ஐந்து நாட்கள் கடந்து இருந்தது. சம்ருதிகா இன்னமும் சரியான முடிவை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டு தான் இருக்கிறாள்.
சத்யதேவ் இரண்டு நாட்கள் கழித்து இவளை கைபேசியில் அழைத்து இவளது முடிவை கேட்க, இவளோ யோசிக்க அவகாசம் கேட்கவும், “ஓகே.. யோசிச்சு சொல்லுங்க” என்று கூறியவன் தயக்கத்துடன், “இந்த விஷயத்தை..” என்று இழுத்து நிறுத்த, அவள், “யார் கிட்டயும் சொல்லலை.. நானே உங்களை கூப்பிடுறேன்” என்று கூறியதும், அவன் ‘சரி’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
‘சில மணி துளிகள் தான் என்றாலும் நெஞ்சின் ஓரம் வலி இருக்கத் தானே செய்யுது! மூணு வருஷ காதல்! நிறைவேறாமல் போனா அவருக்கு எவ்வளவு வலிக்கும்!’ என்று யோசித்தவளின் மனம் சத்யதேவிற்கு சாதகமாக முடிவெடுக்க நினைக்கிறது தான் ஆனால் ‘என்னால் ஜெயதேவ் கூட வாழ முடியுமா?’ என்ற கேள்வி அதை தடுக்கிறது.
கூடவே இந்த விஷயத்தை யாரிடமும் கூற முடியாமல் தனக்குள்ளேயே குழம்பித் தவித்தாள். ஆத்மிகாவிடம் சொல்லலாமா என்று யோசித்தவள், எங்கே அவள் தந்தையிடம் கூறி விடுவாளோ என்ற பயத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டாள்.
ஆத்மிகா கூட, ‘என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?’ என்று கேட்டாள்.
‘ஒன்னுமில்லை.. ஜஸ்ட் கல்யாண பயம்’ என்று கூறி அவளை சமாளித்தவள் அதன் பிறகு ஆத்மிகா முன்னிலையில் கவனமாக இருந்து கொண்டாள். வெளியே இயல்பான முகத்துடன் வலம் வந்தாலும், அவள் மனதினுள் பல குழப்பங்கள்.
‘இந்த விஷயம் ஜெய்தேவிற்கு தெரியாதுனு சொல்றார்.. அப்போ அவர் என்னை கல்யாணம் செய்வாரா?’
‘கல்யாணம் செய்ய மறுத்தால்! அம்மா அப்பா எப்படி தாங்குவாங்க! அதுவும் சொந்தங்கள் முன் எவ்வளவு பெரிய தலை குனிவு!’
‘கல்யாணம் செய்தால் என்னை ஏற்றுக் கொள்வாரா?’
‘முழு மனசோடு என்னை மனைவியா அவரால் ஏற்க முடியுமா?’ என்றெல்லாம் குழம்பினாள்.
அவ்வபோது விசாலாட்சியின் பேச்சில் இருந்து ஜெயதேவ் மீது நல்ல எண்ணம் தோன்றினாலும் அவன் மீது இருக்கும் பயம் நீங்கவில்லை.
என்ன யோசித்தாலும் ‘ஜெயதேவே என்னை ஏற்று கொண்டாலும் என்னால் அவருடன் இயல்பா வாழ முடியுமா?’ என்ற கேள்வி பூதாகரமாக அவளை மிரட்ட, நிலையான முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறாள்.
சத்யதேவ் யாருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடக் கூடாதே என்ற பயம் கலந்த பதற்றத்திலும், சம்ருதிகா நல்ல பதிலை சொல்ல வேண்டும் என்ற வேண்டுதலிலும் நாட்களை நெட்டி தள்ளிக் கொண்டு இருக்கிறான்.
இதற்கிடையில் கிஷோர் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் அந்த ஆளின் மனைவிக்கு ஆத்மிகா அந்த ஆளின் தவறான செய்கையை வெளிபடுத்தும் காணொளியை புலனத்தில் அனுப்பி விட, மனைவியிடம் பூரி கட்டையால் அடி வாங்கியதன் விளைவாக அடுத்த நாள் அந்த ஆள் தலை கட்டுடன் தான் காட்சி அளித்தார்.
