அன்று மாலை ஆத்மிகா தனது கல்லூரி நண்பர்களுடன் ‘ஃபுட்டீஸ் ஹெவன்’ உணவகத்திற்கு சென்றாள். அன்று ஆத்மிகா பின்னால் அமர்ந்து இருந்த தோழியின் பிறந்த நாளை கொண்டாட சென்றனர். இந்த உணவகத்தை தேர்ந்தெடுத்தது ஆத்மிகா தான்.
பார்வையை சுழற்றி ஜெயதேவை தேடியபடி தான் ஆத்மிகா உள்ளே சென்றாள். ஆனால் அவனோ அவளுக்கு தரிசனம் அளிக்காமல் தனது அறையில் அமர்ந்து மறைகாணி பதிவு வழியாக அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளது தேடல் தனக்கானது என்று தெரிந்தும் அவன் வெளியே செல்லவில்லை. அன்று பெண் பார்க்க சென்ற போது பார்த்த பிறகு இன்று தான் பார்க்கிறான். அவளது விழிகளில் தெரிந்தவரை தேடும் செய்கையை மீறி சிறு ஆர்வம் கலந்த தனக்கான ப்ரேத்யேக தேடல் இருக்கிறதோ என்ற சந்தேகம் தோன்றியதால் அமைதியாக அவளை கண்காணிக்க ஆரம்பித்தான்.
மேசை பணியாளர் வரவும் ஆத்மிகா கேட்ட முதல் கேள்வி, “இன்னைக்கு ஃபுட்டீஸ் ஸ்பெஷல் என்ன ஐடெம்?” என்றது தான்.
அவர், “மஷ்ரூம் டீக்கா” என்றதும்,
அவளுக்கு காளான் ஒத்துக்கொள்ளாது என்ற காரணத்தால் சுருங்கிவிட்ட முகத்துடன், “ப்ச்.. என்னால் சாப்பிட முடியாதே!” என்றாள்.
பிறந்த நாள் கொண்டாடும் தோழியோ உற்சாகத்துடன், “வாவ்.. மை பேவரெட்” என்றாள்.
ஆத்மிகா, “நான் சாப்பிட முடியாது.. ஸோ அதை சொல்லாத” என்று கூற,
அவளை விநோதமாக பார்த்த இன்னொரு தோழி, “என்னடி புதுசா இப்படி சொல்ற! அதுவும் இன்னைக்கு ரூ(ரூபாவதி) பர்த்டே வேற!” என்றாள்.
மனதில் எழுந்த ஏமாற்றத்தை தடுக்க முடியாமல் அப்படி கூறிவிட்டவள் தனது தவறை உணர்ந்து, “சாரி.. அதையே சொல்லலாம்” என்றுவிட்டு பணியாளரிடம் அதை கொண்டு வரக் கூறினாள்.
பிறகு ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை கூறினர்.
நண்பர்களுடன் சிரித்து அரட்டை அடித்தாலும் அவளது விழிகள் அவ்வபோது ஜெயதேவை தேடிக் கொண்டே தான் இருந்தது.
அவளது தேடலையும் கண்ணில் வந்து போகும் ஏமாற்றத்தையும் ஜெயதேவ் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
ரூபாவதி, “எங்கேடி அந்த ஹன்ட்சம்ம காணும்!” என்று கூற,
இவளோ முறைப்புடனே, “அத்தானோட அண்ணன் எனக்கு யாரு?” என்ற போது பணியாளர் வந்து உணவை வைத்துச் சென்றார்.
ரூபாவதி முதல் ஆளாக காளான் டிக்காவை தான் எடுத்து உண்டாள்.
