ஆத்மிகா, “சமி” என்று அழைக்கவும், அவளைப் பார்த்தாள்.
ஆத்மிகா, “வேற நம்பரில் இருந்து திரும்ப கூப்பிட்டானா?” என்று கேட்டாள்.
“கூப்பிட்டான்.. நான் எடுக்கலை”
“அவன் தான் உனக்கு எப்படி தெரியும்?”
“அவனானு தெரியாது.. ஆனா ரெண்டு புது நம்பரில் இருந்து நாலஞ்சு காள்ஸ் வந்துது.. நான் எதையும் எடுக்கலை”
“அப்புறம் ஏன் இப்படி இருக்கிற? அவன் சொன்னதை தான் நினைச்சிட்டு இருக்கிறியா?”
சம்ருதிகா அமைதியாக இருக்கவும்,
“அவன் ஒரு கூமுட்டை.. அவன் சொன்னதை இன்னும் நினைச்சிட்டு இருக்கிறியா?” என்று அதட்டிய ஆத்மிகா, “ஞானமே இல்லாதவனுக்கு போய் ஞானவேல்னு பேரு.. அவன் பேசியதை எல்லாம் தூக்கி தூர போட்டுட்டு அத்தானை பத்தி மட்டும் யோசி” என்றாள்.
பின், “இன்னொரு முறை கூப்பிட்டா சொல்லு.. அப்பா கிட்ட சொல்லி கவனிப்போம்” என்றாள்.
“அய்யோ!” என்று பதறிய சம்ருதிகா, “தேவை இல்லாம தேரை இழுத்து விடாத” என்றாள்.
“எல்லாமே நாமளே டீல் செய்றது சரி வராது”
“அதெல்லாம் ஒன்னுமில்லை.. ப்ரீயா விடு”
“நீ ப்ரீயா விடுறியா!”
“நான் அவனை பத்தி யோசிக்கலை.. இது வேற”
“அப்படி என்ன தீவிர யோசனை?”
“சும்மா.. விடேன்”
ஒரு நொடி கண்ணை சுருக்கி தமக்கையை பார்த்தவள், பின், “சரி.. இன்னைக்கு எப்படி போச்சு? முகூர்த்தப் புடவை என்ன கலர்?” என்று கேட்டாள்.
“ஆரேஞ் கலர்” என்று அந்த கேள்விக்கு மட்டும் மென்னகையுடன் அமைதியான குரலில் பதில் கூற,
ஆத்மிகா, “அத்தான் என்ன சொன்னார்? ஒரே ரோமான்ஸ் தானா!” என்று கிண்டலாக கூறி கண் சிமிட்டினாள்.
‘அது ஒன்னு தான் குறை!’ என்று மனதினுள் சலித்த சம்ருதிகா வெளியே மென்னகையுடன், “அதெல்லாம் இல்லைடி” என்றாள்.
“சென்சார் செய்ற பார்த்தியா! நாம என்ன அப்படியா பழகினோம்!”
‘அய்யோ உண்மை நிலவரம் தெரியாம படுத்துறாளே!’ என்று மனதினுள் நினைத்த சம்ருதிகா, “அடி வாங்காம ஓடி போய்டு” என்றாள்.
உதட்டை சுளித்து பலிப்பு காட்டியவள், “ரிப்ரெஷ் ஆகிட்டு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்” என்றுவிட்டு குளியல் அறையினுள் சென்றாள்.
அவள் சென்றதும் பெருமூச்சை வெளியிட்ட சம்ருதிகா காலையில் சத்யதேவ் பேசியதை தான் மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.
முகூர்த்தப் புடவையை பெரியவர்களுடன் சேர்ந்து தான் சம்ருதிகா எடுத்தாள். சத்யதேவை தேர்ந்தெடுக்க கூற, அவனோ சம்ருதிகாவின் விருப்பதிற்கு எடுக்குமாறு கூறி ஒதுங்கிக் கொண்டான்.
அவள் சில முறை அவனை ஓரப்பார்வை பார்த்த போது மென்னகை புரியவும், அவள் நாணத்துடன் பார்வையை திருப்பி கொண்டாள்.
முகூர்த்த புடவையை எடுத்து முடித்ததும் அருகில் இருந்த உணவகத்திற்கு உணவுண்ண சென்றனர்.
மீனாட்சி, ‘என்ன இவன் இப்படி இருக்கிறான்! சம்ரூ கிட்ட பேசவும் இல்லை! புடவை எடுப்பதில் ஆர்வமும் காட்டலை!’ என்று மனதினுள் சுணக்கம் கொண்டார்.
ஆனால் சத்யதேவ், “அம்மா நாங்க தனியா சாப்பிடுறோம்” என்று கெஞ்சும் பார்வையுடன் கூறியபோது சூரியனை கண்ட பனித்துளியைப் போல் அவரது சுணக்கம் காணாமல் போனது.
மகனின் திட்டம் அறியாமல் மீனாட்சி மகிழ்ச்சியுடன் மகனின் வேண்டுகோளிற்கு வழி வகுத்து கொடுத்தார். சத்யதேவ் மற்றும் சம்ருதிகா மட்டும் தனியே தடுப்புடன் இருந்த மேசையில் அமர மற்றவர்கள் வெளியே சற்று தள்ளி அமர்ந்தனர்.
