மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து சர்வேஷ்வரனின் அகமெல்லாம் அவளின் நினைவுகள் தான்! புடவையும், பூவும் என மயக்கியவளை கண்டு அவனால் உள்ளுக்கும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை.
அவளின் காலடியில் இப்போதே இதயம் சுருண்டு கொள்வதை ஒரு வித ரசனையுடன் உள்வாங்கிக் கொண்டான். இதென்ன வித்தியாசமான அவஸ்த்தை என்று அசந்தும் போனான்.
விழிகளாலும் தீண்டவில்லை. மொழிகளாலும் தீண்டவில்லை. ஆனால், இதயத்தை தீண்டி இருந்தாள்.
முகம் பார்த்ததோடு மட்டுமே இருக்கும் நிலையில் தன் அகம் சேர்ந்தவளின் மேல் செல்லக் காதல் கோபம் கூட முகிழ்த்தது.
“உள்ளுக்குள்ள புகுந்து இம்சை பண்ற நீ!” என்று மானசீகமாக அவளோடு பேசிக் கொண்டவன் அன்று முழுவதும் புன்னகையுடன் தான் காணப்பட்டான். ஆனால், வீட்டினர் அவனை கவனிக்கும் போதெல்லாம் புன்னகையை இதழில் சுருக்கிக் கொள்வான்.
இவனையே பின் தொடரும் தம்பியும் தங்கையும் அண்ணனின் நிலை கண்டு “என்னடா சுகரு…. எப்படி இருந்த நம்ம அண்ணன்..இப்படி ஆகிட்டாரு” என்று கேலியாக தங்கையிடம் சொல்ல,
“ஹ்ம்ம்.. சும்மாவா சொன்னாங்க.. காதல் வந்தா கையோட கள்ளத்தனமும் வந்திடும்னு. நம்ம அண்ணாவும் அப்படித் தான் ஆகிட்டார்” என்று சிரித்தவள்,
“ஆனா, ஒன்னு மட்டும் என்னால நம்ப முடியல சதீஷ் அண்ணா? அதெப்படி? ஃபோட்டோல பாத்த ஒரு செக்கண்ட்ல அண்ணா விழுந்துட்டார்? அதுவும் தலை குப்புற!!!! இட்ஸ் அ பிக் மருத்துவ மிராக்கில்!!” என்று சக்ரவர்ஷினி இன்னும் நம்ப முடியாமல் சொல்ல,
“சுகரு…. இந்த ஃபயர் தெரியுமா ஃபயர்.. அது மாதிரி தான் லவ்வும்… பத்த வைக்க மெனக்கெடவெல்லாம் வேணாம். சின்ன பொறி இருந்தா போதும்… தானா கப்புன்னு பத்திக்கும்! நம்ம அண்ணாக்கும் அப்படித் தான்! எதோ ஒரு ஸ்பார்க்! பாத்ததும் பக்குன்னு பத்திக்கிச்சு! இப்போ கொஞ்சம் கொஞ்சமா கொழுந்து விட ஸ்டார்ட் பண்ணிடுச்சு அவ்ளோ தான்” என்று மேதாவியாய் சொல்ல,
“உன்னை என்னமோன்னு நினைச்சேன் அண்ணா? பரவாயில்ல. உனக்கும் எதோ கொஞ்ச கொஞ்சம் அறிவிருக்கு” என்று இளைய அண்ணனை சந்தடி சாக்கில் வாரியவள்,
“அதுவும் லவ் விஷயமா இவளோ ஃபயரா நீ பேசுறதை பாத்தா எதோ ஆள் செட் பண்ணி லவ் படம் ஒன்னை சைலண்ட்டா ஓட்டுவ போல?” என்று அண்ணனை சந்தேகமாக பார்க்க,
“எனக்கும் ஆசையா தான் இருக்கு? லவ்கீக வாழ்க்கை அமையும்னு. ஆனா, எங்க ஒரு பொண்ணும் சிக்கலயே?” என்று அவன் அலட்டலாய் சொல்ல,
அவனை ஆவென்று பார்த்தவள், “அதுக்கெல்லாம் முக ராசி வேணும். அந்த முகரக்கட்டை எல்லாம் உன் கிட்ட இல்ல சதீஷ் அண்ணா” என்றாள் கிண்டலாக.
அவளை கடுப்பாக பார்த்தவன், “ஹ்ம்ம்…. ஏன் பேச மாட்ட? இன்னைக்கு பிறந்த நாள் பேபியா போய்ட்டேன்னு தான் அமைதியா போறேன்! இல்லேன்னா வச்சு வம்பிழுத்து இருப்பேன். சரி சரி.. சீக்கிரம் காஸ்டியூம் மாத்திட்டு வா. கெஸ்ட் எல்லாரும் வர்ற ஆரம்பிச்சுடுவாங்க” என்றபடி தங்கையை அனுப்பினான் சதீஷ்வரன்.
