அடுத்த நாள் காலையில் கோர்த்த கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்று உடம்பை நெழித்து சோம்பல் முறித்தபடி தனது அறையை விட்டு வெளியே வந்த சத்யதேவ், உணவகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஜெயதேவைப் பார்த்து, “குட் மார்னிங்டா” என்றான்.
“குட் மார்னிங்.. ஹவ் அ லவ்லி டே”
மென்னகையுடன், “சேம் டு யூ” என்றவன், “ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்டா” என்றான்.
‘என்ன?’ என்பது போல் அவன் பார்க்க,
இவன் முன் தினம் அலுவலகத்தில் ரேஷ்மியிடம் பேசியதைப் பற்றிக் கூறினான்.
“இதைத் தான் முதல்லேயே சொன்னேன்” என்றவன் சிறு கிண்டல் பார்வையுடன், “கல்யாண பேச்சை ஆரம்பிக்கவும் வீரம் வந்துடுச்சே” என்றான்.
“ரேஷ்மி கிட்ட நான் பேசினப்ப கல்யாண பேச்சே இல்லை” என்று இவனும் நக்கல் பார்வையுடன் கூறினான்.
“உனக்கு தெரியாது ஆனா நான் விசாலாட்சி அத்தை கிட்ட பேசிட்டு இருந்தேனே!” என்று அவன் புருவம் ஏற்றி இறக்கினான்.
“விட்டா அந்த சம்ருதிகாவோட ராசினு சொல்லுவ போல!”
“இது என்னடா பேச்சு!” என்று அதட்டிய ஜெயதேவ், “நான் சும்மா உன்னை கிண்டல் செய்ய தான் அப்படிச் சொன்னேன்.. அதுவும் கல்யாண பேச்சுனு தான் சொன்னேனே தவிர, அந்த பொண்ணை சொல்லலை” என்றான்.
“நானும் சும்மா தான்டா சொன்னேன்”
“சிலது விளையாட்டுக்குக் கூட சொல்லக் கூடாது.. நமக்கே தெரியாம நம்ம ஆழ் மனசில் அந்த எண்ணம் பதியலாம்.. நல்லது நடக்கும் போது மனசு ஒன்னும் நினைக்காது ஆனா எதிர்மறையான விஷயம் நடக்கும் போது! எதேர்ச்சையா நடக்கிற விஷயத்தில் கூட நம்மையும் அறியாம நம்ம மனசு அந்த கோணத்தில் யோசிக்க ஆரம்பிக்கும்.. அது ரொம்ப தப்பு.. நல்லதோ கேட்டதோ! எந்த ஒரு விஷயமா இருந்தாலும், நம்மோட செயலால், சிந்தனையால் மட்டும் தான் அது நமக்கு நடக்குமே தவிர இன்னொருத்தரோட ராசியால் இல்லை”
“புரியுது.. இனி இப்படி பேசலை”
“ஹ்ம்ம்” என்றவன், “இன்னைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு வீட்டுக்கு வந்திடு.. அஞ்சு மணிக்கு பொண்ணு வீட்டில் இருக்கிற மாதிரி பார்த்துக்கோ” என்றான்.
“பார்த்துக்கோனா! நீ வரலையா?” என்று அதிர்வுடன் கேட்டான்.
“நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க.. விசாலாட்சி அத்தை கிட்ட அப்படித் தான் சொல்லி இருக்கிறேன்.. அத்தையும் அங்க இருப்பாங்க.. மாமா ஒரு விசேஷத்துக்கு சேலம் போய் இருக்காங்க”
“என்ன விளையாடுறியா?”
“டேய் சொன்னா கேளு.. சும்மா சும்மா பக்கம் பக்கமா பேச வைக்காத”
அவனை முறைத்த சத்யதேவ், “நீயும் வர.. டாட்” என்றான்.
“டேய்.. நல்ல விஷயத்துக்கு மூணு பேரா போகக் கூடாது”
அவனை மேலும் கீழும் பார்த்த சத்யதேவ், “எப்போ இருந்து இதை எல்லாம் நீ பாலோ செய்ற?” என்று சிறு நக்கலுடன் கேட்டான்.
“இப்ப இருந்து தான்”
சுற்றி முற்றி தேடியபடி, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஜெயதேவ் ஜெயதேவ்னு ஒரு மானஸ்தன் இருந்தான்.. நீ பார்த்தியா?” என்று கேட்டான்.
