திங்கள் அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த ஆத்மிகாவை கிஷோர் என்ற வவ்வால் வழி மறித்து நிறுத்தினான்.
“என்னடா?” என்றபடி தனது இரு சக்கர வண்டியை நிறுத்தினாள்.
“எங்க வீட்டுக்கு எதிரில் இருக்க வீட்டுக்கு புதுசா வந்து இருக்க ஆளு சரி இல்லை க்கா”
“என்ன செய்றார்?”
“அவனுக்கு எதுக்கு மரியாதை தர?”
“சரிடா.. என்ன செய்தான்?”
“காலையில் வரண்டாவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறேன்ங்கிற பெயரில் தள்ளு வண்டியில் வர காய் வாங்குற அம்மாக்களை அக்காக்களை தப்பா பார்க்கிறான்”
“நல்ல கவனிச்சியா?”
“நாலு நாளா கவனிச்சிட்டு தான் சொல்றேன்”
“அந்தாளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே!”
“என் தங்கச்சி வயசுல பொண்ணே இருக்குது”
“ஃப்ரைடேயே சொல்லி இருக்கலாமேடா!”
“சனிக் கிழமை சொல்லலாம்னு நினைத்தேன்.. உனக்கு காலேஜ் வச்சிட்டாங்க.. நேத்து நீ தான் வீட்டுலேயே இல்லையே”
“ஓ” என்றவள், “சரி இந்த வார கடைசியில் கவனிச்சிடலாம்.. கண்ணு இருந்தா தானே தப்பா பார்ப்பான்” என்றாள்.
“ஆமா க்கா.. ரெண்டு கண்ணையும் நோண்டிபுடனும்”
“போண்டாக்கு தெரியுமா?”
“நேத்து தான் சொன்னேன்.. அவன் நேத்தே ஏதாவது செய்யணும்னு பறந்தான், நான் தான் நீ வந்த பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லி அடக்கி வச்சு இருக்கிறேன்”
முன் தினம் உணவகத்தில் நடந்த சம்பவம் நினைவிற்கு வரவும், “ஒன்னு செய்.. அவன் பார்க்கிறதை வீடியோ எடுத்து வை.. அதை அவன் வைஃப்கு அனுப்பலாம்.. அதுக்கு அப்புறமும் அவன் திருந்தலைனா நம்ம ஸ்டைலில் கவனிப்போம்” என்றாள்.
அவளை மேலும் கீழும் பார்த்தவன், “வர வழியில் காத்து கருப்பு எதுவும் பிடிச்சுக்கிச்சா!” என்றான்.
அவன் தலையில் லேசாக கொட்டியவள், “நேத்து கத்துக்கிட்ட விஷயம்டா.. நேத்து கிட்டதிட்ட இதை மாதிரி தான் நடந்தது.. ஆனா இங்கே அரை கிழம்.. அங்கே பத்தொன்பது இல்ல இருவது வயசு பையன்.. பொண்ணுங்களை அவங்களுக்கே தெரியாம தப்பா போட்டோ எடுத்துட்டு இருந்தான்.. அப்போ அதை பார்த்து கோபப்பட்ட ஒருத்தர் அவன் கன்னத்தில் அடித்து போடோஸ் டெலிட் செய்ய வைத்து, இந்த மாதிரி உன்னோட அம்மாவை ஒரு பொறுக்கி எடுத்தா எப்படி இருக்கும்னு கேட்டதும் அவன் நிஜமாவே வருந்தி அவர் கிட்டயும் அந்த பொண்ணு கிட்டயும் சாரி கேட்டான்.. இனி இப்படி ஒரு எண்ணம் வந்தா அந்த பொண்ணு இடத்தில் உன்னோட அம்மாவை நினைத்துப் பார்னு அட்வைஸ் செய்தார்” என்றாள்.
“என்னவோ சொல்ற! சரி பார்த்து செய்” என்று அரை மனதுடன் கூறியவன், “ஆனா இந்த ஆள் திருந்துவான்னு தோணலை” என்றான்.
“சிலர் வைஃப்கு விஷயம் தெரியாத வரை தான் ஆடுவான்க”
“அப்டிங்கிற! பார்க்கலாம்” என்றவன், “அவர் அவனை அடிச்சாரே! ஆனா இவனுக்கு நாம எந்த தண்டனையும் கொடுக்காமயே சான்ஸ் தரோமே!” என்றான்.
“நாம அனுப்பும் வீடியோவைப் பார்த்துட்டு அவன் வுட்டுக்காரம்மா அவனை கொஞ்சுமா!” என்று கிண்டல் சிரிப்புடன் கூற,
அவனும் மென்னகையுடன், “அப்போ சரி” என்றுவிட்டு, “பை க்கா” என்று கூறி கிளம்பினான்.
ஆனால் இரண்டே அடியில் திரும்பி வந்தவன், “எனக்கு ஒரு டவுட்” என்றான்.
“இன்னுமா!”
“அந்த அவர்.. அதான் போட்டோ எடுத்தவனை அடிச்சவர் தான் எங்க மாமாவா!” என்று கேட்க,
கண்களை விரித்தபடி, “அடேய்! ஏன்டா!” என்றாள்.
