‘சரியான அழுத்தக்காரன்’ என்று நினைத்தபடி வெளியே சென்றவன், “அம்மா” என்று அழைத்தான்.
“என்னடா வெளியே வந்துட்ட! ஜெயா இப்போ வந்திடுவான்”
“அவன் தான உங்களை கூட்டிட்டு வரச் சொன்னான்.. வாங்க” என்றவன் அன்னையின் புரியாத பார்வையில், “ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்னு சொல்லி அவன் ரூமுக்குள்ள போனவன், பால்கனி வழியா என் ரூமில் வந்து நிற்கிறான்” என்றான்.
மீனாட்சி சிரிக்க, அவன் முறைத்தான்.
மீனாட்சி சிரிப்புடன், “இன்னைக்கு காலையில் உன் முகத்தில் தானே முழிச்ச!” என்று கிண்டல் செய்ய,
“வேணா! ஓவரா போய்கிட்டு இருக்குது” என்றான்.
மீனாட்சி அதற்கும் சிரிக்க, சத்யதேவ், “சத்யதுக்கே சத்ய சோதனை!” என்றான்.
“போ போ.. சோதனைக்கு தான் கூப்பிடுறான்”
“சத்யா” என்று ஜெயதேவ் குரல் கொடுக்க,
“ராங்கி பட்டாசு சொன்ன மாதிரி சரியான மிலிட்டரி தான் மா உன் பெரிய மகன்” என்றபடி அன்னையை பார்த்தவன் அவர் முகத்தில் தெரிந்த அதிர்வில் நிமிர்ந்து பார்க்க, அங்கே அவனை முறைத்தபடி ஜெயதேவ் நின்றிருந்தான்.
‘ஆத்தி! இன்னைக்கு என் கெரகம் ரவுண்டு கட்டி அடிக்குதே!’ என்று மனதினுள் அலறியவன் வெளியே மிதப்பாகப் பார்த்தான்.
ஆனால் ஜெயதேவின் பார்வையை இரண்டு நொடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தளர்ந்த குரலில்,
“ஒரு நாளைக்கு ஒரு ஷாக் கொடுடா! இல்லனா என் பாடி தாங்காது” என்றான்.
“இப்போ நீ சொன்னதை அப்புறம் விசாரிக்கிறேன்.. அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. ரெண்டு பேரும் வந்து உட்காருங்க” என்றபடி கூடத்தில் இருந்த மெத்திருக்கையில் அமர்ந்தான்.
மீனாட்சி, ‘என்ன விஷயம்?’ என்பது போல் சத்யதேவை பார்க்க, அவனோ ‘தெரியாது’ என்று உதட்டை பிதுக்கி செய்கை செய்தான்.
இவர்களை திரும்பி பார்க்காமலேயே, “இங்கே வந்து உட்கார்ந்தீங்கனா நானே விஷயத்தை சொல்லிடப் போறேன்” என்றதும்,
‘எப்படி தான் நம்ம மைண்டு வாய்ஸ் கூட கேட்ச் பண்றானோ!’ என்று நினைத்த மீனாட்சி வேகமாக போய் அவன் எதிரே இருந்த மெத்திருக்கையில் அமர,
‘ஷப்பா இப்பவே கண்ணக் கட்டுதே!’ என்று நினைத்த சத்யதேவ் அவன் அமர்ந்து இருந்த மெத்திருக்கையில் அவன் அருகே அமர்ந்தான்.
சட்டென்று நிமிர்ந்து அமர்ந்த மீனாட்சி சிறு பதற்றத்துடன், “அவ உன் கிட்ட பேசுறேன்னு சொன்னப்ப நான் வேண்டாம்னு தான் பா சொன்னேன்” என்றார்.
“அதையும் சொன்னாங்க” என்றவன், “அந்த பொண்ணை சத்யாக்கு பார்க்கலாம்னு சொல்லி, நாளைக்கு பொண்ணு பார்க்க வரதா சொல்லிட்டேன்” என்றான்.
“என்னது!” என்று அதிர்ச்சியுடன் சத்யதேவ் எழுந்து நின்றே விட்டான்.
“உட்காருடா” என்று ஜெயதேவ் கூற,
சத்யதேவ் முறைப்புடன், “ஏன் கல்யாண தேதியையும் முடிவு செய்திருக்க வேண்டியது தானே!” என்றபடி அமர்ந்தான்.
