ஞாயிறு அன்று காலை பதினோரு மணி அளவில் சத்யதேவின் அறையில் ஜெயதேவ் அவனை அழுத்தமான பார்வை பார்த்துக் கொண்டு இருக்க, உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே அமைதியாக தமையனைப் பார்த்தான்.
சில நொடிகளுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய சத்யதேவ் எரிச்சல் என்ற முகமூடியை அணிந்து தனது தடுமாற்றத்தை மறைத்தபடி, “ப்ச்.. எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்கப் போற?” என்று வினவினான்.
ஜெயதேவ் அதே அழுத்த பார்வையுடன், “நீ உண்மையை சொல்ற வரை” என்றான்.
பெரும் சிரமத்துடன் தனது பதற்றத்தை மறைத்தவன், “என்னடா சொல்ற!” என்று வரவழைத்த சிறு அதிர்வுடன் கூறினான்.
அப்பொழுதும் ஜெயதேவிடம் மாற்றம் இல்லை என்றதும், மனதினுள், ‘அகிலாண்டீஸ்வரி! அல்லா! ஜீசஸ்! இவன் கிட்ட இருந்து காப்பாத்தி விட்டுடுங்க’ என்று வேண்டியவன், வெளியே தமையனை முறைத்தபடி, “உனக்கு ரெஸ்டாரென்ட்டில் வேலை இல்லையா?” என்றான்.
பின், “இப்போ எதுக்கு இப்படி லுக் விட்டுட்டு இருக்க! ஒரு பொண்ணை இப்படி பார்த்தாவாது எதாவது அப்படி இப்படி நடக்க வாய்ப்பு இருக்குது” என்றான்.
“பேச்சை மாத்தாத”
“உன் பேச்சே புரியலை.. இதில் நான் பேச்சை மாத்துறேனா!” என்றவன், “நீ இப்படியே பார்த்துட்டு இரு.. நான் ஏதாவது வெப் சீரீஸ் பார்க்கிறேன்” என்றபடி மடிகணினியை இயக்கினான்.
“இதைத் தான் சொல்றேன்”
மடிக்கணினியில் கடவுச் சொல்லை போட்டபடி, “எதை?” என்றான்.
ஆம்! பெண் பார்த்துவிட்டு வந்த அடுத்த நாளே சத்யதேவ் சம்ருதிகா திருமணம் பெரியோர்களால் உறுதி செய்யப்பட்டது. அதுவும் ஒரு மாத இடைவெளியில் வரும் முதல் முகூர்த்ததில் கல்யாணம் முடிவாகி இருக்க, கடந்த ஒரு வாரமும் சத்யதேவ் அதிக வேலை என்ற காரணத்தை கூறி சம்ருதிகாவை கைபேசியில் அழைத்து பேசவே இல்லை. அதனாலேயே சந்தேகம் கொண்டு ஜெயதேவ் இந்த விசாரணையை நடத்திக் கொண்டு இருக்கிறான்.
“டோன்ட் ப்ளே வித் மீ” என்றவனின் இறுகிய குரல், ‘நீ உண்மையை சொல்லாமல் தப்பிக்க முடியாது’ என்று மிரட்ட,
“ஓகே.. ஒத்துக்குறேன்.. நான் சம்ருதி கிட்ட போன் பேசாததுக்கு வேலை மட்டும் காரணம் இல்லை.. முதல்ல நிஜமாவே வேலை தான் காரணம்.. அந்த டென்ஷனோட பேச வேண்டாம்னு நினைச்சேன்.. அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாமே! இப்பவே பேசிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பேசுவோம்? என்ற தாட்.. இன்னும் மூணு வாரம் தானே இருக்குது..” என்றவன் மனதினுள், ‘ஸ்ப்பா! எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்குது! இவன் நம்பனும்னு அந்த பொண்ணு பெயரை சுருக்கி வேற சொல்ல வேண்டியதா இருக்குது!’ என்று கூறிக் கொண்டான்.
“இதை சொல்றதுக்காவது அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்கலாமே! அவளுக்கும் எதிர்பார்ப்புக்கள் இருக்கும் தானே!”
“சரி பேசுறேன்” என்று அவன் சரணடைய,
“அம்மாவை ஏன்டா அளவா பேசச் சொன்ன? அதுவும் உன்னைப் பத்தி எதுவும் பொண்ணு கிட்ட பேச வேண்டாம்னு வேற சொல்லி இருக்க!” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
‘மிடிலடா!’ என்று மனதினுள் நொந்தவன், “எல்லாமே அம்மாவே பேசிட்டா என்ன சுவாரசியம் இருக்கும்? எங்களுக்குள் நாங்களே பேசி எங்களை தெரிந்துக்கிறத்தில் தானே திரில்!” என்று சொல்லி சமாளித்தான்.