ஜெயதேவ் முறைக்கவும்,
சத்யதேவ், “பின்ன என்னடா! நீ தானே ராசி பத்தி பேசக்கூடாதுனு லெக்சர் கொடுத்த!” என்றான்.
“அது வேற இது வேற”
“என்ன வேற வேற!” என்றவன், “முன்னாடி இந்த மாதிரி அப்பா பார்த்தா, மூட நம்பிக்கை அது இதுனு எவ்ளோ பேசுவ!” என்றான்.
ஒரு நொடி மௌனித்தவன் அமைதியான குரலில், “என்னைக் கேட்டால், இப்பவும் இதை எல்லாம் மூட நம்பிக்கைனு தான் சொல்லுவேன்.. ஆனா அம்மா!” என்று மீண்டும் ஒரு நொடி மௌனித்தவன், “அவங்களுக்காக சிலதை இப்போ பாலோ செய்யத் தோணுது.. ஒத்தப் படையில் போகக் கூடாதுனு அப்பா சொல்லுவாங்கடா..” என்றவனின் குரல் முடிக்கும் போது அவனையும் மீறி சற்றே கரகரத்து விட, சத்யதேவும் தந்தையின் நினைவில் மௌனமானான்.
சகோதரனின் மௌனத்தில் தன்னையே நிந்தித்தபடி சுதாரித்தவன் வரவழைத்த அலட்சிய குரலில், “மோர்ஓவர் அங்க வந்து நான் என்ன செய்யப் போறேன்? எனக்கா பொண்ணு பார்க்குது?” என்றான்.
ஜெயதேவின் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட சத்யதேவ் அவன் கேட்ட கேள்வியை அவனுக்கே திருப்ப நினைத்து, “பேசாம பொண்ணோட தங்கச்சிய உனக்கு பார்த்திடுவோமா!” என்று கேட்டு கண் சிமிட்ட, ஜெயதேவ் உண்மையாகவே முறைத்தான்.
சத்யதேவோ விடாமல், “ஆனா ரெண்டு விஷயம் இடிக்குது! ஒன்னு, அந்த பொண்ணு படிச்சிட்டு தான் இருக்குது.. இன்னொன்னு, நீ தான் அண்ணா ஸோ உனக்கு தங்கச்சியை பேசினா சரி வருமா!” என்று தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தான்.
பின், “நாம ட்வின்ஸ் தானே, ஸோ உனக்கு தங்கையை பார்ப்பதில் பிரச்சனை இல்லை.. அண்ட் படிப்பு.. கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கலாமே! ஸோ அதுவும் பிரச்சனை இல்லை.. என்னடா சொல்ற?” என்ற நொடி சிறு வெண்கல பூஜாடி அவனை நோக்கி பறந்து வந்தது.
கடைசி வினாடியில் நகர்ந்து தப்பித்தவன் உண்மையான அதிர்ச்சியுடன், “அட கொலைகார பாவி!” என்றான்.
அவனோ அலட்டிக்கொள்ளாமல், “இன்னைக்காவது ஒழுங்கா குளிச்சுட்டு, பொண்ணை போய் பாரு” என்றுவிட்டு, “அம்மா” என்று குரல் கொடுத்தான்.
மீனாட்சி வரவும், “போயிட்டு வந்து போன் போடுங்க.. பார்த்துக்கோங்க.. நான் கிளம்புறேன்” என்றான்.
அவர், “சரிப்பா” என்றதும் சத்யதேவிடம் பார்வையால் விடை பெற்று கிளம்பிச் சென்றான்.
அவன் கிளம்பியதும் சத்யதேவ், “உங்க கிட்ட அவன் வரலைன்னு எப்போ சொன்னான்?” என்று கேட்டான்.
“இன்னைக்கு காலையில் எழுந்ததும் சொன்னான்”
“நீங்க ஒன்னும் சொல்லலையா?”
“விசாலாட்சியை நம்ம கூட வரச் சொல்லி நாலு பேரா போகலாம்னு சொன்னேன்.. ‘பொண்ணு வீட்டில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும்.. அதான் அத்தை அங்கே இருக்கிறதா சொல்லி இருக்காங்க.. அதுவும் பொண்ணோட அப்பா அவங்களுக்கு தம்பி.. அவங்க பேச்சில் இருந்தே கொஞ்சம் க்ளோஸ்னு தெரிந்தது.. ஸோ அவங்களை கூப்பிட்டு சங்கடத்தில் தள்ளாதீங்க’ னு சொல்லிட்டான்”
“ப்ச்.. இன்னும் இந்த கஸ்டம்ஸ் எல்லாம் ஏன்மா?”
