“இனி இவங்க இரண்டு பேரும் உருண்டு பொரண்டு அடிச்சிகிட்டாலும் அவங்க விஷயத்துல தலையிட மாட்டேன் போதுமாடா” என்ற வெற்றியின் நைந்து போன வார்த்தைகளில் அதுநேரம் வரை அங்கு விரவி இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவர் முகத்திலும் புன்னகை மலர அதில் தங்களையும் இணைத்து கொண்டனர் சுடரும் பாலனும்.
ஆம் விசேஷத்திற்கு வந்தவர்கள் குழந்தையை பார்ப்பதற்காகவெற்றியின் அறைக்குள் நுழைய முயன்று நண்பர்களுக்கிடையிலான பேச்சில் தடைபட்டு வாயிலிலேயே தேங்கி விட்டிருந்தனர்.. சூழல் இலகுவாகவும் உள்ளே நுழைந்தவர்களை வெற்றியும் தாமரையும் வரவேற்க சுடர் குழந்தையை நோக்கி செல்லவும்பாலன் எழிலை நெருங்கி அணைத்து கொண்டவர் “தேங்க்ஸ்டா மாப்பிள்ளை” என்றார்.
“எதுக்கு மாமா..??”
“இல்லடா இரண்டு முறை அவனை பார்த்தப்போ நீஅவன்கூட பேசலைன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பிட்டு இருந்தான்.., நானே உன்கிட்ட இதை பத்தி பேசனும்னு நெனச்சிட்டே இருந்தேன் ஆனா நேரமே அமையல.., இன்னைக்கு உங்களை உட்கார வச்சு பேசிடனும்னுநெனச்சிட்டு வந்தேன்பரவால்ல நீங்களா சமாதானம் ஆகிட்டீங்க..!!
“ரொம்ப சந்தோஷம்டா மாப்பிள்ளை” என்றவர் வெற்றியையும்தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு “இரண்டு பேரும் இப்படியே என்னைக்கும் பிரியாம இருக்கணும்” என்று வாழ்த்த,
“இன்னும் சீன் முடியலை சந்தோஷத்தை கொஞ்சம் மிச்சம் வைங்க” என்று பூடகமாக எழில் கூற,
“ஆமாடா இருக்காதா பின்னே..!! கபடு, சூது தெரியாத பையன்டா ரொம்ப வெள்ளந்தி” என்று அவன் அன்னை அழைக்கவும் அறையை விட்டு வெளியேறி கொண்டிருந்த வெற்றியை பார்த்தவாறே கூறியவர்,
“கூட பிறந்த பிறப்பாட்டம் எப்பவும் வாய் நிறைய அண்ணான்னு கூப்பிடுவான் கொஞ்ச நாளாவே என்னமோ போல இருந்தான்” என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவர்,
“என்ன கோபம் இருந்தாலும் நீங்களும் அடிச்சிக்கோங்க ஆனா பேசாம இருக்காதிங்க” என்றார்.
“கண்டிப்பாடா இப்போ அவன் முகத்தை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..!!!” என்றவரின் குரலே ஏகத்திற்கும் மகிழ்வை பறைசாற்ற,
வலக்கரம் கொண்டு தலையைஅழுந்த கோதியவாறே அவரின் உணர்வுகளை அவதானித்து கொண்டிருந்த எழில், “இப்பவே இவ்ளோ சந்தோஷ பட்டுடா எப்படி மாமா..?? உங்க தம்பிக்காக இன்னும் நீங்க பார்க்க வேண்டியது விஷயம் எவ்ளவோ இருக்கு வாங்க” என்றிடவும் புரியாத பாவத்துடன் அவனை பார்த்தவருடன்இணைந்து விசேஷம் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
வீட்டின் பக்கவாட்டில் இருந்த இடத்தில் பந்தல் அமைத்து விசேஷத்திற்க்கு ஏற்பாடு செய்திருக்க அங்கு உறவினர்களின் பேச்சுகளுக்கு இடையில் குழந்தைகளின் ஆர்பரிப்பு அவர்களை வரவேற்றது.
