பால் காய்ச்சி இறைவனை வணங்கி முடித்து அனைவருக்கும் சிறிய கப்புகளில் பால் கொண்டுவந்தார் சீதா, எல்லோரும் அங்கேயே பாய் விரித்து அமர்ந்துவிட்டனர், மழைக்கு கொஞ்சம் சூடாக பால்.
“எங்ககூட வந்துடுறியா அம்மு” என்றவனுக்கு பலா இலையில் கிரீடம் செய்ய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மு, லக்ஷ்மியும் ஷ்யாமாவும் வாஞ்சிநாதனின் வார்த்தைகளை புன்னகையோடு கடந்துவிட்டனர், ஆனால் அவன் குடும்பத்திற்கு அப்படி கடக்க முடியவில்லை.
வார்த்தைகளை எண்ணி பேசுபவன், அதும் இந்த இரண்டு வருடமாக தன்னை ஒரு கூட்டுக்குக்குள் அடைத்துக் கொண்டவன், அவன் இறுக்கத்தை இவர்களால் உடைக்க முடியவில்லை, அப்படிப்பட்டவன் எத்தனை எளிதாக அவளுடன் பேசிவிட்டான்.
அதுவும் “எங்களோடு வந்துவிடு” என்று உரிமையாக.
“எல்லார்க்கும் மதிய சாப்பாடு நம்ம வீட்ல, அங்க வந்துடுங்க நா போய் சமையல் வேலைய ஆரம்பிக்கிறேன்” என்ற ஷ்யாமா தோட்டத்தின் வழி வெளியேற லக்ஷ்மியும் விடைபெற்றார்.
“அம்மு நீ இங்க விளையாடு” என்று சொல்லி சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் மழைக்கு இதமாக வாழை இலையில் சூடான பழம்பொரியை கொண்டு வந்து வைத்தார் ஷ்யாமா “அம்முக்கு ரொம்ப பிடிக்கும், நீங்களும் சாப்பிட்டு பாருங்க” என்றார்.
மலையாளிகளின் விருப்ப பலகாரம் பழம்பொரி பல மாலை வேலைகளிலும் டீயுடன் இது நிச்சயம் இருக்கும் .
“நல்ல டேஸ்ட், எப்படி செய்றீங்க” என்ற சீதாவிடம்.
“கொஞ்சம் நல்லா பழுத்த நேந்திரம் பழம் எடுத்து ரெண்டா வெட்டி, மைதா மாவோடு கொஞ்சம் அரிசிமாவு, சிறிது உப்பு மஞ்சள் தூள், இனிப்பு எவ்வளவு தேவையோ அதற்க்கு ஏற்ப சக்கரை போட்டு, தண்ணீர் சேர்த்து கரைத்து வெட்டிய பழத்தை அதில் முக்கி தேங்காய் எண்ணையில் பொரித்து எடுத்தால் தயார்” என்றார் சிரிப்போடு
அவர்களின் பின்னே சென்ற சீதா “உங்க ஊரு சமயல நானும் கத்துக்குறேன்” என்று கூறி அவர்களுக்கு உதவ சென்றுவிட்டார்.
அங்கே சென்ற சீதாவிற்கும், வெளி முற்றத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்த ப்ரகாஷிற்கும், கிரீடம் செய்பவர்களை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த ஜெகன்நாதனுக்கும் வாஞ்சியின் நினைவே.
காதலில் திளைத்து வாழ்ந்த பிரகாஷ் சீதா தம்பதிக்கு அன்பின் அடையாளமாக முதலில் பிறந்தவன் வருண் ஜெகன்நாதன், நான்கு வருடங்கங்கள் கழித்து பிறந்தவன் வாஞ்சிநாதன், பெண் பிள்ளைக்கு ஏங்கிய கணவனிடம் “அடுத்தது உங்களுக்கு பொண்ணு பெத்து தரேன் மாமா” என்று கொஞ்சினாள் சீதா.
ஆனந்தம் எல்லாம் குழந்தையின் ஒரு வயது வரை தான், தவழ்ந்தே செல்லும் குழந்தை எழுந்து நிற்பதில்லை, கால்களுக்கு பலம் இல்லை என்று வைத்தியம் பார்க்க முட்டிக்கு கீழே வெறும் காற்றில் ஆடும் காகிதமாக கிடந்தது கால்கள்.
தேறிக் கொண்டார்கள் கணவனும் மனைவியும், தங்களை தேற்றிக் கொண்டார்கள் எப்படியோ, பிறந்த குழந்தையை சுமப்பதை போல அன்பால் அவனை சுமந்தார்கள்.
வேலையின் பொருட்டு ஓடிக்கொண்டிருக்கும் கணவனுக்கு வீட்டின் கவலைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டார் சீதா, அதில் மாமியாரின் குத்தும் வார்த்தைகளும் அடங்கும், அவனோடு மிகவும் போராடி செயற்கை கால் வைக்க சிகிச்சை சென்றனர், நடந்தால் மிகவும் வலிக்கிறது என்று நடக்க மறுத்துவிட்டான் வாஞ்சி.
ஒரு வித இயலாமை வெறுப்பு தான் ஒரு ஊனமுற்றவன் என்ற கழிவிரக்கம் அனைவரின் மீதும் கோபமாக வெளிப்பட்டது, எப்பொழுதும் வீல் சேர் பயணம் என்றாலும் பாத்ரூம் போக குளிக்க அன்னையோ தந்தையோ தமயனோ வேண்டும் எப்பொழுதும் மற்றவரை சார்ந்திருக்கும் நிலை அதை அறவே வெறுத்தான்.