கண்களை மூடியபடி ரசித்து உண்டவள், “செம டேஸ்ட்.. யூஷுவலா செய்ற டிக்கா டேஸ்ட் மாதிரி இல்லாம ஏதோ வித்யாசமா செமையா இருக்குது” என்றவள், “இதை செஞ்ச கைக்கு ஒரு கிஸ் கொடுக்கலாம்” என்று விளையாட்டாய் கூறி கண் சிமிட்ட,
அடுத்த நொடி அவளது தொண்டை குழியில் முள்கரண்டியை வைத்து இருந்த ஆத்மிகா, “இப்போ சொல்லு” என்று மிரட்டலாக கூற,
தோழன் ஒருவன், “அப்படியே இறக்கிடு தல” என்று கூற, அதை ஆமோதிப்பது போல் இன்னொருவன் சிரித்தான்.
மற்றொரு தோழியோ சிறு யோசனையுடன் ஆத்மிகாவை பார்க்க,
ரூபாவதி, “அடியேய்! கருவேப்பிலை கொத்து மாதிரி எங்க வீட்டுக்கு நான் ஒத்த வாரிசுடி.. என் பர்த்டே-ய டெத்டே-யா மாத்திடாட” என்றாள்.
“பொழச்சு போ” என்றபடி ஆத்மிகா கையை கீழே இறக்கவும்,
ரூபாவதி, “ஏன்டி இந்த கொலைவெறி!” என்று கேட்டாள்.
ஆத்மிகா தோளை குலுக்கியபடி உண்ண ஆரம்பிக்கவும்,
இன்னொரு தோழி, “ரூ இப்படி பேசுறது புதுசு இல்லையே!” என்று கூற,
ஆத்மிகா உண்டபடி, “அப்படியா ரூ!” என்று கேட்டாள்.
அவள் இளித்தபடி, “கிஸ்னு சொன்னது இல்லை.. அது சும்மா உன் அத்தானோட அண்ணன்னு உன்னை சீண்ட அப்படிச் சொன்னேன்” என்று கூற,
“நீ வாயால் சீண்ட, நான் போர்க் வச்சு சீண்டப் பார்த்தேன்”
மற்றொரு தோழி, “அவரை காதலிக்கிறியா ஆத்மி?” என்று வினவ,
ஒரு நொடி அதிர்ந்தவள் சிறு தோள் குலுக்கலுடன், “லவ்லாம் இல்லை.. ஆனா பிடிச்சு இருக்குது.. சின்ன க்ரஷ்.. அவ்ளோ தான்” என்று கூறி மென்னகையுடன் கண்சிமிட்டினாள்.
அடுத்து வேற வேற விஷயங்களை பேசியபடி உண்டனர். அவர்கள் உணவை முடித்து கட்டண தொகைக்காக காத்திருந்த பொழுது, யாரோ அடி வாங்கும் சத்தம் கேட்கவும், ஐவரும் திரும்பி பார்க்க, ஜெயதேவ் தான் ஒரு இளைஞனை கன்னத்தில் அறைந்து இருந்தான்.
ஜெயதேவ் கண்ணில் தெரிந்த ரௌத்திரத்தை கண்டு அந்த இளைஞனும் அவனது நண்பர்கள் மட்டுமின்றி உணவகத்தில் இருந்த அனைவருக்குமே சற்று பயமாக தான் இருந்தது.
“போடோஸ் டெலிட் பண்ணு.. டிரைவிலும் சேர்த்து டெலிட் பண்ணு” என்று மிரட்டினான்.
அவன் அவ்வாறே செய்ய ஆரம்பிக்க, அவனது நண்பர்களிடம் கையை நீட்டியபடி, “மொபைல்” என்றான்.
அவர்கள், “நாங்க எதுவும் செய்யலை சார்” என்றனர்.
“அதை நான் பார்த்துட்டு சொல்றேன்.. அன்லாக் செய்து கொடுங்க”
அவர்கள் அவ்வாறே செய்ய, அவர்கள் கைபேசியில் புகைப்படங்களை சேமிக்கும் இடத்திற்கு சென்று தப்பான புகைப்படங்கள் இருக்கிறதா என்று பார்த்தான். மூவரில் ஒருவனின் கைபேசியில் மட்டும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் தப்பான கோணத்தில் எடுத்த சில புகைப் படங்கள் இருக்க, ஜெயதேவ் பார்த்த பார்வையில், “டெலிட் பண்ணிடுறேன் சார்” என்றபடி கைபேசியை வாங்கி அவசர அவசரமாக புகைப்படங்களை அழித்தான்.