ஆம்அவிரன், சித்தார்த் மற்றும் சுபிபலூன்களை ஊதி கொடுக்கிறோம் பேர்வழி என்று ஆர்பாட்டத்துடனும் குதூகலத்துடனும் இங்குமங்கும் ஓடியவாறே பாதிக்கு பாதியை உடைத்திருக்க அவர்களை எல்லாம் கட்டுபடுத்தி மிச்சம் இருந்த பலூன்களை சர்வேஷ் ஊதி கொடுக்க வேதா அவற்றை எல்லாம் பெற்று ஒன்றாக இணைத்து கட்டி கொண்டிருந்தாள்.
தொட்டிலை பல வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து முடித்த கதிர் “வேதா பலூன் கட்டியாச்சா..??” என்று கேட்க
“இதோ சித்தப்பா முடிஞ்சது” என்று பலூன்களை கட்டி முடித்து நூலை கத்தரித்தவள்,”இந்தாங்க சித்தப்பா, சரியா இருக்கா பாருங்க” என்று அளிக்கஅதை பெற்று தொட்டிலின் மூலையில் கட்ட தொடங்கியிருந்தான்.
குலதெய்வத்திற்கு உணவு படைத்து கும்பிட்ட வெற்றி தாமரை தம்பதியினர் குழந்தையுடன் அங்கு வர, இது மூன்றாவதுபிரசவம் என்பதால் எவ்வித பிரச்சனையும் இன்றி தாயையும் சேயையும் நல்லபடியாக பிரித்து கொடுக்க வேண்டி வெற்றியின் அன்னை குலதெய்வத்திற்கு எடைக்கு எடை காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் வைத்திருந்தார்.
அதன்படி அடுத்த சில நிமிடங்களில் குழந்தையை தராசில் கிடத்தி எடைக்கு எடை காணிக்கை செலுத்து அவனை தொட்டிலில் இட, எழில் தாய்மாமனாக முன்னே நின்று குழந்தைக்கு சீர் செய்திருந்தான்.
ஆம் தாமரை அவள் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் எழில் தான் அவளின் உடன் பிறவா சகோதரனாக சித்தார்த் தொடங்கி வெற்றி தாமரை தம்பதியரின் மூன்று குழந்தைகளுக்கும் சீர் செய்துவருகிறான். குலதெய்வத்தின் பெயரை குழந்தையின் காதில் மூன்று முறை கூறியபின் அவனுக்கு “அர்ஜுன்” என்று பெயரிட்டிருந்தனர்.
விசேஷம் முடியவுமே ஆண்கள் அனைவரும் பந்தி நடக்கும் இடத்திற்கு செல்ல குழந்தையை உறங்க வைக்க வேண்டி அலரும் தாமரையும் குழந்தையுடன் அறைக்கு திரும்பி இருந்தனர். சுடர்க்கொடி பிள்ளைகள் அனைவரையும் அமரவைத்து பரிமாறிகொண்டிருந்தார்… மேலும் இரண்டு மணி நேரங்களுக்கு பின் உறவினர்கள் அனைவரும் கிளம்பி இருக்க வளர்மதியும் அலரை வீட்டிற்கு வர சொல்லி அழைப்பு விடுத்து கிளம்பினார்.
தாமரை சுடரை உடனிருக்குமாறு கேட்டுக்கொள்ள சர்வேஷையும் வேதாவையும் பாலனின் பெற்றோருடன் அனுப்பி வைத்தவள் அலருடன் சேர்ந்து வீட்டை ஒழுங்குபடுத்த தொடங்கினாள். குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு வெற்றியின் தங்கைகளும் விசேஷம் முடியவுமே தங்கள் வீட்டிற்கு கிளம்பிட வெற்றியின் பெற்றோரும் அதீத களைப்பினால் ஓய்வெடுப்பதற்காக தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.
