“இந்த கல்யாணம் வேணாம் மா!” என்று அவர் அவளை போலவே பேசிக் காட்ட,
முறைப்புடன், “வர வர இந்த ஆத்மி கூட சேர்ந்துட்டு ரொம்ப தான் மாறிட்டு வர” என்றவள், “போமா போய் வேலையை பாரு.. நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்” என்று அன்னையை விரட்டியபடி படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
எழுந்து கொண்ட சித்ரா அவளது தலையை வருடிவிட்டுவிட்டு வெளியே சென்றார்.
பூமணி என்னவென்று விசாரிக்க சித்ரா மென்னகையுடன், “ஒன்னுமில்லைங்க.. நம்மளை எல்லாம் விட்டு பிரியனும்னு பீல் பண்றா” என்றார்.
மனைவியின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் சமாதனாம் ஆனது போல் மென்னகைத்து அகன்றவர் மனமோ நிம்மதியை இழந்தது.
மாலை தனது வண்டியை நிறுத்திவிட்டு,
“கம் ஆன் பேபி.. லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல.. பாடிக்கலாம் டூயட்டு” என்ற பாட்டை பாடிக் கொண்டே துள்ளி குதித்தபடி ஆத்மிகா வீட்டினுள் வர,
கூடத்தில் அமர்ந்து இருந்த பூமணி, “ஆத்மி” என்று அழைத்தார்.
‘ஓ! ஃப்ளவர் பெல் இன்னைக்கு லீவ்ல’ என்று மனதினுள் நினைத்தபடி அவர் அருகே சென்று, “என்ன ப்பா? என்று கேட்டாள்.
“ரெப்ரெஷ் ஆகிட்டு தோட்டத்துக்கு வா” என்றுவிட்டு அவர் செல்ல,
“இன்னைக்கு எந்த பஞ்சாயத்தையும் நாம டீல் செய்யலையே!” என்று சன்னமான குரலில் கூறியவள், “ஏ குருவி! சிட்டுக் குருவி!” என்று பாடியபடியே சமையல் அறைக்கு சென்றாள்.
“வந்துட்டியா! உனக்கு தான் பால் கலந்துட்டு இருந்தேன்” என்றபடி கலந்து முடித்த பாலை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கியபடியே, “இன்னைக்கு யாரும் வீட்டுக்கு வந்தாங்களா?” என்று கேட்டாள்.
“இல்லையே! ஏன் கேட்கிற?”
“காலையில் காலேஜ் போற வழியில் ஒருத்தன் மண்டையை உடைச்சுட்டேன்.. அதான்”
“அச்சோ! அந்த பையன் எப்படி இருக்கிறான்? கல்யாணம் நெருங்கிட்டு இருக்கிற நேரத்தில் ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?”
“அப்போ கல்யாணம் முடிந்த பிறகு வச்சிக்கலாம்!”
அவர் முறைத்தபடி, “முதல்ல அந்த பையன் எப்படி இருக்கான்னு சொல்லு” என்றார்.
“சொன்னா மட்டும் கோபம் வருது.. நீ இன்னும் வளரனும் சிட்டு குருவி” என்று கூறி அவள் புன்னகையுடன் கண் சிமிட்ட,
“பொய் சொன்னியா! உன்னை” என்றபடி அவர் அடிக்க வர,
அவளோ, “மீ எஸ்கேப்” என்று கத்தியபடி தோட்டத்திற்கு ஓடினாள்.
தன் முன் மூச்சிறைக்க வந்து நின்ற இளைய மகளை பூமணி அமைதியாக பார்க்க,
தன்னை முறைக்காமல் அமைதியாக இருக்கும் தந்தையைக் கண்டவள், “என்னாச்சுபா! ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டு இருந்தாள்.
தன்னை சரியாக உணரும் இளைய மகளின் புரிதலில் பெருமையும் நெகிழ்வும் கொண்ட பூமணி, “அதை நீ தான் சொல்லணும்” என்றார்.
“புரியலை ப்பா”
“சம்ருதி யாரையும் காதலிக்கிறாளா?”
“இல்லை ப்பா”
அவர் அழுத்தத்துடன் பார்க்க, அதை எதிர் கொண்டவள், “நிச்சயம் இல்லை ப்பா” என்றாள்.
“உனக்கு தெரியாம இருக்க வாய்ப்பு இருக்கா?”
“கண்டிப்பா இல்லைப்பா.. ஏன் கேட்கிறீங்க? ஏதும் போன் வந்ததா?”
“என்ன போன்?”
“இந்த கதையில், படத்தில் எல்லாம் வர மாதிரி மொட்டை கடிதம் இல்லை போன் காள்?”
அவர் முறைக்க, “நான் சீரியஸ்ஸா தான் ப்பா கேட்கிறேன்” என்றவளின் குரலில் சிறிதும் விளையாட்டு இல்லை.
“அதெல்லாம் இல்லை”
“அப்புறம் ஏன் ப்பா திடீர்னு இப்படி கேட்கிறீங்க? நீங்க காரணம் இல்லாம கேட்க மாட்டீங்களே!”
“இன்னைக்கு மதியம் சம்ருதி அம்மா மடியில் கண்ணை மூடியபடி படுத்து அம்மாவை இறுக்கமா கட்டிக்கிட்டா.. மெல்ல அம்மா என்னனு கேட்கவும் கல்யாணம் வேணாம்னு சொல்றா.. அதைச் சொல்லும் போது கூட ஒன்னுமில்ல அதுக்கு முன்னாடி அம்மாவை கட்டிட்டு இருந்தப்ப அவ முகத்தில் இருந்த உணர்வு! எதில் இருந்தோ தப்பி விட மாட்டோமா! என்னை காப்பாத்துங்க! என்ற மாதிரி இருந்துது..
