யாருக்கும் காத்திருக்காமல் நாட்கள் வேகமாக நகர்ந்து, திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. சம்ருதிகா சத்யதேவின் காதலுக்காக அரை மனதுடன் அவனது திட்டத்திற்கு சம்மதம் கூறி இருந்தாலும் அவளுள் இருக்கும் குழப்பங்கள் அப்படியே தான் அவளது மனதை அரித்துக் கொண்டு இருக்கிறன.
அவளுள் பதற்றமும் குழப்பங்களும் நிறைந்து இருக்க, அவளால் கல்யாண கனவுகள் காணவோ, கல்யாண வேலையிலும் பேச்சுகளிலும் லயிக்கவோ முடியவில்லை. கல்யாணக் கனவு காண முடியவில்லை என்பதை விட யாருடன் காண! என்ற எண்ணத்தில் எதுவாக இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தனது மனதை அலைபாய விடாமல் கடிவாளம் இட்டுவிட்டாள்.
‘இயல்பாக இனிமையாக கழிய வேண்டிய நாட்கள் தனக்கு மட்டும் ஏன் இப்படி கழிய வேண்டும்!’ என்ற கழிவிரக்கமும் அவளை வாட்டி வதைக்கிறது.
அன்னையை சுலபமாக சமாளித்தவளால் ஆதிமிகாவையும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசும் மீனாட்சியையும் சமாளிக்க தான் கடினமாக இருந்தது. சத்யதேவின் வேண்டுகோளுக்கு இணங்க, இருவரிடமும் அவனுடன் கைபேசியில் பேசுவதாக வேறு சொல்லி கொண்டு இருக்கிறாள்.
ஜெயதேவ் தம்பியின் மீது இருக்கும் சந்தேகத்தை ஒதுக்கி வைத்து கல்யாண வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறான். சம்ருதிகா தனது திட்டத்திற்கு சம்மதம் கூறியதில் இருந்து சத்யதேவ் மகிழ்ச்சியுடன் வலம் வர, கூடவே மீனாட்சியும் அவன் சம்ருதிகாவுடன் இணக்கமாக இருப்பது போல் அவ்வபோது கூறி இருக்க, ஜெயதேவ் நிம்மதியாக கல்யாண வேலைகளில் இறங்கினான்.
அன்று பின் மதிய வேளையில் சம்ருதிகாவின் வகுப்பு தோழி ஒருத்தியின் எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வரவும், வாழ்த்து சொல்ல அழைப்பதாக நினைத்து அழைப்பை எடுத்து, “ஹாய் மகி” என்றாள்.
ஆனால் பேசியது என்னவோ அவளை ஒருதலையாக காதலிக்கும் ஞானவேல்.
“வேலு பேசுறேன்.. வச்சிடாத அப்புறம் உங்க வீட்டுக்கே வந்து பேசுவேன்” என்ற மிரட்டலோடு தான் பேசவே ஆரம்பித்தான்.
அவனது மிரட்டலில் அழைப்பை துண்டிக்க தைரியமற்று, அவனுடன் பேசவும் பிடிக்காமல் அமைதியாக இருந்தாள்.
அவள் இணைப்பில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டவன் காதலுடன் மென்மையான குரலில் பேச ஆரம்பித்தான்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சம்யு.. நீன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்.. நீ என் உசுருடா.. நிஜமாவே நீ என்னை விட்டு போனா என் உசுரும் போய்டும்.. என்னை நம்பு.. என்னை நம்பி வா.. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்டா..
நீ என் காதலை ஏத்துப்பங்கிற நம்பிக்கையில் கற்பனையில் உன் கூட வாழ்ந்துட்டு தான் இருக்கிறேன்.. நமக்கு வேதிகானு ஒரு பொண்ணு கூட இருக்கா தெரியுமா! நம்ம பெயரை சேர்த்து தான் வேதிகானு வச்சேன்” என்றவன்,
“நீ ஓகே மட்டும் சொல்லு, வேற எதுவும் செய்ய வேண்டாம்.. எல்லார்கிட்டயும் நான் பேசுறேன்.. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க.. உங்க வீட்டில், அந்த மாப்பிள்ளை வீட்டில் நானே நேரில் பேசுறேன்..” என்றான்.
