மீனாட்சியின் கூற்றில் ஒரு நொடி எதிர்வினையற்று இருந்த பூமணி பின் புன்னகையுடன், “சரி தங்கச்சி பொண்ணை பார்த்திடலாம்” என்று கூறி மனைவியைப் பார்த்தார்.
மகள்களின் அறைக்கு சென்ற சித்ரா, “ஆத்மி அக்காவை கூட்டிட்டு வா” என்றார்.
சட்டென்று சம்ருதிகா தங்கையின் கையை இறுக்கமாக பற்றிக் கொள்ள, ஆத்மிகா, “ஜஸ்ட் ரிலாக்ஸ் சமி.. அப்பாவோட பிரெண்ட் வந்து இருக்காங்க.. அவங்களுக்கு ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லப் போறதா நினைச்சுக்கோ” என்றாள்.
என்ன தான் ‘சரி’ என்று தலையை ஆட்டினாலும் அவளுக்கு பதற்றம் குறைந்தபாடாக இல்லை.
அதை புரிந்துக் கொண்ட ஆத்மிகா, “ரெண்டு முறை டீப் ப்ரீத் இன் எடுத்து மூச்சை வெளியே விடு” என்றாள்.
சம்ருதிகா அவ்வாறு செய்ததும் பதற்றம் சற்றே குறைந்தது போல் இருந்தது.
“குட்.. இப்போ ஸ்மைல் ப்ளீஸ்” என்றாள்.
சம்ருதிகா புன்னகைக்கவும், “இப்போ போகலாம் வா” என்றபடி அழைத்துச் சென்றாள்.
மீனாட்சியின் பார்வை தலை குனிந்தபடி வந்த சம்ருதிகா மீது இருக்க, ஜெயதேவ் பார்வையோ ஆத்மிகா மீது இருந்தது.
அவளை கண்டதும் ஒரு நொடி அதிர்ந்தவன் அதை சற்றும் தனது பார்வையில் காட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும் அவன் மீதே பார்வையை பதித்து இருந்த ஆத்மிகா அரை நொடியே என்றாலும் அவனது கண்ணில் வந்து போன அதிர்வை கண்டுக் கொண்டாள்.
‘ஓ! பார்ட்டிக்கு நாம தான் தங்கச்சினு தெரியாது போலவே!’ என்று சரியாக கணித்தவள் அவனை வம்பு செய்ய நினைத்து பார்வையை ஒரு முறை சுழற்றினாள். அனைவரது கவனமும் சம்ருதிகாவிடம் இருக்க, இவள் சட்டென்று ஜெயதேவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
மீண்டும் ஒரு நொடி அதிர்ந்தவன் அவளை முறைக்க, அவளோ மீண்டும் கண் சிமிட்டினாள். அவன் தான் தனது பார்வையை மாற்றிக் கொண்டான். இவை அணைத்தும் அரை நிமிடத்தில் நிகழ்ந்து இருக்க, மற்றவர்கள் இதை கவனிக்கவில்லை.
மீனாட்சி, “ஹாய் சம்ருதிகா! நீ எடுக்கிற புதையலில் எனக்கும் கொஞ்சம் பங்கு தரியா?” என்று வினவ,
அவள் அதிர்வுடன் சட்டென்று அவரை நிமிர்த்து பார்த்தாள்.
அவர் புன்னகையுடன், “இங்க வந்து உட்காரு” என்று கூற, அவள் அன்னையைப் பார்த்தாள்.
சித்ரா ‘போய் உட்காரு’ என்று தலை அசைக்கவும், தங்கையின் கையை விடாமல் நகர, ஆத்மிகாவும் அவளுடன் சென்றாள்.
அதை கவனித்த மீனாட்சி, “நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு நான் சிங்கமோ புலியோ இல்லை..” என்றார்.
தமக்கையின் பிடியில் இருந்து கையை உருவிக் கொண்ட ஆத்மிகா அவளை மீனாட்சி அருகே அமர வைத்து, அவள் பின்னால் நின்றபடி அவளது தோளில் கை வைத்துக் கொண்டாள்.
மீனாட்சி புன்னகையுடன் மீண்டும், “என்ன புதையலை தரியா?” என்று கேட்டார்.
அவரது புன்னகை ததும்பிய முகம் அவளை வசீகரிக்க, மெல்ல பதற்றம் அவளை விட்டு நீங்கியது.
தயங்கினாலும், “கிடைத்தா தரேன்” என்று பதில் அளித்தாள்.
அவரோ, “நீயே புதையல் மாதிரி அழகா இருக்க! எங்க வீட்டுக்கு வந்திடுறியா?” என்று கேட்டார்.
அவள் பதில் சொல்வதறியாது சிறு பதற்றத்துடன் தந்தையைப் பார்க்க, அவர் பேசு என்று தலை அசைத்து செய்கை செய்தார்.
