மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஆத்மிகா, அன்னை, அத்தை மற்றும் தந்தை சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு, ‘பொண்ணு பார்க்கிறதுக்கு இவ்ளோ அக்கபோரா!’ என்றும், ‘அது என்ன பொண்ணு பார்க்கிற சடங்கு! ஏன் மாப்பிள்ளை பார்க்கிறதா இருக்கக் கூடாதா! அந்த காலத்தில் எல்லாம் பொண்ணு தானே சுயம்வரத்தில் மாப்பிள்ளையை தெரிந்தெடுத்தா! எவன்டா அதை மாத்தியது!’ என்றும் நினைத்துக் கொண்டாள்.
அப்பொழுது அங்கே வந்த பூமணி, “சம்ருதி கிளம்பிட்டாளானு பார்த்துட்டு நீயும் சீக்கிரம் கிளம்பு.. இன்னும் அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திடுவாங்க” என்று விரட்டினார்.
ஆத்மிகா புன்னகையுடன், “வாங்க அத்தை.. மாமா எப்படி இருக்கிறாங்க? அந்த நெட்ட கொக்கு, குட்ட கத்திரிக்கா, டார்லி எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.
விசாலாட்சி புன்னகையுடன், “எல்லோரும் நல்லா இருக்காங்க” என்று கூற,
பூமணியோ, “ஆத்மி! இப்படி பேசாதனு எத்தனை முறை சொல்றது! அப்புறம் போற இடத்திலும் இதே வாய் துடுக்கு தான் வரும்” என்று ஆரம்பிக்க,
“ஆரம்பிச்சிட்டியா!” என்ற விசாலாட்சி, “சீக்கிரம் கிளம்ப சொல்லிட்டு நீயே உன் பேச்சில் பிடிச்சு வச்சா எப்படி!” என்றார்.
“இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காத” என்று முறைப்புடன் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கூறியவர் மகளைப் பார்த்து, “சீக்கிரம் கிளம்பு” என்று முடித்தார்.
அதற்குள் பாலுடன் சித்ரா வர, அதை வாங்கி அருந்தியபடி கண்களால் விசாலாட்சியிடம் விடை பெற்று தனது அறைக்கு சென்றாள்.
உள்ளே சென்றதும் சீட்டிகை அடித்தபடி, “வாவ்.. செம அழகா இருக்க சமி.. மிஸ்டர் ப்ராமிஸ் இன்னைக்கு டோட்டல் பிளட்” என்றாள்.
பதற்றத்தின் உச்சத்தில் இருந்த சம்ருதிகாவோ இவளது கூற்றை கவனிக்கும் நிலையில் இல்லை.
தன் அருகே வந்த தங்கையின் கையை பற்றியபடி சிறு ஆசுவாச மூச்சை வெளியிட்டு, “வந்துட்டியா!” என்றாள்.
“காலையில் தானே சொல்லிட்டு போனேன்!” என்று ஆத்மிகா செல்லமாக முறைக்க,
அவளோ, “மாப்பிள்ளை வரலையாம்.. அவருக்கு பதில் அவரோட அண்ணா தான் வராராம்” என்று பதற்றம் நீங்காமல் கூறினாள்.
புருவம் சுருக்கிய ஆத்மிகா, “ஏனாம்?” என்று கேட்டாள்.
“அவருக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குதாம்.. மாப்பிள்ளையோட அண்ணா விசா அத்தை கிட்ட, வேற ஒரு நாள் பொண்ணு பார்க்கிற சடங்கை வச்சுக்கலாமா இல்லை அவரும் அவரோட அம்மாவும் வரட்டுமானு கேட்டு இருப்பார் போல.. முதல் முதல்ல பொண்ணு பார்க்க வர சடங்கை மாத்த வேணாம்னு அத்தையே வாங்கனு சொல்லிட்டாங்க”
“ஓ!” என்றவள், “அப்போ நீ ரிலாக்ஸ்டா இருக்கலாமே!” என்றாள்.
“இப்போ தான் ரொம்ப பயமா இருக்குது.. மாப்பிள்ளையோட அண்ணனை நினைத்து”
“லூசா நீ! அவனை நினைத்து நீ ஏன் பயப்படுற?”
“மரியாதை கொடுத்து பேசு ஆத்மி”
“அந்த மங்கூஸ் மண்டையனுக்கு இந்த மரியாதை போதும்” என்ற ஆத்மிகா குறும்பு புன்னகையுடன், “பார்டா! இப்பவே புகுந்த வீட்டு ஆட்களுக்கு வக்காலத்து!” என்று கிண்டல் செய்தாள்.
“என்னடி நீயும் அப்பா மாதிரி முடிவே செஞ்சுட்டியா?” என்று அதிர்வுடன் வினவினாள்.
“வேலவன் மாமாவோட க்ளோஸ் பிரெண்ட்.. நல்ல குடும்பம்.. நல்ல பையன்.. கை நிறைய சம்பளம்.. பார்க்கவும் நல்லா இருக்கார்.. உனக்கும் அவரை பிடிக்கும்னு தான் எனக்குத் தோணுது.. வேற என்ன வேணும்?”