தன்னை பற்றிய காணொளியை யார் எடுத்தது என்பதை அறிய அவர் மொட்டை மாடிக்கு சென்று தேட, அவர் கண்ணில் யாரும் தென்படவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண்மணி தெருவாசலை கூட்டி பெருக்கிக் கொண்டு இருக்க, அவரது கண்கள் அவரையும் மீறி மேய்ந்தது. கிஷோர் மறைவாக இருந்தபடி அதையும் காணொளி எடுத்துவிட, அதன் விளைவு அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த ஆள் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரை நாள் கழித்து கண் விழித்தவர், “நாம வேற வீடு பார்க்கலாமா?” என்று வினவ, அவரது மனைவியோ, “எதுக்கு! ஒன்னும் தேவை இல்லை.. இங்கேயே இருப்போம்.. அப்போ தான் நீங்க அடக்க ஒடுக்கமா இருப்பீங்க!” என்று கூறிவிட, அவர் தனது விதியை நொந்தபடி கண்களை மூடிக் கொண்டார்.
ஃபுட்டீஸ் ஹெவன் உணவகத்தில் ஆத்மிகாவின் வானரக் கூட்டம் அலப்பறையை கூட்டிக் கொண்டு இருந்தது.
ஆம், அந்த வார இறுதியில் சொன்னது போல் வானரக் கூட்டத்தை ஆத்மிகா அழைத்துக் கொண்டு ஃபுட்டீஸ் ஹெவன் உணவகத்திற்கு வந்து இருந்தாள்.
ஜெயதேவ் மீதான ஆத்மிகாவின் எண்ணத்தைப் பற்றி அறிந்திருந்த கிஷோரும்(வவ்வால்) மணிகண்டனும்(போண்டா) அமைதியாக இருக்க, மற்றவர்கள் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர்களை தடுக்கப் போன கிஷோரை ஆத்மிகா தடுத்து விட்டாள். ஜெயதேவ் என்ன செய்கிறான் என்பதை அறியும் எண்ணத்திலேயே மென்னகையுடன் அவர்களின் சேட்டையை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஒவ்வொரு பதார்த்ததிலும் ஒவ்வொரு குறையை சொல்லி பணியாளரை திணறடித்து கொண்டு இருந்தனர். மறைகாணி பதிவில் வராதபடி அவர்களே ஒவ்வொரு உணவு பதார்த்ததிலும் உப்பு, காரப்பொடி, மசாலா பொடி என்று ஏதேனும் ஒன்றை அதிகமாக போட்டும், தண்ணீர் அதிகமாக ஊற்றியும்,
“வாயிலேயே வைக்க முடியலை.. ஒரே உப்பா இருக்குது”
“இதென்ன! இப்படி காரமா இருக்குது!”
“அய்ய! இது நல்லாவே இல்ல.. சப்புன்னு இருக்குது”
“மசாலா பொடி கம்மியா போடச் சொன்னா தூக்கலா போட்டு இருக்கிறீங்க!” என்று கூறி புதிதாக வேறு பதார்த்தத்தை கொண்டு வரச் சொல்லி கலாட்டா செய்தனர்.
ஆத்மிகா ஜெயதேவ் செய்த பதார்த்தத்தில் மட்டும் எதையும் கலக்க விடவில்லை. மேலும் உணவகத்தின் பெயருக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மற்றவர்களின் கவனத்தை கவராமல் கலாட்டா செய்யுமாறு அவள் கூறியதால், அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ஆனால் அந்த பணியாளரை திணறடித்தனர்.
மறைகாணி பதிவுகளில் ஆத்மிகாவின் முதுகு புறமோ, பக்கவாட்டு தோற்றமோ தான் தெரிந்ததே தவிர அவளது முகம் சரியாக தெரியவில்லை. அவள் வேண்டுமென்று அவ்வாறு அமரவில்லை ஆனால் அப்படி அமைந்துவிட்டது. அவள் உணவகத்தில் உள்ளே நுழைந்த போது ஜெயதேவ் வேறு வேலையில் இருந்ததால் அவள் வந்ததை கவனிக்கவில்லை. ஆக, அவளது வரவு அவனுக்கு இப்போது வரை தெரியவில்லை.
பணியாளர் நிமிடத்திற்குள் பல முறை இவர்கள் மேசைக்கு வந்து வந்து செல்வதை கண்ட ஜெயதேவ் யோசனையுடன் இவர்கள் மேசையை கவனிக்க ஆரம்பித்தான்.
“என்ன செய்றீங்க! என்ன சர்வீஸ் இது?”
“எங்க உங்க ஓனர்? கூப்பிடுங்க”
“நாங்க கம்ப்ளைண்ட் செய்யணும்” என்றெல்லாம் அவர்கள் கூறவும் அந்த பணியாளரின் முகம் பீதியில் வெளிறியது.