அவள் மீனாட்சியைப் பார்க்க, அவர் மீண்டும், “என்ன?” என்றார்.
அவள் மெல்லிய குரலில், “அப்பா சரி சொன்னா, வரேன்” என்றாள்.
அவளது கை மீது தன் கையை வைத்து லேசாக தட்டிக் கொடுத்தவர் அனுசரணையான கனிவான குரலில், “நான் உன் விருப்பத்தை கேட்டேன்” என்றார்.
அவள் அமைதியாக இருக்கவும்,
“இவன் என்னோட மூத்த மகன் ஜெயதேவ்.. உனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளை பெயர் சத்யதேவ்.. இவனோட ட்வின் பிரதர்.. ஸோ பார்க்க இவனை மாதிரியே தான் இருப்பான்.. ஆனா இவனை மாதிரி அமைதி கிடையாது.. அவன் என்னை மாதிரி கலகலனு பேசுவான்” என்றார்.
அப்பொழுது ஜெயதேவ் எதேர்ச்சையாக ஆத்மிகா பக்கம் திரும்ப, அவளோ கண்களை விரித்து, ‘நீ அமைதியா!!’ என்று வாய் அசைத்து வினவினாள்.
அவன் மீண்டும் அவளை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்.
சம்ருதிகா அப்பொழுதும் அமைதியாக இருக்க,
மீனாட்சி, “தயங்காம நிமிர்ந்து இவனைப் பார்த்து, என் பையன் தேறுவானா! உனக்கு ஓகேயா இல்லையானு சொல்லு” என்றார்.
மீனாட்சியின் இலகுவான அணுகுமுறை அனைவரையுமே கவர்ந்தது. பூமணி சத்யதேவ் தான் மாப்பிள்ளை என்று முடிவே செய்துவிட்டார்.
சம்ருதிகா தயங்கியபடியே மெல்ல நிமிர்ந்து ஜெயதேவைப் பார்த்தாள். அவள் பார்வையை தன் பக்கம் திருப்புவதை உணர்ந்தவன் அவளுக்கு சங்கோஜமாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அன்னை பக்கம் தன் பார்வையை திருப்பி இருந்தான்.
சில நொடிகள் அவனைப் பார்த்த சம்ருதிகா மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
மீனாட்சி, “என்ன என் பையன் பாஸ் ஆனானா?” என்று கிண்டல் குரலில் கேட்க, அவள் தந்தையைத் தான் பார்த்தாள்.
அவர், “உன்னோட விருப்பத்தை சொல்லு.. பிடிச்சு இருக்கா?” என்று சாதாரமாக தான் கேட்டார், ஆனால் அவளுக்கோ அது ‘பிடிச்சு இருக்குதுனு சொல்லு’ என்ற மறைமுக அதட்டலாக தான் தோன்றியது.
மேலும் அவளுக்கு மறுக்க காரணமும் இல்லாததால் பார்வையை தாழ்த்தியபடி, ‘சரி’ என்பது போல் தலையை அசைத்தாள்.
மீனாட்சி மகிழ்ச்சியுடன் உற்சாக குரலில், “சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடு.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பசங்களை ஒரு கை பார்ப்போம்” என்றார்.
ஆத்மிகா குறும்பு புன்னகையுடன், “அப்போ உங்களுக்கு தான் ஜோடி தேடுறீங்களா! உங்க பையனுக்கு இல்லையா!” என்று கூற,
மீனாட்சி பதில் சொல்வதறியாது ஒரு நொடி திருதிருவென்று விழிக்க, ஜெயதேவ், ‘தேவையா உங்களுக்கு!’ என்பது போல் பார்த்தான்.
பூமணி, “ஆத்மி!” என்று அதட்ட,
சட்டென்று சுதாரித்த மீனாட்சி, “விடுங்கண்ணே.. இப்படி கேலியும் கிண்டலுமா பேசுறது தான் எனக்கு பிடிக்கும்” என்றார்.
பூமணி, “ஆத்மி அக்காவை உள்ள கூட்டிட்டு போ” என்றதும் இருவரும் உள்ளே சென்றனர்.
தங்கள் அறையினுள் சென்ற பிறகே சம்ருதிகா இயல்பாக மூச்சை வெளியிட்டாள்.
சம்ருதிகா வெட்கப் புன்னகையை உதிர்த்தபடி, “கத்தாத” என்று கூற,
அதற்கும், “பார் டா வெட்கத்தை” என்று ஆத்மிகா கிண்டல் செய்ய,
அதிகரித்த வெட்கத்துடன், “சும்மா இருடி” என்றாள்.
வெளியே மீனாட்சி, “அப்போ வர முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று கூற,
‘மாப்பிள்ளை இன்னும் பொண்ணை பார்க்கலையே!’ என்று பூமணி சற்று தயங்க,
ஜெயதேவ், “நீங்க பொண்ணோட போட்டோ இருந்தா தாங்க.. இல்லை அம்மாவோட நம்பருக்கு வாட்ஸ்அப்-பில் அனுப்புங்க.. சத்யா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இறுதி முடிவை சொல்றோம்” என்றான்.