இங்கு அலரும் சுடரும் பொருட்களை ஒதுக்கி வைத்து கொண்டிருக்க இன்னுமே குழந்தைகள் விளையாட்டை கைவிடாமல் சுற்றி திரிய அவிரனுக்கும் சித்துவிற்கும் இடையில் சுபி தான் பலமுறை கீழே விழுந்து காயப்பட்டு போனாள்.
அதை கண்ட அலரோ குழந்தைகளை உறங்க அழைக்க அவளுக்கு சில நிமிடங்கள் போக்கு காட்டிய பின் அவளிடம் மூவரும் அகப்படவும் அனைவரையும் அழைத்து சென்று மாடியில் இருந்த அறையில் படுக்க வைக்க உடன் வந்த சுடர் அவர்களை உறங்க வைக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளவும் அலர்விழி கீழே வந்தாள்
அதேநேரம் வாயிலில் யாரோ ஒரு பெண் வந்து நிற்க அதை கண்டவள் யோசனையுடனே, “வாங்க, குழந்தை தூங்கிட்டு இருக்கான் நீங்க உட்காருங்க நான் தாமரையை கூப்பிடுறேன்”என்று விசேஷத்திற்கு வந்திருப்பவராக எண்ணி அவரை உள்ளே அழைக்க,
“ஒரு நிமிஷம்” என்று அலரை தடுத்தவர், “வெற்றி, இது வெற்றி வீடுதானே..?? ” என்றிட,
“ஆமா, நீங்க அண்ணனை பார்க்க வந்திருக்கீங்களா..?? அவர் வெளியே இருந்தாரே நீங்க பார்க்கலை..?? என்றவளின் கேள்விக்கு அப்பெண் இல்லை என்று பதிலளிக்கவும்,
“சரி உள்ள வந்து உட்காருங்க நான் கூட்டிட்டு வரேன்” என்று வெளியேறியவள் அடுத்த சில நிமிடங்களில் வெற்றியுடன் உள்ளே நுழைந்திருந்தாள்.
வெற்றியை கண்டதும் எழுந்து நின்ற அப்பெண் விரித்த விழி மூடாமல் சில கணங்கள் நின்றவர், “நீங்க..??” என்று வெற்றியின் கேள்விக்கு,
“ஹாய் வெற்றி எப்படி இருக்கீங்க..?? அப்போ பார்த்த மாதிரியே இருக்கீங்களே” என்றிட
வெற்றி அப்பெண்ணை அடையாளம் காண முடியாமல் ‘நீங்க..??’ சாரி உங்க பேரு..??’ என்று கேட்க,
“என்ன வெற்றி அதுக்குள்ள என்னை மறந்துடீங்களா நான் தான் தமயந்தி உங்க மதி, காலேஜ் ஜூனியர்…” என்று கூறியபோதும் வெற்றியின் முகம் தெளிவற்று கிடப்பதை கண்டவள் அவனின் நினைவில் தான் இல்லாததை உணர்ந்து மதியின் முகத்தில் அதிருப்தி பரவ தொடங்கிய நேரம்..,
அதுநேரம் வரை புரியாமல் நின்ற வெற்றிக்குமே ஜூனியர் என்றபோது தான் நினைவு வர அவள் கூறிய ‘உங்க மதி‘ என்பதை சரியாக உள்வாங்காமல் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் பலவருடங்கள் கழித்து கல்லூரியில் பயின்ற பெண்ணை கண்ட மகிழ்வில்,”ஹேய் மதி, எப்படி இருக்க…??? நீ ஃபாரின்ல செட்டில் ஆகிட்டன்னு இல்ல சொன்னாங்க எப்போ வந்த..?? இப்போதான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா உனக்கு ..??” என்று சகஜமாக கேட்க,
“அடபோங்க வெற்றி நேத்து தான் நீங்க இதை என்கிட்ட கொடுத்த மாதிரி இருக்கு அதுக்குள்ள என்னை மறந்துடீங்களே என்று சலித்து கொண்டவள் சரிஇதை பாருங்க..” என்று அவன் முன் ஒரு பழைய கிரீட்டிங் கார்டைநீட்டி இதை என் கிட்ட கொடுத்தப்போ என்ன சொன்னீங்கன்னாவது நியாபகம் இருக்கா..? என்று கேட்க,
கார்டை கையில் வாங்கியவன் அதை பிரித்து பார்க்க தொடர்ந்த அப்பெண், “நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ இதை என் கையில் கொடுத்து நான் தான் உங்க வாழ்க்கைன்னும்.., கட்டினா என்னை மட்டுமே கட்டுவேன்னும் சொல்லிஉங்க வீட்டு அட்ரசை கொடுத்து, எப்பவும் உங்க வீடு என் வரவிற்காக திறந்தே இருக்கும் சொன்னீங்களே நியாபகம் இருக்கா..?? என்று கேட்க,
வெற்றியின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல்…..
