கட்டுகடங்காத கோபத்தில் இருந்த ஜெயதேவ் இரண்டு குவளை குளிர்ந்த நீரை பருகினான். அப்பொழுதும் கோபம் தனிவதாக இல்லை.
அறையினுள் வேகமாக நடந்து கொண்டிடுந்தவனின் மனமோ,
‘என்ன பேச்சு பேசுறா! அதுவும் சின்ன பொண்ணு! ஆனா கொஞ்சமும் பயமே இல்லை! சரியான ராங்கி பட்டாசு தான்!’ என்று ஆத்மிகா பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், ‘ஆனா இன்னைக்கு அவ டென்ஷனே ஆகலை.. என்ன ஒரு நிதானமும் நக்கலும் அவளோட குரலில்’ என்று யோசித்தவனின் மனம், ‘சரியான அறுந்த வாலா இருப்பா போல!’ என்றும், ‘நிச்சயம் இவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை.. இவ ஒரு மாஸ்டர் பீஸ் தான்’ என்றும் கூறியது.
அப்பொழுது அறை கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த பெரியவர் சிறு தயக்கத்துடன், “தம்பி.. நேரமாச்சு..” என்று இழுத்து நிறுத்தினார்.
அப்பொழுது தான் மணியை பார்த்து, ‘இவ்வளவு நேரம் அவளை பற்றியே யோசிச்சுட்டு இருந்தேனா!’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன் பெரியவர் தனது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, “நீங்க போங்க.. இரண்டு நிமிஷத்தில் வரேன்” என்று கூறி அவரை அனுப்பினான்.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த கோபம் இப்போ இல்லையே!’ என்று ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டவன், சொன்னது போல் இரண்டு நிமிடத்தில் உணவகத்தின் சமையல் அறைக்கு சென்று, அன்று தான் செய்ய வேண்டிய பதார்த்தத்தை செய்ய ஆரம்பித்தான். சமையல் என்று வந்ததும் மனதை ஒருமுகப் படுத்தி வேலையில் இறங்கினான்.
மீனாட்சியிடம் சத்யதேவ் பேசி முடித்த நொடி, “சத்யா” என்ற அழைப்புடன் ரேஷ்மி அவளது தோழியுடன் வந்து நின்றாள்.
அவளை பார்த்த சத்யதேவ் அப்பொழுது இருந்த கடுப்பில், கடுகடுத்த முகத்துடன், “என்ன?” என்றான்.
சத்யதேவின் இத்தகைய கடுகடுத்த முகத்தை முதல் முறையாக பார்த்த ரேஷ்மி சிறு தயக்கத்துடன், “எங்க போயிட்டு வர?” என்று கேட்டாள்.
“அது உனக்கு தேவை இல்லாத விஷயம்”
“சொல்லேன் ப்ளீஸ்”
“உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?”
“ப்ளீஸ்”
“எரிச்சலை கிளப்பாம கிளம்பு ரேஷ்மி”
“நீ சொல்லு.. நான் போறேன்” என்று அவள் ஒரு வித பிடிவாதத்துடன் சொல்ல,
“என் லவ்வரை பார்த்துட்டு வரேன்” என்றான்.
“நிஜமாவா?” என்று அதிர்வுடன் கலங்கிய குரலில் கேட்டாள்.
அவளது கலங்கிய குரலைக் கேட்க அவனுக்கு சிறிது வருத்தமாக இருந்தாலும் அவளை விலக்கும் எண்ணம் மேலோங்கவும், கூடவே ஜெயத்தேவிற்கு ஆத்மிகாவுடன் நிகழ்ந்த பிரச்சனைக்கு இவளும் ஒரு காரணம் என்ற எண்ணமும் சேர்ந்துக் கொள்ள, “ஆமா” என்று உறுதியான குரலில் கூறினான்.
அவள் சட்டென்று தனது கைபேசியை அவனிடம் காட்டியபடி, “இந்த பொண்ணா?” என்று கேட்டாள்.
அந்த புகைப்படத்தை பார்த்த சத்யதேவ் ஆடிப்போனான். அவனும் ஆத்மிகாவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது அந்த புகைப்படம்.
“இல்லை சத்யா.. என் பிரெண்ட் அந்த பக்கம் போனப்ப பார்த்து போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினா.. நான் எதுவும் சொல்லலை.. ஐ ப்ராமிஸ்” என்றாள்.
“ஹே நிறுத்து” என்று குரலை உயர்த்தாமல் கர்ஜித்தவன், “என்னோட பெர்சனல் விஷயத்தில் தலையிட நீ யாரு? முதல்ல உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு உன் மேல் காதல் இல்லைனு சொன்னா புரியாதா? எதுக்கு இப்படி டார்ச்சர் செய்ற? இன்னொரு தடவ காதல் கீதல்னு வந்து நின்ன! அடெம்(adam) டீஸிங்னு போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துடுவேன்” என்று ஆடி தீர்த்துவிட்டான்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் சத்யதேவின் இந்த கோபத்தில் பெரும் அதிர்ச்சியுடன் பேச்சற்று நின்றிருந்தவளை அவளது தோழி இழுத்து செல்லப் பார்க்க,
“ஹே நில்லு!” என்ற சத்யதேவ் பொம்மை போல் திரும்பியவளின் கையில் இருந்து கைபேசியை பிடுங்கி, அந்த புகைப்படத்தை அழித்துவிட்டு கைபேசியை திருப்பிக் கொடுத்தான்.
