மாலை அனைவரும் அமர்ந்து தேநீர் அருந்தும் நேரம் வீட்டிற்குள் வந்து நுழைந்தனர் ஜெகனின் சித்தப்பா மற்றும் குடும்பம்.
“வாங்க சித்தப்பா, வாங்க சித்தி” என்ற ஜெகன் “ஏய் விமல் வினிதா எப்படி இருக்கீங்க” என்று அவர்களை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
ஜெகனின் சித்தப்பா பிரசாத் அவரின் மனைவி பூரணி இருவரும் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தனர் நல்ல வருமானம்.
பெங்களூரில் நான்கு அறைகள் கொண்ட வீடு, பெரிய கார், ஆடம்பரமான வாழ்க்கை என்று நன்றாக தான் சென்றது இரண்டு வருடம் முன்பு வரை.
அவர்களுடைய கம்பெனியில் ஆட்குறைப்பு நடந்தபோது இருவருக்கும் வேலை போனது,
அனுபவத்தை வைத்து வேறு வேலையில் சேர்ந்தாலும் முன்பு இருந்த சம்பளம் இல்லை, வீடு மற்றும் கார் லோன் இட்டு வாங்கியது.
மாதா மாதம் வட்டி மட்டுமே விழி பிதுங்கியது, பிள்ளைகளை பெரிய பள்ளியில் சேர்த்திருந்தனர், பீஸ் மட்டுமே லக்ஷங்களில் வந்தது.
ஆசையாக வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டு வேறு டபுள் பெட்ரூம் வீட்டிற்கு இவர்கள் வாடைக்கு போயினர், சொத்துக்களை விற்று அடைக்கலாம் என்றால் நீலவேணி கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக நிற்கிறார்.
“என்னை தெருவில் விட்டு விடுவீர்கள், என் மரணத்திற்கு பிறகு எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
ப்ரகாஷிடம் இந்த பிரச்சனைகளை இது வரை கூறவில்லை, ஜெகன் கூட இரண்டு முறை கேட்டுவிட்டான் “ஏதாவது பிரச்சனையா சித்தப்பா” என்று அவர் “இல்லை வேலை மட்டும் தான் பிரச்சனை, அதுவும் வேறு கிடைத்துவிட்டது”என்றுவிட்டார்.
ஜெகனிற்கு பணம் பிரச்னையில்லை அவன் தந்தை சேர்த்த சொத்து இருக்கிறது, அவன் சம்பாத்தியம், அவன் தாய்க்கு சீதனமாக கிடைத்த இருபது ஏக்கர் இடத்தில் மாமன் துறைசெல்வம் தான் விவசாயம் பார்க்கிறார்
இடம் உபயோகம் இல்லாமல் கிடக்கவேண்டாம் நீங்களே வைத்து விவசாயம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லியும் திரும்ப வாங்க மறுத்துவிட்டார் துறைசெல்வம்.
அந்த இடத்தை குத்தகை போல எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கான வாடகையாக ஒரு தொகையை தங்கையின் பெயரில் இட்டு வருகிறார், சீதாராணிக்கு கிடைத்த நகைகள் அனைத்தும் அப்படியே உள்ளது
அதோடு இப்பொழுது இருக்கும் வீடு பிரகாஷ் அவரின் சொந்த உழைப்பில் கட்டியது, விசாலமான இடத்தில் பெரிய தோட்டம் வைத்து கீழே பெரிய ஹால், டைனிங் பூஜை அறை , சமையல் அறை நான்கு படுக்கை அறை, மேலே இரண்டு படுக்கை அறை என்று பெரிய வீடு.
அவனிடம் கேட்டிருந்தால் அவனிற்கு வர வேண்டிய சொத்தை முழுதாக கூட கொடுத்திருப்பான் சித்தப்பாவின் குடும்பத்திற்கு.
இருக்கும் பிரச்னையில் அவனை ஏன் தொல்லை செய்ய வேண்டும், அதோடு தான் சரியாக வாழாமல் தொலைத்து விட்டு அவனின் உரிமையை பறிக்கக்கூடாது என்று எண்ணினார் பிரசாத்.
அவன் சித்தியும் கூட கொஞ்சம் நல்லவள் தான் அனால் அது தங்களுக்கு பிரச்சனைகள் வராத வரை தானே.
