“தைரியம் இருந்தா தொட்டு பாரு” என்றவன் குரலில் அண்ணன் தம்பிக்கு நடுக்கம் பிறக்க , அழுத்தமான அடிகளுடன் உள்ளே வந்தவன் ஷ்யாமாவின் பின் நின்றவள் கை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான்.
பார்வை சங்கரனிடம் நிலைத்திருக்க , சங்கரன் தளர்ந்து நின்றார் “பிள்ளைகளை வளக்கும்போது தவறிட்டு அவங்க தவறான அப்பறம் அழுது எந்த பலனும் இல்ல , ஒரு அப்பாவா என்ன செய்யனுமோ அத செய் , ஆத்மாக்களுக்கு மோக்ஷம் கிடைக்கட்டும்”.
“இனிமேல் ஒரு பிறவி இருந்தா அதாவது அவங்களுக்கு நல்லதா அமையட்டும்” என்க ராஜீவ் அவரை பிடித்து கொண்டு போய் அமரவைத்தான்.
அவனில் மட்டுமே நிலைத்திருந்தது அவள் விழிகள் , அதில் மொத்தமும் சோகம் , அவன் மீதான ஊடல் ஏக்கம் காதல் அனைத்தும் மிதந்து கொண்டிருந்தது.
ஒரு நொடி அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் ரூபாவிடம் அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மாமனின் அருகில் சென்று நின்றான்.
“எப்படி மாப்ள இப்போ வந்துருக்க , என் கிட்ட கூட சொல்லல” என்றார் துரைசெல்வம் நம்ப முடியாமல்.
“அவ நம்ம வீட்ல இல்லனு தெரிஞ்ச அப்பறம் எப்படி மாமா என்னால அங்க இருக்க முடியும் , ஏற்கனவே மேல் அதிகாரிக்கு நம்ம குடும்ப விஷயம் தெரியும்”.
“அதால அவளை காணும் சொத்துக்காக கடத்திட்டாங்க அப்படினு எமெர்ஜென்சி லீவு எடுத்திருக்கேன் பத்துநாள் தான் , எனக்கு பதில் நம்ம சுதீப் பொறுப்பு எடுத்துருக்கான் நான் போயிட்டு அவனை ரிலீஸ் பண்ணனும்” என்றான்.
“எல்லாம் முடிஞ்சுதா மாமா?”.
“ஹ்ம்ம் முடிஞ்சுது மாப்ள இனிமே அவங்க பாத்துப்பாங்க” என்றார் , அனைத்தும் முடிந்து உறவுகள் அனைவரும் விடை பெற்றனர் , ஆளுக்கு ஒரு மூலையில் சுருண்டிருந்தனர் குடும்பத்தினர் , சங்கரனும் கிருஷ்ணனும் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரு தினங்களுக்கு பிறகு ரெம்யாவை தேடி வந்து நின்றான் அவளின் காதலன் , யார் வருகிறார்கள் வரவில்லை ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை.
தன் முன்னே வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் எந்த உணர்வும் இன்றி , “எவ்ளோ பொய்.. இப்படி பிரச்சனை இருக்குனு கூட சொல்லல, இந்த மாதிரி கேவலமான குடும்பம்னு எனக்கு தெரியாம போய்டுச்சு இனிமே என்ன தேடி வராத” என்று கண்டபடி இரைந்தான்.
அனைத்திற்கும் அமைதியாக இருந்தாள், அவன் அந்த அறையின் வாயிலை அடைய “நில்லு” என்றாள்.
“உன் காதல இழக்க கூடாதுனு திட்டம் போட்டு , என்ன என்னமோ செஞ்சு ரெண்டு உசுர காவு குடுத்துட்டு நிக்குறேன் , என்ன பிரச்சனையா இருந்தாலும் கூட நான் நிப்பேன்னு எனக்கு நீ நம்பிக்கை குடுத்துருக்கியா??”.
” அப்படி குடுத்திருந்தா என் குடும்பம் பத்தி எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிருப்பேன்”.
“ஆனா நீ ஒரு சுயநலவாதி உனக்கு உன் குடும்பம் ஸ்டேட்டஸ் இது தான் முக்கியம் , என் தம்பிங்க இறந்து ரெண்டு நாள் தான் ஆகுது, வந்தியே ஆறுதலா ஒரு வார்த்தை பேசுனியா , நாம உண்மையிலேயே காதலிச்சோமா இது பேர் காதலா??” என்றவள்.
அவன் சட்டையை பிடித்து இழுத்து சென்று வாயிலில் தன் மாமனுடன் பேசிக்கொண்டிருந்த ஜெகன்நாதனை காண்பித்தாள்.
“இந்த குடும்பத்தால் அவனுக்கு எவ்ளோ பெரிய இழப்பு தெரியுமா , ஆனாலும் கோவத்துல கொஞ்ச நாள் விலகி இருந்தவன் அவளுக்காக திரும்பி வந்தான் , இந்த நிமிஷம் வரைக்கும் அவளை கைவிடாம கூட நிக்குறான்” .