பூமணியும், “சரிங்க.. அக்காவை வாட்ஸ்அப்-பில் போட்டோ அனுப்ப சொல்றேன்” என்றார்.
மீனாட்சி ‘சத்யா சரி தான் சொல்வான்’ என்று பேச வாய் திறக்கும் முன் அவரை அழுத்தமான பார்வை பார்த்து ஜெயதேவ் அடக்கி இருந்தான்.
அப்பொழுது பூமணிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வரவும், அவர், “ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்திடுறேன்.. நீங்க ஸனக்ஸ் சாப்பிடுங்க” என்றார்.
ஜெயதேவ், “நீங்க பேசிட்டு வாங்க” என்று கூறியதும் அவர் அகன்றார்.
தந்தை சென்றதை உறுதி செய்துக் கொண்டு அங்கே வந்த ஆத்மிகா ஜெயதேவை ஓரப்பார்வை பார்த்தபடி விசாலாட்சியிடம், “என்ன அத்தை! மாப்பிள்ளைக்கு சப்ஸ்டியூட்டா மாப்பிள்ளையோட அண்ணா வந்திருக்க மாதிரி பொண்ணுக்கு சப்ஸ்டியூட்டா நான் இவருடன் தனியா பேசலாமா?” என்று கேட்டாள்.
‘ரொம்ப தான் தைரியம்!’ என்று நினைத்தபடி ஜெயதேவ் அவளைப் பார்க்க,
மீனாட்சியோ மனதினுள், ‘அச்சோ இந்த பொண்ணு தேவை இல்லாம சிங்கத்தை சீண்டுதே!’ என்று பதறினார். ஆத்மிகா தான் ராங்கி பட்டாசு என்று தெரிந்து இருந்தால் அவளுடன் சேர்ந்து அவரும் மகனை கிண்டல் செய்து இருப்பாரோ!
சித்ரா, “ஆத்மி!” என்று கண்ட குரலில் அழைக்க,
விசாலாட்சியோ புன்னகையுடன், “ஓ பேசலாமே!” என்றார்.
சட்டென்று பார்வையை அவரிடம் திருப்பியவள் சிறு அதிர்வுடன் பார்க்க, அவரோ கிண்டல் பார்வையுடன், ‘என்ன போய் பேசுறியா!’ என்று கண்ணசைவில் கேட்டார்.
சட்டென்று, ‘என்னகென்ன பயமா!’ என்பது போல் பார்த்தவள் அலட்சியமாக தோள்களை குலுக்கினாள்.
விசாலாட்சி ஜெயதேவை பார்க்க, அவனோ அவளை அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனது பார்வையை எதிர்கொண்டவளின் தீர்க்க பார்வை ‘நான் உன்னுடன் தனியே பேச வேண்டும்’ என்றது.
சட்டென்று எழுந்து கொண்டவன், “ரெஸ்ட்ரூம் எங்கே?” என்று கேட்டான்.
மீனாட்சி மயங்கி விழாத குறையாக அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, விசாலாட்சியும் கிட்ட திட்ட அந்த நிலையில் தான் இருந்தார்.
சித்ராவோ கணவர் என்ன சொல்வரோ என்ற பயத்தில் படபடப்புடன் பார்த்தார்.
பூமணி சென்ற திசையை ஒரு நொடி பார்த்தவன் பின் அவளைப் பார்க்க,
அவள், “வாங்க” என்றபடி தந்தையின் அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்றதும், அவன், “என்ன கேட்கணும்?” என்று வினவ,
அவளோ, “சொல்லணும்.. சம்ருதிகா என்னை மாதிரி கிடையாது.. என்னை வைத்து அவளை எடை போடாதீங்க” என்றாள்.
“பார்த்தாலே தெரியுது” என்றவன், “நானும் அதையே தான் உனக்கு சொல்றேன்” என்றான்.
அவளோ கண்ணில் மட்டும் குறும்பை தேக்கியபடி, “வரேன்டா அய்யாசாமி” என்றுவிட்டு ஓடிவிட்டாள். அவள் செல்லவும் பூமணி கூடத்திற்கு வரவும் சரியாக இருக்க, அப்பொழுது தான் சித்ராவும் விசாலாட்சியும் நிம்மதியான மூச்சை வெளியிட்டனர்.
‘அடிப்பாவி!’ என்றது போல் செல்லும் அவளை பார்த்த ஜெயதேவின் மனம், ‘சரியான வாலு’ என்று கூறிக்கொள்ள, உதடுகளோ சின்ன கீற்றுடன், ‘ராங்கி பட்டாசு’ என்ற வார்த்தைகளை உதிர்த்தது.