‘எது! காமடி பீஸா!’ என்று அதிர்வுடன் விழித்த சத்யதேவின் மனசாட்சி, ‘ஸ்பீக்கரில் பேசியதுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ நொந்த பீஸா ஆகப் போற!’ என்று எச்சரிக்க, ‘அய்யோ! ஆமா.. இவ பேசினதுக்கு அவன் என்னை வச்சு செய்வானே!’ என்று அலறினான்.
அவனது மனசாட்சி எச்சரிக்கை மணி அடித்தது சரியே என்பது போல் அவனது கைபேசியில் மணி அடித்தது. அழைத்தது அவனது பாசமிகு சகோதரன் தான்.
அழைப்பை எடுத்ததும் இவன் அவசரமாக, “ஜெயா…..” என்று ஆரம்பித்து பேச எத்தனிக்க,
இவனது குரலை கேட்ட நொடி ஜெயதேவ், “இப்பவும் ஸ்பீக்கர் போட்டு இருக்கியா?” என்று கோபத்தை கட்டு படுத்திய குரலில் கேட்டான்.
இவன், “இல்லை” என்று கூறியதும்,
“உன் கம்பெனி எப்படிடா இன்னும் திவால் ஆகாம இருக்குது! இந்த லெட்சணத்தில் இவரு ப்ரொஜெக்ட் லீடர்! உனக்கு கீழ இருக்கிறவங்க உருப்பட்ட மாதிரி தான்..” என்று ஆரம்பித்து இடைவிடாது பத்து நிமிடங்களுக்கு இவனை கிழித்து தோரணம் கட்டிய ஜெயதேவ் இறுதியாக, “வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று கூறி இவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
‘எது! வீட்டுக்கு வந்து கண்டின்யுவா!’ என்று வாய் விட்டே அலறியவன், ‘இன்னைக்கு வீட்டுப் பக்கம் போய்டாதடா சத்யா’ என்று மனதினுள் கூறிக் கொண்டு அலுவலகத்தை நோக்கி வண்டியை கிளப்பினான்.
அதே நேரத்தில் ஆத்மிகா பின்னால் அமர்ந்து இருந்த தோழி, “அடிப் பாவி! இவனையா ஓகே லெவல்னு சொன்ன! செம ஸ்மார்ட்டா இருக்கானே!” என்றாள்.
“அந்த மங்கூஸ் மண்டையன் மூஞ்சி அப்படித் தான் இருந்தது”
“அப்போ ஐடென்டிகல் ட்வின்ஸ் இல்லையா?”
“ஐடென்டிகல் தான்.. ஆனா இந்த ஜவ்வு மிட்டாய் கண்ணில் இருக்கும் மென்மையும் சிரிப்பும் அவன் கிட்ட இருக்காது.. ஸோ ஓகே லெவல் தான்”
“ஓ” என்றவள், “எங்க வேலை பார்க்கிறான்னு கேட்டு இருக்கலாம்” என்றாள்.
“தெரிஞ்சு என்ன செய்யப் போற! அந்த கம்பெனிக்கு வேலைக்கு போய் அவனை கரெக்ட் பண்ணப் போறியா?”
“பண்ணா தப்பில்லை” என்று அவள் புன்னகையுடன் கூற,
இவளும் புன்னகையுடன், “நீ நடத்து மச்சி” என்றாள்.
இது இவர்களுக்குள் எப்பொழுதும் நடக்கும் உரையாடல் தான். ஆனால் பேச்சு பேச்சாக மட்டுமே இருக்குமே தவிர செயலாக உருப்பெறாது.
அலுவலகத்திற்கு வந்த சத்யதேவ் கைபேசியை எடுத்து பார்க்க, அதில் அன்னையிடம் இருந்து மூன்று விடுபட்ட அழைப்புகள் இருந்தது.
அவரை அழைத்தவன் அவர் அழைப்பை எடுத்ததும், “சொல்லுமா” என்றது தான் தாமதம்,
“கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காடா? உன் போனுக்காக இங்கே ஒருத்தி வீட்டில் காத்துட்டு இருப்பேன்னு தெரியாது! இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருந்தா எப்படி? நாள பின்ன கல்யாணம் செய்யும் போது இப்படியே இருந்தா எப்படி! ஜெயா அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சமாச்சும் பொறுப்பை வளர்த்துக்கோடா” என்று கூற,
இவன் கடுப்புடன், “முடிச்சுட்டீங்களா?” என்று உறுமும் குரலில் கேட்டான்.
