வண்ணம் 1.2
ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தவள் கண்கள் சுழன்று தன் தோழியைத் தேடியது. கடந்த சில ஆண்டுகளில் அவளின் நெருங்கிய தோழி அவள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்குப் பின்னும் சொல்லப்படாத ஒரு கதை உள்ளதைச் சொல்லிச் சொல்லி தங்களைத் தாங்களே செதுக்கி கொண்ட சுய சிற்பிகள் இவர்கள்.
கண்களின் தேடுதல் ஓட்டத்தில் தன்னை நோக்கி ஓடி வரும் அவள் தோழியின் ஓட்டம் கண்ணுக்குத் தெரிய செம்பவளத்தின் முகத்தில் முத்துப் புன்னகை.
“ஏய் மலர், மெல்ல வாடி.”
“ஹ்ம்ம், இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடிச்சு செம்பா. ட்ரைன விட்டுடுவேன்னு நெனச்சு ஓடி வந்தேன்.” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க செம்பாவின் அருகில் வந்து நின்றாள் மலர்.
“ஹுக்கும், நீ என்னைக்குத் தான் சீக்கிரம் வந்த? ஆமா, இன்னைக்கு என்ன கதை சொல்லப் போற?” நக்கலாய் கேட்டாள் செம்பா.
“கதையா? ஹ்ம்ம்”, யோசித்தவள் “எங்க ஆயாவ நீ நாலு நாளைக்குப் பாத்துக்க, அப்பத் தெரியும். அந்தாண்ட இந்தாண்ட அசைய விடல இன்னைக்கு. நெஞ்சு வலிக்குதுன்னு காலைலயே ஒரே அழுகை.”
“அச்சச்சோ, என்ன ஆச்சு மலர்?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவங்களுக்கு நான் வீட்லயே இருக்கணும். ஆனா நம்ம நெலம அப்டியா இருக்கு. இதுல என் புருஷன ரெண்டு நாளா காணும்ன்னு கேள்வி வேற.” புருஷன் என சாதாரணமாக மலர் சொன்னாலும் அதன் வலி இந்த மலர் மதி விழியின் விழிகளில் விரவிக் கிடந்தது.
மலரின் மனதை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் செம்பாவும் “இந்தக் கேள்வி எல்லாம் நமக்கு புதுசா? பாட்டிக்கு இனி அடுத்து நெனப்பு வர்ற வர இந்தக் கேள்விய டீல்ல விடு.” என்றவள் கைப் பையிலிருந்து சின்ன சில்வர் டிபன் பாக்ஸ் டப்பா கேசரியை நீட்டினாள்.
“என்ன செம்பா?” என்ற கேள்வியுடன் திறந்து பார்த்தவள் சிறிது எடுத்து சுவைத்து விட்டு கேசரியின் சுவையில் “எப்படி செம்பா? இவ்வளவு நல்லா சமைக்கிற?” என்றவள் மேலும் “இன்னைக்கி என்ன விஷேஷம்?” கேள்வியாய் நோக்கினாள்.
“இன்னைக்கு என் பொண்ணுக்கு ஆறாவது பர்த்டே. அவளுக்காக செஞ்சது. என் பங்குல இருந்து உனக்கும் கொஞ்சம் கொண்டு வந்தேன்.” சொன்னவளுக்கு அந்த நொடி, ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் மறந்து போனது, மகளின் இன்றைய நினைவில், அவர்களின் இன்றைய நிலையில்.
“அஞ்சு வருஷம் ஆச்சா?” கேட்டவள் கண்களில் சட்டென ஆழிப் பேரலை.
நிமிடத்தில் சூழ்நிலை மாற இருவரும் அவரவர் நினைவில் அமைதியாய் சில நிமிடங்கள்.
நிமிடங்கள் கடந்தும் இருவருக்குள்ளும் அமைதியே. அந்த அமைதி அவர்களை அமைதிப்படுத்திக் கொள்ள மட்டுமே.
இருவரும் ‘குப்பையென ஒதுக்கியதை நினைப்பது வீண்’ என சட்டெனத் தெளிய,
மலர் “ஹ்ம்ம், இன்னைக்கு வெறும் கேசரி மட்டும் தானா? உன்னோட பூவுக்கு வேற எதுவும் இல்லையா?” என்றால் கேள்வியாய்.