“அம் சாரி ஞானவேல்.. எனக்கு உன் மேல் அப்படி ஒரு எண்ணமே இல்லை.. வரவும் செய்யாது” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“ஏன்!” என்று கத்தினான்.
அதில் ஒரு நொடி பயந்தவள் பின் மெல்லிய குரலில், “ப்ளீஸ் என்னை விட்டுடு.. என்னை திரும்பக் கூப்பிடாத” என்று இறைஞ்சும் குரலில் கூறினாள்.
“அப்போ நான் உன் வீட்டிற்கு வருவேன்”
“ஏன் இப்படி டார்ச்சர் செய்ற! இதான் உன் காதலா!” என்று கண்ணீருடன் பேசினாள்.
“ப்ளீஸ் அழாத” என்று அவன் வருந்தும் குரலில் கூற,
“நீ தான்டா என்னை அழ வைக்கிற” என்று சற்று கோபத்துடன் கூறினாள்.
ஒரு நொடி மெளனமாக இருந்தவன், “என் கிட்ட வந்துடு.. நான் உன்னை கண் கலங்காம பார்த்துக்கிறேன்” என்று காதலுடன் கூறினான்.
“வந்துடு வந்துடுனா! உனக்கு என் மேல் வந்த காதல் எனக்கு உன் மேல வரலையே!” என்று அவள் சிறு எரிச்சலுடன் கூற,
அவனோ, “உனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை மேலயும் தானே காதல் வரல! காதல் இல்லாம அவனை கட்டிக்க ரெடியா தானே இருக்க! அதையே என்னை செய்னு தான் சொல்றேன்” என்றான்.
அவள் பெரும் அதிர்வுடன் அமைதியாக இருக்க,
அவனோ மெல்லிய விரக்தியான சிரிப்புடன், “உன்னை எனக்கு நல்லா தெரியும்.. அன்னைக்கு நான் போன் பேசினப்பவும் சரி.. இதோ இன்னும் அஞ்சே நாள் தான் இருக்கிற நிலையிலும் சரி, என் மேல் காதல் வரலைனு சொன்னியே தவிர ‘நான் அவரை காதலிக்கிறேன், என்னை விட்டுடு’னு நீ சொல்லலை” என்று கூறியவன், “அப்படி நீ அவனை விரும்பி இருந்தா நிச்சயம் நான் விலகி இருப்பேன்.. அது இல்லைங்கிறப்ப நான் ஏன் என் காதலுக்கு போராடக் கூடாது? எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கக் கூடாதா? ப்ளீஸ் சம்யு யோசிச்சுப் பாரேன்” என்று காதல் நிறைந்த கெஞ்சும் குரலில் முடித்தான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, மெல்ல, “சம்யு” என்று அழைத்தான்.
சட்டென்று சுயம் பெற்றவள், “இன்னும் அஞ்சு நாளில் நான் இன்னொருத்தரோட மனைவி.. ஸோ இப்படி எல்லாம் பேசாத, உன் மனசையும் மாத்திக்கப்பாரு” என்று மூச்சு விடாமல் படபடவென்று கூறினாள்.
“ஏன்டி என் காதலை புரிஞ்சுக்க முயற்சி கூட செய்ய மாட்டிக்கிற?” என்று கத்தினான்.
“எது உன் காதல்? இப்படி எனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து, என்னை அழ வைக்கிறது தான் உன் காதலா?”
“சம்யு! நீ என் கிட்ட…” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“உன் காதல் உண்மைனா இனி எனக்கு கூப்பிடாத.. என்னை நிம்மதியா இருக்க விடு ப்ளீஸ்” என்று அவள் கலங்கிய குரலில் கூற,
“லாஸ்ட் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லிக்கிறேன்” என்றவன் காதல் நிறைந்த மென்மையான குரலில், “ஐ லவ் யூ ஸோ மச் சம்யு” என்றான்.