“எனக்கு என்னவோ உன் மேல சந்தேகமாவே இருக்குது! எனக்கு தெரியாம ஏதும் செய்றியா?”
“அப்படி என்ன செய்திடப் போறேன்னு நினைக்கிற?”
“அது தான் எனக்கு தெரியலை.. ஆனா என்னவோ செய்யப் போறனு மட்டும் என் மனசுக்குத் தோணுது.. என்னை இந்த கல்யாணத்தில் கோர்த்து விட பார்க்காத.. அப்படி எதுவும் செய்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிடாத”
சத்யதேவ் உண்மையான கோபத்துடன், “உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா அந்த பொண்ணோட வாழ்க்கை அழிறதுக்கு சமமா?” என்று வினவினான்.
“ஸோ.. இதான் உன்னோட பிளான் இல்லையா?”
ஒரு நொடி அதிர்ந்தபடி, ‘டேஞ்சரஸ் மேன்.. உன் வாயில் இருந்தே உண்மையை வர வச்சிடுவான்.. சிக்கிடாத சத்யா!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன், “லூசாடா நீ! நீ பேசியது தப்புன்னு கேள்வி கேட்டா அதையே பிடிச்சு தொங்குவியா?” என்றான்.
“இப்போ நீ ஷாக் ஆனாதை பார்த்தா அப்படி தெரியலையே!”
“அது.. நான் நினைக்காததை நீ அசால்ட்டா சொல்லவும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்”
“கடைசி நேரத்தில் ஏதாவது செய்து என்னை கல்யாணம் செய்துக்க வைக்கலாம்னு மட்டும் நினைக்காத.. அது முடியாது” என்றவன், “கடைசி நேரத்தில் கல்யாணம் நின்றாலோ, பிரச்சனை வந்தாலோ அந்த பொண்ணோட மனசு எவ்ளோ ஹர்ட் ஆகும்னு யோசிச்சியா!” என்றான்.
“ப்ச்.. நீ ஏன் இப்படி யோசிக்கிறனே எனக்கு புரியலை”
“பொண்ணு பார்க்கிற சடங்கில் இருந்து உன்னோட அக்டிவிட்டீஸ் எல்லாம் அப்படித் தானே இருக்குது”
“அவ்ளோ சந்தேகம் இருக்கிறவன் என் ஆபீஸ்ஸில் அந்த மீட்டிங் நடந்ததானு கேட்டு பார்க்க வேண்டியது தானே!” என்று முறைப்புடன் கூற,
ஜெயதேவோ அலட்டிக்கொள்ளாமல், “அதெல்லாம் எப்பவோ கேட்டு உறுதி செஞ்சுட்டேன்” என்றான்.
“அடப்பாவி!” என்ற சத்யதேவ் வாயில் கை வைத்தபடி நிற்க, ஜெயதேவ் அலட்சியமாக தோளை குலுக்கினான்.
சத்யதேவ் கோபத்துடன், “என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாங்க? யார் கிட்ட விசாரிச்ச?” என்று எகிற,
“உன்னோட மரியாதை உன்னை விட எனக்கு ரொம்ப முக்கியம்.. அதான் நீ ஏதும் கிறுக்குத்தனம் செய்திடக் கூடாதுனு இவ்ளோ பேசிட்டு இருக்கிறேன்” என்ற ஜெயதேவ், “அந்த ஓட்ட வாய் மாதவ் கிட்ட தான் போட்டு வாங்கினேன்” என்றான்.
“நீ திடீர்னு போன் போடும் போது அவன் சந்தேகப் பட மாட்டானா?”
“அந்தளவுக்கு நான் அறிவில்லாதவன் இல்லை”
“என்னைக்கு பேசின?”
ஜெயதேவ் தோளை குலுக்கி, “நீயே கண்டுபிடி” என்றான்.
சற்று யோசித்த சத்யதேவ், “ரெண்டு நாள் முன்னாடி.. நீ எனக்கு போன் போட்டு ரீச் பண்ண முடியலைனு சொல்லி என்னை உனக்கு போன் போடச் சொன்னான்.. அன்னைக்கா?” என்று வினவினான்.
ஜெயதேவ், ‘சரி’ என்பது போல் தலை அசைக்க,
‘இது தெரியாம நாமும் லூசு மாதிரி இவனுக்கு போன் போட்டு வேற பேசினோமே!’ என்று மனதினுள் நினைத்த சத்யதேவ், ‘டேய் சத்யா! நீ அலர்ட் ஆறுமுகமா மாறி, இருபத்திநாலு மணி நேரமும் அலர்ட்டா இருக்கணும் போலவே!’ என்று கூறிக் கொண்டான்.