இரண்டு நாட்களாக அவள் அவனின் அருகில் கூட வரவில்லை, எப்பொழுதும் ஷ்யாமா மாதவியுடன் மட்டுமே இருக்கிறாள், லக்ஷ்மியம்மாவின் நிலை கொஞ்சம் மோசமாக இருந்தது.
முன்பே உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தவர் , கண் முன்னே பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வாழ்வு இப்படி வீணாய் போனதை எண்ணி வாழ்வை வெறுத்து படுக்கையில் கிடந்தார்.
அம்மு பாதி நேரமும் பாட்டியுடன் இருந்தாள் , அவர் கையை பிடித்துக் கொண்டு ஆறுதலாக , இப்பொழுது அவருக்கு இவள் வாழ்வை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று வேகம் வந்தது.
“அம்முகுட்டா பாட்டி கேக்கறதுக்கு உண்மையா பதில் சொல்லணும்” என்றவரை பார்த்தவள்.
“ஹ்ம்ம்” என்றாள்.
“உனக்கு ஜெகன் கூட கல்யாணம் நடந்தது விருப்பம் இல்லையா” என்றார் அவளை ஆழம் பார்க்க , அவளின் பதில் என்னவாக இருக்கும் என்றும் தெரியும்.
“என்ன கேக்குறீங்க அச்சம்மா , நந்தேட்டன் இல்லாம நான் இல்ல” என்றாள் குரல் கம்ம , “வேற யாரை நான் கல்யாணம் பண்ணுவேன்” என்றாள் உடனே.
“அப்பறம் ஏண்டா அவன் கூட பேசாம இருக்க” என்றவரை பார்த்தவள் “நான் கோவமா இருக்கேன்” என்றாள்.
“எதுக்கு” என்றவரிடம் .
“என்ன விட்டுட்டு போனார்ல , அதுக்கு” என்றாள் சிறு பிள்ளையாக.
அவள் பேசுவதை அறையின் வாயிலில் நின்று மாதவியோடு கேட்டுக் கொண்டிருந்தான் ஜெகன்.
“அதுக்கு அவருக்கு கரணம் இருக்கே டா , எவ்ளோ பெரிய இழப்பு அந்த கோவம் இருக்கும்ல , நாம அத தப்பு சொல்ல முடியுமா” என்க.
“இல்லை” என்று தலை ஆட்டினாள்.
“நீங்க சொல்ற எல்லாம் சரிதான் , ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு, அவர் வராமலே போயிருந்தா….” என்றாள் குரல் இடற.
“என்ன இதுவரைக்கும் அவர் சமாதானம் பண்ணல” என்றாள் மூக்கை உறிஞ்சி , லக்ஷ்மியம்மாவிம் முகத்தில் நல்ல தெளிவு வந்தது .
அவர் நினைத்தது தான் , அவனிடம் இருந்து ஒரே ஒரு வார்த்தையை எதிர்ப் பார்க்கிறாள் “நீ இன்றி நான் இல்லை” என்று அவன் சொல்ல வேண்டும் அது ஒன்று போதும் .
அதை அவள் கணவன் பார்த்துக் கொள்ளுவான் என்று நிம்மதியானது, “சரி புருஷன் பொண்டாட்டி பிரச்சனையை நீங்களே பேசி தீத்துக்கோங்க” என்றவர்.
“ஒருவேளை அவர் உன்ன சமாதானம் செய்யலைன்னா என்னடா பண்ணுவ!” என்றார் அம்முவிடம்.
“செய்வார்… நான் கோவமா இருக்கேன்ல அதனால செய்வார்” என்றாள் திடமாக.
“அதுசரி” என்றவர் புன்னகை முகமாக வாயிலில் நின்றவனின் மேல் பார்வையை பதித்தார் , “தான் பார்த்துக் கொள்ளுவதாக” கண் மூடி தலை அசைத்தான்.
“இதுக்கு பேரு கோவமா வெளில சொல்லிடாத , கேக்குறவங்க சிரிச்சுடுவாங்க” என்று மனதில் எண்ணிக்கொண்டவன் அங்கிருந்து ஷ்யாமாவை தேடி சென்றான் .
அவர் அடுப்படியில் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தார் , “ஷ்யாமா மா” என்று அவரை தோளோடு சேர்த்து அணைக்க , அவர் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
கைத்தாங்கலாக அவரை அழைத்து வந்தவன் சோபாவில் அமரவைக்க, மாதவி அவருக்கு குடிக்க எடுக்க அடுக்களை சென்றார்.
ஷ்யாமாவின் கையை பிடித்துக்கொண்ட ஜெகன் “என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா” என்க.
“இருக்கு” என்று தலை அசைத்தார் .