“அப்பா பழக்கி விட்டதுடா.. மாத்திக்க முடியலை” என்றவரின் கண்கள் லேசாக கலங்கியது.
ஜெயதேவின் இந்த முடிவிற்கான காரணத்தை அந்த நொடி முழுமையாக புரிந்து கொண்டவன் எப்பொழுதும் போல் இப்பொழுதும் தமையனை நினைத்து ஆச்சரியமும் பெருமையும் கொண்டான்.
அன்னையின் தோளை ஆதரவாக பற்றியவன் சில நொடிகள் கழித்து, “அவன் கிளம்புறதுக்கு முன்னாடி என்ன நடந்தது தெரியுமா! என் மண்டையை பொளந்து இருப்பான்.. ஜஸ்ட் மிஸ் ம்மா” என்றான்.
மகனின் முயற்சியை புரிந்தவராக கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவர் வரவழைத்த மென்னகையுடன், “பார்த்தேன்” என்றார்.
பின் சமையலறை நோக்கி சென்றபடி, “நேத்து தானே அவ்ளோ பேசின! இன்னைக்கே ஏன் திரும்ப ஆரம்பிச்ச?” என்று கேட்டார்.
அவரை பின் தொடர்ந்தபடி, “இனி அவனை விடுறதா இல்லை.. டெய்லி ஏதாவது ஒரு டாபிக் எடுத்து கல்யாணத்தை லின்க் செய்து பேசப் போறேன்” என்றவன், “டாபிக் கூட தேட வேண்டாம், எப்படியும் என் கல்யாணத்தை பத்தி பேசுறப்ப அவனே டாபிக் எடுத்துக் கொடுப்பான்” என்றபடி கண்ணடித்தான்.
சற்றே இயல்பிற்கு திரும்பி இருந்தவர் அவன் கையில் காபியை கொடுத்தபடி உண்மையான மென்னகையுடன், “எதுக்கும் ஹெல்மெட் போட்டுக்கோ” என்றார்.
“ஹ்ம்ம்” என்றவர், “சரி போய் கிளம்பு” என்றவிட்டு சமையல் வேலையை தொடர்ந்தார்.
“உங்களுக்கு எப்படிப்பட்ட மருமகள் வேணும்?”
“மருமகள்கள்” என்று அவர் திருத்த,
“ஓகே ஓகே.. உங்களுக்கு எப்படிப்பட்ட மருமகள்கள் வேணும்?” என்று அழுத்தம் திருத்தமாக வினவினான்.
“உங்க கூட சந்தோஷமா குடும்பம் நடத்தனும்.. கடைசி வரை நீங்க ரெண்டு பேரும் இதே ஒற்றுமையுடன் இருக்கணும்” என்றவர், “உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டார்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க”
“பெட்டர் லேட் தன்(than) நெவர்”
“பார்டா! தொர இங்குலீஷ்லாம் பேசுது”
“உனக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்ததே நான் தான்டா.. நான்..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“அந்த காலத்து கான்வென்ட்.. அதானே!”
“அதே தான்” என்றவர், “சரி சொல்லு.. உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று திரும்ப கேட்டார்.
“உங்களையும் ஜெயாவையும் பிரிச்சு பார்க்காம தன்னோட சொந்தமா அதாவது, அம்மாவா, சகோதரனா நினைக்கணும்”
“அப்போ பொண்ணு அழகா இருக்கணும்னு இல்லை” என்று அவனை சீண்ட,
“உங்களை மாதிரி நல்ல குணமா இருந்தா போதும்” என்றவன் குறும்புடன், “அதாவது உங்களை மாதிரியே அழகா இல்லைனாலும் குணமா இருந்தா போதும்னு சொல்றேன்” என்று கிண்டல் செய்தான்.
ஆனால் அவரோ அசராமல், “ஸோ என்னை மாதிரி அழகா அதாவது என் அளவுக்கு அழகா இல்லைனாலும் பரவா இல்லை, என்னை மாதிரி நல்ல குணமா இருக்கணும்.. ஸோ, குணம் தான் முக்கியம்னு சொல்ற!” என்றார்.
சிரித்தபடி, “எப்படி ட்விஸ்ட் செய்றீங்க! நான் சொன்னது நீங்க அழகா இல்லைனாலும் குணமா இருக்கிறீங்க.. அதே மாதிரியே பொண்ணும் இருந்தா ஓகே தான்” என்று கூறி கண் சிமிட்டினான்.