ஜெயதேவ், ‘என்ன!’ என்பது போல் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க,
சட்டென்று சுதாரித்த சத்யதேவ், “அப்படி உன்னை கோர்த்து விட நினைத்தால் நாளைக்கு உன்னைத் தானே முகூர்த்தப் புடவை எடுக்க போகச் சொல்லி இருப்பேன்”
ஜெயதேவோ அலட்டிக் கொள்ளாத குரலில், “யாருக்கு தெரியும்! அன்னைக்கு மாதிரி கடைசி நேரத்தில் என்னை கோர்த்து விடுற பிளானில் இருக்கிறியோ என்னவோ!” என்றான்.
சத்யதேவ் முறைக்க,
ஜெயதேவ், “லீவ் போட முடியாது.. பெர்மிஷன் கஷ்டம்னு தானே அம்மா கிட்ட சொல்லி இருக்க!” என்று கேள்வியாய் நிறுத்தி புருவம் உயர்த்த,
“வொர்கிங் டே-னா லீவோ பெர்மிஷனோ கஷ்டம்னு சொன்னேன்.. அவ்ளோ தான்..” என்றவன், “நாளைக்கு கண்டிப்பா நான் முகூர்த்தப் புடவை எடுக்க போவேன்” என்றான்.
“நம்பலாமா?”
“தலை போற காரியமே வந்தாலும் முகூர்த்தப் புடவையை எடுத்த அப்புறம் தான் அந்த வேலையைப் பார்ப்பேன்.. போதுமா”
அப்பொழுதும் ஜெயதேவ் நம்பிக்கை இல்லாத குரலில், “பார்க்கலாம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
‘நாளைக்கு போயே ஆகணும் போலவே!’ என்று மனதினுள் அலுத்துக் கொண்ட சத்யதேவ் தமையன் கூறிய, ‘அந்த பொண்ணோட மனசு எவ்ளோ ஹர்ட் ஆகும்னு யோசிச்சியா!’ என்ற வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான்.
சில நிமிடங்கள் யோசித்தவன், ‘ஓகே.. நாளைக்கு போய் அந்த பொண்ணு கிட்ட உண்மையை சொல்லிடுவோம்.. இவனோட சந்தேகப் பார்வையில் இருந்தும் தப்பித்த மாதிரியும் ஆச்சு’ என்ற முடிவிற்கு வந்தான்.
அடுத்து சம்ருதிகாவிடம் ‘என்ன பேச! எப்படி பேச! அவளை எப்படி சம்மதிக்க வைக்க, அதுவும் விஷயத்தை அவள் வேற யாரிடமும் கூறாமல் சம்மதிக்க வைக்கணும்’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான்.
வெளியே மீனாட்சி விசாலாட்சியிடம் அடுத்த நாள் செல்வதை பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தார். இன்னமும் மீனாட்சிக்கு ஆத்மிகா தான் ராங்கி பட்டாசு என்று தெரியாது. சத்யதேவின் திருமணத்தில் மும்மரமானவர் ராங்கி பட்டாசின் பெயரை சத்யதேவிடம் கேட்க மறந்தார். மகன்களும் அதன் பிறகு அவளை பற்றி பேசாததும் ஒரு காரணம்.
ஆத்மிகா மீதான அன்னையின் எண்ணத்தை அறியாத ஜெயதேவ் தன்னிடம் அப்படி பேசி சண்டை போட்டது ஆத்மிகா தான் என்ற விஷயம் தெரிந்தால், எங்கே அன்னைக்கு சம்ருதிகா மீதோ ஆத்மிகா மீதோ தவறான எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் ஆத்மிகா தான் ராங்கி பட்டாசு என்றதை கூறவில்லை. சத்யதேவ் அதைப் பற்றி பேசாததால் அவனுக்கும் தனது எண்ணம் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் உண்மையில் சத்யதேவிற்கு சம்ருதிகாவின் தங்கை ஆத்மிகா என்றதே தெரியாது. அவன் சம்ருதிகாவை ஜெயதேவிற்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பது என்ற யோசனையில் இருப்பதாலும், சம்ருதிகாவை தவிர்க்க நினைப்பதாலும் அவளது குடும்பத்தைப் பற்றி பெரிதாக கேட்டுக் கொள்ளவில்லை. அதனால் சம்ருதிகாவின் தங்கை பெயர் ஆத்மிகா என்ற விஷயம் இன்று வரை அவனுக்கு தெரியவில்லை. ஒருவேளை தெரிந்து இருந்தால் சம்ருதிகாவை தமையனுடன் முடிச்சிடும் முடிவை எடுத்து இருக்க மாட்டானோ!