“தெரியலை ஆத்மி.. என்னவோ பயமா இருக்குது” என்றவள், “அதுவும் மாப்பிள்ளையோட அண்ணா தான் வரார்னு சொன்னதில் இருந்து ஒரு மாதிரி இருக்குது.. முதல்ல இவரு வரலைனு தானே சொன்னாங்க! அதுவும் அவங்க ட்வின்ஸ்ங்கிறதால் இவரை பார்த்தா அவரை பார்த்த மாதிரினு வேற சொல்றாங்க.. ஏன் இப்படி மாத்தி வரணும்!” என்றாள்.
“ஹே லூஸு.. அவங்க ஒன்னும் மாத்தி வரலை.. ஜஸ்ட் நாம மாப்பிள்ளையை நேரில் பார்க்கணும்னு நினைப்போமேனு அப்படி சொல்லி இருப்பாங்க.. அதுவும் நமக்கு ஓகேயானு தானே கேட்டு இருக்காங்க..”
“நீ ஈஸியா சொல்ற.. ஆனா இதை கேட்டதில் இருந்து எனக்கு என்னவோ.. ப்ச்.. எப்படி சொல்ல! என்னவோ ஏதோ சரி இல்லாத பீல் கொடுக்குது.. நெஞ்சு பட படனு அடிச்சுக்குது.. இதுக்கு முன்னாடி இப்படி பீல் செய்ததே இல்லை” என்று பெரும் கவலையும் பயமுமாக கூறினாள்.
“தேவை இல்லாம மனசைப் போட்டு குழப்பிக்காத..” என்று ஆத்மிகா கூறி கொண்டு இருக்கும் போது உள்ளே வந்த விசாலாட்சி ஆத்மிகாவைப் பார்த்து,
“நீ இன்னும் கிளம்பலையா! உங்க அப்பன் ஆடப் போறான்” என்றார்.
“என்னய்யா பொண்ணு பார்க்க வாராங்க!” என்று அவள் விட்டேத்தியாக பதில் கூற,
அவரோ, “நீ மட்டும் படிப்பை முடித்து இருந்த, உன்னையும் சேர்த்து தான் பார்க்க வந்து இருப்பாங்க” என்றார்.
‘எது!’ என்று ஒரு நொடி அதிர்ந்தவள் பின் குறும்புடன், “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. செஃப் ரெடியானு கேளுங்க” என்று கூறியபடி கண் சிம்மிட்டினாள்.
இப்பொழுது ஒரு நொடி அதிர்வது விசாலாட்சி முறையாயிற்று. ‘அடி பாவி’ என்பது போல் பார்த்தவர் மென்னகையுடன், “வாலு..” என்றபடி அவளது காதை போலியாக திருகி, “ஒரு ஹோட்டலை நடத்துறவன் உனக்கு செஃப்பா!” என்றார்.
அவரது கையை விலக்கியபடி, “சமைக்கிறவங்க செஃப் தானே!” என்று புருவத்தை ஏற்றி இறக்கி கூறியவள், “தினமும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் ஐடெம் அவரே சோலோவா சமைப்பாரமே! அதுக்கு தான் எப்போதும் செம டிமான்ட் வேறயாம்!” என்றாள்.
கண்களை விரித்தவர், “உனக்கு எப்படி தெரியும்? இதைப் பத்தி மணி கிட்ட கூட நான் சொல்லலையே!” என்று கூற,
“அதான் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்!” என்று கெத்தாக கூறினாள்.
“இவளை கிளப்பி விட சொன்னா நீங்களும் கதை பேசிட்டு இருக்கிறீங்களே மச்சினி.. அங்கே அவர் கிளம்பிட்டாளானு கேட்டுட்டு இருக்கார்” என்றபடி சித்ரா வந்தார்.
“நோ டென்ஷன் சிட்டுக் குருவி.. மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வர இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்குது.. நான் அஞ்சே நிமிஷத்தில் கிளம்பிடுவேன்” என்ற ஆத்மிகா ஒரு சல்வாரை எடுத்துக் கொண்டு குளியல் அறையினுள் சென்றாள்.
விசாலாட்சி புன்னகையுடன், “இவ தான் சிட்டு குறிவியாட்டம் துறுதுறுனு இருக்கா” என்றார்.
புன்னகையுடன் அதை ஆமோதித்த சித்ரா பெரிய மகளிற்கு கையால் திருஷ்டி கழிப்பது போல் செய்து, “ரொம்ப அழகா இருக்கடா” என்றார்.
அதற்குள், “சித்ரா” என்று பூமணி அழைக்கவும், “நீங்க பார்த்துக்கோங்க மச்சினி” என்றுவிட்டு வேகமாக வெளியே சென்றார்.