“கண்டிப்பா இருக்கு மலர். என் மகள் எனக்கு கிடைச்ச நாள், எங்களுக்கு சிறப்பு இல்லையா? அவளுக்காக சாயந்தரம் ஒரு கேக்கும் வாங்க சொல்லி இருக்கேன். என்ன இந்த ஒரு நாளுக்கான செலவு தான் ஆயிரத்து இருநூறு ரூபாய். இதை அடுத்த பதினோரு மாசத்துல சமாளிச்சு அடுத்த வருஷ பிறந்தநாளுக்கு இன்னும் சிறப்பா செய்யணும்.”
“கண்டிப்பா செஞ்சுடலாம். டோன்ட் ஒர்ரி, பீ ஹாப்பி.” கண்ணடித்து சொல்லியவளும் நிகழ்காலத்துக்குத் திரும்பினாள்.
மணித்துளிகள் கரைய இவர்களின் இன்றைய பயணம் தொடங்கியது. இனி அலுவலகம் வரையிலும் ஒன்றாய் பயணம்.
அம்பத்தூர் எஸ்டேடில் ஆடை வடிவமைக்கும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணியில் மலர் இருக்க, அதே தொழிற்சாலையில் செம்பா திணைக்களக் கணக்குகள் துறையில் பணியில் இருந்தாள்.
இப்படியாகத் தொடங்கிய இவர்களின் இன்றைய நாளின் மணித்துளிகள் கரைய அலுவலகம் முடிந்து மீண்டும் மாலையில் இருவரும் வீடு நோக்கிப் பயணம்.
அலுவலகத்திலிருந்து வரும் போதே செம்பாவின் முகம் செங்கணலாய் காந்த மலருக்குத் தோழியின் நிலை தெரிந்தாலும், “என்ன செம்பா கோவமா இருக்கியா?” என்றாள் ஆதரவாய்.
“ஹ்ம்ம், அதே பிரச்சனை தான் மலர். அந்த நாயி இன்னைக்கும் பேச வந்துச்சு. ‘உனக்கு என்ன திமிர் என்ன வேண்டான்னு’ சொல்றன்னு கேக்குறான்.”
“ஏன்? இந்த மாதிரி ஆள வேண்டாம்ன்னு சொல்ல ரெண்டு கொம்பு வேணுமாமா? பேசாம மேனஜ்மென்ட்ல சொல்லிடேன்.”
“அவனே ஒரு அட்டக்கத்தி. இதுல நா வேற கத்திப் பேசி பிரச்சனை ஆக வேண்டாம்ன்னு வந்துட்டேன். உடம்பெல்லாம் பத்திகிட்டு ஏறியது மலர். இன்னைக்கு அவன் பார்வையே… ச்சை… ”
“செம்பா வேற எதுவும் பிரச்சனையை இல்லையே?” மலர் மனதிலும் ஏதோ பதற்றம்.
“இல்ல இல்ல, அவன் லுக், நாய் சேகர் லுக்தான். சமாளிக்கலாம் விடு மலர். காசு இல்லாதவங்கன்னா எல்லாருக்கும் கேவலம் தான் போல.”
“விடு செம்பா பேசிக்கலாம்.”
“ஹ்ம்ம் ஒன்னு விட்டுருந்தா ஒரு வேளை என் கோபம் அடங்கியிருக்கும்.” என்றவள் அறியவில்லை அதை அவளிடமிருந்து பெற வேறு ஒருவன் உடன் பயணிக்கிறான் என.
பேருந்தில் என்றும் போல் இன்றும் கூட்டம் நிரம்பி வழிய எப்படியோ அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிறுத்தம் நெருங்கி இருந்தது.
என்ன நடந்து என அறியும் முன்னே பேருந்தின் ஓட்டம் சட்டெனத் தடைபட… அங்கே ஒருவர் மேல் ஒருவர் விழும் நிலை.
நொடிகளில் நடந்த நிகழ்வில், உணர்வுகள் நிலைபெற்றதும் செம்பா முதலில் உணர்ந்தது அவள் இடையை அழுத்திப் பிடித்திருந்த முரட்டுக் கைகளைதான்.
பேருந்து நிலைக்குத் திரும்பியும் அதன் அழுத்தம் குறைய வில்லை. கோபம் கொப்பளிக்க முகத்தைத் திரும்பியவள் கண்டது மோன நிலையில் கண்கள் மூடி நின்றிருந்தவனை.
இடையைப் பற்றியிருந்த கைகளை முயன்று விலக்கியவள் அவன் புறம் திரும்ப, நிகழ்வுகள் விளங்காது விழித்து நின்றவனைக் கண்டு “இதுக்குன்னே அலைவீங்களா டா?” என கத்தி இருந்தாள்.
