சத்யதேவ், “அப்பா அம்மாக்கு சுதந்திரம் கொடுக்கலையா? இல்லை அம்மா தான் அப்பாவோட சுதந்திரத்தில் தலையிட்டு இருக்காங்களா?” என்று கேட்க,
“ப்ச்.. உனக்குப் புரியாது.. விடு” என்றான்.
“முதல்ல நீ சொல்லு.. அப்புறம் புரியுதா இல்லையானு பார்க்கலாம்”
“ஓகே.. ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்றேன்.. ஒரு கல்யாண பேச்சை பேச.. அதுவும் என்னோடது கூட இல்லை.. உன்னோட கல்யாணப் பேச்சை பேசவே நான் இரண்டு மணி நேரம் முன்னதா வீட்டுக்கு வர வேண்டியதா இருக்குது.. பிள்ளையார் சுழிக்கே இந்த நிலை! இதில் கல்யாணம் செய்தா!!” என்று உதட்டை அலட்சியமாக வளைத்து உச்சு கொட்டினான்.
“அப்போ என்னை ஏன் கல்யாணம் செய்துக்க சொல்ற?”
லேசாக உதட்டை வளைத்து மென்னகைத்தவன், “ஏன்னா உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இருக்குது” என்றான்.
பின், “நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா தான் நீயும் கல்யாணம் செய்துப்பனு சொல்லி என்னை கார்னர் செய்யலாம்னு நினைக்காத.. அப்புறம் நிஜமாவே அம்மா சொல்றது தான் நடக்கும்.. அதான்.. கடைசி வரை நீ சிங்கிள் தான்” என்றான்.
சத்யதேவ் அவனை முறைக்க,
‘உன்னை எனக்கு தெரியாது!’ என்பது போல் பார்த்தவனோ அலட்டிக் கொள்ளாமல் அவனது முறைப்பை எதிர்கொண்டான்.
இருவரின் முன்பும் தண்ணீர் குவளைகள் நீட்டப்பட, இருவரும் திரும்பி பார்த்தனர்.
“இவ்ளோ நேரம் நீங்க பேசியதை கேட்ட எனக்கே தொண்டை வறண்டு போச்சு.. அதான்” என்ற மீனாட்சியை சத்யதேவ் முறைக்க, ஜெயதேவ் உதட்டோர சின்ன கீற்றுடன் தண்ணீர் குவளையை எடுத்து நீரை அருந்தினான். சற்றே சூழ்நிலையை சகஜமாக்கவே தண்ணீரை கொடுத்து அப்படி பேசினார்.
மீனாட்சி சத்யதேவைப் பார்த்து, “தண்ணி குடிச்சிட்டு தெம்பா கண்டின்யு” என்றார்.
அவரை முறைத்தாலும் உண்மையில் தொண்டை சற்றே வறண்டு போய் இருக்கவும் குவளையை எடுத்துக் கொண்டான்.
ஒரே மூச்சில் நீரை அருந்திய சத்யதேவ், “ஸோ உனக்கு நேரமின்மை தான் பிரச்சனை.. நேரம் கிடைத்தால் ஒரு பொண்ணை காதலிக்க நீ தயார்.. சரியா?” என்று கிடுக்கிபிடி போட முயற்சிக்க,
அவனோ, “எனெர்ஜி வேஸ்ட் பண்ணாம நாளைக்கு பொண்ணு பார்க்க ரெடியாகு” என்றுவிட்டு உணவறை நோக்கிச் செல்ல,
“ஒரு முடிவை சொல்லிட்டு போ.. இல்லைனா நான்..” என்றவனின் பேச்சை இடையிட்ட ஜெயதேவ்,
“பொண்ணு பார்க்க வரதா நான் சொல்லிட்டேன்.. விசாலாட்சி அத்தையும் பொண்ணு வீட்டில் சொல்லிட்டாங்க.. அப்புறம் உன் இஷ்டம்” என்றான்.
“அராஜகம் செய்றடா”
“உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கிற கல்யாணத்தை தானே உனக்கு செய்து வைக்க முயற்சி செய்றேன்!”
“என்னை கேட்டுட்டு செய்து இருக்கணும்”
‘திரும்ப முதல்ல இருந்தா!’ என்பது போல் பார்த்து, “கடந்த பத்து வருஷத்துக்கும் சேர்த்து வச்சு இன்னைக்கு ஒரே நாளில் பேச வச்சிட்ட” என்றவன், “நீயே விசாலாட்சி அத்தை கிட்ட பேசிக்கோ” என்று முடித்தான்.
பின் உணவுண்ண அமர்ந்தபடி, “சாப்பிட வாங்க” என்று இருவரையும் அழைத்தான்.