மறைகாணி பதிவில் இவர்களின் செயலை பார்த்ததும் கோபத்துடன் வெளியே வந்து இருந்தான்.
ஜெயதேவ் அடி வாங்கியவனிடம், “உனக்கு சிஸ்டர் இருக்காங்களா?” என்று கேட்டான்.
அவன் ‘இல்லை’ என்பது போல் தலையை அசைக்கவும்,
“நீ போட்டோ எடுத்த மாதிரியே ஒரு பொறுக்கி உன்னோட அம்மாவை எடுத்தா என்ன செய்வ?” என்று கேட்டான்.
அவன் குற்ற உணர்ச்சியுடன் தலை குனியவும், “இனி இப்படி செய்ய மாட்டனு நினைக்கிறேன்.. இப்படி ஒரு எண்ணம் வரும் போது உன் அம்மாவை அந்த இடத்தில் வச்சு பாரு” என்றான்.
“சாரி சார்”
“என் கிட்ட ஏன் சாரி கேட்கிற?” என்றதும் அவன் நேரே ஆத்மிகாவிடம் சென்று, “சாரி” என்று கூற, அவள் அனிச்சை செயலாக சரியாக இருந்த துப்பட்டாவை சரி செய்தபடி அதிர்வுடன் எழுந்து நின்று ஜெயதேவைப் பார்த்தாள்.
என்ன தான் தைரியமான பெண் என்றாலும் அந்த நொடி அவள் உணர்ந்தது என்னவோ அதிர்ச்சி கலந்த பதற்றமும், ஒரு வித பாதுகாப்பின்மை உணர்வையும் தான்.
அவளது உணர்வுகளை அவளது விழிகளில் படித்தவனின் கால்கள் அவனையும் அறியாமல் அவளிடம் சென்றது.
அந்த இளைஞனை பார்த்து கிளம்புமாறு ஜெயதேவ் செய்கை செய்ய, அவனும் அவனது நண்பர்களும் விட்டால் போதுமென்று ஓடி விட்டனர்.
ஆத்மிகா அதிர்ச்சி விலகாத நிலையிலும் கோபத்துடன், “அவங்களை அப்படியே போக விட்டுட்டீங்க” என்றாள்.
“வேற என்ன செய்ய! எடுத்துச் சொல்ல ஆள் இல்லாத சின்ன பசங்களா தான் தெரியுது.. அவன் உண்மையாவே வருந்தினான்.. இனி செய்ய மாட்டான்னு தான் நினைக்கிறேன்”
“செய்தா!”
அவளை அழுத்தத்துடன் பார்த்தவன், “நாட்டில் ஒவ்வொருத்தனையும் திருத்தும் வேலை என்னோடது இல்லை” என்றான்.
அவள் அவனை முறைக்க,
“என் கண்ணுக்கு முன்னாடி நடந்த தப்பை தட்டி கேட்டுட்டேன்.. அட்வைஸும் செய்துட்டேன்.. வேற என்ன செய்யச் சொல்ற?” என்று தன்மையாகவே கூறியவன் அவளது நண்பர்களை கூர்விழிகளுடன் பார்த்து, “பொண்ணுங்க கூட வரப்ப சுத்தி நடக்கிறதையும் கவனீங்க” என்றான்.
அவள் ஒரு வித தவிப்புடன் அவனைப் பார்க்க, அவன், “என்ன?” என்று கேட்டான்.
“அந்த போடோஸ்” என்று அவள் இழுத்து நிறுத்தவும்,
அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில், “மோசமாலாம் இல்லை.. ஜஸ்ட் ஷால் ரொம்ப லைட்டா விலகி இருந்தது.. அது கூட சாதாரணமா பார்த்தா எதுவும் தெரியாது.. அவன் வளைந்து எடுத்த அங்கிளில் கொஞ்சம் தப்பா இருந்தது ஆனா மோசமா இல்லை.. நீ நீட்டா டிசென்ட்டா தானே ட்ரெஸ் செய்து இருக்க! அப்புறம் என்ன! இதை மறந்துரு.. ப்ரீயா விடு.. என் கூட சண்டை போட்ட ராங்கி பட்டாசு எங்க போனா?” என்று வெகுவாக அவளை சமாதானம் செய்தான்.