மூத்த மகனை சரியாக கவனிக்க இயலவில்லை, கணவன் அருகில் வேண்டும் என்ற தவிப்பு இளயமகனின் வேதனையின் இயலாமை, மாமியாரின் குத்தல் என்று அனைத்தையும் மனதில் இட்டு அடைத்த சீதா ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் செயல் இழந்து விழுந்தார்.
இரு தினங்களாக வாஞ்சிக்கு வயறு சரி இல்லை, பத்தாம் வகுப்பில் படிக்கும் பெரிய மகனின் பரீட்சை பற்றிய டென்ஷனும் சேர்ந்து கொண்டது சீதாவிற்கு, மாமியாருக்கு தோசையை ஊற்றிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வாஞ்சியின் அழைப்பு “அம்மா பாத்ரூம் போனும்” என்க “வரேன் கண்ணா” என்றவர் “அத்தை தோசை ஊத்திட்டேன் எடுத்துக்கோங்க” என்றுவிட்டு மகனின் அறைக்கு போக திரும்ப.
“நில்லுடி” என்று அலறினார் மாமியார் நீலவேணி, இவளிடம் என்ன இருக்கிறது என்று மகன் இவளை காதலித்து உருகி தலையில் வைத்து சுற்றுகிறான் என்று அவருக்கு ஏக கடுப்பு, அதை எல்லாம் மொத்தமாக இன்று கொட்டினார்.
“ராஜா மாதிரி இருக்குற என் மகனுக்கு எப்படி புள்ள பொறக்கும், அதுக்கு உதாரணம் என் மூத்த பேரன் ஆனா இது” என்று வாஞ்சிநாதனின் அறையை காட்டி “வேலை வேலைனு என் புள்ள போற நேரத்துல, நீ எவன்கிட்ட போன” என்ற கேள்வியில் உயிர் எரிந்து அடங்கியது சீதைக்கு.
“சீதை” என்ற பெயர் வைத்தால் களங்கமற்றவள் என்று எப்பொழுதும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா …
கட்டிலில் இருந்து இறங்கி பாத்ரூம் செல்ல நினைத்த வாஞ்சி கீழே விழுந்து அவனின் கட்டுப்பாடு இல்லாமல் மலம் கழித்துவிட்டான், அவமானத்தில் அவன் கதறி அழ, டியூஷன் முடிந்து வீட்டிற்குள் வந்த ஜெகன்நாதன் கேட்டது பாட்டியின் வார்த்தைகளை.
உள்ளம் பதற “பாட்டி” என்ற அலறலோடு கை ஓங்கிவிட்டான், தன்னை நிதானித்தவன் நிமிர்ந்து , பார்க்க மகனை வேதனையோடு பார்த்துக்கொண்டே வேர் அருந்த மரம் போல் விழுந்தார் சீதா.
யாரை பார்க்க என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை அவனுக்கு, உடனே மாமனுக்கு அழைத்தவன் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு தாயை சோபாவில் படுக்க வைத்து தம்பியின் அறைக்கு சென்றான், அவனை அப்படியே கைகளில் அள்ளி பாத்ரூம் கொண்டு சென்று குளிக்கவைத்தான், அனைத்தையும் துடைத்து தானும் குளித்து வந்தான்.
துறை செல்வமும் வந்து சேர சீதாவை மருத்துவமனையில் அனுமதித்து தந்தையின் வரவுக்கு காத்திருந்தான்.
மொத்தமாக தளர்ந்துவிட்டார் பிரகாஷ், மனைவியின் இதயம் பலவீனமாக இருக்கிறது, வாஞ்சியின் வாய்மொழியாக கேட்ட அனைத்தும் அவரை பித்தம் கொள்ள செய்தது, பெங்களூரில் இருந்த தம்பியை அழைத்து அன்னையை அனுப்பிவிட்டார் “என் மனைவியையும் பிள்ளைகளையும் நேசிக்க முடியாத உங்களை என்னுடன் வைத்துக்கொள்ள முடியாது” என்று விட்டார்.
அந்த வருட பரீட்சையை ஜெகன் எழுதவில்லை, தாயுடன் இருந்துவிட்டான், தாயை மெல்ல மெல்ல மாற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர், ஆனால் வாஞ்சி தனக்குள் ஒடுங்கிவிட்டான்.
இன்று அம்முவுடன் அமர்ந்து சரளமாக பேசி சிரிக்கும் அவனை பார்க்க நெஞ்சம் நிறைந்தது அவன் குடும்பத்திற்கு.
கிரீடம் செய்து முடித்து ஒன்றை தனக்கும் ஒன்றை அவன் தலையிலும் வைத்தவள், மற்றொன்றை எடுத்து வந்து ஜெகனுக்கு வைத்தாள் “ரொம்ப அழகா இருக்கு” என்று அவன் சொல்ல, அவள் முகத்தில் சந்தோஷத்தின் சாரல்.
சிறிய பெட்டகம் ஒன்றில் அவளின் நினைவுகளாக சேகரிக்க தொடங்கிய பொருட்கள் நிரம்பி வழிந்தது, அவள் மீது கொண்ட காதலைப்போல, பெரிய மரப்பெட்டி ஒன்றை வாங்கிக்கொண்டான் நினைவுகளை சேமித்து வைக்க, இன்றும் அவன் அறையில் பத்திரமாக இருக்கிறது அனைத்தும்.
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!