அபூர்வமாகத் தான் இரவு உணவை பெரிய மகன் வீட்டில் உட்கொள்வான் என்பதால் மீனாட்சி வேகமாக சென்று பரிமாற ஆரம்பித்தார்.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட சத்யதேவ், “நான் சாப்டுட்டேன்” என்றுவிட்டு தனது அறையை நோக்கிச் செல்ல,
“ஓவரா செய்யாத.. எப்படியும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட.. ஒழுங்கா வந்து சாப்பிடு.. இல்லை நடு ராத்திரி திருட்டு பூனை மாதிரி கிச்சனில் பாத்திரத்தை உருட்டிட்டு இருப்ப” என்றான்.
மீனாட்சியும், “என்னைக்காவது தான் மூணு பேரும் சேர்ந்து சாப்பிடுறோம்.. வாடா” என்றார்.
அப்பொழுதும் முகத்தை உர்ரென்று வைத்தபடி தான் அமர்ந்தான்.
“விசாலாட்சி அத்தை நாளைக்கே நாள் நல்லா இருப்பதாக சொல்லி கேட்கவும், சரினு சொல்லிட்டாலும், பொண்ணு உனக்கு பிடித்தால் மட்டும் தான் ப்ரோசீட் செய்வோம்னு தெளிவா சொல்லிட்டேன்டா”
“நான் அதுக்கா இப்படி இருக்கிறேன்?”
“நாளைக்கு இப்படியே போய் நின்னு, பொண்ணே உன்னை பிடிக்கலைனு சொல்ல வைக்கப் போறியா?”
சத்யதேவ் முறைக்க, ஜெயதேவ் உணவை உண்ண ஆரம்பித்தபடி, “அந்த ராங்கி பட்டாசு என்னைப் பத்தி என்ன சொன்னா?” என்று பேச்சை மாற்றினான்.
சட்டென்று சத்யதேவிற்கு உணவு தொண்டையில் சிக்கி புரை ஏறியது.
“பார்த்துடா” என்ற மீனாட்சி தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.
நீரை அருந்தி தொண்டையை சரி செய்தவன் ஜெயதேவின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தான்.
அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமல், “ஏதாவது ஒரு ரியக்சனை முகத்தில் காட்டுடா” என்றான்.
ஜெயதேவ் அமைதியாக பார்க்க,
சத்யதேவ், ‘பேக்(back) டு சைலென்ட் மோட்.. என்னை பொண்ணு பார்க்க சரி சொல்ல வைக்க மட்டும் பக்கம் பக்கமா பேசினான்!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.
அடுத்து ஜெயதேவின் பார்வை அழுத்தத்துடன் அவன் மீது பதியவும்,
‘ஆரம்பிச்சுட்டான்!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் ஆத்மிகா பேசியதை அப்படியே கூறிவிட்டான்.
ஜெயதேவ் எந்தவித எதிர்வினையுமின்றி உணவை உண்டு முடிப்பதில் கவனமாக இருக்க, இவன் தான், “டேய்!” என்றான்.
அதற்கும், ‘என்ன?’ என்ற பார்வை மட்டுமே அவனிடம்.
“ஏதாவது சொல்லு”
“என்ன சொல்ல?”
சத்யதேவ் முறைக்கவும்,
“இன்னைக்கு ரொம்ப தான்டா முறைக்கிற” என்றான்.
“அதை கொஞ்சமாச்சும் நீ மதிக்கிறியா?”
“தேவை இல்லாததை எல்லாம் நான் மதிக்கிறது இல்லை” என்றதும் சத்யதேவ் மேசையில் இருந்த ஆப்பிளை தூக்கி அவன் மீது எறிந்தான்.
“டேய்!” என்றபடி அதை பிடித்தவன் அடுத்த நொடியே அதே சத்யதேவ் மீது திருப்பி எறிந்து இருந்தான்.
அதை எதிர்பார்க்காத சத்யதேவ் பழத்தை பிடிக்க தவறிட அது அவனது தோள்பட்டையில் பட்டு கீழே விழுந்தது.
உடனே சத்யதேவ் ஒரு மாதுளையை எறிய, அதில் இருந்து தப்பித்த ஜெயதேவ் வாழை பழத்தை எறிந்தான்.
“நிறுத்துங்கடா” என்று அதட்டிய மீனாட்சி இருவரின் தட்டையும் பார்த்துவிட்டு, “சாப்டாச்சு தானே! அமைதியா போய் படுங்க” என்றார்.