சக்ரவர்ஷினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இல்லத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். கிராண்டாக கொண்டாடலாம் என்று அனைவருமே பிரியப்பட்டதற்கு சக்ரவர்ஷினி ஒப்புக் கொள்ளவில்லை.
“அதெல்லாம் வேண்டாம் அப்பா. வீட்லயே சின்னதா செளிப்ரேட் பண்ணிடலாம்” என்று முடித்துக் கொண்டாள். அவளின் விருப்பப் படியே அனைவரும் இல்லத்தில் கொண்டாடலாம் என்று முடிவு செய்து இதோ அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.
மாலை ஆறு மணி போல் சக்ரவர்ஷினியின் உடன் பயிலும் தோழிகள், கல்லூரி ஆசிரியர்கள் என அனைவரும் வந்திருக்க, பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதே துவங்கியது.
கேக் வெட்டி, அதை அவள் தாய் தந்தைக்கு கொடுத்த பின்னர் மூத்த அண்ணனுக்கு கொடுத்து, இளைய அண்ணனுக்கு கொடுக்கும் போது அவள் மூக்கில் அவன் கேக்கினை பூசி என ஒரே கலாட்டா தான்.
சிரிப்பும் கேலியும் பாட்டும் நடனமும் என நண்பர் பட்டாளத்துடன் அவள் இணைந்து கொள்ள, வந்தவர்கள் அனைவரையும் பணியாட்கள் சிறப்பாக கவனித்து கொண்டார்கள்.
நேரம் ஒன்பதை நெருங்கும் போது ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொள்ள, வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர். வடிவேலனின் தங்கை வளர்மதியும் குடும்பத்தோடு வந்திருந்தார் சக்ரவர்ஷினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு.
அவர் வந்தது என்னவோ சக்ரவர்ஷினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அழைப்பை ஏற்று தான். அவருக்கு சொல்லவில்லை என்றாலும் அதற்கும் பல விதமான குதர்க்க பேச்சுகள் முளைக்கும். எனவே, அவரையும் அழைத்து இருந்தனர் வடிவேலன் தம்பதியினர்.
இப்போது அவர் வந்ததன் நோக்கத்தை அண்ணனிடம் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்தவர் அனைவரும் ஹாலில் இருக்கும் போதே “அண்ணா.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும் உங்க கிட்ட” என்று ஆரம்பிக்க, வடிவேலனுக்கு புரிந்து தான் இருந்தது தங்கை எதைக் குறித்து பேச வருகிறாள் என்று.
அன்றே வளர்மதி வந்து பேசி விட்டுச் சென்ற விஷயங்களை இன்பவள்ளி கணவனின் காதில் போட்டிருந்தார். வடிவேலன் அதனை யோசனையாக மகனிடமும் ஹோட்டலில் ஓர் நாள் சொல்லி இருக்க,
“ஷாலினியை நான் அப்படி பாத்ததும் கிடையாது! பாக்கவும் முடியாது ப்பா. சின்ன பொண்ணு. நம்ம வர்ஷிய விட சின்ன பொண்ணு. அவளைப் போய் எப்படி இந்த அத்தை எனக்கு ஜோடி சேக்க பாக்குறாங்க?” என்று அப்போதே காய்ந்து விட்டான்.
கூடவே, இன்பவள்ளியையும் பேசி இருந்தான். “அவுங்க வந்து பேசினா நீங்க தைரியமா முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே அம்மா? அதை விட்டுட்டு ஏன் பூசி மொழுகி இருக்கீங்க? இன்னொரு தடவை இது சம்பந்தமா பேசினாங்கன்னா சர்வேஷ்க்கு விருப்பம் இல்லைன்னு தெளிவா சொல்லிடுங்க” என்று பொரிந்து விட்டான் அவரையும்.
இப்போது அவர் பேச ஆரம்பிக்கவும் சர்வேஷ்வரன் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருக்க, வளர்மதி கணவனிடம் ஜாடை காட்டினார். மனைவியின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு தான் மனனம் செய்து வைத்திருந்ததை ஒப்பிக்க ஆரம்பித்தார் ஜீவராஜன்.