ஜெயதேவோ அலட்டிக் கொள்ளாமல், “பொண்ணு வீட்டில் உன்னை நேரில் பார்க்கணுமே!” என்றான்.
கோப மூச்சை வெளியிட்ட சத்யதேவ், “அப்போ அவங்க போட்டோ பார்த்து ஓகே சொல்லி இருந்தா நிஜமாவே கல்யாண தேதியை முடிவு செய்து இருப்ப!” என்றான்.
அவனை ஆழ்ந்து நோக்கியபடி, “நீ என்ன நினைக்கிற?” என்று ஜெயதேவ் புருவம் உயர்த்தியபடி வினவ,
தமையனின் ஆழ்ந்த பார்வையிலும் குரலிலும் இயல்பிற்கு திரும்பியவன் சாதாரண குரலில், “என் விருப்பம் இல்லாம எதுவும் செய்ய மாட்ட” என்றான்.
‘தெரியுதுல!’ என்பது போல் பார்த்தவன், “விசாலாட்சி அத்தை ரொம்ப நல்ல இடம்னு சொன்னாங்க.. அவங்களோட ஒன்னுவிட்ட தம்பியோட மூத்த பொண்ணு.. பேரு சம்ருதிகா.. M.E படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போக இஷ்டம் இல்லாம ஒரு வருஷம் வீட்டில் தான் இருக்கிறா.. ரொம்ப அமைதி, பொறுப்பான பொண்ணுனு சொன்னாங்க.. ஒரே ஒரு தங்கச்சி, காலேஜ் படிச்சுட்டு இருக்கா.. அம்மா ஹவுஸ் வைஃப்.. அப்பா பேங்க் மேனேஜர்..
அவங்களை நம்புறதா இருந்தா கல்யாணம் பேசச் சொன்னாங்க.. நாம கஷ்டப்பட்ட காலத்தில், சொந்தங்கள் எல்லாம் கஷ்டத்தை அதிகப்படுத்த சொந்தமில்லாத வேலவன் மாமாவும் விசாலாட்சி அத்தையும் தான் நமக்கு துணையா இருந்தாங்க.. அவங்க வார்த்தையை என்னால் தட்டிக் கழிக்க முடியலை.. அதுவும் அவங்க நம்பிக்கை இருந்தானு சொன்ன அப்புறம் என்னால் மறுக்க முடியலை” என்று நீளமாக பேசினான்.
என்ன தான் ஜெயதேவ் திடமானவனாகவும் திறமையானவனாகவும் இருந்தாலும் தந்தையின் இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு சிறிதும் அவகாசம் கொடுக்காமல் சொந்தங்கள் என்ற பெயரில் இருந்த சுயநலவாதிகளும் சதிகார்களும் பிரச்சனை செய்து நெருக்கிய நேரத்தில், தந்தை ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு தோள் கொடுத்து, உறு துணையாக இருந்து ஊக்கம் அளித்த அவனது தந்தையின் நெருங்கிய பாலிய நண்பரான வேலவன் மீது அவனுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.
அந்த இக்கட்டான நேரத்தில் இவன் பிரச்சனைகளை சமாளித்து நிமிர்ந்து நிற்பதில் மும்மரமாக இருக்க, அவனது அன்னைக்கு துணையாக இருந்து திடம் அளித்தவர் வேலவனின் மனைவி விசாலாட்சி தான். அதனால் அவர் மீதும் அவனுக்கு தனி மரியாதையும் நன்றியுணர்வும் உண்டு.
ஒரு வாரத்திற்கு முன்பே விசாலாட்சி சம்ருதிகா பற்றி மீனாட்சியிடம் கூறி இருக்க, அவர் அதை பற்றி ஜெயதேவிடம் பேச ஆரம்பித்த போது தான் சத்யதேவிற்கு பார்க்க கூறி சென்றுவிட்டான். ஜெயதேவ் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பதைப் பற்றி கவலையுடன் மீனாட்சி விசாலாட்சியிடம் கூறி இருக்க, அவர் தான் பேசுவதாக கூறியதும், மகனிற்கு பயந்து வேண்டாம் என்று தான் மீனாட்சி கூறி இருந்தார். ஆனால் இன்று ஜெயதேவிடம் பேசிய விசாலாட்சி எவ்வளவோ முயற்சித்தும் திருமணத்திற்கு அவனை சம்மதிக்க வைக்க முடியாமல், இறுதியில் ‘நீ ஒரு நல்ல பிஸ்னெஸ் மேன்டா’ என்று கூறியபடி ‘சத்யதேவிற்கு பார்க்கலாம்’ என்று அவன் கூறியதிற்கே ஒத்துக் கொண்டார்.