ஒரு வித படபடப்புடன் அமர்ந்து இருந்த சம்ருதிகாவிற்கு சத்யதேவை பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் நாணமும் பதற்றமும் தடுக்க, தலை நிமிராமல் தான் அமர்ந்து இருந்தாள்.
அவளிடம் என்ன பேச வேண்டும் என்பதை ஒரு முறை மனதினுள் ஒத்திகை பார்த்துக் கொண்ட சத்யதேவ் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, “சம்ருதி” என்று அழைத்தான்.
நெஞ்சம் படபடக்க அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவளது விழி மொழியில் ஒரு நொடி கட்டுண்டவன் அடுத்த நொடியே பார்வையை திருப்பியபடி, ‘என்னடா செய்ற! இவங்க உனக்கு அண்ணியா வரப் போறவங்க’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு மீண்டும் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
பேச வந்ததை பேச முடியாமல், “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டு இருந்தான்.
அவள் மெல்லிய குரலில், “எதுனாலும் ஓகே” என்றாள்.
“எனக்கு மீல்ஸ்.. உங்களுக்கு?” என்று மீண்டும் கேட்டான்.
அவனை நிமிர்த்து பார்ப்பதும் அடுத்த நொடியே பார்வையை தாழ்த்துவதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருந்தவளை கண்டவனுக்கு மனதினுள் என்னவோ செய்தது.
இந்த சில மணி நேரங்களிலேயே அவளது மென்மையான குணத்தை அறிந்து கொண்டவன், தான் சொல்ல போகும் விஷயத்தை கேட்டு என்ன செய்வாளோ என்று மனதினுள் அவளுக்காக கவலை கொண்டான். ஆனால் தமையனை நினைத்து மனதை தேற்றிக் கொண்டான்.
பின் மென்னகை புரிந்தவன், “ஜஸ்ட் ரிலாக்ஸ்.. உங்க பிரெண்ட் கூட வந்து இருக்கிறதா நினைச்சு ப்ரீயா இருங்க” என்றான்.
அவளும் மென்னகை புரிய முயற்சித்து வெற்றி பெற்றாலும் பதற்றம் மட்டும் அவளை விட்டு நீங்குவதாக இல்லை.
‘இந்த காதலத்தில் இவ்வளவு மென்மையான பெண்ணா!’ என்று ஆச்சரியம் கொண்டவன் தன்னையும் அறியாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனது மோன நிலையை கலைப்பது போல் மேசை பணியாளர் வந்தார்.
தன்னையே கடிந்துக் கொண்டு சுதாரித்தவன் தனக்கு வேண்டியதை கூறி அவளை பார்த்தான். அவள் சிறு சங்கோஜத்துடன், “பிரைட் ரைஸ்” என்றாள்.
உணவு வருவதற்கு முன்பே பேசி விடலாமா என்று யோசித்தவன், ‘வேண்டாம்.. விஷயத்தை சொன்ன பிறகு சாப்பிடலைனா! சாப்பிட்ட பிறகே சொல்லலாம்’ என்று அவளுக்காக யோசித்து விஷயத்தை கூறாமல் தள்ளிப் போட்டான்.
உணவு வரும் வரை இருவரும் நிமிடங்களை அமைதியாக நெட்டித்தள்ள, ஐந்து நிமிடத்திலேயே உணவு வந்தது.
இருவரும் அமைதியாக உண்ண ஆரம்பித்தனர். பத்து நிமிடத்தில் உண்டு முடித்தவன் அவள் உண்டு முடிக்க காத்திருந்தான்.
அவன் காத்திருப்பதை கண்டு அவள் சற்று சிரமத்துடன் வேகமாக உண்ண,
“மெதுவாவே சாப்பிடுங்க” என்று கனிவுடன் கூறினான்.
இவ்வளவு நேரத்தில் இவனது மென்மையான குணம் அவளை வெகுவாக கவர்ந்து இருந்தது. மெல்ல அவன் அவளது மனதினுள் பதிய ஆரம்பித்தான்.
அவள் உண்டு முடித்ததும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
“ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.. அக்சுவலி நீங்க எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் செய்யணும் ப்ளீஸ்.. அதை பத்தி பேசத் தான் இன்னைக்கு இங்கே வந்தேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன்.. எங்க வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வராது ஆனா என்னோட காதலி வீட்டில் இப்போ சூழ்நிலை சரி இல்லை.. எங்க காதலை இப்போ வெளியே சொல்லும் சூழ்நிலையில் நான் இல்லை..
அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு நீங்க கேட்கலாம்.. நான் உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்ன பிறகு தான் அவ என் கிட்ட வந்து அவளோட காதலை சொன்னா..
