மருதமலை முருகன் கோவிலில் தங்களின் தரிசனத்தை முடித்துக் கொண்டு இல்லம் வந்தனர் கீர்த்தன்யாவின் குடும்பத்தினர்.
அனைத்தும் முடிந்து இல்லம் வர மாலையாகி இருக்க, வீட்டிற்குள் நழைந்ததும் அனைவரும் பேசியபடி மாலை சிற்றுண்டியுடன் காஃபியை பருகிக் கொண்டிருந்த சமயம் தரகரிடம் இருந்து நீலகண்டனுக்கு அழைப்பு வந்தது.
“மணி.. தரகர் தான் கூப்பிடுறார்” என்ற நீலகண்டன் அழைப்பை ஏற்க, “வணக்கம் அண்ணே. நம்ம கீர்த்தி பொண்ணுக்கு ஏத்த வரன் ஒன்னு வந்திருக்கு. நல்ல தரமான இடம். அவுங்களே பொண்ணை புடிச்சு போய் கேட்டிருக்காங்க” என்று சொல்ல,
“ஹ்ம்ம்.. சந்தோஷம் தரகரே.. மாப்பிள்ளை யாரு? என்ன வேலை? படிப்பு? குடும்பம்? ஜாதகம்?” என்று நீலகண்டன் வரிசையாக அடுக்க, “அதை எல்லாம் சொல்றதுக்கு தான் ண்ணே உங்களை கூப்பிட்டேன். நேர்ல பேசலாம்ங்களா?வீட்ல இருக்கீங்களா? இல்ல தோப்பு பக்கமா?” என்று விசாரிக்க,
“என் தம்பி வீட்ல தான் இருக்கேன். வாங்களேன். பேசிடுவோம்” என்று நீலகண்டன் சொல்லி விட, “சரிங்கண்ணே. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுறேன்” என்று அழைப்பை துண்டித்தார் தரகர்.
அனைவரும் நீலகண்டனை பார்க்க, “நமக்கு எப்பவும் மருதமலை போய்ட்டு வந்த பின்ன தான் ராசியே. அப்ப தான் நல்ல இடம் கை கூடி வரும். கீர்த்திக்கு போய்ட்டு வந்த அன்னைக்கே முருகன் நல்ல வரன் காட்டிட்டான் போல” என்றவர்,
தரகர் சொன்னதை சொல்லி விட்டு, “இப்பவே வரச் சொல்லிட்டேன் மணியா. நர்மதா மவளும் மாப்பிள்ளையும் இருக்காங்க. இன்னைக்கே யாரு என்னன்னு பேசிடலாம் பாரு” என்று சொல்ல, “சரிண்ணே தரகர் வந்து மத்த விபரமும் சொல்லட்டும். பாக்கலாம்” என்றார் மணிகண்டன்.
கீர்த்தன்யாவிற்கு உள்ளுக்குள் அத்தனை பரபரப்பு. எதோ இப்பொழுதே கல்யாண நாளை குறித்து விட்டது போல் அத்தனை பதட்டம்.
மனதிற்குள் ஆயிரம் வேண்டுதல்கள் வேறு. நல்ல துணையாக வர வேண்டும் என்று! அந்த வேண்டுதலிலும் ‘ என்னோட அப்பன்.. பெரியப்பன் மாதிரி கண்டனா இல்லாம இருக்கணும் ‘ என்றும் வேண்டிக் கொள்ள, அவளின் நினைப்பில் அவளுக்கே புன்னகை எட்டிப் பார்த்தது.
இப்படி அவள் கேலியும், பயமும் என மாறி மாறி யோசித்துக் கொண்டிருக்க தரகர் இல்லத்திற்கு வந்து விட்டார். கீர்த்தன்யா அறிந்திருந்த வரை இப்படி ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் அவர்களின் இல்லத்தில் நடந்தேறியது இல்லை.
தனது நான்கு அக்காக்களுக்கும் நீலகண்டன் மற்றும் மணிகண்டன் இருவரும் மட்டுமே மாப்பிள்ளை பார்த்து இது தான் மாப்பிள்ளை என்று சொல்லி இருந்தனர். ஒப்புக்கு சப்பாய் அன்னையை விட்டு “மாப்பிள்ளையை பிடித்து இருக்கிறதா!” என்று கேட்டிருந்தாலும் அவர்களின் முடிவே இறுதியானது.
அதுவும் கீரத்தன்யா அறிந்து, சுஜித்ராவிற்கும் நர்மதாவிற்கும் தோப்பில் வைத்தே பேசி முடித்த பின்னர் தான் இல்லம் வந்து விஷயத்தை சொல்லி இருந்தார்கள்.
ஆனால், தன் திருமண விஷயத்தில் ஒரு துளி மழை நீரின் அளவு கொஞ்சம் மாற்றம் இருப்பதை உணர்ந்து கொண்டவளுக்கு சற்றே பதட்டம் தணிந்தது.