பின் இறுகிய குரலில், “இனி உன் நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
அவன் இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி அழைப்பை துண்டித்ததில் அவளால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. மாறாக அவனது குரல் அவளை நிம்மதி இழக்க தான் செய்கிறது. அதுவும் அவன் காதலுடன் கெஞ்சியதும், அவள் காதல் இல்லாமல் கல்யாணம் செய்துக்க போறதாக கூறியதும், இறுதியாக அவன் கூறிய ‘ஐ லவ் யூ ஸோ மச் சம்யு’ வும் திரும்பத் திரும்ப அவளது காதில் ஒலித்துக் கொண்டே இருக்க, நிம்மதி இன்றி தவித்தாள். இப்பொழுதும் அவன் மேல் அவளுக்கு காதல் இல்லை ஆனால் அவனது காதல் அவளை பாதிக்கிறது, நெஞ்சை அழுத்துகிறது.
அப்பொழுது அவளை அழைத்தபடி சித்ரா வர, “கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கவா மா?” என்று கேட்டாள்.
சித்ரா மெத்தையில் அமரவும் அவரது இடையை இறுக்கமாக கட்டியபடி மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
மகள் எதற்கோ தவிக்கிறாள் என்பதை புரிந்து அமைதியாக தலையை வருடியபடி அமர்ந்து இருந்தார். அப்பொழுது அங்கே வந்த பூமணி அறை வாயிலில் நின்றபடி, ‘என்ன?’ என்று கண்களால் வினவ, சித்ராவும் கண்களால் ‘ஒன்னுமில்லை’ என்றார். பூமணி இன்று வங்கிக்கு விடுமுறை எடுத்து இருந்தார்.
கண்களை இறுக்கமாக மூடி அன்னையின் இடையை இறுக்கமாக கட்டியபடி படுத்து இருந்த பெரிய மகளை கண்டவரின் கால்கள் நகர மறுக்க, அங்கேயே தான் நின்றிருந்தார்.
நொடிகள் நிமிடங்களாக கரைய, ஐந்து நிமிடங்கள் சென்ற நிலையில் சித்ரா மெல்ல, “என்னாச்சுடா?” என்று கனிவான குரலில் கேட்டார்.
அதே நிலையில் இருந்தபடி ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.
அவளது தலையை வருடியபடியே, “என்னனு சொல்லு.. அம்மா சரி செய்றேன்” என்றார்.
சற்றே பிடியை தளர்த்தி முகத்தை மட்டும் நிமிர்த்தியவள் கண்ணில் தவிப்பும் கலக்கமுமாக, “இந்த கல்யாணம் வேண்டாம்மா” என்றாள்.
பூமணி அதிர்ந்தாலும் கோபம் கொள்ளவில்லை. ‘ஏன் இப்படி தவிக்கிறா? ஏதும் பிரச்சனையா? முழு மனசுடன் தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா! அப்புறம் என்ன?’ என்ற கேள்விகளுடன் கலங்கிய முகத்துடன் தவிக்கும் மகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஒரு நொடி அதிர்ந்தாலும் சித்ரா கனிவுடன் தலை கோதியபடி, “ஏன்டா?” என்று கேட்டார்.
இருந்த மனநிலையில் அனைத்தையும் சொல்ல வாய் திறந்வளின் பார்வையில் வாசலில் நிற்கும் தந்தையின் கால்கள் தெரியவும் அப்படியே வாயை மூடி கொண்டாள்.
சித்ரா மீண்டும், “என்னனு சொல்லு” என்றார்.
அவளோ, “நீ எப்படிமா ஆச்சி தாத்தாவை விட்டுட்டு இந்த வீட்டுக்கு ஹப்பியா வந்த?” என்று கேட்டாள்.
‘இதானா!’ என்று நிம்மதியடைந்த சித்ரா சிரிப்புடன், “முதல்ல கஷ்டமா தான் இருந்தது ஆனா அப்புறம் இஷ்டமா மாறிடுச்சு.. எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணம் நெருங்க நெருங்க வர பயம் தான்டா இது.. கல்யாணம் ஆனா சரியா போய்டும்” என்றார்.
‘எல்லா பொண்ணுங்களை போல என் நிலைமை இல்லையே!’ என்று மனதினுள் பேசியபடி அன்னை முகத்தை நோக்கினாள்.