சத்யதேவ், “அதெல்லாம் சரி.. அவங்க உனக்குத் தானே பொண்ணு பார்த்தாங்க.. என்னை ஏன்டா கோர்த்து விட்ட?” என்றான்.
“ஏன்னா எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை”
“ஏன்?”
“பிடிக்கலை”
“நீ இன்னும் அதை மறக்கலையா?” என்று சத்யதேவும்,
“நீ இன்னும் அந்த பொண்ணை மறக்கலையாப்பா?” என்று மீனாட்சியும் ஒன்றாக கேட்டனர்.
“நான் அவளை விரும்பவே இல்லைமா.. இனி இப்படி கேட்காதீங்க” என்று அன்னையைப் பார்த்து கூறியவன் சத்யதேவை, ‘உனக்கே தெரியாதா!’ என்பது போல் பார்த்தான்.
சத்யதேவ், “நான் மறக்கலையானு கேட்டது அந்த பிசாசை இல்லை.. அந்த சம்பவமும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் தான் சொன்னேன்” என்று கூற,
“எந்த தாக்கமும் இல்லை” என்றான்.
மீனாட்சி, “ஒரு சில பொண்ணுங்க தப்பா பேசி நடந்துகிட்டதை வச்சு எல்லா பொண்ணுங்களும் அப்படி தாங்கிற முடிவிற்கு வராதப்பா” என்றார்.
“அப்படி எல்லாம் நான் நினைக்கலை ம்மா”
“அப்புறம் ஏன்?” என்று அவர் இழுத்து நிறுத்த,
“அப்படி நினைத்து இருந்தா, நம்ம ரெஸ்டாரென்டில் பொண்ணுங்களுக்கு நான் வேலை கொடுத்து இருக்கவே மாட்டேனே!” என்றான்.
இதற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் அவர் சத்யதேவை ‘நீ பேசேன்’ என்பது போல் பார்க்க, அவனும் கண்களை மூடி திறந்தான்.
“அந்த சம்பவத்தோட தாக்கம் இல்லாம தான் இப்படி பொண்ணுங்க கிட்ட இருந்து தள்ளியே இருக்கிறியா?” என்று சத்யதேவ் வினவ,
“பொண்ணுங்கனு இல்லை.. பொதுவாவே உங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாரையும் என்னை நெருங்க விடுறது இல்லை.. சொந்தங்கள் கத்துக் கொடுத்த பாடம்”
“ஓ” என்றவன், “உன் கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுங்க கிட்ட எத்தனை முறை பேசி இருப்ப?” என்று கேட்டான்.
அவன் அலட்சியமாக தோள்களை குலுக்க,
சத்யதேவ், “இதைத் தான் சொல்றேன்.. பொண்ணுங்க கிட்ட இருந்து மொத்தமா விலகி இருக்கிறனு” என்றான்.
“விலகி இல்லை.. காரணம் இல்லாம பொண்ணுங்க கிட்ட பேசுறது எனக்கு பிடிக்காது என்றதோடு எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை.. அவ்ளோ தான்”
“அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு சரியான காரணத்தைச் சொல்லு”
“எனக்கு கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லை”
“அதான் ஏன்?”
“இது என்னடா கேள்வி!”
“ஒரு விஷயத்தை வேண்டாம்னு சொல்லும் போது, ஏதாவது காரணம் இருக்கும் தானே! அந்த காரணத்தைத் தான் கேட்கிறேன்”
“உனக்கு ஏன் கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இருக்குது?”
“எனக்கு ஒரு சோல்மேட் வேணும்னு நினைக்கிறேன்.. என் லைஃபை அவ கூட ஷேர் செய்துக்கணும்னு விரும்புறேன்”
“உனக்கு வேணும்னு தோணுறது எனக்கு வேணாம்னு தோணுது.. தேவை இல்லைனு தோணுது.. அவ்ளோ தான்” என்றவன், “எனக்கு இப்படி இருக்கத் தான் பிடித்து இருக்குது.. யாரும் என் சுதந்திரத்தில் தலையிடுறத்தில் எனக்கு விருப்பம் இல்லை” என்றான்.