இருக்காதா பின்னே..!! அன்று கல்லூரி காலத்தில்விளையாட்டாய் அவன் கொடுத்தவிலாசத்தை எடுத்து கொண்டு இத்தனை வருடங்கள் கழித்தும் மறக்காமல் வந்திருப்பவளை கண்டு வெற்றி திகைத்து நிற்க,
அதேநேரம் வேலை முடிந்து மற்ற ஆண்களும் வீட்டினுள் நுழைய வெற்றியின் அருகே நின்றிருந்த அலர்விழியோ விழிவிரிய அப்பெண்ணின் வார்த்தைகள் அளித்த அதிர்வில் வாயடைத்து போய் நின்றிருந்தாள்.
“உங்க வீட்டுக்கு மட்டுமில்லாம உங்க வாழ்க்கைக்கும் விளக்கேத்த நான் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பேன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா…??? இதோ இன்னைக்கு நான் வந்துட்டேன் ஆனா நீங்க என்னை மறந்துட்டீங்க இதெல்லாம் ரொம்ப அநியாயம் வெற்றி” என்று செல்லமாக கோபிக்க வெற்றியின் முகத்தில் ஈயாடவில்லை..!!
எழிலும் வெற்றியும் நண்பர்களாக இருந்தாலும் குணத்தில் பலநேரம் வேறுபட்டு நிற்பவர்கள். கல்லூரி காலங்களில் எழில் தன்னுடன் படிக்கும் பெண்களிடம் நட்புறவு கொண்டிருந்தாலும் யார் மீதும் காதல் என்ற பெயரில் பின்னால் சுற்றியதில்லை, அவன் தலைகுப்புற விழுந்து பின்னால் சுற்றிய ஒரே பெண் அலர்விழி மட்டுமே..!!!
ஆனால் வெற்றி அப்படியில்லை எப்போதும் விளையாட்டு போக்காக இருப்பவனுக்குபெண்களுடனான பழக்கமும் அப்படியே.., பெண்களை சைட் அடிப்பதும் கடலை வறுப்பதும் அவனுக்கு பிடித்தமான பொழுது போக்கு.., விளையாட்டாக சில பெண்களிடம் காதலை கூறி வாங்கி கட்டிகொண்டதும் உண்டு..!!
நண்பன் பெண்களிடம் தன் எல்லையில் நிற்பவன் தான் என்றாலும் தன் விளையாட்டு குணத்தால் எங்குதேவை இல்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வானோ என்று பல நேரங்கள் எழில் அவன் போக்கைதடுத்து கண்டித்திருக்கிறான்.
ஆனால் வெற்றியோ மச்சி இது வாலிப வயசுடா..!! இவ்ளோ கூட இல்லைனா எப்படி..?? ஜஸ்ட் டைம் பாஸ்டா சீரியஸா ஒண்ணுமில்லை நீ ப்ரீயா விடு கவலைபடாத” என்று விடுவான்.
