் தான் பார்த்தனர்.
“அண்ணா… போதும் லுக் விட்டது.. வளையல மாட்டுங்க” என்றதும் கைகளில் வளையல்களை அணிந்தவன், கொடுக்கக் கொடுக்க போதாமல் மீண்டும் அவளின் நெற்றியை தீண்டி விட்டே தான் எழுந்தான்.
“ஓஹோ…..” என்னும் சத்தம் கிண்டலாய் வந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை அவன்! கீர்த்தன்யாவிற்கு முகத்தை எங்கே சென்று மூடி வைப்பது என்று தான் தெரியவில்லை.
அனைவர் முன்னிலையிலும் நெற்றி முத்தத்தாள் தன்னை அர்ச்சித்து கொண்டாடியவன் மேல் இன்னுமே அவளின் காதல் கூடிப் போக, சர்வமும் சர்வேஷ்வரன் மயமாகிப் போனாள் கீர்த்தன்யா.
விஷேசம் முடிந்து அனைவரும் கிளம்பிச் சென்றதும் அன்றிரவு மொட்டை மாடியில் அவளை பின்னிருந்து அணைத்தபடி அமர்ந்திருந்தவன் உள்ளிருக்கும் சிசுவை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
இருவரிடமும் இதமான மௌனம்! அந்த இதமான மௌனத்திற்கு இதம் சேர்ப்பது போல் குழந்தையும் மெதுவாய் அசைந்து கொண்டிருந்தது அவளுள்.
வார்த்தையால் வர்ணிக்க இருவருக்குமே ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஒருவர் அருகில் மற்றொருவர் அவர்களின் மகிழ்வை மௌனமாய் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நீண்ட மௌனம் இருவருக்குமே புதிதாய் இருக்க, அந்த மௌனப் பரிபாஷையை கலைக்க விரும்பவில்லை இருவரும்.
நிமிடங்கள் கடந்து “ஒண்ணுமே பேசத் தோணலயே கீர்த்தி பொண்ணுக்கு” என்று அவனே கேட்க, தலையை இடமும் வளமும் மட்டும் அசைத்தாள் கீற்றாய் உதித்த புன்னகையுடன்.
“பேசத் தோணல. ஆனா ஒன்னு கேக்கத் தோணுது” என்றதும் “கேளுடா” என்றான் அவள் முகத்தை தன்னை நோக்கி நகர்த்தியபடி. வாகாய் அவன் மேல் சாய்ந்து கொண்டவள்,
வருடிக் கொண்டிருந்த அவனின் கைகளின் மேல் தன் கையை வைத்து “பொண்ணா பையனா?” என்று ஆர்வமாக கேட்க, அவளின் ஆர்வத்தில் புன்னகை கிளம்பியது இவனுக்கு.
“இவளோ நாள் இல்லாம இப்ப என்ன திடீர்னு!” என்றதும் “சொல்லுங்களேன்” என்றாள் விடாமல்.
“ம்ம்… எந்த குழந்தையா இருந்தாலும் ஓகே தான் கீர்த்து” என்றான். அவன் நடுநிலையாக சொன்னதில் அவள் முறைக்க, “சரி நீ சொல்லு? என்ன பேபி எக்ஸ்பெக்ட் பண்ற?” என்றதும் “பொண்ணு தான்” என்றாள் சற்றும் யோசிக்காமல்.
கண்கள் விரிய அவளைப் பார்த்தவன் “ஏன் பையன் வேண்டாமா…?” என்று சிரிப்புடன் கேட்க, “பையன் அடுத்து பெத்துக்கலாம். இப்ப பொண்ணு தான்” என்றதும் இன்னுமே கண்கள் விரிந்தது அவனுக்கு.
“ஏன்? பொண்ணு அப்புறம் பையன்?” என்று கேட்க “அப்புறம் பையன்னு இல்ல பொண்ணு பிறந்தாலும் ஓகே தான். ஏன்… எல்லாமே பொண்ணாவே இருந்தாலும் ஓகே தான். எங்களை மாதிரி” என்று சொல்லி சிரிக்க,
“என்னடி இது? பிறக்கிறது எல்லாமேவேன்னா….. இல்ல எனக்கு புரியல…” என்றான் அவன் திகைப்பும் சிரிப்பும் போட்டி போட!
“ஆமா… எல்லாமேன்னா எல்லாமே தான். பெத்துக்கிற வரைக்கும் எல்லாமே பொண்ணாவே பெத்துக்கலாம்” என்றதும், “இப்படி எல்லாம் சொல்லி ஷாக் கொடுக்காத கீர்த்துமா” என்று விட்டான் அப்படி ஒரு சிரிப்புடன்.
சிரிக்கும் அவனின் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டவள் “நாங்க அஞ்சு பேர் சர்வா. ரெண்டு கண்டன்களும் எங்கள அவ்ளோ கண்டிப்பா வளர்த்ததனால எங்களுக்கு சின்ன சின்ன சந்தோஷம் கூட கிடைக்காம போயிடுச்சு. ஒருத்தி பண்ணதுக்கு நாங்க அஞ்சு பேரும் நல்லா அனுபவிச்சோம். அந்த மாதிரியான சூழல்லாம் நமக்கு இல்ல” என்றவள்,
“நிச்சயம் நீங்க சூப்பர் டேடியா இருப்பீங்க! நான் அனுபவிக்காத குட்டி குட்டி சந்தோஷம்லாம் நம்ம பொண்ணுங்களுக்கு உங்க மூலியமா கிடைக்கணும்னு ஒரு ஆசை…” என்றாள் கணவனின் அன்பு முழுதாய் தாங்கள் பெறப் போகும் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற கனவுடன்.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுள் எந்த மாதிரியான உணர்வுகளை விதைத்தது என்று அவனுக்கே தெரியவில்லை.
அவள் சொல்லச் சொல்ல தன் மேல் தந்தையாக அவளின் பிம்பம் பெரும் நம்பிக்கையுடன் பதிந்திருப்பது புரிய, அதனை எந்த வித குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் பதித்துக் கொண்டான்.
“என்ன ஒண்ணுமே சொல்லல?” என்று அவனின் மௌனத்தை கண்டு கேட்க, “பெத்துக்கலாம். உன் ஆசைப் படியே” என்று விட்டான் வேறெதுவும் சொல்லத் தோன்றாமல். குரல் கரகரத்து போய் இருந்தது அவளின் பகிர்வில்!
“ஐயம் ஃபீலிங் ஃபுல்பில்ட் வித் யூ கீர்த்து” என்றவன் “இந்த கீர்த்தி பொண்ணு என்னோட எல்லாத்துலயும் நிறைஞ்சு இருக்கா… அவ்ளோ சந்தோஷம். சொல்றதுக்கு வார்த்தை இல்லைன்னு சொல்லுவாங்கள்ல.. அந்த மாதிரி தான்” என்றான் நிறைந்து தளும்பிய மகிழ்வுடன்.
“கண்டன்களுக்கு தான் நன்றி சொல்லணும். இந்த சர்வகண்டனை எனக்கு கட்டி வச்சதுக்கு” என்றவளை நன்றாகவே முறைத்து “வாய்க் கொழுப்பு கூடிப் போச்சு” என்று சிரிப்பில் துடித்த இதழை ஆசையாய் தீண்டி அணைத்துக் கொண்டான் அவனின் உயிரானவளை!
அங்கே மலர்ந்து மணம் வீசும் மலர்களை போல் அவர்களின் உள்ளத்திலும் காதல் மலர்ந்தாடியது திகட்டாத வாசத்துடன்!