திருமணத்திற்கு முன்தினம் மாலை மாப்பிள்ளை அழைப்பு சடங்கு நடந்து முடிந்த பிறகு பெண் வீட்டினரும் மாப்பிள்ளை வீட்டினரும் மண்டபத்திலேயே தங்கினர்.
அதிகாலையில் முகூர்த்தம் என்பதால் முன்தினம் சற்று விரைவாகவே அனைவரும் உறங்கச் சென்று இருந்தனர்.
வைகறையின் தொடக்கத்தில் சத்யதேவ் தனது திட்டபடி சத்தமின்றி மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
வெளியேறியவன் தனது நண்பனின் வீட்டிற்குச் சென்று அன்னையை கைபேசியில் அழைத்தான்.
அழைப்பு சத்தத்தில் விழித்த மீனாட்சி மணியை பார்த்துவிட்டு, “என்னடா அதுக்குள்ள எழுந்துட்டியா! விட்டா இப்பவே சம்ரு கழுத்தில் தாலியை கட்டிடுவ போல!” என்று புன்னகையுடன் கிண்டல் செய்ய,
“அம்மா நான் சொல்றதை குறுக்கிடாம கவனிங்க.. அதே நேரத்தில் கத்தி ஊரை கூட்டிடாதீங்க.. நான் இப்போ மண்டபத்தில் இல்லை..” என்றவனின் பேச்சை இடையிட்ட மீனாட்சி,
“என்னடா சொல்ற!” என்று பதறினார்.
“அம்மா என்ன சொன்னேன்! குறுக்கிடாம கேளுங்க.. நான் சம்ருதியை நம்ம ஜெயாக்குத் தான் பார்த்தேன்.. அது அவளுக்கும் தெரியும்.. தெரியும்னா முதலேயே இல்லை.. முகூர்த்தப் புடவை எடுத்த அன்னைக்குத் தான் சொன்னேன்.. முதல்ல ஒத்துக்கலை.. அப்புறம் சில பல பிட்டுகளை போட்டு சம்மதிக்க வச்சிட்டேன்.. அதுவும் கிட்ட திட்ட பத்து நாள் கழிச்சு தான் ஓகே சொன்னாங்க.. இந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்..
நீ எப்படியாவது ஜெயாவை சம்மதிக்க வச்சு இந்த கல்யாணத்தை நடத்திடு.. இது நம்ம அப்பா மேல சத்தியம்”
“என்னடா விளையாடுறியா?”
“விளையாடுற மாதிரியா இருக்குது!”
“சத்யா இது சரியே இல்லை” என்று கோபத்துடன் கண்டன குரலில் கூற,
அவனோ, “அப்பா மேல சத்தியம்னு சொல்லி இருக்கிறேன் ம்மா” என்றான்.
“உன்னோட கிறுக்குத்தனதுக்கு அப்பாவை கூட்டு சேர்க்காத”
“அப்போ உங்க மூத்த மகன் கடைசி வரை இப்படியே சிங்கிளா தான் சுத்துவான்.. ஓகேயா!” என்றவன், “பொண்ணே ஓகே சொல்லிட்டாங்க, அப்புறம் என்ன! ஸோ அவங்க வீட்டில் கல்யாணம் முடிந்த பிறகு சொல்லுங்க போதும்.. எந்த பிரச்சனையும் வராது.. ஜெயா கல்யாணம் செய்யணும்னு நினைத்தா இதை செய்யுங்க.. அண்ட் அப்பா மேல சத்தியம்னு சொல்லி இருக்கிறேன்..
நான் வைக்கிறேன்.. செல்லை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சிடுவேன்.. ஸோ திரும்ப கூப்பிடாதீங்க” என்று கூறி அழைப்பைத் துண்டித்து கைபேசியை அணைத்தும் வைத்துவிட்டான்.
அப்பொழுது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ஜெயதேவ் பேயறைந்தது போல் நின்றிருந்த அன்னையை உலுக்கி, “என்னாச்சுமா?” என்றான்.
“ஹான்”
“சத்யா எங்க? அவன் ரூமில் இல்லையே!”
சட்டென்று சுயம் பெற்றவர் கலங்கிய குரலில், “ஜெயா அம்மாக்காக ஒன்னு செய்வியாப்பா?” என்று கேட்டார்.
அடுத்த நொடி இறுகிய முகத்துடன் அழுத்தமான குரலில், “சத்யா எங்கம்மா?” என்று கேட்டான்.
கண்கள் லேசாக கலங்கியபடி, “சம்ருவை உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லிட்டு எங்கேயோ கிளம்பி போயிட்டான்பா” என்றார்.
பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன், “இவன் இப்படி ஏதாவது செய்வான்னு ஆரம்பத்திலேயே நினைச்சேன்.. சம்ருதிகா கூட அவன் நல்லா பழகுறான்னு நீங்க சொன்னதை நம்பி அவனை கண்காணிக்கிறதை விட்டேன்” என்றவன் அடங்கா கோபத்துடன், “ஆனா இப்படி கடைசி நேரத்தில் கம்பி நீட்டுவான்னு நான் நினைக்கலை” என்றான்.