பிள்ளைகளை பார்த்த பிறகு அம்முவை கையில் பிடிக்க முடியவில்லை, அவர்களுடன் ரூபாவையும் அழைத்துக்கொண்டு மொட்டை மாடியை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
துறைசெல்வம் மாதவி தம்பதிக்கு ரூபா ஒருவள் மட்டுமே, இருபது வயது நங்கை, அம்முவை மிகவும் பிடித்துவிட்டது அவளுக்கு, ஆடிக் களைத்து கீழே வந்தவர்கள் ஒரு குளியலை போட்டு வர மாதவி இரவு உணவுக்கான வேலையில் இருந்தார்.
அவரின் முந்தியை பிடித்துக்கொண்ட அம்மு “அது என்ன, இது என்ன” என்று கேள்விகளால் அவரை துளைத்துக்கொண்டிருந்தாள், அதை பார்த்த ஜெகனிற்கு அவனின் தாயின் நினைவு.
இப்படி தான் “சீதா அம்மாயி” என்று அவர் முந்தியை பிடித்துக் கொண்டே சுற்றுவாள், அவள் வீட்டிலானாள் அவளின் பெரியம்மாவின் பின்னே சுற்றுவாள்.
பிரகாஷை பார்த்துக்கொள்ள இரண்டு ஹோம் நர்ஸ், வீட்டில் அணைத்து வேலைக்கும் ஆட்கள் என்று எல்லா ஏற்பாடும் செய்திருந்தான் ஜெகன்.
துறைசெல்வம் குடும்பம் இங்கேயும், இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தங்கள் வீட்டிற்கும் மாறி மாறி போய்வந்து கொண்டிருந்தார்கள்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர், சிறிது நேரம் சென்று உறங்க செல்ல அம்முவை காணாமல் தேடினான் “அத்தை அம்மு எங்க போனா, மேலயும் இல்ல” என்க ரூபாவின் அறையை காட்டினார் அவர்.
அங்கு சென்று பார்க்க சின்னவள் வினிதா சுவர் ஓரம் படுத்திருக்க, நடுவில் ரூபா, இறுதியில் அம்மு ஒரு கையை கீழே தொங்கவிட்டு சிப்பி இதழ்கள் சிறிதாக திறந்து வைத்து கொள்ளை அழகாக உறங்கி கொண்டிருந்தாள்.
பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான், “நல்லா தூங்கிட்டா.. பேசாம ரூமுக்கு தூக்கிட்டு போயிடு” என்று ஐடியா கொடுத்த அத்தையை பார்த்து சிரித்தவன் “நீங்க சான்சே இல்ல அத்தை” என்றவன் அலுங்காமல் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு அறைக்கு போனான்.
“இங்கேயே தூங்கினா என்ன? எதுக்கு கஷ்டப்பட்டு தூக்கிட்டு போனும்” என்ற பூரணியை பார்த்த மாதவி “கஷ்டமா!! எவ்ளோ சந்தோஷமா தூக்கிட்டு போறாரு, இன்னும் நாலு நாள்ல ஜெகன் திரும்ப போகணும், இருக்கற வரைக்கும் அவ கூட இருக்கணும்னு தான ஆசை இருக்கும்” என்க.
எரிச்சலில் புகைந்துகொண்டிருந்தார் நீலவேணி “இவன் போனா.. வர ஆறு இல்ல எட்டு மாசம் ஆகும், இவளுக்கு புள்ள உண்டாயிடுச்சுனா இவளையும் அதையும் எப்படி பார்த்துக்க” என்றார் அக்கறை இருப்பதை போல.
“அதெல்லாம் தம்பி முன்னாடியே முடிவு பண்ணிட்டாரு, அம்முக்கு முழுசா குணம் ஆகாம அவங்க வாழ்கையை தொடங்குறதில்லைனு” என்றார் மாதவி.
“உனக்கு எப்படி தெரியும், சின்னஞ்சிறுசு அதும் இத்தனை வருஷம் காத்திருந்து கட்டிருக்கான்” என்று நீட்டி முழங்கினார்.
“அவரை பத்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுனுமா பெரியம்மா, தாலி பிரிச்சு கோர்க்குற அன்னைக்காவது சடங்கு வெச்சுக்கலாம்னு இவங்க கேட்டாங்க, தம்பி வேண்டாம்னு முடிவா சொல்லிட்டாரு” என்ற மாதவி கணவரின் “நா போறேன்” என்று பொதுவாக இருவரிடமும் கூறி தங்கள் அறை நோக்கி சென்றார்.