“அது வந்து மச்சான்.. நம்ம சர்வேஷுக்கு பொண்ணு பாக்குறதா வளர் சொன்னா. நம்ம பொண்ணு இருக்க ஏன் வெளிய போய் பொண்ணு தேடிக்கிட்டு? ஷாலினிய சர்வேஷுக்கு கட்டிக் கொடுக்கிறதுல முழு சம்மதம் எங்களுக்கு. அன்னைக்கு வளர் வந்து பேசினப்ப உங்க வீட்ல வயசு வித்தியாசம் பாத்து கொஞ்சம் யோசிச்சு இருப்பாங்க போல” ,
“அதுக்கு என்ன மச்சான்? அந்த காலத்துல பதினாலு பதினாறு வருஷ வித்தியாசத்துல கூட கல்யாணம் பண்ணி எல்லாரும் நல்லா வாழலையா? நீங்க ஏன் வெளிய பொண்ணு தேடி அலைஞ்சு கஷ்ட பட்டுக்கணும்?நம்ம ஷாலினிக்கும் சம்மதம். ஒரு நல்ல நாள் பாத்து கல்யாண தேதி வைக்கிறது தான் பாக்கி” என்று கடகடவென சொல்லி முடித்து மூச்சை விட்டுக் கொண்டவர் மனைவியை பார்த்தார்.
அவரோ கண்ணமர்த்தி அண்ணனின் முகத்தில் பார்வையை திருப்பினார் அவரின் பதிலுக்காக. வடிவேலனுக்கு தங்கையின் குணம் நன்றாக தெரியும்! தான் பேசினால் அதற்கு தங்கை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். மேலும் பேசப்பேச குதர்க்கமாக தான் பேச்சுக்கள் வரும் என்பதை உணர்ந்தவர்,
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு மாப்பிள்ளை? கல்யாணம் பண்ணிக்க போறது என் பையன் சர்வேஷ் தான். அவனே சொல்லட்டும்” என்று நயமாக மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட, மனதிற்குள் கணவனுக்கு சபாஷ் போட்டுக் கொண்டார் இன்பவள்ளி.
பின்னே, வளர்மதியை சமாளிக்க சர்வேஷ்வரனால் தாராளமாக முடியுமே! குதர்க்க பேச்சுகளும் இடக்கான பதில்களும் எல்லாம் அவனிடம் செல்லுபடி ஆகாது! இது போன்ற நபர்களிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்து முகத்திற்கு நேரே பேசிவிடுவான் மூத்த மகன்!
இன்பவள்ளி மகனின் வாய் பூட்டு அவிழ ஆவலாக காத்திருக்க, அவனும் நிதானமாக அத்தை குடும்பத்தை ஏறிட்டான். அவனின் அழுத்தமான பார்வைக்கே வளர்மதிக்கு சற்றே வியர்க்க ஆரம்பித்தது.
எங்கே ஏதேனும் மறுப்பு சொல்லி விடுவானோ என்று வேக வேகமாக அவர் முந்திக் கொள்ள நினைத்து “அதெல்லாம் சர்வேஷுக்கு ஷாலினிய பிடிக்காம இருக்குமா? சின்னதுல இருந்து பாக்குறான்? அவனுக்கு அவ பொண்டாட்டியா வந்தா கசக்கவா செய்யும்?” என்று ஆரம்பித்து விட, அதுவே அவருக்கு வினையாக முடிந்தது.
அவன் பதில் சொன்ன விதத்தில் முகத்தில் அறை வாங்கியதை போல் உணர்ந்தார் வளர்மதி.
“வயசு வித்தியாசம் பெரிய விஷயம் இல்லேன்னு சொல்றீங்க? அதான் நீங்களே சொல்டீங்களே அது அந்த காலத்துலன்னு? அப்புறம் என்ன?” என்று அதற்கும் தெளிவான பதிலை தந்தவன்,
ஜீவராஜனை பார்த்து “நாங்க வெளில பொண்ணு தேடி அலஞ்சதை நீங்க எப்ப மாமா பாத்தீங்க?” என்று கேட்க, அவரோ பதில் சொல்ல முடியாமல் முழித்தார்.
“உங்களை தான் மாமா? பொண்ணு தேடி அலைஞ்சு கஷ்டபடுறோம்னு சொன்னீங்களே?” என்றவன் அழுத்தமாய் கேட்க,
“அது.. அது… பொதுவா சொல்றது தானே சர்வா” என்றார் எச்சில் கூட்டி விழுங்கியபடி.
“ஓ…. இந்த பொதுவா பேசுறது.. பொண்ணு பாத்து கஷ்ட படுறோம்னு சொல்றது.. அதெல்லாம் இங்க எடுபடாது மாமா” என்று அவருக்கும் ஒரு குட்டு வைத்தவன்,
“மதிஷாலினியை நான் வர்ஷி மாதிரி தான் பாக்குறேன். இப்ப புரியும்னு நினைக்கிறேன்” அத்தோடு பேச்சு முடிந்து விட்டது என்பது போல் எழுந்து கொள்ள,
“அப்ப என் மகளை வேண்டாம்னு சொல்றியா நீ?” என்று வெகுண்டு எழுந்து விட்டார் வளர்மதி. அனைவரும் அவரின் பேச்சில் திகைக்க, “வளர்மதி. சர்வா தான் இவளோ தூரம் சொல்லிட்டானே?” என்று வடிவேலன் கொஞ்சம் சமாதானமாய் சொல்ல,
“நீங்க விடுங்க அண்ணா? இவளோ நேரம் உங்க மகனை தானே பேச விட்டீங்க? இப்பையும் அவனே சொல்லட்டும்” என்று ஆவேசமாய் சொன்னவர்,
“என் மகளை வேண்டாம்னு சொல்றியா நீ?” என்றார் விடாமல். சர்வேஷ்வரனோ படிக்கட்டில் கால் வைத்து நின்று நிதானமாக அவரை திரும்பி பார்த்தவன், இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு லகுவாய் தோள் குலுக்கி “ஆமா!” என்றான் தோரணையுடன்.