“வாங்க தரகரே” என்று அவரை வரவேற்ற ஆண்கள், தெய்வானையின் புறம் பார்வையை திருப்ப, அதை புரிந்து கொண்டவர் “கீர்த்தி நீ உள்ள போ. பெரியவங்க நாங்க பேசிட்டு சொல்றோம்” என்று மகளை அறைக்குள் செல்லச் சொல்ல,
“அதானே பார்த்தேன். கண்டனுங்க எப்பவும் விடாக்கண்டனுங்க தான்!” என்று புகைந்தவள், அமைதியாய் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.
தெய்வானை அவள் அறைக் கதவை சாற்றி விட்டு வர, ஜன்னலில் காதை வைத்துக் கொண்டவள், “முருகா.. எல்லாம் க்ளியரா கேக்காட்டியும் கொஞ்சம் அறை குறையாவாச்சும் கேக்கணும்” என்றபடி வலது காதை ஜன்னலோடு ஒட்டிக் கொண்டு அங்கேயே நின்று விட்டாள்.
வெளியே தரகரோ மாப்பிள்ளை பற்றியும், மாப்பிள்ளையின் குடும்ப பின்னணியை பற்றியும் நீலகண்டன் கேட்டதும் சொல்ல ஆரம்பித்து இருந்தார்.
“மாப்பிள்ளை பேரு சர்வேஷ்வரன். நல்ல குணம். தங்கமான பையன். நல்ல மரியாதையான குடும்பம். கோயம்பத்தூர்ல வடிவேலன் குரூப்ஸ் தெரியும் தானே. நல்ல பிரபலமான ஹோட்டல் நிறுவனம் வச்சு இருக்கவங்க. ஹோட்டல் மட்டுமில்ல அது போக இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி ரெஸ்டாரன்ட், லாட்ஜ், அது இதுன்னு நல்ல தொழில் வளம் இருக்கு. அதுக்கு பையன் தான் மூத்த வாரிசு. தொழில் ரீதில சக்ரவர்த்தி. வீட்டுக்கு தல பிள்ள. கொஞ்சம் கண்டிப்பானவரு போல. ஆனா, பையன் நம்ம பொண்ணுக்கு ஏத்த வரன். நம்பி பொண்ணை கட்டலாம்” என்று தரகர் வரிசையாக சொல்ல, நீலகண்டனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“பையன் பயோ டேட்டா” என்று நார்மதாவின் கணவன் கேட்க, அதனை அவனிடம் கொடுத்தார் தரகர்.
“பையன் கேட்டரிங் சம்பந்தமா படிச்சிருப்பார் போல. கூடவே, எம். பி. ஏ.வும் சேத்து படிச்சு இருக்கார்” என்ற தரகர், “பையனோட ஜாதகம்” என்று நீட்ட, நீலகண்டன் அதனை பெற்றுக் கொண்டார்.
நர்மாதாவின் கணவனும் அவனின் பயோ டேட்டாவை முழுதாக பார்த்து விட்டு “நல்ல திறமைசாலி தான் மாமா” என்க, மணிகண்டனின் முகத்தில் எதோ சிந்தனை ரேகைகள்.
“என்னடா யோசனை?” என்று நீலகண்டன் கேட்க, “இல்ல அண்ணே.. ரொம்ப பெரிய இடம் மாதிரி தெரியுது? வேண்டாமே” என்று சொல்லி, நீலகண்டன் முந்துவதற்குள் தரகர் முந்திக் கொண்டார்.
“மணி அண்ணே.. என்ன புரியாம பேசுறீங்க? இடம் பெருசு தான்! ஆனா, மனுஷங்க தங்கம். அதைப் பாருங்க” என்றவர், “நீங்க நினைக்கிற மாதிரி சீரு.. அது இதுன்னு நச்சரிக்குற ஆளுங்க கிடையாது. சொல்லப் போனா அந்த மாப்பிள்ளை தம்பியே பொண்ணு வீட்ல எதுவும் கேக்க கூடாது… பொண்ணு எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஏத்த பொண்ணா இருந்தா மட்டும் போதும்னு சொல்லி இருக்காரு. இதை விட வேற என்ன வேணும் உங்களுக்கு?” என்று சொல்ல,
நீலகண்டனுக்கு இவனே கீர்த்திக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்கிற ஆசை மனதிற்குள் வந்து விட்டது. ஆனால், தம்பியின் பேச்சிலும் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொண்டவர் “மணி…. தரகர் இவளோ சொல்றாரு தானே? சீரெல்லாம் விஷயமா? ஜாதகம் பாப்போம். பொருந்தி இருந்தா கட்டுவோம். நல்ல இடமா இருந்தா அதை ஏன் நழுவ விடுவானேன்?” என்க,
“சரி தான் ண்ணே. நமக்கு ஏத்த இடமா இருந்திட்டா பரவாயில்ல. இவுங்க கொஞ்சம் பணக்கார வர்கமா தெரியுது. அதான் யோசனை” என்று சொல்ல,
“மணி அண்ணே.. நானும் இதை யோசிச்சு தான் முதல்ல நம்ம பொண்ணு போட்டோவை காட்டல. பணக்கார பொண்ணுங்க போட்டோ தான் காட்டினேன். ஆனா, அது எதுவும் அந்த தம்பிக்கு பிடிக்கல. அங்க நடந்த சந்தர்ப்ப சூழ்நிலை… நம்ம பொண்ணு போட்டோ மாப்பிள்ளை கண்ணுக்கு சிக்கி போச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க? அவருக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு. அதான் அவுங்களா கேக்க சொன்னாங்களே! நம்ம கீர்த்தி பொண்ணு யோகம்.. வீடு தேடி அவளுக்கு வரன் வந்திருக்கு” என்று சொல்ல, அனைவருக்கும் வியப்பு தான்.