அவள் கத்தலில் அனைவரும் இவர்கள் புறம் திரும்ப, “உங்களையெல்லாம் ஒரு பொம்பளை தானே பெத்து வளத்துருப்பா?” மேலும் வார்த்தைகள் அவளிடமிருந்து அம்பென வந்து விழுந்தன.
உணர்வுகள் சுயம் பெற, சிவந்த விழிகளில் நீர் நிறைய கோபத்தில் கத்தியவளிடம் “சாரிங்க, பாலன்ஸ் மிஸ் ஆயிடுச்சு.” என்றான் மென்மையான குரலில். மற்றவர்கள் கவனம் இவர்கள் புறம் திரும்ப “விடு செம்பா. இறங்கலாம் ஸ்டாப் வந்துருச்சு.” சொல்லிய மலர் அவளின் கைகளைப் பற்றி இறக்கி இருந்தாள்.
பேருந்திலிந்து இறங்கியும் அவளின் கோபம் குறைய மறுத்தது.
“என்ன விடு மலரு, என்ன ஏன் சமாதானம் செய்யிற? இந்த மாதிரி பொறுக்கிய எல்லாம் கன்னம் கன்னமா அறையனும். வர்ற கோவத்துக்கு..”
“என்னங்க பொறுக்கி அது இதுன்னு ரொம்பப் பேசுறீங்க. தெரியாம நடந்துச்சுன்னு மன்னிப்பு கேட்டேன் தானே? ” என அவர்கள் முன் வந்து நின்றான் அந்த மென்குரலோன்.
“டேய், தெரியாமையா? என்ன டா தெரியாம? வச்ச கைய கூட எடுக்கமா கண்ண மூடிக்கிட்டு நின்ன? தெரியாமையா?” என இவளும் எகிறத் தொடங்கினாள்.
“இங்க பாருங்க நம்ம கண்ணால பார்க்கிறதுக்கெல்லாம் தப்பான அர்த்தம் எடுத்துக்கிட்டா எல்லாமே தப்புத் தான். என் மனசுக்கு தெரியும் நான் தப்புப் பண்ணலன்னு.”
“ஹ்ம்ம், உன்ன மாதிரி பொம்பள பொறுக்கியெல்லாம் இப்படித்தான் பேசுவீங்க போல.” எவன் மேலோ இருந்த கோபமெல்லாம் கையில் சிக்கியவன் மேல் இறங்கியது.
“பொறுக்கி, பொறுக்கின்னா நானும் பொறுக்கி மாதிரி நடந்து காட்டவா? அப்படி மஹாராணி இடி படாம வரனும்ம்னா சொந்தமா பஸ் கார்ன்னு வாங்கி தனியா போக வேண்டியது தானே? அதுக்கு வழியில்லாம தானே இப்படி வர்ற? அப்ப இடி படத்தான் டி வேணும்.” மென்குரலோனின் மேன்மை எல்லாம் அவளின் வார்த்தைகளால் வழுக்கி இருக்க அவனும் கொந்தளித்தான்.
“டேய், ” என்றவள் வார்த்தைகள் திக்க பெருமூச்சுடன் செய்வதறியாது அவனின் கன்னங்களில் தன் கைகளை இறக்கி இருந்தாள்.
“ஏய்” என அவனும் கைகளை ஓங்கி இருக்க “அய்யோ” என பதறிய மலர், செம்பாவை தன் புறம் இழுத்திருந்தாள்.
“ண்ணா மன்னிச்சு விடுங்கண்ணா, அவ யாராண்டாயோ கோவத்துல … கொஞ்சம் பிரச்சனை ண்ணா … சாரி” ஏதோ சமாளித்தாள்.
செம்பாவோ துளியும் குறையாத கோவத்தோடு முகத்தை வேறு புறம் திரும்பி நின்றிருக்க மலரின் பேச்சில் சற்று இறங்கிய அவனின் கோவம் மீண்டும் எகிறியது.
மலரைத் தாண்டிக் கொண்டு வந்தவன் செம்பாவை நேருக்கு நேர் பார்த்தபடி தன் கழுத்திலிருந்த அடையாள அட்டையைக் கழட்டி அதை அவளின் கைகளில் வைத்தான்.
அவனை விளங்காமல் பார்த்தவளைப் பார்த்து “இது என்னோட ஆபீஸ் ID கார்டு. இதுல என் வீட்டு அட்ரஸும் இருக்கு. என் வீட்ல விசாரிப்பியோ இல்ல என் ஆபீஸ்ல விசாரிப்பியோ அது உன் இஷ்டம்.