வளர்மதிக்கு ஆவேசம் கண்ணை மறைத்தது. “இந்த வீட்டுக்கு மூத்த மருமக என் மக தான்” என்று வெறி கொண்டு கத்த, அவரின் நாட்டாமை மிகுந்த பேச்சில் அங்கிருந்த அனைவருக்கும் கோபம் தீயாய் தகித்தது.
“நல்லா நோஸ் கட் வாங்க போகுது இந்த அத்தை” என்று சதீஷ் முணுமுணுக்க, அவன் சொன்னது அடுத்து சர்வேஷ்வரன் சொன்ன பதிலில் உறுதியானது.
“ஓ… இஸ் இட்!” என்றவன், குனிந்த தலை நிமிராமல் அமைதியாக அன்னையின் பின்னர் நிற்கும் மதிஷாலினியை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“நீங்க நினைக்கிறது எல்லாம் நடத்திக்கிறதுக்கு இது உங்க வீடு இல்ல. அப்படியே நடத்தித் தீருவேன்னு இருந்தீங்கன்னா உங்க உறவு எங்க அப்பா கூட மட்டும் நிக்கட்டும்! அதை தாண்டி என்கிட்ட வர முடியாது! வரவும் விடமாட்டேன்! மீறி உங்க நாட்டாமை என்கிட்ட காட்டணும்னு நினச்சீங்கன்னா…” என்று முடிக்காமல் நிறுத்தியவனின் தீயான பார்வையிலும் பேச்சிலும் வளர்மதியின் ஆவேசம் ஒடுங்கிப் போனது.
அவமான உணர்வு அதிகமாய் தாக்க, கூடவே அவன் பேசியதற்கு அண்ணனும் அவரின் மனைவியும் எதுவும் சொல்லாமல் இருக்க, அங்கு நிற்கவே முடியவில்லை. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார் கணவர் மற்றும் மகளுடன்.
“என்னங்க.. உங்க தங்கச்சி சர்வா கிட்டயே இந்த ஆட்டம் ஆடிட்டு போறாங்க” என்று இன்பவள்ளி அச்சத்துடன் சொல்ல, “அவ அப்படித் தான்னு தெரியும் தானே? விடு. அவளே புரிஞ்சிக்குவா. சீக்கிரம் நம்ம சர்வாவுக்கு கல்யாணம் முடிக்கிறது நல்லது. இல்லைன்னா வளர் சும்மா இருக்க மாட்டா” என்ற வடிவேலன்,
“தரகருக்கு போன் பண்ணி அந்த பொண்ணு வீட்ல பேசினாரான்னு விசாரிச்சு பாரு” என்றார்.
இன்பவள்ளியும் தரகருக்கு அழைத்து கேட்க, “இன்னைக்கு சாயந்தரம் தான்மா போய் பேசிட்டு வந்தேன்.” என்றார் அவரும்.
“என்ன சொன்னாங்க தரகரே…” என்று இன்பவள்ளி ஆர்வமாக கேட்க, சற்றே தயங்கியவர் “கொஞ்சம் பெரிய இடம்னு தயங்குறாங்க. ஆனா, நான் எடுத்து சொல்லி இருக்கேன்மா உங்க குடும்பத்தை பத்தி. அதனால கொஞ்சம் யோசிச்சு ஜாதகம்லாம் பாத்திட்டு சொல்றதா சொல்லி இருக்காங்க” என்றார் தரகர்.
“ஓ…” என்றவருக்கு எப்படியாவது பெண் வீட்டார் சம்மதம் சொல்லி விட வேண்டுமே என்று தவிப்பாக இருந்தது. பின்னே, மகன் விருப்பப்பட்ட வாழ்வல்லவா?
“சரி தரகரே! அவுங்க பதில் சொன்னதும் எங்களுக்கு தகவல் சொல்லுங்க” என்று அழைப்பை துண்டித்த இன்பவள்ளிக்கு, “முருகா பொண்ணு வீடு சம்மதம் சொல்லணும். என் மகன் கல்யாணத்துல பூகம்பம் எதுவும் புகுறாம இருக்கணும்” என்று வேண்டுதல் தான் தலை தூக்கி இருந்தது.