“எனக்கும் தாங்க” என்று நர்மதா சொல்ல, புகைப்படத்தை வேக வேகமாக வாங்கி மீண்டும் ஒரு முறை பார்த்த வாசுதேவன் “இன்னைக்கு மருதமலை கோவில்ல இவுங்களை பாத்தேன் மாமா. குடும்பமா வந்து இருந்தாங்க” என்று சட்டென்று நியாபகம் வந்து சொல்ல, அனைவருமே வியப்பும் திகைப்பும் கலந்து அவனை ஏறிட்டனர்.
“எங்க கொண்டாங்க மாப்பிள்ளை” என்று மீண்டும் ஒரு முறை நன்றாக வாங்கி பார்த்த நீலகண்டன் “எனக்கு அடையாளம் தெரியலையே?” என்று சொல்ல, “எனக்கும் தான் அண்ணே. நானும் கவனிக்கல” என்றார் மணிகண்டன். தெய்வானைக்கும் அதே நிலை தான்.
“இல்ல மாமா. அவுங்க வந்து அர்ச்சனை பண்ணாங்க. நமக்கு எதிர தான் நின்னிட்டு இருந்தாங்க அர்ச்சனை பண்ணும் போது. அவுங்க அம்மா கூட சர்வேஷ்வரன்னு பேரு சொல்லி அர்ச்சனை பண்ணதா நியாபகம் இருக்கு” என்றவன்,
“பாக்கவே கண்ணுக்கு நிறைவான குடும்பம் தான் மாமா. நான் முழுசா கவனிக்கல. யதார்த்தமா ஒருத்தவங்கள கவனிக்கிற மாதிரி தான் கவனிச்சேன். பணக்கார பகட்டெல்லாம் அவுங்க கிட்ட இல்லாத மாதிரி தான் தோணுது. நம்ம கீர்த்திக்கு முடிக்கலாமே” என்றான் அவன் தான் பார்த்ததை வைத்து.
“ஆனா, அவுங்க நம்மளை கவனிச்ச மாதிரி தெரியலயே” என்று நர்மதா யோசனையுடன் சொல்ல, “நமக்கு அவுங்களை இன்னும் தெரியாததால அவுங்களும் பேச யோசிச்சு இருப்பாங்க நர்மதா. இப்ப தான தரகர் வந்து சொல்லிட்டு போறார்” என்ற வாசுதேவன்,
“எனக்கு என்னமோ இந்த இடம் தான் அமையும்னு தோணுது மாமா. நீங்க நாளைக்கு ஜாதகம் பாத்து முடிவு பண்ணுங்க. நானும் கோயம்பத்தூர்ல தெரிஞ்ச ஆளுங்க மூலமா மாப்பிள்ளையை பத்தி விசாரிக்க சொல்றேன்” என்றான்.
அனைவரும் சரி ஜாதகம் பார்த்து, விசாரித்து முடிவு செய்வோம் என்று எண்ணி அடுத்த வேலையில் மூழ்க, அறைக்குள் இருந்த கீர்த்தன்யாவிற்கு தான் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
வெளியே நடந்த ஒவ்வொன்றும் அவளின் செவிகளை தீண்டி இருக்க, முதலில் தரகர் சொன்ன “மாப்பிள்ளை கண்டிப்பானவரு போல” என்ற வாக்கியத்திலேயே அவளின் நெஞ்சாங்கூடு காலியாகி விட்டது…!
“மீண்டும் ஒரு கண்டனா” என்று தான் தோன்றியது. அப்போதே திகிலாய் ஒரு எண்ணம் அந்த முகம் தெரியாதவனை பற்றி மனதிற்குள் தோன்றி விட, அடுத்தடுத்து அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டவளுக்கு ஆச்சர்யமும் அதிர்வும் தான்.
“அவுங்களே பிடிச்சு கேட்டு இருக்காங்களா?” என்று வியந்து போனவள், இறுதியில் இன்று கோவிலில் வைத்துப் பார்த்ததாக நர்மாதவும் அவளின் கணவன் வாசுதேவனும் சொன்னதில் “அய்யோ…. இதெப்ப? யாருடா அந்த மாப்பிள்ளை? போட்டோ கூட தர மாட்டானுங்களே இப்போதைக்கு…! போட்டோ பாத்தாலாவது நமக்கு அடையாளம் தெரியுதா.. இல்லையான்னு பாக்கலாம்!” என்றவள்,
இன்று கோவிலில் காலடி வைத்ததில் இருந்து தரிசனம் முடித்து கீழே இறங்கி வரும் வரை நடந்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் மனதிற்குள்ளேயே அலசி விட்டாள்.
அந்த முகம் தெரியாதவன் வெகுவாய் அவளின் மூளையை வண்டாய் குடைய, “என்ன கொடுமை முருகா இது?” என்று சலித்துக் கொண்டவள் அக்காவை தனியே பிடிக்க காத்திருந்தாள்.
வெளியே சபை களைந்ததும் நர்மதா அறைக்குள் வர, “அக்கா….” என்று அவளிடம் சரண் அடைந்தவள் மேலும் தெள்ளத் தெளிவாக அவள் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்டாள்.
“சர்வேஷ்வரன்…” என்று ஒரு முறை அவனின் பெயரை மெல்ல முணங்க,
“ஓய்… என்ன பேரெல்லாம் பிடிச்சு போச்சா?” என்று நர்மதா கேலியாக கேட்க, “ஐயோ அக்கா.. சர்வேஷ்வரன்னு பேரு இருந்தா போதுமா? சமூகம் பெரிய இடம் போலயே?” என்று தலையை பிடித்துக் கொண்டவளுக்குள் சிந்தனை குதிரைகள் அதி வேகமாக ஓடியது.