ஒரு நொடி கைபேசியை காதில் இருந்து எடுத்து பார்த்தவர், ‘சரியா தானே கூப்பிட்டு இருக்கேன்!’ என்று சொல்லியபடி, “ஹலோ சத்யா தானே!” என்று சிறிது சந்தேகத்துடன் கேட்டார்.
“ஆமா! பொறுப்பில்லாத சத்யா தான் பேசுறேன்” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு கூற,
அதை கண்டு கொள்ளாமல் ஆசுவாசத்துடன், “அப்பாடி!” என்றவர், “முதல்ல ஏன்டா அப்படி ஒரு டோனில் பேசின! ஒரு நிமிஷம் ஜெயாவோனு நினைச்சுட்டேன்” என்றார்.
“இப்போ மட்டும் நேரில் இருந்தேன் உங்களை கடிச்சு கொதறிடுவேன்”
“ஏன்டா இந்த கொலைவெறி! அம்மா பாவம்டா”
“யாரு நீங்களா!” என்றவன், “இப்போ தான் புரியுது” என்றான்.
“என்னடா புரிந்தது?”
“எதிராளியை பேச விடாம வறுத்தெடுக்கிற திறமை ஜெயாக்கு எங்கிருந்து வந்ததுனு”
“யார் கிட்ட இருந்துடா?” என்று அவர் அறியாதவர் போல் வினவ,
அவன் மீண்டும் பல்லை கடித்தபடி, “அம்மா!” என்றான்.
அலட்டிக் கொள்ளாமல், “சரிடா அதை விடு.. அந்த பொண்ணு என்ன சொன்னா? ஜெயா பத்தி எதுவும் பேசினாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.
“என்னை ஓவரா பேசுனீங்க தானே! சொல்ல முடியாது” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அவர் மீண்டும் அழைக்க, அழைப்பை ஏற்கவில்லை. இரண்டு முறை அவரை தவிக்க விட்டவன் மூன்றாவது முறை தான் அழைப்பை எடுத்தான்.
அவன் அழைப்பை எடுத்ததும் அவர், “சாரிடா சத்யா.. என் செல்ல சத்யா தானே! அம்மா தானே பேசினேன்.. விடேன்டா” என்று அவனை தாஜா செய்தார்.
“பொழச்சு போங்க” என்று இறங்கி வந்தவன் ஆத்மிகாவுடன் நிகழ்ந்த உரையாடல்களை கூறினான்.
அவர் ஆர்வத்துடன், “அப்போ அந்த பொண்ணுக்கும் ஜெயா மேல நல்ல அபிப்பராயம் தான் இருக்குது” என்றவர், “பாரேன்! ஒரே ஒரு சந்திப்பிலேயே ஜெயாவை சரியா புரிஞ்சு வச்சு இருக்கா! இவனும் அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுறான்” என்றார்.
“அவசரப்பட்டு ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. நான் இன்னும் சொல்லி முடிக்கலை” என்று கூறி ஜெயதேவ் மற்றும் ஆத்மிகாவின் கைபேசி உரையாடலை கூறி, “அவ பேசினதுக்கு உங்க பையன் என் காதில் ரத்தம் வர அளவுக்கு வச்சு செஞ்சுட்டான்.. இதுல வீட்டிற்கு வந்து கவனிச்சுக்கிறேன்னு வேற சொல்லி இருக்கிறான்” என்று சோகமும் ஆதங்கமுமாக கூறி முடித்தான்.
“அச்சோ! என்னடா ரெண்டும் இப்படி எப்போதும் முட்டிக்குதுங்க” என்று கவலையுடன் கூறியவர் அடுத்த நொடியே கண்கள் பிரகாசிக்க உற்சாக குரலில், “இந்த படத்தில் எல்லாம் வர மாதிரி இவங்களுக்கு நடுவிலும் மோதல் பின்ன காதல் வருமாடா?” என்று கேட்டார்.
அவன் கடுப்புடன், “ஒருத்தன் காதில் ரத்தம் வர அளவுக்கு திட்டு வாங்கியதை புலம்பி இருக்கேன்.. அதை பத்தி கொஞ்சமாச்சும் பேசுறீங்களா?” என்றான்.