அவனது கூற்றில் தெளிந்தவள் புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
அவனும் புன்னகையுடன், “குட்” என்றவன் பொதுவாக அவர்களைப் பார்த்து, “சாப்பாடு எப்படி இருந்தது?” என்று கேட்டான்.
ரூபாவதி முதல் ஆளாக விரிந்த புன்னகையுடன், “ரெஸ்டாரென்ட் பெயருக்கு ஏத்த மாதிரி செமையா இருக்குது.. அதுவும் நீங்க செஞ்ச மஷ்ரூம் டிக்கா செம செம” என்றாள். ஆத்மிகா அவளை முறைத்தாள்.
அவன் மென்னகையுடன், “தன்க்யூ” என்றான்.
அப்பொழுது அவர்களுக்கான கட்டண தொகை வரவும், ரூபாவதி பணத்தை செலுத்த,
அவன் நக்கல் பார்வையுடன், “எதுக்கு! அடுத்து உன் தெருவில் இருக்கும் உன்னோட வானர கூட்டத்தை கூட்டிட்டு வந்து என் தலையில் மிளகாய் அரைக்கவா!” என்றான்.
“ரொம்ப தான்” என்று அவள் உதட்டை சுளித்தாள்.
அவன் அவளை கண்டு கொள்ளாமல், “ஓகே கைஸ் கேரி ஆன்” என்றபடி நகர்ந்தான். அவர்களும் கிளம்பினர்.
ஜெயதேவை கடக்கும் முன், “நீங்க போங்க.. நான் வரேன்” என்று நண்பர்களை அனுப்பியவள், “ஒரு நிமிஷம்” என்றபடி ஜெயதேவ் அருகே சென்றாள்.
அவன் நின்றதும், “ஒன்னு சொல்லணும்” என்றாள்.
அவன், ‘என்ன!’ என்பது போல் பார்க்க,
அவனை சற்றே நெருங்கியவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இப்போ சொல்லப் போறதை இந்த இன்சிடென்ட் அப்புறம் தான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது.. அதுக்கு முன்னாடியே என் பிரெண்ட் கிட்ட சொல்லிட்டு தான் இருந்தேன்.. அக்சுவலி நானே இங்கே வந்த அப்புறம் தான் கண்டு பிடித்தேன்” என்றதும் அவள் எதைக் கூற போகிறாள் என்பதை யூகித்தவனாக கையை உயர்த்தி இறுகிய முகத்துடன் அவளை தடுத்தான்.
பின் இறுகிய முகத்துடனே, “என்ன காதலிக்கிறியா?” என்று கேட்க,
அவளோ உதட்டை சுளித்து, “ச..ச.. நீ அந்த லெவல்-லாம் இல்லை” என்று கூறி அவனுக்கு பல்ப் கொடுத்தாள்.
ஒரு நொடி ‘ஞை’ என்று விழித்தவன் பின் அவளை முறைத்தபடி, “அப்புறம் என்ன சொல்ல வந்த?” என்று கேட்டான்.
“ஐ க்ரஷ் யூ” என்றாள்.
“வாட்!!!”
“இது பிழியுற க்ரஷ் இல்லை.. உன் மேல எனக்கு சின்ன க்ரஷ் இருக்குது.. அதைத் தான் ஐ க்ரஷ் யூ சொன்னேன்” என்று கூறி கண்சிமிட்டியவள், “வரேன்டா அய்யாசாமி” என்று கூறி ஓடி விட்டாள்.
‘இவளை!’ என்று பல்லை கடித்தவனின் அகத்தை அவளது “ஐ க்ரஷ் யூ” என்னவோ செய்ததோ!!!