“அதுவும் போக தரகர் சொன்னதை கேட்ட தானே அக்கா.. மாப்பிள்ளை கொஞ்சம் கண்டிப்பானவருன்னு.. எனக்கு எங்கே அடுத்த கண்டனா இருப்பாரோன்னு வேற பயமா இருக்கு?” என்று புலம்ப,
“கீர்த்தி… இன்னும் எதுவும் முடிவாகல. அதே சமயம் நீ பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது. தரகர் நேர்ல போய் போட்டோ கொடுத்தப்ப மாப்பிள்ளையும் இருந்து இருக்கார். தரகர் நேரடியாக அவரை பாத்து பேசினப்ப அவரைப் பத்தி அவரு கணிச்சதை சொல்லிட்டு போறாரு. மத்தபடி நீ ஒன்னும் போட்டு குழப்பிக்க வேண்டாம். உன் மாமா இப்பவே போன்ல கோயம்பத்தூர் வட்டாரத்துல விசாரணை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு தெரிஞ்சு நாளைக்கு எல்லாம் முடிவாகிடும். உனக்கு கல்யாணம் ரெடி” என்று சொல்லி சிரிக்க,
கீர்த்தன்யா அக்காவை பாவமாய் பார்த்து, “என்னக்கா எதோ கேக் ரெடின்ற மாதிரி சர்வ சாதாரணமா சொல்ற. கல்யாணம் அக்கா…. எனக்கு இப்படி ஒரே நாள்ல எல்லாம் அமையும்னு நினைக்கவே இல்ல” என்றாள் அச்சமும் கவலையுமாய்.
“அதான் சொன்னேனே… கல்யாணம் அமையுறது எல்லாம் நம்ம கைல இல்லடா கீர்த்தி. இன்னாருக்கு இன்னாருன்னு சும்மாவா சொன்னாங்க. உனக்கு இந்த மாப்பிள்ளை தான்னு என் மனசும் அடிச்சு சொல்லுது. அது மட்டுமில்லாம அவுங்க பக்கம் ரொம்ப ஆர்வமா இருக்காங்கன்றது தரகர் சொன்னதை வச்சு தெரியுது. கூடவே, ஜாதக ரீதியா அவுங்க பக்க பொறுத்தத்தையும் சொல்லிட்டாங்க. இனி என்ன இருக்கு? தடங்களா எதுவுமே இடைல இருக்க மாதிரி தோணல” என்றவள்,
“ஒரு வேளை நாம மறுக்கிற மாதிரி வந்தா… அப்பா தான் வேண்டாம்னு சொல்ல வாய்ப்பிருக்கு. வசதி, அந்தஸ்த்து அதை வச்சு வேணும்னா அப்பா யோசிக்கலாம். மத்தபடி தரகர் சொன்னதை வச்சு பாத்தா நாம விட்டாலும் அவுங்க விடுற நினைப்பில இல்ல” என்று நர்மதா தான் கணித்ததை கூற, கீர்த்தன்யா வயிற்றில் புளியை கரைக்காத குறை தான்!
“அவுங்களை கோவில்ல பாத்தியா அக்கா?” என்று கேட்க, நர்மதா ஆம் என்றதும், “அக்கா.. அவுங்க போட்டோ வாங்கி கொடேன்” என்றாள் முகத்தை சுருக்கி.
அவள் கேட்ட விதத்தில் நர்மதா சிரித்தாலும் செல்லமாய் அவளை முறைத்து “அடி தான் வாங்க போற? போட்டோ பெரியப்பா கைல இருக்கு. கேட்டா ஏன் எதுக்குன்னு நோண்டி நீ கேட்டன்னு தெரிஞ்சு திட்டி தீர்த்துடுவார். நாளைக்கு எல்லாம் உன் கைல இருக்கும். கொஞ்சம் வாய வச்சிட்டு அமைதியா இரு” என்று அதட்ட,
ஏனோ நாளை வரை அவனின் முகத்தை பார்க்க தவமிருக்கும் பொறுமை இல்லை கீர்த்தன்யாவிடம். அதுவும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லியவனின் மேல் காரண காரியங்கள் இன்றி ஓர் ஆர்வம்! ஓர் இன்ப அலைப்புறுதல்! கூடவே கண்டிப்பானவன் என்று சொல்லில் சற்றே அச்சம்!
முகம் பார்த்தால் இவ்வுணர்வுகள் அடங்குமா என்று தோன்ற, இதயமோ அவனின் வரிவடிவம் பார்த்த பின்… நான் அவனுக்காக மட்டுமே துடிப்பேன் என்று சொல்லாமல் சொல்வதை போலொரு உணர்வுப் பந்தாட்டம் அவளுள். அதற்கு அச்சாரம் விதிப்பது போல் இப்போதே இதயம் வேகமாய் தன் இருப்பை காட்டியது!
முகமன் இன்றி அறிமுகம் ஆனவனின் முகம் பார்க்க நெஞ்சத்திற்குள் ஆர்வம் அலைமோத, ஆர்ப்பரிக்கும் கடல் அலையென அவளின் தேடல்கள் கடலிருந்து பொங்கி வரும் அலையாக கரை தொட்டு மீண்டும் கடல் சேராமல் அல்லாடியது அவனில்!