எழில் எத்தனை சொல்லியும் திருத்தி கொள்ளாதவன் ஒரு முறை விளையாட்டாக நண்பர்களால் கொடுக்கப்பட்ட சவாலை ஏற்று லேபிற்கு சென்று கொண்டிருந்த தமயந்தியிடம் தன் வீட்டு விலாசத்தை கார்டில் எழுதி கொடுத்தவன் மேற்கண்டவாறு தமயந்தி சொன்னவற்றை கூறியிருந்தான். ஆனால் அது சவாலாக அவன் செய்தது தமயந்தி மீது காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை அதனால் அதை மறந்தே போனவன் பின் வந்த நாட்களில் தனக்கானவளை கண்டுகொண்டு உண்மையான காதல் கொண்டது தாமரையிடம் தான்…!!!
அப்பெண் தமயந்தியோ “இத்தனை வருஷம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புன்னு அதுலயே போயிடுச்சு வெற்றி.., வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம இருக்குங்கிற மாதிரி ஒரு பீல்..!! மாற்றம் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுச்சி லைக்கணவன், குழந்தை, குடும்பம்னு அமைச்சிக்க தோணவும் முதல்ல என் மனசுல வந்தது உங்க முகம் தான், அதான் உடனே தேடி வந்துட்டேன்” என்று உற்சாக குரலில் கூற,
அலரோடு சேர்ந்து மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போனது…!! சொல்லபோனால் அதிர்ச்சியில் அலருக்கு வார்த்தையே வரவில்லை,
ஆனால் எழில் தான் ஆபத்பாந்தவனாய் அலரருகே நண்பனை காக்க வேண்டி வந்து நின்றான்.
‘இங்க பா…‘ என்று எழில் ஆரம்பிக்கும் முன்னமே அவனை கண்டுகொண்ட தமயந்தி, “ஹாய் சீனியர் நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…?? என்று வியப்புடன் பார்த்தவள் பின் நெற்றியை தட்டிக்கொண்டே, ஓஹ் சாரி நீங்க வெற்றியோட பிரெண்ட் இல்லை மறந்தே போயிட்டேன்.. எப்படி இருக்கீங்க..??” என்று கேட்க,
இப்போது எழிலின் பார்வை தமயந்தி மீது கூர்மையாக படிய, ‘சாரி என் பேர் சொல்ல மறந்துட்டேனே” என்று தன்னையே திட்டிகொண்டவள் அவன் முன் வலக்கரம் நீட்டி “நான்தான் தமயந்தி உங்களோட ஜூனியர், கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட்‘
எழிலும் அவள் கரத்தை பற்றி குலுக்கியவாறே “ஹ்ம்ம் நியாபகம் இருக்கு எப்படி இருக்கீங்க தமயந்தி, உங்க ஹஸ்பன்ட், குழந்தைங்க எல்லாம் வரலையா..??”
அதில் முகம் வெளிர நின்றிருந்த வெற்றியின் அடிவயிறு கலங்கி போனது, செய்வதறியாது அவன் பார்வையை சுழல விட கச்சிதமாக அவன் விழி வட்டத்தில் விழுந்தாள் அவன் மனையாள்.
ஆம் தமயந்தி வெற்றியிடம் ‘உங்கள் மதி‘ என்று கூறியபோதே தன் அறையை திறந்து கொண்டு வந்தவள் அடுத்தடுத்து அமைந்த அவர்கள் உரையாடலில் அறையின் வாயிலிலேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அதிலும் திருமணமாகி இத்தனை வருடங்களுக்கு பின்னர் தங்களது அன்பின் சின்னமானமூன்றாவது குழந்தையின் பெயர் சூட்டு விழா இத்தகைய மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று தாமரை கனவிலும் எண்ணி இருக்க மாட்டாள்.
எத்தகைய மகிழ்வான தருணமிது…!!! ஆனால் அனைத்தையும் ஒற்றை வாக்கியத்தில் சீர்கொலைத்திருக்கும் கணவனின் மீது அவள் பார்வை கடும் ஆற்றாமையுடனும் குற்றச்சாட்டுடனும் படிந்தது… பின்னே மூன்று குழந்தைகளின் தந்தைமற்றொரு பெண்ணிடம் தன் வீட்டை தேடி வர ஏன் இந்த தாமதம் என்று கேட்டால் எந்த பெண்ணால் தான் அதை எளிதாக ஜீரணிக்க முடியும்..!!