“இல்ல.. நீ உன்னோட கொள்கையை மாத்துற அளவுக்கு உன்னை இம்ப்ரெஸ் செய்து இருக்காரேனு கேட்டேன்”
“அப்படி எல்லாம் இல்லை” என்றுவிட்டு வண்டியை கிளப்பிச் சென்றவள் இரண்டடியில் நிறுத்தி திரும்பி பார்த்தபடி, “ஆனா கொஞ்சம் பிடிக்க தான் செய்யுது” என்று கூறி கண் சிமிட்டினாள்.
சிரிப்புடன், “அப்போ மாமா தான்” என்றவன், “மாமா பெயர் என்ன அக்கோய்?” என்று கேட்டான்.
“கத்தாதடா!”
கிண்டலான புன்னகையுடன், “பார் டா!” என்றபடி அவள் அருகே சென்றவன், “எங்க அக்காவையே இப்படி மாத்திய அந்த புண்ணியவான் யாரு?” என்று கேட்டான்.
“டேய்.. நிஜமாவே லவ்லாம் இல்லை”
“மொச பிடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதா!”
அவளது முறைப்பில், “உன்னை போய் நாய்னு சொல்லுவேனா! நீ பெண் சிங்கம் க்கா.. அது சும்மா பழமொழி” என்றவன், “சரி இப்போதைக்கு நீ சைட் அடிக்கிற ஆள் பேரு என்ன?” என்று கேட்டான்.
“சைட்கு மேல லவ்கு கீழ.. க்ரஷ் ஸ்டேட் டா”
“ஏதோ ஒரு இழவு” என்றவனின் தலையில் கொட்டவும்,
அவன் தலையை தேய்த்தபடி, “கொட்டெல்லாம் வாங்கி இருக்கேன்.. இப்பயாச்சும் பெயரை சொல்லு” என்றான்.
“கொட்டு நீ பேசியதுக்கு”
அவன் முறைப்புடன், “இப்போ சொல்லப் போறியா இல்லையா?” என்று மிரட்டலாக வினவ,
அவள் உதட்டோர சிறு புன்னகையுடன், “உனக்கு தெரிந்தவர் தான்” என்றாள்.
சிறிது யோசித்தவன், “நான் பார்த்து இருக்கிறேனா?” என்று கேட்டான்.
அவள் இல்லை என்பது போல் தலை அசைக்கவும் மீண்டும் யோசித்தான்.
சில நொடிகளில் புன்னகையுடன், “மங்கூஸ் மண்டையனா?” என்று வினவ, இந்த முறை இன்னும் அழுத்தமாக கொட்டு விழுந்தது.
அவன் இடது கையால் தலையை தேய்த்தபடி, வலது கை ஆள் காட்டி விரலை ஆட்டி, “வேணா! வலிக்குது.. அழுதுருவேன்” என்று கூற,
அவளோ, “அவனை நான் எப்படி வேணாலும் சொல்லுவேன்.. நீங்க யாரும் சொல்லக் கூடாது” என்றாள்.
‘ரைட்! அக்கா வசமா சிக்கிட்டா’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன், “அப்போ இந்த வாரம் எங்களுக்கு ட்ரீட்” என்றான்.
“கண்டிப்பா”
“ஃபுட்டீஸ் ஹெவன் ரெஸ்டாரென்ட் தானே!”
“அதே அதே” என்று கண் சிமிட்டியவள், “வீடியோவை சரியா எடு.. பைடா” என்று கூறி வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு சென்றவள் அறையில் சிறு குழப்பமும் தீவிர யோசனையுமாக அமைதியற்ற நிலையில் அமர்ந்து இருந்த சம்ருதிகா தோளில் கைகளை வைத்தபடி, “இன்னும் நீ நேத்து வந்த போனை மறக்கலையா?” என்று கேட்டாள்.
அப்பொழுது தான் அதை பற்றிய நினைவே வந்தவளாக சம்ருதிகா, ‘ஆமா அது வேற இருக்குதே!’ என்று மனதினுள் அதிர்வுடன் கூறிக் கொண்டாள்.
முன்தினம் இரவு இவர்கள் படுக்க சென்ற போது சம்ருதிகாவின் கைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அழைத்தது, முதுநிலை பட்டப்படிப்பின் போது சம்ருதிகாவை ஒருதலையாக காதலித்த அவளது வகுப்பில் படித்தவன். படிக்கும் காலத்திலேயே அவனது காதலை மறுத்து இருந்தாள்.
அவளது திருமணத்தை பற்றி அறிந்து அழைத்து இருந்தவன் தனது காதலை ஏற்க சொல்லியும், அவள் இல்லை என்றால் தன்னால் வாழவே முடியாது என்றும் மன்றாடினான். இவள் தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி அழைப்பை துண்டிக்க, ஆத்மிகாவோ அந்த எண்ணில் இருந்து திரும்ப அழைப்பு வராதபடி முடக்கி விட்டாள்.