சிரிக்கிற எல்லா மனுஷனோட சிரிப்புக்குப் பின்னாலயும் ஒரு அழுகை இருக்கு. அது உன் கண்ணுக்குத் தெரியனும்னு அவசியமில்லை.
இன்னைக்கு எ.. எனக்கு… ச்ச அத விடு. நான் அந்த நெனப்புல தான் உன்.. உன்னோட இடு..ப்பை புடிச்சுட்டேன். சாரி.
ஆனா என்னோட ID கார்டு என்கிட்ட திரும்பி வரும் போது உன்னோட இந்தப் பார்வை மாறி இருக்கணும்.” என்று அழுத்தமான பார்வையோடே இவர்களைக் கடந்து வேகமாக நடந்து கூட்டத்தில் கலந்திருந்தான்.
செம்பா கையில் அடையாள அட்டையுடன் தயங்கி நின்றவள், மலரைக் காண அவளோ
“வாடி, போகலாம் ட்ரெயின் போச்சுன்னா இன்னும் அரை அவர் நிக்கணும். திருவள்ளூர் ட்ரைன விட்டுட்டா, TRT ல கூட்டத்துல கடைசி வரை நின்னுக்கிட்டே போகணும்.” செம்பாவின் கையைப் பற்றி இழுத்துச் சென்றாள்.
அதன் பிறகான நேரம் மொத்தமும் அவளைக் கடந்து சென்றாலும் எதுவும் அவளின் நினைவில் இல்லை.
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் இயந்திர கதியில் சுழன்று முடிய, இன்றைய நிகழ்வின் நினைவுகளோடே படுக்கையில் கண்களை மூடிக் கொண்டவள் நினைவு மொத்தமும் அவனே.
நினைவுகளில் அவனிருக்க உணர்வுகளின் கொந்தளிப்பில் அவளே செம்பவளமானாள்.
ஆனாலும் மனதின் ஓரம் அவன் சொல்லிய “சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் அழுகை” சிந்திக்க வைத்தாலும், இன்னொருவன் விட்டுச் சென்ற கசப்பே மனதில் இன்னும் விரவி இருக்க, இவனது செயலும் செந்தணல் என தகிக்க மட்டுமே செய்தது.
அடையாள அட்டையை இவளின் கைகளில் கொடுத்துச் சென்றவனுக்கோ மனம் மொத்தமும் சிவப்பு மங்கை நிறைந்திருக்க தலையணையில் முகம் புதைத்திருந்தான்.
“இவளுக்கு புரியாதா? நா … நா என்ன பொறுக்கியா இவளுக்கு? இன்னைக்கி என் மனசு இருந்த நிலமைல பஸ்ல இப்படி சடன் பிரேக் அடிச்சா சப்போர்டுக்கு பிடிக்க தான் செய்வேன். அதுக்கிப் போய் ..”
“டேய், நீ சப்போர்ட் கேட்டு பிடிச்சது அவ இடுப்ப டா. ஒரு அறையோட விட்டாலே உன்ன.” என அவன் மனசாட்சி அவனிடமே கேள்வி கேட்டது.
“தப்புத்தான், ஆனா நடந்துருச்சே.”
“அதுக்கு நீ கவலைப் படறாப்ல தெரியலையே?” கேள்வி கேட்ட மனதிடம்
“கவலப்படல. ஆனாலும் ச்ச, இப்படியா செய்வேன். அதுவும் கைய வேற எடுக்காம .. ” என நிமிர்ந்து அவளின் இடையைப் பற்றிய இடது உள்ளங்கையைப் பார்க்க அது உழைப்பின் அடையாளமாய் இறுகிப் போயிருந்தது.
“பாவம், இரும்பு புடிச்ச கையால இறுக்கி புடுச்சுட்டேன் போல. ரொம்ப வலிச்சிருக்கும். சிவந்து வேற போயிருந்துச்சு.” என எண்ணிக் கொண்டவனைப் பார்த்து
“அடப் பாவி இம்புட்டுக் கலவரத்துலையும் உனக்கு கிளுகிளுப்பு சீனா டா. ஆமா, நீ எப்படா அவ இடுப்ப பார்த்த?” என அவன் மனசாட்சி எள்ளி நகையாடியது.
“ஹ்ம்ம், அதெல்லாம் நான் குஷி படத்துலையே பார்த்துட்டேன்.” என மனசாட்சியின் மண்டையில் தட்டியவன் முகத்திலும் செம்மை குடியேறியது.
அவள் கட்டுக்கடங்கா கோபத்தில் சிவந்திருக்க, அவன் அவளின் நினைவுகளால் சிவந்திருந்தான்.
கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்