என்னதான் உணர்வுகளை கட்டுபடுத்த முயன்றாலும் முடியாமல் தாமரையின் விழிகளில் இருந்து நீர் கசியத்தான் செய்திருந்தது, அதிலும் உரிமை அற்ற பெண்ணை மதி என்றழைத்த அவனது சுருக்கமான விளிப்பில் மேலும் காயப்பட்டு போனாள்.
அதை கண்டு பதறிய வெற்றி தாமரையைநோக்கி ஓட முற்ப்பட அவன் முன் தன் கரத்தை நீட்டி தடுத்த தமயந்தி, “இவ்ளோ அவசரமா எங்க போறீங்க வெற்றி, என் வாழ்க்கைக்கு பதில் சொல்லுங்க” என்று கூற
அதற்குள் அழுத்தமான எட்டுக்கள் வைத்து வெற்றியை நெருங்கிய தாமரை அவன் மீதுகொன்று கூறு போடும் பார்வையை செலுத்தியவாறு “ஹ்ம்ம் உங்க மதி கேட்குறாங்களே வெற்றி சொல்லுங்க எப்போ கல்யாணம் வச்சிக்க போறீங்க..?? டேட் சொன்னீங்கன்னா குழந்தைகளுக்கு லீவ் போட வசதியா இருக்கும்” என்று கேட்டவளின் குரலில் இருந்த எள்ளல் விழிகளில் இல்லை. விட்டால் நெற்றி கண்ணை திறந்து இங்கே இப்போதே அவனைபஸ்ப்பம் ஆக்கிவிடுமளவு ஆக்ரோஷம் மிளிர்ந்து கொண்டிருந்தது.
தாமரையின் கேள்வியில் வெலவெலத்து போனான் வெற்றி…
நெற்றியில் இருந்து வியர்வை ஆறாக ஊற்றெடுக்க படபடத்த நெஞ்சை அழுத்தி விட்டு எச்சில் கூட்டி விழுங்கியவாறு தாமரையை பார்க்க.., தாமரை புறம் திரும்பிய தமயந்தி, “சோ நைஸ் ஆப் யூ, தேங்க்ஸ்” என்று மலர்ந்த முகத்துடன் கூறியவள் “நீங்களும் இவருக்கு தங்கச்சியா..??” என்று புன்னகை மாறாமல் கேட்க,
வெற்றிக்கு மயக்கம் வராத குறை தான்..!! அதை மறுத்து அவளுக்கு பதிலளிக்க வாயை திறந்தவனுக்கு பயத்தில் வார்த்தைக்கு பதில் காற்று தான் வரவும் செய்வதறியாது திகைத்து போனான்.
நிலைமை கை மீறுவதை கண்ட பாலன், தமயந்தியிடம் “நீங்க தப்பான நேரத்துல வந்திருக்கீங்கம்மா.., வெற்றிக்கு கல்யாணம் ஆகிடுச்சி இதோ இவங்க தான் அவனோட மனைவி” என்று தாமரையை சுட்டி காட்டியவர், :இன்னைக்கு இவங்க மூணாவது குழந்தையோட பெயர் சூட்டு விழா வேறம்மா…, இன்னைக்கு வந்து இப்படி குழப்பம் பண்ண பார்க்குறீங்களே” என்று தம்பியின் வாழ்வில் கலகம் விளைவிக்க முற்படும் பெண்ணின் மீதான அதிருப்த்தியை வெளிப்படையாக காண்பிக்க,
ஒருபுறம் இத்தனை வருடங்கள் கழித்தும் உனக்காக ஓடோடி வந்த “என்னை எப்படி உன்னால் ஏமாற்ற முடிந்தது” என்பதாக அமைந்த தமயந்தியின் ஏமாற்றம் சுமந்த பார்வை ஒருபுறம் எனில் உன்னிடம் இத்தகைய துரோகத்தை எதிர்பார்க்கவில்லை எனும் கடும் குற்றச்சாட்டை தேக்கிய தாமரையின் அனல் விழிகளின் தகிப்பு மறுபுறம், இருவரையும் ஒருசேர கண்டவனின் உடலில் குருதி வற்றிய நிலை தான்…!!