“நான் சொல்றத கவனமா கேளுங்க , இப்படி ஒன்னு நடக்கணும்னு நான் சத்தியமா ஆசைப்படல , தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் அவ்ளோதான் யோசிச்சேன் , இது நான் எதிர் பாராதது நீங்க நம்புறீங்களா” என்றவனை பார்த்தவர்.
இப்பொழுது அவன் கையை அழுத்தமாக பற்றி “இது பெத்தவங்க செஞ்ச பாவத்துக்கான கூலி பிள்ளைங்க தலையில விழுந்துடுச்சு, உங்க மேல எந்த தப்பும் இல்லை , எங்களுக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை” என்க.
ஆழ்ந்து மூச்செடுத்தவன் “நீங்க இங்க இருக்க வேண்டாம் , அங்க ஊருக்கு போங்க எல்லாருக்கும் ஒரு மாற்றம் தேவை , கொஞ்ச நாள் இங்க இருந்து மாறி நில்லுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்”.
“இந்த தடவ கார்த்தும்பி தெளிவா இருக்கா ஆனா அவ கூட நீங்களும் இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கலாம் , காலம் எல்லா காயங்களையும் மெல்ல ஆற்றும் அதுக்கு சாட்சியா உங்க முன்னாடி நான் இருக்கேன்” என்றவன்.
“ராஜீவை நினச்சு நீங்க ரொம்ப கவலைப்படுறீங்க எனக்கு புரியுது , சில விஷயங்கள் யோசிச்சு வெச்சுருக்கேன் நீங்களும் எனக்கு சப்போர்ட் பண்ணாதான் அவன் வாழ்க்கைய சரி பண்ண முடியும்” என்க.
அவருக்கு இப்பொழுது எதை பற்றியும் யோசிக்கும் நிலை அல்லவே, அவரின் பிறந்த வீட்டிற்கு போக மனம் வரவில்லை , நிச்சயம் கணவன், மகள், மைத்துனன் அவரின் பிள்ளைகள் அனைவரையும் வார்த்தைகளால் வதைப்பார்கள்.
ஒரு வேலை உணவுகூட விஷமாக தோன்றும், இப்படி நிர்கதியாக நிற்போம் என்று கனவிலும் எண்ணவில்லையே , மகளின் நிலை அதிலும் வேதனை அளித்தது.
இங்கிருந்து எங்காவது சென்றுவிட வேண்டும் என்று மனம் அவரைக் அரித்துக் கொண்டிருக்கிறது , “சரி” என்று அவனை பார்த்து சம்மதம் சொல்ல.
அவரின் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தவன் மாமனை அழைத்துக்கொண்டு ராஜீவனுடன் ரப்பர் எஸ்டேட் நோக்கி சென்றான்.
பாட்டி உறங்கியபின் அறையை விட்டு வெளியில் வந்த அம்மு அனைவரும் அங்கிருப்பதை பார்த்து அவர்களுடன் அமர்ந்தாள்.
அனைவரிடமும் அமைதி மட்டுமே , இரு தினங்களாக அறையில் அடைந்து கிடந்த ரெம்யா இன்று வெளியில் வந்தாள் .
தாயின் அருகில் வந்தவள் ஷ்யாமாவின் மடியில் தலை வைத்து படுக்க, மகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமா இல்லை அவள் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு அவளை தண்டிக்க வேண்டுமா என்று தெரியாமல் அமர்ந்திருந்தார் அந்த தாய்.
“அம்மா” என்ற ரெம்யா “என்ன நீங்க மன்னிக்க கூடாது எல்லாத்தையும் தப்பு தப்பா பண்ணிட்டேன் , எதையுமே சரி பண்ண முடியாது , ஆனா எல்லாம் காலம் கடந்து தான் எனக்கு புரியுதும்மா”.
“அந்த கல்யாணம் நான் பண்ணிருக்கலாம் அண்ணாக்கும் கல்யாணம் ஆயிருக்கும் , எங்களை நெனச்சு நீங்களும் இப்படி கலங்கியிருக்க வேண்டாம் , எல்லாம் என் தப்புதான்” என்றவள்.
“சித்திய போய் பாக்கணும் அவங்க என்னை அடிச்சா கூட வாங்கிக்குறேன் , ஆனா அவங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்”.
“நான் திரும்ப ஓமென் போறேன்” என்றவளை அவர் இயலாமையோடு பார்க்க.
“இல்லம்மா எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் , எங்க எல்லாரையும் நெனச்சு நீங்க அழறது போதும் மறுபடியும் ஒரு தப்ப செஞ்சு உங்கள கஷ்டப்பட விட மாட்டேன்”.
“எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது , இங்க என்னால இருக்க முடியாது திரும்பி வரணும்னு தோணினா நிச்சயமா உங்ககிட்டத்தான் வருவேன்” என்றவள்.
அனைவரையும் பார்த்து கை எடுத்து தொழுது “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க” என்றாள்.
பிறகு தயாராகி அவளின் சித்தி ஸ்மிதாவை காண அவரின் வீடு சென்றாள்.