“கண்ணாடியில் உன் முகத்தை பார்த்துட்டு பேசுடா”
“நாங்க அப்பா மாதிரி”
“அப்படி யாரும் சொன்னது இல்லையே!” என்றவர், “போடா.. போய் கிளம்புற வேலையைப் பார்.. அப்புறம் முக்கியமான விஷயம்.. ஜெயா சொன்ன மாதிரி இன்னைக்காவது நல்ல தேச்சி குளி” என்றார்.
“அவன் கூட சேர்ந்துட்டு ரொம்ப தான் கிண்டல் செய்றீங்க.. எனக்குனு ஒருத்தி வந்ததும், அவ கூட கூட்டு சேர்ந்துட்டு உங்களை கவனிச்சுக்கிறேன்”
“பார்க்கலாம்.. பார்க்கலாம்”
“பார்க்கத் தான் போறீங்க” என்றுவிட்டு சென்றான்.
அதே நேரத்தில் அறையில் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஆத்மிகாவிடம் சம்ருதிகா, “காலேஜ் முடிந்ததும் எங்கேயும் போகாம சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு ஆத்மி” என்றாள்.
கிளம்புவதை நிறுத்தி இடுப்பில் கை வைத்தபடி அவளை முறைத்த ஆத்மிகா, “எத்தனை தடவ தான் சொல்லுவ? இன்னொரு முறை சொன்ன! மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் கிளம்பினதுக்கு அப்புறம் தான் வருவேன்” என்று மிரட்டினாள்.
“நீ வேற ஏன்டி!”
“நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை.. ஜஸ்ட் பொண்ணு பார்க்க வராங்க.. அவ்ளோ தான்” என்றவள் குறும்பு புன்னகையுடன், “அஃபிஷியலா உன்னை சைட் அடிக்க ஒருத்தன் வரான்னு நினைச்சுக்கோ இந்த டென்ஷன் பறந்து போய்டும்” என்று கூறி கண்ணடித்தாள்.
“இப்படி எல்லாம் யோசிக்க உன்னால் தான் முடியும்” என்றவளின் இதழ்கள் சிறு புன்னகையை உதிர்த்து இருந்தது.
“இதே ஸ்மைலோட இரு.. நான் காலேஜ் போயிட்டு வரேன்” என்றுவிட்டு கிளம்பினாள்.
மதியம் மூன்று மணி அளவில் ஜெயதேவை அழைத்த சத்யதேவ் அவன் அழைப்பை எடுத்ததும், “ஒரு பிரச்சனை ஜெயா” என்றான்.
“என்னாச்சு?”
“இன்னைக்கு அஞ்சு மணிக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குதுடா.. அக்சுவளி நாளைக்கு தான் இருந்தது ஆனா இன்னைக்கே வச்சுக்கலாமானு கேட்டு மெயில் போட்டு இருக்காங்கடா”
“வச்சுக்கலாமானு தானே கேட்டு இருக்காங்க!”
“அது சும்மா பார்மாலிட்டிக்கு கேட்கிறது.. மீட்டிங் கொஞ்சம் பெரிய தலைகளோட.. மறுக்கிறது சரியா வராது”
“பொண்ணு வீட்டில் ஏழு மணிக்கு வரதா சொல்லவா?”
“இல்லைடா.. மீட்டிங்கில் நான் ப்ரசென்டேஷன் கொடுக்கணும்.. மீட்டிங் டூ ஹவர்ஸ் கூட போகும்.. இது என் கரியரில் கொஞ்சம் முக்கியமான மீட்டிங்”
“அப்போ இன்னொரு நாள் வரதா சொல்லிடுறேன்”
“நாம தான் முதல் முறையா அந்த பொண்ணை பொண்ணு பார்க்க போறோமா?”
“என்னடா கேட்கிற?”
“இல்லடா இதுக்கு முன்னாடி வேற யாரும் பொண்ணு பார்த்துட்டு போய் இருக்காங்களா?”
“அது எப்படிடா தெரியும்?”
“அது சரி தான்.. இருந்தாலும் விசாலாட்சி அத்தை பேசியதை கொஞ்சம் யோசிச்சு பாரேன்”
“எதுக்குடா?”