ஆனா அம்மா ஏன் அப்படி சொல்றானு கேட்டப்ப ‘நீ எப்படி ஆச்சி தாத்தாவை விட்டுட்டு சந்தோஷமா கல்யாணம் செய்துகிட்ட?’னு கேட்டா..
உன் அம்மா, இது கல்யாணம் நெருங்கும் போது எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கிற தவிப்பும் பயமும் தான், வேற ஒன்னுமில்லைனு சொல்றா ஆனா எனக்கு என்னவோ மனசு கிடந்து தவிக்குது” என்று மனைவியிடம் கூடப் பகிராத தனது பாரத்தை இளைய மகளிடம் இறக்கி வைத்தார்.
முதலில் அன்று ஞானவேல் பேசியதை கூறலாமா என்று யோசித்தவள் தந்தையின் தற்போதைய மனநிலையை மனதில் கொண்டு, கூற வேண்டாம் என்றும் முதலில் சம்ருதிகாவிடம் விசாரித்து விட்டு தேவை என்றால் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள். ஆனால் இந்த நொடி தந்தையிடம் கூறி இருக்க வேண்டும் என்று பின்னாளில் வருந்த போவதை அவள் அறியவில்லை.
“உங்களுக்கு அக்காவை பத்தி தெரியாதாப்பா! குழப்பத்தில் இருக்கும் போது எக்ஸ்ட்ரீம் வரை யோசிப்பா.. அதான் நம்மளை எல்லாம் விட்டு போறதை பத்தி யோசிச்சு அப்படி இருந்து இருப்பா.. உங்க திருப்திக்காக நான் அவ கிட்ட பேசுறேன்”
புன்னகையுடன், “கண்டிப்பா ப்பா..” என்றவள், “நீங்க கவலைப் படாதீங்கப்பா” என்றும் சேர்த்து கூறினாள்.
அவர் மென்னகையுடன், “சரி போ” என்று கூற, அவளும் கிளம்பினாள்.
அவள் நான்கடி சென்றிருந்த வேளையில் மீண்டும் அழைத்தார்.
திரும்பிப் பார்த்தவள், “உங்க லவ் பேர்ட்க்கு(bird) தெரியாம பார்த்துக்கிறேன்” என்று கூறி கண்சிமிட்டிவிட்டு அவள் ஓட,
“வாலு” என்றவின் முகம் உண்மையாகவே மலர்ந்தது.
தங்கள் அறைக்கு சென்றவள் உறங்கிக் கொண்டிருந்த தமக்கையின் முகத்தையே சில நொடிகள் பார்த்தாள். பின் தமக்கையின் கைபேசியை எடுத்து புது எண்ணில் இருந்து அழைப்பு எதுவும் வந்து இருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை என்றதும் குளியல் அறைக்கு சென்று முகம் கைகால் அலம்பி வந்தாள். ஞானவேல் சம்ருதிகாவின் தோழியின் எண்ணில் இருந்து அழைத்து இருந்ததால் அவன் பேசியது ஆத்மிகாவிற்கு தெரியாமல் போனது.
ஆத்மிகா குளியல் அறையில் இருந்து வெளியே வந்த பொழுது உறக்கம் களைந்து எழுந்த சம்ருதிகா மென்னகையுடன், “எப்போ வந்த?” என்று கேட்டாள்.
“இப்போ தான்” என்றவள் அன்று கல்லூரியில் நிகழ்ந்தவைகளை பற்றி பேச ஆரம்பித்தாள். பேச்சின் நடுவே வித்யாசம் தெரியாத வகையில் தமக்கையின் மனநிலையை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டாள்.
தூங்கி எழுந்து சற்றே தெளிவாக இருந்த சம்ருதிகா இயல்பாக பேசியதால் ஆத்மிகாவிற்கு எந்த சந்தேகமும் வரவில்லை. அதை தந்தையிடமும் கூறி இருந்தாள்.
அதன் பிறகு பூமணி நிம்மதியுடன் கல்யாண வேலைகளில் முழு வீச்சுடன் செயல் பட்டாலும் அவரின் நெஞ்சின் ஓரம் ‘ஏதோ தவறாக நடக்க போகிறதோ!’ என்ற அச்சம் மட்டும் நீங்கவில்லை. அவரது உள்ளுணர்வு சரியே என்பது போல் தான் கல்யாண நாளில் அனைத்தும் நடந்தது.
இந்த ஐந்து நாட்களும் வேகமாக நகர்ந்து விட, கல்யாண நாளும் விடிந்தது. படபடப்பு, பரபரப்பு, கோபம், கலக்கம், மனவலி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது.
ஆம், சத்யதேவ் தனது திட்டபடி வைகறை வேளையில் யாருக்கும் தெரியாமல் மண்டபத்தை விட்டு வெளியேறி, அன்னையை கைபேசியில் அழைத்து அவரை பேசவே விடாமல் தந்தை மீது சத்தியம் என்று கூறி எப்படியாவது ஜெயதேவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்து திருமணத்தை முடிக்கக் கூறி கைபேசியை அனைத்து வைத்துவிட்டான்.
மீனாட்சியும் ஜெயதேவிடம் காலில் விழாத குறையாக கண்ணீருடன் கெஞ்ச, வேறு வழி இல்லாமல் திருமணதிற்கு ஒத்துக் கொண்டான். ஒரு நொடி அவனது மனக்கண்ணில் ராங்கி பட்டாசு தோன்ற, தலையை உலுக்கியபடி அதை புறம் தள்ளியவன் அன்னையையும் தம்பியையும் கோபத்துடன் மனதினுள் திட்டியபடி மணமேடையில் அமர்ந்து, மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியும் இருந்தான்.