கை முஷ்டியை இறுக்கமாக மூடியபடி அறையினுள் நடை பயின்றவனை மீனாட்சி கலக்கமும் பதற்றமுமாக பார்த்துக் கொண்டு இருக்க,
“எனக்கு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்யாத, நான் செய்ய மாட்டேன்னு சொல்லியும்!” என்று நிறுத்தியவன் மூச்சை இழுத்து விட்டு கோபத்தை சற்றே அடக்கியபடி, “என்னை விடுங்க.. சட்டையை மாத்துற மாதிரி மாப்பிள்ளையை மாத்தச் சொன்னா அந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்! இதையும் சொல்லியே அவன் கிட்ட எந்த கிறுக்குத்தனமும் செய்யாதனு சொன்னேன்” என்றான்.
அவர் சிறு பயம் கலந்த தவிப்புடன் அவனைப் பார்க்க,
அவன், “இன்னும் என்ன செய்து வச்சு இருக்கிறான்?” என்று கோபத்துடனே கேட்டான்.
அவர் எச்சிலை விழுங்கியபடி, “அது.. இந்த விஷயம் சம்ருக்கு தெரியுமாம்” என்று முடிக்கும் முன்,
“வாட்!” என்று கத்தி இருந்தான்.
பின், “எப்போ தெரியும்?” என்று கேட்டான்.
அவர் மீண்டும் எச்சிலை விழுங்க,
அவன் எரிச்சல் கலந்த ஆயாசத்துடன், “நீங்க ஏன் இப்படி! நீங்க எதுவும் செய்யலையே!” என்றான்.
அவரோ மனதினுள், ‘சிங்கத்தோட வாய்க்குள்ள தலையை கொடுக்கிற பீலை உன் தோரணை கொடுத்தா நான் என்னடா செய்வேன்!’ என்று நினைத்தபடி அவனைப் பார்க்க,
பின் சந்தேக பார்வையுடன், “இல்லை நீங்களும் கூட்டா?” என்று வினவினான்.
பதறியபடி, “சத்தியமா நீ வரதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான்ப்பா எனக்கு இந்த விஷயம் தெரியும்” என்றவர், “சத்யா அப்பா மேல சத்தியம்னு சொல்லி இந்த கல்யாணத்தை நடத்த சொல்லி இருக்கிறான்” என்று நலிந்த குரலில் கூறினார்.
அவன் கடும் கோபத்துடன், “என் லைஃபை டிசைட் செய்ய இவங்க ரெண்டு பேரும் யாரு? இந்த கூமுட்டை சொல்லுச்சுன்னு அந்த லூசும் தலையை ஆட்டி இருக்குது” என்றான்.
“சம்ரு உடனே சரி சொல்லலை போல.. இவன் தான் என்னென்னவோ பேசி பேசியே சரி சொல்ல வச்சு இருக்கிறான்..” என்றவர், “நம்ம சத்யா செய்தது தப்பு தான்.. ஆனா உனக்காக, உன்னை மனசில் வச்..” என்றவரின் பேச்சு அவனது அக்னி பார்வையில் நின்றது.
“எனக்கு எது நல்லதுன்னு அவனுக்கு ரொம்ப தெரியுமோ!” என்றவன் தனது கோபத்தை அன்னையிடம் காட்டுவது சரி இல்லை என்பதை உணர்ந்து அங்கிருந்த தண்ணீர் பொத்தலை திறந்து தண்ணீரை அருந்தி கோபத்தை குறைக்கப் பார்த்தான், ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். சத்யதேவ் சம்ருதிகா இருவர் மேலும் அவனுக்கு கட்டுக்கடங்கா கோபம் வந்தது.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
மீனாட்சி மெல்ல, “நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்கிறியா?” என்றார்.
அவன் அமைதியாக பார்க்க, அதையே சம்மதமாக கருதி பேச ஆரம்பித்தார்.
“மேடை வரை வந்த கல்யாணம் நின்னா, அந்த பொண்ணோட வாழ்க்கை கேள்விக் குறியாகும்ப்பா.. அதுவும் சத்யா கிளம்பி போயிட்டான்னு தெரிந்தா, சம்ருவை என்னலாம் பேசுவாங்கனு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்லை.. நம்ம குடும்பத்துக்கு பெண் பாவம் வேணாம் ப்பா” என்றவர் கை எடுத்து கும்பிடப் போக, அவசரமாக அவர் கையை தடுத்து கீழ் இறக்கியவன்,
“பாவம் சேர்க்க வேண்டாம்னு சொல்லிட்டு எனக்கு பாவம் சேர்க்காதீங்க ம்மா” என்றான்.
பின் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு, ‘ராங்கி பட்டாசு’ என்று முணுமுணுத்த மனதை அடக்கியபடி, “ஓகே.. பொண்ணு வீட்டில் ஓகே சொன்னா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றான்.
“என்ன!”
“எனக்கு ஓகேனு சொல்றேன்”
“ரொம்ப சந்தோசம் ப்பா” என்று ஆனந்த கண்ணீர் வடித்தவர், “நீ போய் கிளம்பு.. நான் ஆகுற வேலையைப் பார்க்கிறேன்” என்றார்.
“நீங்க முதல்ல பொண்ணு வீட்டில் பேசுங்க”
“அது” என்று சற்று தயங்கியவர், “என்னனு சொல்றதுப்பா? உனக்காக அவன் போனான்னு எப்படி சொல்றது?” என்று கேட்டார்.
“அதானே உண்மை!”
“ஆனா அப்படியே எப்படி சொல்றது?”
“என்னை கம்பி எண்ண வைக்கிற பிளானில் இருக்கிறீங்களா?” என்று மீண்டும் எகிறினான்.