அவளும் என்னோட ஆபீஸில் தான் வேலை பார்க்கிறா.. வேற டீம்.. மூணு வருஷமா என்னோட காதல் ஒரு தலை காதலா தான் இருந்துட்டு இருந்தது.. என் காதலை அவ மறுத்த பிறகு அவளை நான் தொந்தரவு செய்யலைனாலும் சில நேரம் நான் அவளைத் தான் நினைச்சுட்டு இருக்கிறேன்னு மறைமுகமா அமைதியான முறையில் அவளுக்கு உணர்த்திட்டு தான் இருந்தேன்.. ஆனா அவ கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.. வீட்டில் கல்யாணத்துக்கு ஒரு வருஷமா பேசிட்டு தான் இருந்தாங்க.. சரினு மனசை தேத்திக்கிட்டு தான் உங்களை பொண்ணு பார்க்க ஒத்துக்கிட்டேன்.. ஆனா ஒரு முக்கியமான மீட்டிங் வந்து என்னால் வர முடியாம ஜெயதேவ் வந்தான்.. அப்புறம் உங்க போட்டோ பார்த்து கல்யாணத்துக்கும் நான் ஓகே சொல்லிட்டேன்..
ஆனா ரெண்டு நாள் கழிச்சு, நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னதை தெரிஞ்சுட்டு வந்து தன்னோட காதலை அவ சொல்லவும் எனக்கு என்ன செய்யனே தெரியலை.. நான் எந்த பதிலும் சொல்லாம கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன்..
வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தப்ப, எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது.. வீட்டில் கல்யாண வேலைகளை ஜெட் வேகத்தில் ஆரம்பித்து இருந்தாங்க.. எப்படி அதை நிறுத்தனும்னு தெரியலை, அவ காதலை சொன்ன பிறகு அவளை மறந்து உங்களுடன் வாழ முடியும்னும் எனக்கு தோணலை.. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தது, இப்பவும் இருக்குது..” என்று வேக வேகமாக அவளை பேச விடாமல் கதை அளந்தான்.
அவன் பேச இடைவெளி கொடுத்து இருந்தாலும் அவள் பேசும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை. அவன் கூறிய விஷயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும், தனது காதல் முளை விட்ட சில மணித் துளிகளிலேயே கருகிய வலியும் என்று அவள் பேச்சற்ற நிலையில் தான் அமர்ந்து இருந்தாள்.
“நான் பொண்ணு பார்க்க வராதது, எனக்கு பதில் ஜெயதேவ் வந்ததுனு எல்லாத்தையும் யோசிச்சு பார்க்கிறப்ப, கடவுளே வேற மாதிரி தான் யோசிக்கிறாரோனு தோணுச்சு.. எஸ் நீங்க ஏன் ஜெயதேவை கல்யாணம் செய்துக்கக் கூடாது?” என்று கேள்வி கேட்டான்.
அவன் கேட்டதை கிரகிக்கவே அவளுக்கு பல நொடிகள் தேவைப் பட்டது.
அவன் கேட்டது புரிந்தாலும், உச்சகட்ட அதிர்ச்சியுடன் பதில் சொல்வதறியாது அவள் அமர்ந்து இருக்க,
“ஜெயதேவ் ரொம்ப நல்லவன்.. எங்க அப்பா இறந்ததும் பத்தொன்பது வயசில் வீட்டு பாரத்தை சுமக்க ஆரம்பிச்சவன் பெருசா எதையும் என்ஜாய் செய்ததும் இல்லை, தனக்குன்னு எதையும் தனியா செய்ததும் இல்லை.. அவனை நீங்க நல்லா பார்த்துப்பீங்களா?” என்று உண்மையிலேயே சற்று கரகரத்த குரலில் தான் கேட்டான்.
அவள் இன்னமும் அப்படியே அமர்ந்து இருக்கவும்,
“உங்க நிலைமை புரியுது.. யாரா இருந்தாலும் அதிர்ச்சியா தான் இருக்கும்.. ஆனா எனக்கு வேற வழி இல்லை.. ரொம்ப சாரி” என்றவன், “ஒரு நாள் டைம் எடுத்து யோசிச்சு பதிலை சொல்லுங்க.. ஆனா இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்.. என் காதல் உங்க கையில் தான் இப்போ ஊசலாடிட்டு இருக்குது.. ப்ளீஸ் நல்லா யோசிச்சு ஒரு நல்ல பதிலை சொல்லுங்க” என்று கெஞ்சும் குரலில் கூறினான்.
அப்பொழுது மீனாட்சி சத்யதேவை அழைக்கவும், “ப்ளீஸ் நல்ல யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க” என்று மீண்டும் ஒருமுறை மெல்லிய குரலில் கூறியவன் அடுத்து இயல்பான குரலில், “உள்ள வாங்க மா” என்றான்.
அடுத்து நடந்தது எல்லாம் அவளது கண்ணில் பதிந்தாலும் எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை. அதே நிலையில் தான் வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள்.
கிளம்பும் போது சிறு தவிப்புடன் இவளையே திரும்பி திரும்பி பார்த்தபடி சென்ற சத்யதேவும் அவளது கருத்தில் பதியவில்லை. ஆனால் அவனது செயலை கண்ட மீனாட்சியோ அவன் அவளை விட்டு கிளம்ப மனமில்லாமல் அவ்வாறு செய்வதாக நினைத்து அகம் மகிழ்ந்தார்.