கண்ணால் பேசிய சகோதர்கர்கள் இருவரும் மீனாட்சி சுதாரிக்கும் முன், உதிர்த்து வைத்திருந்த திராட்சை பழங்களை கை நிறைய அள்ளி, நசுக்கி, அவர் மீது போட்டு விட்டு ஓடி விட்டனர்.
“டேய்!” என்று கத்தியவருக்கு சகோதரர்களின் சிரிப்பு சத்தம் தான் கேட்டது.
மகன்களின் சேட்டையில் மென்னகைத்தவர் உணவு பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்தார்.
‘அந்த பொண்ணைப் பற்றி பேசினாலே இவன் தன்னோட கூட்டை விட்டு வெளியே வந்திடுறான்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவர்,
‘ப்ச் இந்த சத்யா பேரை சொல்லாம வம்பு செய்றான்.. நாளைக்கு கண்டிப்பா கேட்கணும்’ என்று நினைத்தபடி படுத்துக் கொண்டார்.
இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்த ஆத்மிகா தனது அறையினுள் சென்ற போது கண்டது சோகமாக அமர்ந்து இருந்த சம்ருதிகாவைத் தான்.
“ஓய் சமி! என்னாச்சு? இன்னைக்கு நீ கோவிலுக்கு போனப்ப அந்த வினய் வம்பு எதுவும் செய்யலையா? அதான் சோகமா உட்கார்ந்து இருக்கிறியா?” என்று கிண்டல் செய்ய,
சம்ருதிகா தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தாள்.
“கேட்ச்” என்றபடி அதைப் பிடித்த ஆத்மிகா தமக்கை மீது திருப்பி எறிந்து இருந்தாள்.
அதை தட்டி விட்ட சம்ருதிகா, “ப்ச்” என்று சலித்தபடி திரும்பிக் கொண்டாள்.
தமக்கை அருகே சென்று தோளில் கை வைத்தவள், “என்னாச்சு?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“நாளைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்க” என்று அவள் சோகமும் பயமுமாக கூற,
சம்ருதிகா முறைக்க, இவளோ அதை கண்டு கொள்ளாமல், “மாப்பிள்ளை பெயர் என்ன? என்ன வயசு? எங்க வேலை பார்க்கிறார்? கூட பிறந்தவங்க எத்தனை பேர்?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“எனக்கு பயமா இருக்குது ஆத்மி”
“எதுக்கு பயம்?”
“மாப்பிள்ளை பெயர் சத்யதேவ்”
சட்டென்று கண்களை விரித்த ஆத்மிகா, “அவன் பெயர் மட்டும் தான் சத்யதேவா இருக்கனுமா? அப்படியே இருந்தாலும் இப்ப என்ன? எதுக்கு பயம்?” என்று கேட்டாள்.
“உன் மொபைல் பார்ட்டியே தான்.. மாப்பிள்ளை ட்வின்ஸ்னு அப்பா சொன்னார்”
“ஓ” என்றவள் சிறு யோசனையுடன், “ஜெயதேவ் தானே அண்ணன்! அண்ணனுக்கு பார்க்காம தம்பிக்கு ஏன் பார்க்கிறாங்க?” என்று கேட்டாள்.
“ஜெயதேவிற்கு இப்போ கல்யாணம் செய்றதில் விருப்பம் இல்லையாம்.. அவர் சொந்தமா ரெஸ்டாரென்ட் ரன் பண்றார் போல.. அதை விரிவு படுத்துற முயற்சியில் இருக்கிறாராம் அதனால் முதல்ல தம்பிக்கு பார்க்க சொல்லிட்டாராம்.. சத்யதேவ் **** கம்பெனியில் ப்ராஜெக்ட் லீடரா இருக்கார்”
“ஓ”
“விசா அத்தைக்கு ரொம்ப தெரிந்த பேமிலி போல.. அவங்க தான் சொல்லி இருக்காங்க.. அப்பா கிட்டதிட்ட இந்த அலையன்ஸை முடிக்கிற மாதிரி பேசுறாங்க”
“உனக்கு விருப்பம் இல்லைனா தெளிவா சொல்லிடு.. அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க”
‘அதானே என் பயமே!’ என்று நினைத்தவள் அமைதியாக இருக்க, அவளது முகத்தை பற்றி தன்னை நோக்கச் செய்த ஆத்மிகா, “சரி என் கிட்ட சொல்லு நான் அப்பா கிட்ட பேசுறேன்.. ஆனா எடுத்ததும் ஏன் நெகடிவ்வா யோசிக்கிற? சத்யதேவ் நல்ல டைப்பா தான் தெரியுது” என்று சமாதானம் செய்து உணவுண்ண அழைத்துச் சென்றாள்.