“விடு.. விடு.. நீ ஜெயா கிட்ட திட்டு வாங்குறதெல்லாம் புதுசாடா” என்றவர், “ஆமா அந்த பொண்ணு பெயர் என்னடா?” என்று கேட்டார்.
“உங்க பெரிய மகன் கிட்டயே கேட்டுக்கோங்க” என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்து கைபேசியை அமைதி நிலையில் போட்டான்.
‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ!’ என்று யோசித்த மீனாட்சி நாக்கை லேசாக துருத்தி, ‘ஹ்.. பார்த்துக்கலாம்’ என்று கூறிக் கொண்டு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.
அதே நேரத்தில், வீட்டிற்கு வந்த ஆத்மிகாவை முகம் கூட அலம்ப விடாமல் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்ற சம்ருதிகா, “என்னாச்சு சொல்லு” என்றாள் பரபரப்புடன்.
“ரிலாக்ஸ் சமி.. ஒரு பிரச்சனையும் இல்லை.. மொபைலை அதோட சொந்தக்காரன் கிட்டயே கொடுத்தாச்சு.. அவங்க ஐடென்டிகல் ட்வின்ஸ் ஸோ அடையாளம் கண்டுபிடிக்கிற பிரச்சனையும் இல்லை.. இவன் பெயர் சத்யதேவ்.. ஜெயதேவ் மாதிரி கஞ்சி டப்பா இல்லை.. ஸ்மைலிங் பேஸா(face) தான் இருந்தான்.. ஸோ பார்த்ததும் ஈஸியா ட்வின் பிரதர்னு கண்டு பிடிச்சு மொபைலை கொடுத்துட்டு கிளம்பிட்டேன்.. அவ்ளோ தான்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.
பொதுவாக தமக்கையிடம் அனைத்தையும் கூறுபவள் தான் ஆத்மிகா ஆனால் இந்த விஷயத்தில் சம்ருதிகா ஒரு வித பயத்துடன் இருந்ததால் சுருக்கமாக கூறியதோடு ஜெயதேவுடன் நிகழ்ந்த கைபேசி உரையாடலை மறைத்துவிட்டாள்.
இனி ஜெயதேவை எங்கே சந்திக்க போகிறோம் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை, நாளையே அவனை சந்திக்க நேரிடும், அதுவும் தனது வீட்டிலேயே!
நிம்மதி மூச்சை வெளியிட்ட சம்ருதிகா, “ஹப்பா! ஒருவழியா இந்த பிரச்சனையை முடிச்சுட்டியே! சந்தோசம்” என்றாள்.
இருந்தாலும் சிறு சந்தேகத்துடன், “அவ்ளோ தானா! எதையும் மறைக்கலையே!” என்று கேட்டாள்.
ஆத்மிகா முறைக்கவும்,
“இல்லைடி உன்னை நம்ப முடியாது.. அதான்” என்றவள், “அவன் கூட என்ன பேசின?” என்று கேட்டாள்.
“பெருசா ஒன்னுமில்லை.. அவன் தான் ‘நீங்க பாம்பேல என்ன செஞ்சுட்டு இருந்தீங்க! நீங்க யாரு? சொல்லுங்க சொல்லுங்க!’ னு பாட்ஷா எஃப்பெக்டில் கேள்வி கேட்டுட்டு இருந்தான்”
“அப்படி என்னடி கேட்டான்?”
“எப்படி அவனை பார்த்ததும் கண்டு பிடிச்சேன்? ஒருவேளை அவன் ட்வின்ஸ் இல்லைனா எப்படி கண்டு பிடிச்சு இருப்பேன்னு கேட்டான்.. பதிலை சொல்லி, போதும் ஜவ்வு மிட்டாய், நீ கிளம்பு ராசானு சொல்லிட்டு கிளம்பிட்டேன்” என்றவள் படியில் இறங்க ஆரம்பித்தாள்.
ஏதோ கேட்க போன சம்ருதிகா, “வந்ததும் வராததுமா கேள்வி கேட்டு இம்சை செய்யாத பக்கி.. முதல்ல என்னை திங்க விடு.. இல்லை பசியில் உன்னை கடிச்சு தின்னுடுவேன்” என்று ஆத்மிகா மிரட்டியதில் வாயை இழுத்து மூடிக் கொண்டாள்.
அதன் பிறகு சம்ருதிகாவிடம் தனியே சிக்காமல் தனது வானர பட்டாளத்தை சந்திக்க சென்றுவிட்டாள்.