சின்ன மருமகளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த நீலவேணி தன் அறை செல்ல, ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு மாமியாரை பின் தொடர்ந்தார் பூரணி.
அதிகாலை எழுந்து உடற்பயிற்சி முடித்து தங்களுடைய அறைக்கு வந்து பார்க்க அவளை காணவில்லை, தேடிக்கொண்டு கீழே செல்ல முன்பக்கம் வாசல் படியில் கையில் டீயை வைத்துக்கொண்டு மிக ரசனையாக ஏதோ பார்த்திருந்தார் அவனின் மாமா
“சல சல” என்று பேச்சு சத்தம் வேறு கேட்டது, “என்ன மாமா” என்று அவரின் அருகில் சென்று பார்க்க, அம்முவின் கை பிடித்து புள்ளி கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மாதவி.
“பாத்தியா மாப்பிள, தெரு அடைச்சு போடுற தேர் கோலம்லாம் அஞ்சு நிமிஷத்துல அசால்ட்டா போட்டுட்டு வருவா என் பொண்டாட்டி, இப்போ நாலு புள்ளி கோலம் நாப்பது நிமிஷமா போடுறா, எல்லாம் என் பெரிய பொண்ணு உபாயம்” என்க முகம் கொள்ளா புன்னகையோடு அவருடன் அமர்ந்தான்.
“என்னவேணா சொல்லட்டும் மாப்ள, அம்மு இங்க வந்து மூணு நாள் தான் ஆகுது, ஆனா வீடே சந்தோஷத்திலயும் நிம்மதிலையும் நிறைஞ்சு இருக்கு மாப்ள” என்றவர் முகத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு தெளிவு.
இதையே தான் அவன் தந்தை கூட சொல்லுவார் “அம்மு குட்டி வந்தா தான் இந்த வீட்டுக்கே உயிர்ப்பு வந்த போல இருக்கு” என்று எத்தனை பிரியம் அவள் என்றால் தன் தாய்க்கு, வாஞ்சிநாதனுக்கு, தந்தைக்கு, தனக்கு “எல்லாம் அவள் தானே, எங்கும் கார்தும்பி மயம்”.
பின்னேயே எழுந்து வந்துவிட்டார்கள் பிள்ளைகள், பூரணி அனைவருக்கும் டீயை எடுத்து வர அங்கேயே பேச்சு சிரிப்பு என்று நேரம் சென்றது.
தமிழ் அவளுக்கு இப்பொழுது சுத்தமாக வரவில்லை கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ் போய் மலையாளம் மட்டுமே வந்தது, அதிலும் விடாமல் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
“இருந்த பால்ல டீயை போட்டுட்டேன், பால் எப்போ வரும்” என்ற பூரணியிடம் “நம்ம வீட்டு மாட்டு பால் தான், கறந்ததும் நம்ம பால்காரன் கொண்டு வருவான்” என்றார் மாதவி.
குட்டநாட்டின் வீட்டில் குடியேறிய இரண்டாம் நாள் பால் வாங்க சென்ற நினைவு வந்தது அவனுக்கு.
தோட்டத்து மாமரத்தில் கூவும் குயிலின் பாடலை விட காலையில் அவனுக்கு பிடித்த பாடல் அவளின் அம்மாயி(அத்தை ) என்ற ராகம் தான்.
கோழிக்கோடில் மரைன் எஞ்சினீரிங் சேர்ந்து விட்டவன், தாயையும் தம்பியையும் தனியே விட மனம் இன்றி தினமும் சென்று வந்தான், கொஞ்சம் தூரம் தான்.. இருந்தாலும் ஹாஸ்டலில் நிற்க விரும்பவில்லை.
அதற்க்கு மற்றொரு காரணம் காலையில் அவளுடன் பால் வாங்க போகும் தருணம், மாலையில் அவன் வரும் நேரம் வீட்டின் முற்றத்தில் ஐந்து திரி விளக்கு வைத்து பாட்டியுடன் ராமாயணம் படித்துக் கொண்டிருக்கும் அவளை காணும் சுகம்.
இவர்கள் குடிவந்த மூன்றாம் நாள் கையில் தூக்கு பாத்திரத்துடன் அடுக்களை வாயிலில் நின்று “அம்மாயி பால் வாங்க போனும்” என்றவள் குரலில் வெளியில் எட்டிப்பார்த்தான்.