“நாம தான் முதல் முறையா பொண்ணு பார்க்க போறோம்னா, அதை கேன்செல் செய்றப்ப அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமேனு யோசித்தேன்”
விசாலாட்சி பேசியதை யோசித்துப் பார்த்த ஜெயதேவ், “அத்தை பேச்சில் இருந்து நாம தான் பஸ்ட்ங்கிற மாதிரி தான் தோணுது.. ஆனா நம்மால் எதுவும் செய்ய முடியாதே.. நீ பீல் செய்யாத.. நாம ஒன்னும் வரலைனு சொல்லப் போறது இல்லையே! ஜஸ்ட் இன்னொரு நாள் வரதா சொல்லப் போறோம்” என்றான்.
“பேசாம அம்மாவை மட்டும் போய் பார்த்துட்டு வர சொல்லுவோமா?”
“அம்மா தனியா! சான்சே இல்லை.. அதுவும் அப்பா சொல்ற ஒத்தப்படை வேற இடிக்குது”
“ஹ்ம்ம்” என்றபடி யோசித்தவன் சட்டென்று தோன்றிய யோசனையில் உற்சாக குரலில், “பேசாம நீ அம்மா கூட போயிட்டு வா.. உன்னை பார்த்தா என்னை பார்த்த மாதிரி தானே!” என்றான்.
“டேய்!” என்று கத்தியவனின் தொனி ‘என்னடா விளையாடுறியா!’ என்றது.
“எஸ்.. இதான் சரி.. நீ போயிட்டு வா”
“நிஜமாவே மீட்டிங் இருக்குதா?” என்று ஜெயதேவ் சந்தேகமகா வினவ,
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? பொண்ணு பார்க்க போறதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று சற்று கோபத்துடன் கூறிய சத்யதேவ், “நான் என்ன உன்னை மாதிரி கல்யாணம் வேண்டாம்னா சொல்லிட்டு இருக்கிறேன்!” என்று தமையனுக்கு கொட்டு வைத்தான்.
அவனோ, “அதை தான் சொல்றேன்.. நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதால் இப்படி குளறுபடி செய்து, என்னை கோர்த்து விடப் பார்க்கிறியா?” என்று கேட்டான்.
‘இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!’ என்று மனதினுள் நினைத்த சத்யதேவ், “நடக்கிற காரியத்தைப் பேசுடா.. உன்னை கோர்த்து விட்டுட்டு நான் உசுரோட இருக்க முடியுமா என்ன!” என்றான்.
பின், “உன்னை மாப்பிள்ளையா போகச் சொல்லலையே! மாப்பிள்ளையோட அண்ணனா தானே போகச் சொல்றேன்! பொண்ணு வீட்டிலும் சங்கடம் ஏற்படாது.. அப்பா சொல்ற ஒத்தப்படையும் இடிக்காது.. அவங்களும் மாப்பிள்ளையை ஐ மீன், உன் உருவில் என்னை பார்த்த மாதிரியும் ஆச்சு” என்றான்.
ஜெயதேவ் யோசனையுடன், “எனக்கு என்னவோ இது சரியா படலை” என்றான்.
“அப்பா இருந்து இருந்தா இந்த சிச்சுவேஷனில் அப்பாவும் அம்மாவும் மட்டும் தானே போய் இருப்பாங்க.. அப்பா தவறியதில் இருந்து நீ தானே எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்க!”
“டேய்!” என்றவனின் தொனி இந்த முறை ‘ஏன்டா இப்படி எல்லாம் பேசுற!’ என்றது.
“நான் ப்ரசென்டேஷனுக்கு ரெடி செய்யணும்.. போயிட்டு வந்து மெசேஜ் அனுப்பு.. மீட்டிங் முடிந்ததும் நானே உன்னை கூப்பிடுறேன்.. இப்போ பை” என்று அவசரமாக பேசி அழைப்பைத் துண்டித்த சத்யதேவின் மனமோ,
‘அவன் சொன்னபடி அவனை இந்த கல்யாணத்தில் கோர்த்து விட ஏதாவது வழி இருக்கா! என்ன செய்யலாம்!’ என்று யோசிக்க ஆரம்பித்தது.
யாருக்கு யார் என்று யார் அறிவாரோ? இறைவனின் திருவிளையாடலை யார் தான் அறிவார்? – யாருக்கு யாருடன் திருமணம் முடிவாகிறது! இறுதியில் யாருக்கு யாருடன் திருமணம் நடைபெறுகிறது! என்று பொறுத்திருந்து பார்க்கலாம்……..