“ப்ளீஸ் என் வேலைக்கு வேட்டு வச்சிடாதீங்க.. நான் சரி செய்றேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்று அவர் கெஞ்சவும்,
ஆத்மிகா, “டேய்.. ஓவரா செய்யாதீங்க!” என்று அதட்டினாள்.
அப்பொழுது ஒரு பணியாளர் வந்து ஏற்கனவே இருந்த பணியாளரின் காதில், “சார் கூப்பிடுறாங்க” என்று கூற, அவர் பீதியுடன் ஜெயதேவ் அறை நோக்கிச் சென்றார்.
ஆம், அந்த பணியாளரின் முகத்தை பார்த்த ஜெயதேவ் தனது அறைக்கு வருமாறு அழைத்து விட்டான்.
புதிதாக வந்தவர் சிறுவர்களை நோக்கி மென்னகையுடன், “ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டார்.
ஆத்மிகா, “இல்லை ஒன்னுமில்லை.. நீங்க போங்க” என்று கூறி அவரை அனுப்பிவிட்டாள்.
அவர் அகன்றதும், அவர்கள் கூட்டத்தில் இருக்கும் சிறுமி ஒருத்தி, “நீ சும்மா இருக்கா! உன்னையே பேசினார் தானே!” என்று கூற,
சிறுவன் ஒருவன், “அதானே! எங்க தலையவே தப்பா பேசி இருக்கான்” என்று கூற,
அவனை முறைத்த ஆத்மிகா, “அடங்குங்கடா.. அவர் அத்தானோட அண்ணா” என்றாள்.
அவர்களோ, “அத்தானாவே இருந்தாலும் சரி.. ஏன் உன்னை கட்டிக்கப் போற மாமாவா இருந்தாலே இதான் எங்க தீர்ப்பு” என்று முறுக்கிக்கொள்ள,
கிஷோர், ‘நிஜமாவே அவர் தான் மாமானு தெரியாம ஆடுதுங்களே!’ என்று மனதினுள் நினைக்க,
மணிகண்டனோ, ‘மாமா கிட்ட வாங்கினா தான் இதுங்க அடங்கும்’ என்று நினைத்துக் கொண்டான்.
இருவரும் ஆத்மிகாவை, ‘தேவையா இது!’ என்பது போல் பார்க்க, அவளோ, “விடுங்கடா.. பார்த்துக்கலாம்” என்றாள்.
அந்த சிறுமி அடங்காமல் அவர்கள் அருகே வந்த பணியாளரை அழைத்து, “உங்க ஓனரை கூப்பிடுங்க” என்ற நொடி,
“நான் தான் ஓனர்” என்றபடி அங்கே வந்த ஜெயதேவ் அந்த பணியாளரை கண்ணசைவில் நகர கூறிவிட்டு அந்த சிறுமியைப் பார்த்து, “உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.
முதலில் இவர்கள் மேசைக்கு பரிமாறிய பணியாளர் அனுமதி பெற்றுக் கொண்டு ஜெயதேவ் அறையுனுள் சென்றதும், “என்ன பிரச்சனை?” என்று ஜெயதேவ் கேட்டான்.
அவரோ பீதியான குரலில், “அது எப்படியோ அவங்க டேபிளுக்கு கொண்டு போற ஐடெம்ஸ் எல்லாத்துலையும் ஏதாவது குறை இருக்குது சார்” என்றார்.
“ரிடர்ன் எடுத்த ஐடெம்ஸ் டேஸ்ட் செய்து பார்த்தீங்களா?”
“ஆமா சார்.. அவங்க சொன்ன படி காரமோ உப்போ கூடி தான் இருந்தது” என்று பயத்துடன் கூறினார்.
“மத்த டேபிளில் கம்ப்ளைன்ட் வருதா?”
“இல்லை சார்”
“அந்த ஐட்டமே அப்படி தான் இருக்குதா இல்லை அவங்க டேபிளுக்கு கொண்டு போன பௌலில்(bowl) இருக்கிறது மட்டும் அப்படி இருக்குதா?”
சட்டென்று அவன் இருக்கையில் இருந்து எழ, அவனது வேகத்தில் அந்த பணியாளர் பயத்தில் நடுங்கவே ஆரம்பித்து விட்டார்.
அவரது தோளை தட்டியவன், “தப்பு நம் பக்கம் இல்லை” என்று கூறிவிட்டு வேகமாக வெளியே செல்ல, நிம்மதி மூச்சை வெளியிட்ட பணியாளர் அவன் பின்னால் கிட்டதிட்ட ஓடினார்.