சரியாக ஐந்து மணிக்கு ஜெயதேவ் அன்னையுடன் பூமணி வீட்டிற்கு வந்தான். அவனது மகிழுந்து நிறுத்தப்படும் சத்தத்தில் எட்டி பார்த்த பூமணி, “சித்ரா.. அக்கா.. அவங்க வந்துட்டாங்க” என்று குரல் கொடுத்தார்.
வண்டியை நிறுத்திவிட்டு ஜெயதேவ் அன்னையுடன் வர,
பூமணி புன்னகையுடன், “வாங்க.. வாங்க” என்று வரவேற்க, மீனாட்சி புன்னகையுடன் தலையசைக்க, ஜெயதேவ் உதட்டோர புன்னகையுடன் தலையை அசைத்தபடி உள்ளே நுழைந்தான்.
சித்ரா மென்னகையுடன், “வாங்க” என்றபடி கை குவித்து வணக்கம் கூற,
விசாலாட்சி விரிந்த புன்னகையுடன், “வாங்க” என்று வரவேற்றார்.
அடுத்து என்ன பேச என்று பெரியவர்கள் யோசிக்க,
ஜெயதேவ், “தப்பா எடுத்துக்காதீங்க.. கடைசி நிமிஷத்தில் சத்யாக்கு தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான மீட்டிங் வந்துடுச்சு.. அதான் அவனால் வர முடியலை” என்றான்.
பூமணி, “அக்கா சொன்னாங்க.. பரவாயில்லை” என்று கூற,
அறையினுள் இருந்தபடி ஜெயதேவ் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஆத்மிகா, “மூணரைக்கே விஷயத்தை சொல்லிட்டாங்கனு தானே சொன்ன! அது கடைசி நிமிஷமா! ஆமா, இவனுக்கு இவ்ளோ அமைதியா பேசக் கூட தெரியுமா!” என்று கூறினாள்.
சம்ருதிகாவோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை.
ஜெயதேவ், “மீட்டிங் சரியா அஞ்சு மணிக்கு.. அதுவும் மீட்டிங் முடிய ரெண்டு மணி நேரம் கூட ஆகும்னு சொன்னான்.. இல்லைனா வீடியோ காளில் ரெண்டு பேரையும் பேச வச்சு இருக்கலாம்” என்று கூற,
பூமணி, “இப்ப என்ன! இன்னொரு நாள் ரெண்டு பேரும் பார்த்து பேசிக்கட்டும்” என்றார்.
“அதுவும் சரி தான்” என்று ஜெயதேவ் கூற,
மீனாட்சி, “அவன் நேரில் பார்க்கணும்னு கூட இல்லை.. போட்டோவில் பார்த்தா போதும்னு தான் சொன்னான்.. அவன் வெளி தோற்றத்தை விட குணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பான்.. அதுவும் விசா தம்பி குடும்பம்ங்கிறப்ப எங்களுக்கு சம்மதம் தான்.. இந்த பொண்ணு பார்க்கிற சம்பிரதாயம் கூட ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டிக்கு தான்” என்றார்.
மீனாட்சியின் பேச்சில் விசாலாட்சி அகம் மகிழ்ந்து போக, ஜெயதேவோ அன்னையின் மறைமுக சம்மதத்தில் சற்றே அதிர்ந்தாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக தான் இருந்தான்.
“ரொம்ப சந்தோசம்ங்க..” என்ற பூமணி மனைவியைப் பார்த்து கண்ஜாடை காட்ட, அவர் சமையல் அறைக்கு சென்று காபி மற்றும் பலகாரங்கள் அடங்கிய தட்டை எடுத்து வந்து கொடுத்தார்.
அதை எடுத்தபடி ஜெயதேவ் மென்னகையுடன், “என்ன அத்தை! மாப்பிள்ளை வந்து இருந்தா, பொண்ணு வந்து கொடுத்து இருப்பாங்களோ!” என்றான்.
“தப்பா எடுத்துக்காதீங்க.. அவ கொஞ்சம் பதற்றமா இருக்கா.. அதான் நான் கொடுத்தேன்” என்று சித்ரா பதற,
விசாலாட்சி, “நீ டென்ஷன் ஆகாத.. பொண்ணை வர சொல்றதைத் தான் அவன் சும்மா கிண்டலா சொல்றான்” என்றார்.
ஜெயதேவும் உதட்டோர சின்ன மென்னகையுடன், “அத்தை சொல்ற மாதிரி சும்மா தான்க சொன்னேன்” என்றான்.
உடனே பூமணி, “பொண்ணை வர சொல்லட்டுமா?” என்று சற்றே பணிவுடன் கேட்டார்.
மீனாட்சி புன்னகையுடன், “சும்மா தங்கச்சினே சொல்லுங்க அண்ணே” என்று கூற, இம்முறை ஜெயதேவ் அன்னையை அழுத்தத்துடன் பார்க்க, அவனை பார்க்கவில்லை என்றாலும் அவனது பார்வையை உணர்ந்தவர் தனது புன்னகையை சற்று அடக்கிக் கொண்டார். அதை கண்டுக்கொண்ட விசாலாட்சி மனதினுள் சிரித்துக் கொண்டார்.