பின், “உண்மையில் நான் யாரையும் விரும்பலை.. உன் டார்ச்சர் தாங்கம தான் அப்படி சொன்னேன்.. இந்த பொண்ணு ஜஸ்ட் பிரெண்ட்.. அதுவும் ரெண்டு நாள் பழக்கம் தான்.. இதை எதுக்கு சொல்றேனா! இந்த போட்டோ வச்சு ஏதாவது பிரச்சனை செய்திட கூடாதுனு தான்.. அப்படி ஏதும் செய்த! தொலைச்சிடுவேன்” என்று மிரட்டியவன், “முதல்ல உன் பிரெண்டை இந்த போட்டோ டெலிட் செய்யச் சொல்லு.. இல்லை, இப்பவே என் முன்னாடியே போன் போட்டு சொல்லு” என்றான்.
அவள் அவ்வாறு செய்ததும், “இவன் தான் யாரையும் காதலிக்கலையேனு திரும்ப வந்து நின்ன! யோசிக்காம உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்.. என்ன புரிந்ததா?” என்று கேட்டான்.
அவள் அதிர்ச்சி விலகாத நிலையில் ‘புரிந்தது’ என்பது போல் தலை அசைக்கவும், “கிளம்பு” என்றான்.
அவளது தோழி விட்டால் போதும் என்பது போல் அவளை இழுத்துச் சென்று விட்டாள்.
அவன் அருகே அமர்ந்து இருக்கும் நண்பன், “கலக்கிட்ட மச்சி! இதை நீ முதல்லேயே செய்து இருக்கலாம்” என்றான்.
“ஹ்ம்ம்” என்றவன், “சரி வேலையை பார்ப்போம்..” என்றபடி பார்வையை மடிக்கணினி பக்கம் திருப்பினான்.
‘உஃப்’ என்று பெருமூச்சை வெளியிட்டபடி கடவு சொல்லை போட்டவனின் மனமோ, ‘இவளுக்கு எல்லாம் ஜெயா மெத்தட் தான் சரி’ என்று கூறிக் கொண்டது.
பின், ‘இது மட்டும் ஆத்மிகாக்கு தெரிந்தது!’ என்று நினைத்துப் பார்த்தான். ‘ஜெயாவையே இந்த வாங்கு வாங்கறா.. அப்போ என் நிலை!’ என்று யோசித்தவன், ‘அய்யோ!’ என்று வாய்விட்டே லேசாக அலறிவிட்டான்.
அவன் நண்பன், “என்னடா?” என்று வினவ,
தலையை லேசாக உலுக்கியபடி, “ஒன்னுமில்லை” என்று கூறி வேலையை ஆரம்பித்தான்.
அன்று இரவு ஒன்பது மணி அளவில் சத்யதேவ் அன்னையிடம் வம்பு வளர்த்தபடி உணவை உட்கொண்டு இருந்தான்.
அப்பொழுது வெளியே ஜெய்தேவின் வண்டி சத்தம் கேட்கவும், “என்னமா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டான்!” என்றவன், அவசர அவசரமாக பாதி உண்ட உணவு தட்டை சமையல் அறையில் ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு கை அலும்பியபடி, “அம்மா எனக்கு தலை வலி.. எட்டு மணிக்கே சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டேன்” என்று கூறி தனது அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
ஜெயதேவோ, “சத்யா எங்க ம்மா?” என்று கேட்டபடி தான் உள்ளே வந்தான்.
ஒரு நொடி திருத்திருத்த மீனட்சி, “தலை வலினு எட்டு மணிக்கே சாப்டுட்டு மாத்திரை போட்டு படுக்க போயிட்டான்.. ஏன் பா?” என்று கேட்டார்.
ஒரு நொடியே ஆனாலும் அன்னையின் முழியை கண்டுகொண்டவன் தம்பியின் வேலையையும் கண்டு கொண்டான்.
“ஓ.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. கதவை தட்டி அவனை கூப்பிடுங்க” என்றான்.
“நாளைக்கு பேசலாமே பா!” என்று அவர் தயக்கத்துடன் கூற,
அவரை அழுத்தமாக பார்த்தவன், “கூப்பிடுங்க” என்றான்.
அவர் கதவை தட்டியபடி, “சத்யா” என்று அழைக்க, அவனோ கதவை திறக்கவே இல்லை.
மீனாட்சி பாவமாக பார்த்தபடி, “தூங்கிட்டான் போல” என்றார்.
“சரி.. எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றபடி அவன் தனது அறையினுள் சென்று கதவை மூடியதும் தான் மீனாட்சி நிம்மதி மூச்சை வெளியிட்டார்.
அறையினுள் மூடிய கதவை ஒட்டி நின்றபடி இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சத்யதேவும் இழுத்து பிடித்திருந்த மூச்சை அதன் பிறகே வெளியிட்டான்.
“தப்பிச்சடா சத்யா!” என்றபடி திரும்பியவன் அங்கே நின்றிருந்த ஜெயதேவை கண்டு கருவிழிகள் தெறித்து வெளியே வந்துவிடுவது போல் அதிர்வுடன் நின்றான்.
நிதனாமாக நடந்து சென்று மெத்தையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த ஜெயதேவ் தம்பியை அழுத்தமாக பார்த்தான்.
‘இவன் எப்படி உள்ளே வந்தான்?’ என்று யோசித்த சத்யதேவின் கண்ணில் திறந்திருந்த உப்பரிகை கதவு விழவும், ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியேடா!’ என்று நொந்துக் கொண்டவன் எச்சிலை விழுங்கியபடி ஜெயதேவைப் பார்த்தான்.
இருவரின் அறைக்கும் பொதுவான உப்பரிகை தான். அதனாலேயே ஜெயதேவ் சுலபமாக சத்யதேவின் அறையினுள் வந்திருந்தான்.