முகம் கழுகி அப்படியே வந்திருந்தாள் பன்னீர் ரோஜாவில் பனித்துளிப் போல, “ஜெகா இங்க பால் வீட்ல போய் வாங்கிப்பாங்களாம், அம்மு வீடு காட்டுவா நீ போயிட்டு வந்துடு” என்க பாத்திரத்தை வாங்கி கொண்டு அவன் வெளியில் வந்தான்.
அவள் பார்வை உள்ளேயே இருந்தது “என்ன ஆச்சு” என்றவன் கேள்விக்கு “வாஞ்சி எங்க” என்றாள் .
“அவனால வர முடியாது, வீல் சேர் அந்த பக்கம் ஓட்ட முடியுமா தெரில, இன்னைக்கு போய் பாத்துட்டு நாளைக்கு கூட்டிட்டு போலாம்” என்க.
ஒன்றும் கூறாமல் ஓடியவள் சிறிது நேரத்தில் ஒரு சைக்கிள் கொண்டு வந்தாள் “இதுல கொண்டு போலாம்” என்க முதல் முறையாக வாஞ்சியின் முகத்தில் எதிர்ப்பார்ப்பும் ஆர்வமும்.
“அண்ணா நானும் வரவா” என்றான் அதன் பின் ஒன்றும் யோசனை இல்லை, பால் வாங்க போவதை ஒரு குட்டி பிகினிக் போல மாற்றி விட்டாள்.
வீட்டை சுற்றி முன்னாள் வந்து ரோட்டில் கொஞ்சம் நடந்ததும் “ஓஓ ஓஓ” என்று குரல் கொடுக்க ஏழு பிள்ளைகள் வேறு வேறு வீட்டில் இருந்து தூக்கு பாத்திரத்தோடு வந்து குதித்தார்கள்.
கொஞ்சம் தூரம் முன்னே சென்று வலது புறம் ஒரு சிறிய கிளை பாதையில் நுழைய , இடம் மாறி புதிய உலகில் நுழைந்த போல சுற்றமே மாறிவிட்டது.
அடுக்கடுக்காக மலை பாதை போல, அதில் மொத்தம் ரப்பர் தோட்டம் அந்த இடம் நுழைந்ததும் ரயில் வண்டி போல ஒரே வரிசையில் ஒருவர் உடுப்பை ஒருவர் பிடித்துக்கொள்ள, அம்முவின் குரலில் “கூகூ கூகூ ரயில் வண்டி, கூகி பாயும் ரயில் வண்டி” என்று மலையாள பாட்டு.
அதை அவர்கள் பின்பாட்டு பாட, அந்த தோட்டத்தின் முடிவில் இருந்த அந்த குட்டி பங்களா வருவதற்குள் வழியில் பார்த்த அணிலுக்கு ஒரு பாட்டு, தொட்டாவாடிக்கு ஒரு பாட்டு என்று மனதை லேசாக்கிவிட்டாள்.
வீட்டை சென்று சேர அங்கிருந்த பெண்மணி “என்ன ட்ரைன் இன்னைக்கு லேட்டா வந்திருக்கு” என்றார் “இவங்க தான் புதுசா வந்தவங்களா” என்றவர் அனைவருக்கும் பாலை ஊற்றி கொடுத்தார்.
அவர்கள் திரும்பி நடக்க தொடங்க “அம்மு” என்ற அழைப்போடு ஓடி வந்தான் அவன், கிட்டத்தட்ட வாஞ்சியின் வயது “உனக்காக வாங்கினேன்” என்று கமர்கட்டை அவள் கையில் வைத்தான் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு திரும்பி நடந்தாள்.
“டேய் கமர்கட்டு கொடுத்து அவளை கவுக்க பாக்குறான்” என்று மனதில் அவனை வசைப்பாடி வர, இவர்களுடன் வந்து கொண்டிருந்த ஒருவன் முகத்தை திருப்பினான்.
“அப்பு என்னாச்சு” என்றவள் வினவ “நீ ஏன் அவன் குடுக்கறத வாங்குற உனக்கு நான் கொடுக்குறேன்” என்றான் அவன்.
“அடேய் பாவிங்களா என்னடா ஆள் ஆளுக்கு எனக்கு ஆப்பு ரெடி பண்றீங்க, ரொம்ப கஷ்டம் டா ஜெகா உன் நிலமை” என்று புலம்பிக்கொண்டே வந்தான்.
வீட்டிற்கு வந்த வாஞ்சிநாதனுக்கு புதியதாக பார்த்த அந்த உலகத்தை பற்றியும் அம்முவை பற்றியும் பேசி பேசி வாய் ஓயவில்லை.