“அப்படியா தரகரே” என்று நீலகண்டன் ஆச்சர்யமாக சொல்ல, “அட ஆமா ண்ணே. பையனே பிடிச்சு போய் தான் கேட்க சொன்னது. அவுங்களுக்கு முழு சம்மதம். நேத்து ஜாதகமும் பாத்து பையனோட அம்மா என்கிட்ட அவுங்க சம்மதத்தை உறுதியா சொல்லிட்டாங்க. அவுங்க பக்கம் ஜாதகமும் அமோகமா பொருந்தி இருக்கு. இனி மேற்கொண்டு நீங்க தான் சொல்லணும்” என்று சொல்லி விட, வீட்டினர் அனைவருக்கும் சற்று மனமார்ந்த திருப்தி தான்.
“இந்தாங்க பையன் போட்டோ” என்று அவன் புகைப் படம் இருந்த கவரையும் நீட்ட, அதனை பெற்றுக் கொண்ட நீலகண்டன் “சரி தரகரே. நாங்க ஜாதகம் பாத்திட்டு, கொஞ்சம் விசாரிச்சிட்டு பதில் சொல்றோம்” என்று சொல்ல,
தரகரோ வேக வேகமாக “எப்பண்ணே பதில் சொல்றீங்க?” என்று கேட்க, அதில் அனைவரின் பார்வையும் அவர் மேல் குவிய, “அதில்ல…. மாப்பிள்ளை வீட்டுல ஆர்வமாக இருக்காங்க” என்று இழுத்தார் தரகர்.
“அவுங்க பக்கம் கொஞ்சம் ஆர்வமா இருக்கிறது புரியுது தரகரே. இருந்தாலும் நாங்க பாக்க வேண்டியதை பாத்து முடிவு பண்ணி தான சொல்ல முடியும்?” என்று மணிகண்டன் பிடி கொடுக்காமல் சொல்ல, அதில் தரகர் நீலகண்டனை பார்த்தார்.
“நாங்க முடிவு பண்ணிட்டு ரெண்டு நாளைக்குள்ள தகவல் சொல்றோம்” என்று தரகரை அனுப்பிய நீலகண்டன் தம்பியிடம் “மணி.. முதல்ல ஜாதகம் பாத்திட்டு முடிவு பண்ணுவோம். பொருந்தி இருந்தா மேக்கொண்டு விசாரிப்போம்” என்று சொல்ல,
“பெரிய இடம் ண்ணே. சரியா வருமா?” என்றார் மணிகண்டன் அப்போதும் தயங்கியவராக.
“தரகர் தான் இவளோ தூரம் புட்டு புட்டு வச்சிட்டு போறாரே மணி. அவுங்க பக்கம் எல்லாம் சரி. சீரெல்லாம் முக்கியம் இல்லன்னு அந்த தம்பியே சொல்லி இருக்கு. அப்புறமென்ன? பாப்போம்! விசாரிப்போம். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்” என்றார் தம்பியிடம்.
“சரிண்ணே” என்ற மணிகண்டனுக்கும் இன்னும் அரை மனதாக தான் இருந்தது. பணக்கார வட்டம் என்னும் விஷயமே அவரை யோசிக்க வைக்க, முடிவை முருகனே முடிவு செய்யட்டும் என்று எண்ணிக் கொண்டார்.
நர்மதா தான் வாசுவிடம் “மாப்பிள்ளை போட்டோ கேளுங்க” என்று சொல்ல, “மாமா.. போட்டோ காட்டுங்க” என்று வாசுதேவன் கேட்க, தானும் அப்போது தான் அதனை பிரித்து பார்த்தார் நீலகண்டன்.
பார்த்தவருக்கு அத்தனை நிறைவு! இளநீலவான வண்ணத்தில் மெல்லிய வெள்ளைக் கோடுகள் நிறைந்த முழுக்கை சட்டை அணிந்திருந்தவன் அதற்கு பொருத்தமாய் பேண்ட் அணிந்து கழுத்தில் தங்க சங்கிலி மின்ன, அழகனாய், பார்த்ததும் கண்ணில் மரியாதை வரும் ஆளுமை தோற்றத்துடன் நின்றிருந்தான்.
“கீர்த்தி பக்கத்துல நின்னா ஜோடி பொருத்தம் அள்ளும்” என்று நீலகண்டன் சொல்ல, அனைவருமே புகைப் படத்தை வாங்கிப் பார்த்தனர்.
அவனை கண்ட வாசுதேவனின் புருவங்கள் சுருங்க மனைவியிடம் “இவரை இப்ப தான் எங்கேயோ பார்த்த நியாபகம் நர்மதா” என்றான்.