சத்தியமாக தன் வாழ்நாளில் இத்தகைய நிலையில் இன்றைய நாள் இவ்வாறானதாக அமையும் என்று வெற்றி கனவிலும் நினைத்திருக்க வில்லை. ஆனால் நிஜம் கண்முன் ஈஈ என பல்லை இளித்து கொண்டிருக்க முகத்தில் உற்பத்தி ஆகி இருந்த வியர்வை அரும்புகள் ஆறாக பெருகி வழிய இதுநேரம் வரை அவன் கொண்டிருந்த உடலின் நடுக்கம் அப்பட்டமாக வெளியில் தெரிய ஆரம்பித்தது.
அத்தனை நேரம் மகிழ்ச்சியில் விகிசித்திருந்த மற்றவர்களின் முகமும்சில நிமிடங்களில் நிறமிழந்து போக வார்த்தை இன்றி மௌனித்திருந்தனர்.
ஏற்கனவே சற்று அகன்ற விழிகளை கொண்டிருக்கும் தாமரையின்விழிகள்இப்போது கோபத்தில் மேலும் விரிய அதில் வழிந்த கனலில் வெற்றி தீப்பற்றி எரியாத குறைதான்.
பாலனும் அலரும் அவளை எவ்வாறு சமாதான படுத்துவது என்று புரியாமல் திகைத்து தவித்து நிற்க, கதிருக்கோ அப்பெண் முதலில் இங்கிருந்து கிளம்பினாலே பாதி பிரச்சனை முடிந்து விடும் என்று நினைக்க முடிந்ததே தவிர அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்பி போனான்.
அதுநேரம் வரை நண்பனின் முகத்தில் வந்து சென்றஉணர்வுகளை அவதானித்து கொண்டிருந்த எழில் இப்போதுபார்வையை மற்றவர்களின் மீது திருப்ப அவர்களின் ஸ்தம்பித்த நிலையில் இதற்கு மேலும் தாமதிப்பது பிரச்னையை இன்னுமே தீவிரபடுத்தும் என்பதால்சூழலை தன் கையில் எடுத்து முதலில் தமயந்தியைதனியே அழைத்து சென்றவன் அவளுக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறி வழியனுப்பி விட்டு உள்ளே நுழைய அவன் கண்டதென்னவோ வெற்றியின் சட்டையை பிடித்து கொண்டு ஆக்ரோஷத்துடன் நின்றிருந்த தாமரையை தான்..!!
சுற்றி பாலன், அலர், கதிர் யாரின் பேச்சிற்கும் செவிசாய்க்காததாமரை வெற்றியிடம், “ஏன்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா வீட்டு அட்ரசை அந்த பொண்ணுகிட்ட கொடுத்ததோட இல்லாம இப்போதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சதான்னு கேட்ப..?? வெட்கமா இல்லை.. சொல்றா எனக்கு தெரியாம இன்னும் எத்தனை பொண்ணுங்க இருக்காங்க” என்று கேட்க
உள்ளே நுழைந்த எழிலோ ஓர்அலட்சிய பாவத்துடன் அவர்களை கடந்து சென்று பூஜையறையில் வைக்கபட்டிருந்த சீர்வரிசையில் இருந்த மிக்சர் பொட்டலத்தை எடுத்து கொண்டவன் நிதானமாக வந்து சோஃபாவில் வசதியாக அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு அதை பிரித்து தட்டில்வைத்து வெற்றியின் மீது பார்வையை நிலைக்கவிட்டவாறே கொறிக்க தொடங்கினான்.